Monday, August 26, 2019

பொருளாதார மந்தநிலை 2019 - ஒரு சாமான்யன் பார்வையில்..!


இந்தியாவின் பொருளாதார மந்தநிலை பற்றி இரண்டு வாரங்களாக பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமனும் செய்தியாளர்களைச் சந்தித்து சில சீர்திருத்த அறிவிப்புக்களையும் வெளியிட்டுள்ளார்... இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் மேலும் சில அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இது ஏதோ திடீரென்று வந்த பிரச்சினை போலவும், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சில வரிச்சலுகைகளையும், ஜி எஸ் டி குளறுபடிகளில் ஒன்றிரண்டை சரி செய்வதாக அளித்த வாக்குறுதிகளும் இப்பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்று, பொருளாதார வல்லுநர்கள் பலர் கூறுவது ஊடகங்களால் தற்செயலாக மறைக்கப்படுகின்றனவா? அல்லது திட்டமிட்டே மறைக்கப்படுகின்றனவா என்றே புரியவில்லை..!

உடல் உபாதைக்காக மருத்தவரிடம் செல்லும் பொழுது அப்பொழுதையை வலியை நீங்கள் உணராமல் இருக்க தற்காலிக மரப்பு மருதைக் கொடுப்பார். ஆனால் அது நிரந்தர தீர்வு அல்ல... அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் அந்த வலி வந்து விடும். திரும்பத் திரும்ப அதே மரப்பு மருந்தைக் கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றி உயிரிழக்க நேரிடும்.

ஆனால் அந்த உடல் உபாதை அல்லது வலி எதனால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்கு தான் எக்ஸ் ரே, ஸ்கேன் போன்றவை எடுக்கப்பட்டு, நோயை கண்டுபிடித்து அதற்கு தேவையான மருந்துகளையோ, அறுவை சிகிச்சையையோ மேற்கொண்டால், அந்த நோயிலிருந்தும் உடல் உபாதையிலிருந்தும் நிரந்தரமாக மீண்டு வரலாம்.

அதேப் போன்ற தற்காலிக மரப்பு மருந்து தான் நம் நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் சில சலுகைகள் அறிவிப்பும். அவருக்கே அது நிரந்தர தீர்வல்ல என்று தெரிவதனால் தான் அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும் என்று கூறியிருக்கின்றார்.
வெறும் அறிவிப்புகள் மட்டும் அடுத்தடுத்து கொடுப்பதற்கு முன்பாக பக்காவாக ஸ்கேன், எக்ஸ் ரே எடுப்பது தான் புத்திசாலித்தனம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அதனைத் தொடர்ந்தான பெரும் குழப்படியான ஜி எஸ் டியும் தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்பது ஸ்கேன் பண்ணினால் தான் புரியும்.

மோடியோ, நிர்மலா சீத்தாராமனோ உண்மையாகவே அவர்கள் கூறிக்கொள்வது போல உண்மையான நாட்டுப் பற்றாளர்கள் என்றால் எந்த ஈகோவும் இல்லாமல் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எதோ ஒரு ஆர்வத்தில் கூட அவசரகோலத்தில் அந்த இரண்டு நடவடிக்கைகளையும் மோடி எடுத்திருக்கலாம். அது பலன் தராமல் போய் விட்டது. ஆனாலும் மீண்டும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் முழு பலத்தோடு உங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். அந்த மக்களை உங்கள் ஈகோ காவு வாங்கிவிடக் கூடாது..!

நல்லதை நினைத்து அதைச் செய்தோம் ஆனால் அது பலன் தரவில்லை. ஆகவே மாற்று ஏற்பாட்டினை இன்னும் வேகமாகச் செய்கின்றோம் என்று மக்களிடம் வெளிப்படையாகச் சொன்னால், அதை மக்கள் புரிந்துகொள்வார்கள்... ஏற்றுக்கொள்வார்கள்... முன்னை விட இன்னும் கூடுதலாக உங்களை நம்புவார்கள்..!

  • இந்தப் பிரச்சினையின் அடிநாதமே, மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது தான்...
  • அதற்கு காரணம் விவசாயம் மற்றும் சிறு குறு மற்றும் மத்தியதர தொழில்கள் பாதிக்கப்பட்டது தான்...
  • அதற்கு காரணம் பண மதிப்பிழப்பும், தவறான ஜி எஸ் டி நடைமுறையும் தான்..!


இன்னும் ஒரு படி மேலே சென்று, இந்த இரண்டு பிரச்சினைகளில் இருந்தும் (GST & Demonitisation) அவர்கள் தட்டுத் தடுமாறி அதை இதை பிடித்து எழுந்து வரும் நிலையில்....

ஃபைனான்ஷியல் டிஸிப்ளின் என்ற கோஷத்தோடு வங்கித் துறையினர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அதை அவர்கள் இந்த சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில் நிறுவனங்கள் மீது பாய்ச்சியதும் தான், இன்றைக்கு பல லட்சம் MSME தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட காரணமாக அமைந்து விட்டது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக உயிரைப் பிடித்து போராடி வந்த அந்த நிறுவனங்கள், இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உயிர்விட ஆரம்பித்து விட்டன... அதாவது இழுத்து மூடப்பட்டு வருகின்றன..!

இப்படி மூடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சமாக பத்து முதல் அதிக பட்சமாக 200 பேருக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பினை நேரடியாக வழங்கிக் கொண்டிருந்தவை தான்..! விவசாயத்தை விட மிக அதிகமான வேலை வாய்ப்பினை இந்த MSME நிறுவனங்களே மக்களுக்கு வாரி வழங்கி வந்திருக்கின்றன.

உதாரணத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இங்கே வரும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மிக அதிக பட்சமாக 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினை அளித்தாலே பெரிய விஷயம். ஆனால் அவர்களுக்கு நம் அரசுகள் செய்து கொடுக்கும் நன்மைகளோ ஏராளம்.

ஆனால் ஏதோ ஒரு வகையில் இப்பொழுது ஏற்பட்டிருப்பது போல... லாபக்குறைவு ஏற்பட்டால்... நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இப்பொழுது ஆட்குறைப்புச் செய்வதாகச் சொல்லும் நிறுவனங்கள் இன்னும் நட்டமடையவில்லை. மாறாக லாபம் குறைந்துள்ளது, அதை ஈடு கட்ட உற்பத்தியைக் குறைத்து பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவேன் என்றும் விடுமுறை அளித்து பெஞ்சில் வைப்பேன் என்றும் கூறுகின்றன..!

உடனடியாக அரசும் பணிந்து போய் அவர்களுக்கு பல வரிச்சகலுகைகளையும் தொழில் ரீதியான சில கால அவகாச சலுகைகளையும் (உதாரணத்திற்கு BS 6 வாகனங்கள் விற்பனைக்கான கால அளவை நீட்டித்து உதவுவது) வழங்குகிறது.
உடனே அந்த நிறுவனங்கள் எங்களை மேம்படுத்து ஒரு லட்சம் கோடி ஃபண்ட் ஒதுக்குங்க என்று கேட்கிறார்கள்.

ஆனால் இன்னொரு பக்கம், ரூபாய் 1 கோடியிலிருந்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படும் MSME நிறுவனங்கள் 10 ஆயிரம் கோடி முதலீட்டில்.... கிட்டத்தட்ட 1000 நிறுவனங்களுக்கு மேல் உருவாகும்.

அவற்றின் மூலம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பினை அளிக்கின்றன. இதில் இருக்கின்ற பல்வேறு முக்கிய நல்ல பலன்கள் என்னவென்றால்...

  1. இவை அனைத்துமே இந்தியர்களின் நிறுவனங்கள். ஆகவே இதன் மூலம் கிடைக்கின்ற லாபம் முழுவதும் இந்தியாவிலேயே இருப்பதால் இந்திய பண மதிப்பீட்டுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை..!
  2. அடுத்ததாக இந்த நிறுவனங்கள் எதற்கும் அரசு எந்தவொரு சிறு சலுகையும் அளிப்பது இல்லை. அதனால் அரசு பட்ஜெட்டில் இதன் பொறுட்டு எந்த துண்டோ போர்வையோ விழவே விழாது..!
  3. மூன்றாவதாக, இந்த நிறுவனங்களில் படித்தவர்கள், பொறியாளர்கள், ப்ரொஃபஷனல்கள் என்றில்லாமல் கிராமப்புற மக்களுக்கும், ஸ்கில்ட் லேபர்களுக்கும், அதிகமான பெண்களுக்கும்... அதாவது வெகு வேகமாக குறைந்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனங்கள் மிகப் பெரிய புகலிடமாக இருக்கின்றன..!
  4. நான்காவதாக, வங்கிகளின் மிகப் பெரிய லாபங்களே இந்த நிறுவனங்களுக்கு அவை வழங்கியிருக்கின்ற கடன்கள் மூலமாகத்தான். இன்னும் சொல்லப் போனால் பெறு நிறுவனங்களுக்கு இந்த வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டிக்கும் இந்த MSME நிறுவனங்களுக்கான வட்டிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.
  5. மேலும் இந்த சிறு குறு நிறுவனங்கள் தான் இந்தியாவின் கிட்டத்தட்ட 30 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை நல்கி வருகின்ற நிலையில்...

இந்த நிறுவனங்களின் அழிவானது பல கோடி வேலை இழப்புக்களையும், அரசுக்கான ஜி எஸ் டி வரி இழப்பையும், வங்கிகளுக்கான வட்டி இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதோடு... புதிதாக பல கோடி இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பினையும் தடுத்துள்ளது.

இன்றைய பொருளாதார மந்தநிலையை ஸ்கேன் செய்தால்... இது இது இது.... இந்த நோய் தான் நிதி அமைச்சருக்கு கண்ணில் படும்..!

கடந்த இரண்டரை ஆண்டுகளில் துவங்கி இந்த கடைசி மூன்று மாததில் நாடு முழுவதும் பல கோடிப் பேர்... குறிப்பாக கிராமத்து மற்றும் இரண்டாம் நிலை நகரத்து சாமான்ய மக்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்... இதைத் தவிர கட்டுமான தொழிலில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியினால் அமைப்பு சாரா தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் அதிகமானோருக்கு மாதத்தில் 10 நாட்களுக்கான வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கின்றது..!

இந்த மக்களை நம்பித்தான் கிராமப்புற வணிகமும்... அதனை நம்பியுள்ள FMCG துறை சார்ந்த Self Employed எனப்படும் பல கோடி சுய தொழில் முனைவோரும் இருந்தனர்..!
அது தான் இப்பொழுது பெரும் பாதிப்புள்ளாகி இருக்கின்றது..!

இவர்கள் கைகளில் பணப்புழக்கம் நின்று விட்ட நிலையில் அல்லது குறைந்து போய்விட்ட நிலையில்...

இந்தியாவின் மதிப்பே அதன் வாங்கும் திறன் தான்...! அதாவது அதன் சந்தை தான்..! அதன் மனித வளம் தாம்..! உழைப்பதற்கும் இங்கே மக்களுக்கு பஞ்சமில்லை... அதேப் போன்று வாங்கி உபயோகிக்கவும் இங்கே மக்களுக்கு பஞ்சமில்லை..!

ஆகவே தான் ஒரு ரூபாய் சாஷே பாக்கெட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் கார்கள் வரை இங்கே ஜஸ்ட் லைக் தட் விற்பனை ஆகின்றன..! அதன் பொருட்டே உலகின் எத்தனை பெரிய நிறுவனமும் இங்கே கால் பதிக்க தயங்குவதில்லை..!

இந்தியாவின் மக்கள் தொகை தான் அதன் பலவீனம் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில்... மனித வளம் தான் இந்தியாவின் சொத்து என்பதை 1999க்குப் பிறகு பன்னாட்டு வர்த்தக உலகம் நம்பிற்று... அதை இந்திய ஆட்சியாளர்களும் அங்கீகரித்தனர்..!

இன்றைக்கு அந்த மக்கள்.... இந்தியாவின் அடித்தட்டு மக்கள் உழைபதற்கான வழியின்றி, வாங்குவதற்கான தகுதியின்றி மாறிப் போயிருப்பதன் காரணமே இந்த பொருளாதார மந்தநிலை..!
இதைச் சரி செய்வது தான் இன்றைக்கு மிக மிக அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவை..!

இப்பொழுது உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் MSME நிறுவனங்களுக்கு ஜி எஸ் டியை சரி செய்தால் போதாது,...

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நல்ல நிலையில் செயல்பட்டு வந்து அரசுக்கு வரி கட்டி வந்து... இந்த ஜி எஸ் டி மற்றும் வங்கிக் கடன் பிரச்சினையால் கடந்த ஓராண்டில் இழுத்து மூடப்பட்ட சிறு குறு மற்றும் மத்தியதர நிறுவனங்களை அழைத்துப் பேசி அவர்களுக்கும்...

வங்கிக் கடனில் ரீ ஸ்ட்ரக்சர் மற்றும் தேவைப்பட்டால் ரீ ஃபைனான்ஸிங், வட்டித் தள்ளுபடி அல்லது அதற்கான விடுமுறைக் காலம் என்று அறிவித்து... ஜி எஸ் டி தொடர்பான அத்தனை பிரச்சினைகளையும் இலகுவாக்கி...

அவர்கள் இருந்தால் தான், தொழில் செய்தால் தான் அரசுக்கு வரி வருமானமே வரும் என்ற உண்மையை உணர்ந்து அரசாங்கம் அவர்களோடு இணைந்து பயணிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்..!

இந்த நாட்டில் மீண்டும் சிறு குறு மற்றும் மத்திய தர நிறுவனங்கள் புத்தெழுச்சியோடு செயல்பட துவங்கினால் மட்டுமே இந்தியாவும் இந்தியர்களும் செழிப்படைய முடியும்..!
கொக்கரக்கோ சௌமியன்
25-08-2019

Tuesday, July 16, 2019

உதயநிதி நியமனமும்... சமஸ் ஊளையிடலும்...!

Image may contain: 1 person, smiling, standing
தமிழ் இந்துவில் அகில உலக தமிழ் அரசியல் எழுத்தாளர்களின் முடிசூடா மன்னன், திரு. சமஸ் ஒரு பெரிய்ய்ய்ய கட்டுரையை எழுதியிருக்கின்றார்..!
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை திமுகழக இளைஞரணி செயலாளராக நியமித்ததற்கு பத்து நாட்களாக அன்னம் தண்ணி புழங்காமல், கீழே விழுந்து புரண்டு அழுது... கலைஞர்களை உதயநிதிகள்... என்னவோ செஞ்சுட்டாங்கன்னெல்லாம் புலம்பி தள்ளியிருக்கின்றார்..!
அதை படிக்கப் படிக்க பேரானந்தமாக இருந்தது.... காரணம் நரி ஊளையிட்டால் நல்ல சகுனம் தானே..?!
இதை ஏதோ உதயநிதிக்கு ஆதரவு தரும் நிலைப்பாட்டிற்கான டெம்ப்ளேட்டான எள்ளல் எதிர்வினை என்று யாரும் கருதிவிட வேண்டாம்.
காரணத்தோடு தான் சொல்கிறேன்...! ஆம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 2016 தேர்தல் சமயத்தில்... அஸ்தமிக்கும் பேரியக்கம் என்ற தலைப்பில்... இதேப் போன்று மிகப் பெரிய்ய கட்டுரை ஒன்றினை திமுகழகத்திற்கு எதிராக இதே சமஸ் தான் எழுதினார்..!
அதைப் படிக்கின்ற அப்பாவி பொது மக்கள் அனைவரும்... இன்னும் சொல்லப்போனால்... திமுகவினர் பலரே கூட திமுக அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றதோ என்று தான் எண்ணினர்..! உண்மையைச் சொல்லப்போனால் 2016 தோல்விக்குப் பின் திமுக தொண்டர்களே கூட கொஞ்சம் களங்கித்தான் போயிருந்தார்கள்... அந்த நேரத்தில் வந்த இவரது கட்டுரை திமுக எதிர்ப்பாளர்களுக்கு கொண்டாட்டத்தையும், திமுக ஆதரவாளர்களுக்கு பெரும் வருத்தத்தையும் ஏற்படுத்த தவறவில்லை..!
ஆனால் இவர் கட்டுரை வெளிவந்த பிறகு திரும்பவும் திமுக டாப் கியருக்குச் செல்கிறது... இன்னும் சொல்லப்போனால், இந்த சமஸே தனது வயிற்றுப் பிழைப்புக்கு தலைவர் கலைஞரை வைத்து... அவரைப் பற்றிய பல்வேறு பிரபலங்களின் கருத்துக்களை தொகுத்து... தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டு... திமுகவினரின் ஏகோபித்த ஆதரவோடு வெகுவாக கல்லா கட்டுகின்றார்..!
அதன் பிறகு கலைஞர் மறைந்த நிலையில்... அவருக்கான பத்திரிக்கையாளர்கள் நடத்திய புகழஞ்சலியில் கூட அத்தனை பேரும் கலைஞர் என்று விளித்தே அஞ்சலி செலுத்த... கலைஞரை வைத்து கல்லா கட்டிய இந்த சமஸ் மட்டும் தன் சாதி சனாதன தர்மத்தின் நியதிப்படி... கலைஞரை கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைத்து பேசவே... அங்கேயே திமுகழக தொண்டர்களின் கண்டிப்புக்கும் ஆளானார்..!
இந்த நிலையில் தான்... அஸ்தமிக்கவிருப்பதாக இவர் எழுதிய திமுக... இன்றைக்கு தமிழக அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கக் கூடிய பலம்மிக்க கட்சியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்ற நிலையில்...
உதயாவின் இளைஞரணி செயலாளர் நியமனத்தை கைகளில் எடுத்துக் கொண்டு... ஒரு பெரிய்ய கட்டுரையை வார்த்து, திமுகவினர் மத்தியில் கலகத்தையும், பொது மக்கள் மத்தியில் திமுக மீதான வெறுப்பையும், எதிர்க்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தையும் தூண்டி விட எத்தனிக்கின்றார்..!
ஆனால் வழக்கமாக அண்ணனின் ராசிப்படி... அவர் ஊளையிட்டு விட்டதால்... இனிமேல் தான் திரு. உதயநிதி அவர்கள் டாப் கியருக்கு செல்லவிருக்கின்றார் என்பது தெளிவாகப் புரிகின்றது..! ஒருவேளை இந்த நியமனத்தை சமஸ் ஆதரித்து எழுதியிருந்தால் தான் நாம் கவலை கொள்ள நேரிடும்..!
இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து இதே சமஸ் தெற்கிலிருந்து இன்னுமொரு சூரியன்னு ஒரு புத்தம் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...!
அல்லது... இந்த சமஸ்ஸை விட மிகக் கேவலமாக திமுகவையும், கலைஞரையும், தளபதையையும் விமர்சித்து எழுதிக் கொண்டிருந்த திருமாவேளனை கலைஞர் டீவியில் கட்டிப் போட்டது போல... இந்த சமஸ்சுக்கு ஒரு பொறையைக் காட்டி முரசொலியில் கட்டிப் போட்டாலும் போடலாம்... யார் கண்டது..?! தலைமையின் பல்வேறு ராஜதந்திர உத்திகளில் இதுவும் கூட ஒன்று தானே..?!

கலைஞரின் கல்லக்குடி போராட்டம் அவசியம் நடந்திருக்க வேண்டிய ஒன்றா..?!

ஜூலை 15..!
விடிவெள்ளி முளைத்தது..!
சேவல்.."கொக்கரக்கோ" எனக் கூவிற்று..!

ஆம்... தலைவர் கலைஞர் 1953ஆம் ஆண்டின் இன்றைய தினமான ஜூலை 15ஆம் நாளை இப்படித்தான் வர்ணிக்கின்றார்..!
இன்றிலிருந்து மிகச் சரியாக 66 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற கல்லக்குடி பெயர் மாற்றப் போராட்டத்திற்காக தலைமையேற்று லட்சக் கணக்கான தொண்டர்களுடன் தலைவர் கலைஞர் களம் காணுகின்ற அந்த நாளின் துவக்கத்தைத் தான் கலைஞர் இப்படி விவரிக்கின்றார்..!
இங்கே சில சங்கிகள் வழக்கம் போல ஒரு ஊருக்கு பெயரை மாற்றுவதற்காகவெல்லாம் பெரிய போராட்டம் செய்வதா? அதற்காக ஆறு பேர் போலீஸாரிடம் குண்டடி பட்டு உயிர் தியாகம் செய்கின்ற அளவிற்கு என்ன அவசியம் வந்தது? திமுகவினர் இப்படி உணர்ச்சிகளை தூண்டி விட்டே மக்களை ஈர்த்து ஆட்சியைப் பிடித்தனர்...
என்றெல்லாம் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றனர்..!
ஆனால் அது ஏதோ சில நூறு ஆண்டுகளாக... அல்லது சில ஆயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்த ஒரு ஊரின் பெயரை நம் தாய் மொழியில் மாற்றுவதற்காக நடைபெற்ற சாதாரண ஊர்ப்பெயர் மாற்றம் செய்யும் போராட்டம் அல்ல...
அப்படி ஒரு சாதாரணமான ஒரு போராட்டமாக அது இருந்திருந்தால், லட்சக் கணக்கானோர் அதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டிருக்க மாட்டார்கள்... அவ்வளவு அதிகமான ஆயுதம் தாங்கிய போலீஸாரும் குவிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்... அந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க துப்பாக்கிச் சூட்டிற்கும் ராஜாஜி தலைமையிலான... அதாவது அன்றைய ஆர் எஸ் எஸ் மூளையாக செயல்பட்ட ராஜகோபாலாச்சாரியின் தலைமையிலான அரசும் உத்தரவிட்டிருக்காது..!
அந்த ஊரின் இயற் பெயரே கல்லக்குடி பழங்காநத்தம் என்பது தான்..! அங்கே வடநாட்டவரின் சிமெண்ட் தொழிற்சாலை, வடநாட்டவரான அதன் தலைவர் பெயர் தாங்கி டால்மியா என்ற பெயரில் இயங்கி வந்தது. அதாவது இன்றைக்கு வடநாட்டு வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் மத்திய அரசின் முழு ஆதரவோடு செயல்படுவது போல...!
அப்படி அந்த தொழிற்சாலை சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் செல்ல அங்கே முக்கியமான ரயில் நிலையம்... அந்த வடநாட்டவர்களுக்கு... கல்லக்குடி, பழங்காநத்தம் போன்ற அந்த ஊர்களின் தமிழ் பெயர் பிடிக்கவில்லை... அதாவது இப்போ எல்லா மத்திய அரசு திட்டங்களுக்கும் நம் வாயிலேயே நுழையாத இந்திப் பெயர்களை வைக்கின்றார்களே... தமிழகத்திற்குள் ஓடுகின்ற ரயிலுக்கு தேஜஸ் என்று பெயர் வைக்கின்றார்களே... இப்படியாக எல்லா நிலைகளிலும், எல்லா தளங்களிலும் இந்தியை நுழைக்கின்றார்களே...
அப்படி அந்த ஊரின் பெயரையே டால்மியாபுரம் என்று மாற்றி அந்த ரயில் நிலையத்திற்கும் அதே பெயரை சூட்டி விட்டார்கள்...!
இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், நேற்று வரை உன் பெயர் குப்புசாமி தான் ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை, வாயில் நுழையவும் இல்லை... ஆகவே இன்றிலிருந்து உன் பெயரை குப்தா என்று மாற்றுகிறேன் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா?!
அதை அப்படியே சும்மா விட முடியுமா?! அப்படி விட்டிருந்தால் இன்றைக்கு நாம் நம் தமிழ்நாட்டிலேயே வடமாநில இந்திக்காரர்களுக்கு அடிமைகளாக சேவகம் செய்து கொண்டிருந்திருப்போம்...!
ஆனால் அன்றைக்கு அந்த இந்திப் படையெடுப்பும், இந்திக்காரர்கள் ஊடுறுவலும் தடுக்கப்பட்டதால் தான் இன்றைக்கு நம் தமிழர்கள் படித்து பல நாடுகளுக்கும் சென்று உயர் வேலைகளில் பணிபுரியும் வாய்ப்பும், நம் தமிழகத்தில் வடமாநிலத்தவர் கூலி வேலை செய்யும் நிலையும் ஏற்பட்டு மானத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..!
அந்த ஒரே நாளில் தமிழகம் முழுக்க மூன்று போராட்டங்களை அறிஞர் அண்ணா அறிவிக்கின்றார்.
முதல் போராட்டம்... அன்றைய மோடியான ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டத்திற்கு எதிரானது..!
என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா?! அவாள் எல்லாம் அதே புதிய கல்விக் கொள்கையைத் தான் இப்பொழுது இன்றைய ராஜாஜியான மோடி அவர்கள் 66 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்திருக்கின்றார். இந்த புதிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துக் கூறவே இன்றைக்கு தலைவர் தளபதியார் அவர்கள் ஒன்பது பேர் கொண்ட அறிஞர் குழுவினை அமைத்துள்ளார்கள்..!
அன்றைக்கு கொண்டு வரப்பட்ட அந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஒரு போராட்டம்... அந்த போராட்டத்திற்கு தலைமை ஈவிகே சம்பத்.
அடுத்ததாக கல்லக்குடிக்கு டால்மியாபுரம் என்று மாற்றப்பட்ட பெயரை நீக்குவதற்கான இரண்டாவது போராட்டம்... அதற்கு தலைமை தலைவர் கலைஞர்..!
மூன்றாவதாக இந்தித் திணிப்புக்கு எதிராக போராடி வரும் தென்னிந்திய தலைவர்களை "நான்சென்ஸ்" என்று கூறி அவமதித்த பிரமர் நேருவுக்கு எதிராக அவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் நிறுத்தப் போராட்டம்...
ஆக திமுகழக வரலாற்றில் இன்றைய நாள் மிக முக்கியமான மும்முனைப் போராட்டம் நடைபெற்ற நாள்..!
முன்னெச்சரிக்கை கைது என்ற பெயரில் ஈவிகே சம்பத் உள்ளிட்ட போராட்டத் தலைவர்களை கைது செய்த போலீஸாரால் கல்லக்குடி போராட்டத் தலைவர் கலைஞரை கைது செய்ய முடியவில்லை... காரணம் அவர் போலீஸார் கண்களில் மண்ணைத் தூவிக் கொண்டே முதல் நாள் இரவு லால்குடிக்கு வந்து இரவு இரண்டு மணி வரையிலும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு...
விடியற்காலை நேராக களம் புகுந்து விட்டார்..!
போராட்டம் முழுமையாக நடைபெற வேண்டும் என்பதற்காக அதி தீவிர போராட்டக்காரர்களை மூன்று குழுவாக பிரித்துக் கொண்டார். ஒவ்வொரு குழுவிலும் 25 போராளிகள்... அவர்களைச் சுற்றிலும் ஆயிரம் தொண்டர்கள்.
அப்படியாக முதல் குழுவில் தானும், இரண்டாவது குழுவில் காரைக்குடி சுப்பையா அவர்களும், மூன்றாவது குழுவில் கவிஞர் கண்ணதாசனும் இருப்பது போல் அமைத்துக் கொண்டு... முதல் ரயிலை இவர் குழு மறித்து சிறைச் சென்றால்... அத்தோடு போராட்டம் நின்று விடாமல் அடுத்த ரயிலை மறிக்க இரண்டாவது குழுவும், மூன்றாவது ரயிலை மறைக்கு மூன்றாவது குழுவும் என்பதாக... அந்த போராட்டம் அன்றைய நாள் முழுவதும் முழுமையாக நடைபெற்று ஆட்சியாளர்களை அடிபணிய வைக்க வேண்டும் என்பதாகவே திட்டமிட்டார்...!
இதில் அதற்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே அதி தீவிர போராளிகள் 500 பேரை முன்னால் வருபவருக்கு முன்னுரிமை என்பதாக பதிவு செய்து... அவர்களையே தண்டவாளத்தில் படுக்கும் முன்னேற்பாட்டுடன் இருந்தார்..! இன்னும் சொல்லப்போனால் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து ரயிலை நிறுத்தும் போராட்ட உத்தியினை அவர் கவிஞருக்கே கூட சொல்லவில்லை என்று பின்னாளில் கண்ணதாசன் புலம்பிய வரலாறு எல்லாம் உண்டு..!
Image may contain: 1 person, outdoor
கலைஞர் திட்டமிட்டவாறே மூன்று ரயில்களும் நிறுத்தப்பட்டன... மூன்றாவது ரயில் நிறுத்தப்படும் பொழுது தான் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது போல... அன்றைக்கு கல்லக்குடியிலும் போலீஸார் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி ஆறு உயிர்களை பலி கொண்டு அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டனர்..!
அதற்கு காரணம் இப்படி உயிர்பலி கொண்டால் தான் அடுத்தடுத்து அரசுக்கு எதிராக போராட யாரும் முன்வர மாட்டார்கள்... அரசு நினைத்ததை எல்லாம் நிறைவேற்றலாம் என்பது தான்...!
ஆனால் அந்த போராட்டத்தினை முன்னெடுத்த கலைஞர் உறுதியாகச் சொல்கின்றார்...
நாங்கள் 
வாழைக்கு கன்றல்ல...
ஆலுக்கு விழுதுகள்...
அன்னை தமிழுக்கு மக்கள்...

என்று... என்ன அற்புதமான வார்த்தைகள் இவை..?! எவ்வளவு பெரிய உணர்ச்சிகளை கலைஞரின் இந்த வார்த்தைகள் ஒவ்வொரு தொண்டரிடத்திலும் ஏற்படுத்தியிருக்கும்..?!
இன்றைக்கு அந்த ஊரின் பெயர் மாற்றப்பட்டு விட்டது... அதிலும் தலைவர் கலைஞர் முதல்வரான 1969லேயே மாற்றி விட்டார்...!
ஆனால் இன்றைக்கும் அதே ஆரியம் தமிழகத்தின் மேல் தாக்குதலை துவங்கி விட்டது..! அதே புதிய கல்விக் கொள்கை, அதே இந்தித் திணிப்பு, இப்பொழுது இன்னும் கூடுதலாக நாம் ஈன்றெடுத்த சமூகநீதியின் அடித்தளமாம் அந்த இட ஒதுக்கீட்டிற்கும் கொள்ளி வைக்கும் சட்டங்கள், இன்னும் கொஞ்சம் கூடுதலாய் இந்தியை மட்டுமே இதுவரையிலும் திணித்து வந்தவர்கள் இப்பொழுது இந்திக்காரர்களையே இங்கு நம் அரசுப்பணிகளில் திணிக்கவும் துணிந்து விட்டார்கள்..!
அவர்களுக்கு எப்படி இந்த அளவிற்கு தைரியம் வந்தது... இதையெல்லாம் செயல்படுத்துவதற்கு..?!
இங்கே அண்ணா இல்லை, கலஞர் இல்லை, நெடுஞ்செழியன் இல்லை, சம்பத் இல்லை, பேராசிரியர் செயல்படமுடியவில்லை, மதியழகன் இல்லை.... இன்னும் பல்வேறு திராவிட இயக்க சித்தாந்தங்களை தங்கள் உயிர் மூச்சாக கொண்ட சில நூறு தளகர்த்தர்கள், சில ஆயிரம் அடலேறுகள், பல லட்சம் தொண்டர்கள் இல்லை என்ற எண்ணமா..??!!
அவகள் எண்ணத்தில் இடி விழத்தான் போகின்றது..!
அத்தனை தலைவர்களையும் உள் வாங்கிய ஒற்றை உருவமாகத்தான் தலைவர் தளபதி அவர்கள் திகழ்கின்றார்..! 23 கிழட்டு சிங்கங்கள், முராட்டுச் சிங்கங்கள், சிங்கக் குட்டிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்... மேலவையிலும் வரிப்புலிகள் உறும ஆரம்பித்து விட்டன....
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக முதல் கட்டமாக இங்கே அறிவாயுதம் ஏந்தியிருக்கின்றார்...
53 சதவிகித மக்களின் நம்பிக்கையைப் பெற்று தான் தனியொருவன் இல்லை... மாறாக தமிழகன் என்று ஆரியப்படைக்கு எதிராக கம்பீர தளபதியாக வானுயர்ந்து நிற்கின்றார்...!
அவர் பின்னால் அணி வகுப்போம்... ஆரியப்படைகளை அடித்து விரட்டுவோம்...!

Wednesday, April 3, 2019

தேர்தலுக்கு முன்பாகவே திமுக பெற்ற வெற்றி...!


ஆம்... இன்னும் தேர்தல் நடக்கவில்லை, வாக்குகள் எண்ணப்படவில்லை ஆனாலும் தெள்ளத்தெளிவாக திமுக வென்றுள்ளது..!

புரியவில்லையா..?

அதற்கு திமுகவின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். திமுக என்ற இயக்கம் ஏன் துவங்கப்பட்டது என்ற காரணம் தெரிந்திருக்க வேண்டும்.
திமுகழகம் துவங்குவதற்கு காரணமான சமூகநீதி, சமத்துவம் உள்ளிட்ட மிக மிக முக்கியமான முதல் ஐந்து காரணங்களில் ஒன்று தான் மாநில சுயாட்சி..!
திமுக துவங்கிய காலத்தில் மாநில சுயாட்சி என்ற கொள்கையோ அதற்கான கோரிக்கையோ வைக்கப்படவில்லை. காரணம், இந்த சந்து பொந்து சமரசங்கள் எல்லாம் வேண்டாம், எங்களை தனியா அத்து விட்டுடு என்று சொல்லி தனி திராவிட நாடு கோரிக்கையோடு தான் களம் இறங்கியது.
வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது என்ற மாபெரும் முழக்கத்துடன் தான் பேரறிஞர் அண்ணா தன் தம்பிமார்களுடன் களம் கண்டார்.
காலம் இவ்வளவு மாறிய பின்பும் கூட, ரயில்வே துறையில் உருவாகிய 2000 தமிழக பணியிடங்களுக்கு வடநாட்டு இளைஞர்கள் பணி அமர்த்தப் படுகின்ற நிலை தான் உள்ளது என்றால், 60 ஆண்டுகளுக்கு முன்பான நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..!
தென்னகம் ஒருவித அடிமைத்தனத்துடன் வடவர்களின் ஆளுமையில், அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யவும், நமது வளங்கள் அங்கே சுரண்டிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த நிலையும் தான் இருந்து வந்தது.
இதைத்தான் பேரறிஞர் அண்ணா எதிர்த்தார், எங்களை தனியாக பிரித்து விட்டுவிடுங்கள், நாங்கள் எங்களை சுயமாக பார்த்துக் கொள்கின்றோம் என்றார்...!
அதற்காகத் தான் தனி திராவிட நாடு என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்தார்.
ஆனாலும் ஐநூற்று சொச்சம் சிறு குறு சமஸ்தானங்களை, குறுநில மன்னர்களை அதட்டி உருட்டி அடிபணிய வைத்து, ஒற்றை இந்தியாவாக கட்டமைத்த சர்தார் வல்லபபாய் பட்டேலின் அந்த டீம் இதற்கு ஒத்துக்கொள்ளுமா?!
இப்பத்தான் கஷ்டப்பட்டு ஒன்றாக சேர்த்திருக்கின்றோம்..., இப்போ போய் தனிக்குடித்தனம் போவேன் என்கிறாயே..? இதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும் என்றது அந்த டீம்.
அதற்கு அண்ணாவின் பதில்....
தனிக்குடித்தனம் போவது எங்களுக்கும் முக்கிய பிரச்சினை இல்லை. ஆனால் எங்கள் உரிமைகள் பறிக்கப்படும் பொழுது, எங்கள் பண்பாடு, கலாச்சாரம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி அவை நீத்துப் போக வைக்கப்பட்டு ஒரு புது வாழ்க்கை முறை திணிக்கப்படும் பொழுது, எங்கள் மொழிகள் எழுத்து, பேச்சு வழக்கில் இருந்து ஒழித்துக்கட்டப்பட்டு புதிய ஒரு மொழி திணிக்கப்படும் பொழுது, எங்கள் வளங்கள் சுரண்டி எடுத்துக்கொள்ளப்பட்டு, அதிலிருந்து ஒரு சிறு பகுதி எங்களுக்காக பிச்சை போல் இடப்படும் பொழுது, நாங்களும் படித்து முன்னேறக் கூடாது என்று சொல்கின்ற பொழுது, விளையாட்டு, இசை, கலைகள் உள்ளிட்ட எங்கள் திறமைகள் எதுவுமே இந்திய அளவில் நிராகரிக்கப்படுகின்ற பொழுது....
இப்படி அனைத்திலும் நாங்கள் அடிமைகளாக பயன்படுத்தப்படும் நோக்கோடு.... குறிப்பாகச் சொன்னால் வடவர்களை தூக்கிச் சுமக்கும் கழுதைகளாக தென்னவர்கள்... அதாவது திராவிடர்கள் பயன்படுத்தப்படுகின்ற பொழுது...
அதை ஏற்றுக்கொள்ள எங்களால் இயலவில்லை... எல்லோரும் இந்தியராக சம உரிமையோடு... அவரவர் சுயமரியாதையோடு வாழ்வோம் என்று கூறினோம், நீங்கள் கேட்கவில்லை அதனால் தான் நாங்கள் தனிக்குடித்தனம் செல்கின்றோம் என்றார் அண்ணா..!
ஏற்றுக்கொள்வார்களா வடநாட்டு சங்கிகள்?!
போராட்டம் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட திமுகழக இளைஞர்களில் சில ஆயிரம் பேர் காணாமல் போனார்கள்.
அரசு இயந்திரம்... அதைக் கொண்டு நடத்தப்படும் அல்லது நசுக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் கோர முகம் எப்படி இருக்கும் என பேரறிஞர் அண்ணா கண்டு கொண்டார்...
உரிமைக்காகத் தான் போராடுகிறோம்... அதற்கு முதலில் உயிரோடு இருக்க வேண்டும். உயிரே போன பின்பு உரிமை கிடைத்து என்ன பயன்?
ஆகவே உரிமைக்காக போராடுவோம்... ஆனால் சட்டம் அனுமதிக்கின்ற வகையில்... அதிலும் அரசியல் ரீதியிலாக... என்ற முடிவினை எடுக்கின்றார்.
உடனடியாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காத அந்த தனி திராவிடநாடு கோரிக்கையை கை விடுவதாக அறிவிக்கின்றார்.... ஆனால் கோரிக்கை தான் கை விடப்படுகிறதே தவிர, அந்த கோரிக்கைக்கான... போராட்டத்திற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன.
அந்த கோரிக்கைகளை... அதாவது எங்கள் உரிமைகளை சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் ரீதியாக நாங்கள் வென்றெடுப்போம் என்ற உறுதியோடு கைவிடுகின்றார்..!
அதன் பிறகு தனி திராவிடநாடு கோரிக்கைக்கு மாற்றாக...
திமுக முன்னெடுத்த விஷயம் தான் அதன் கொள்கை முழக்கங்களில் முக்கியமான ஒன்றாக மாறிப்போனது. அது தான்...

மாநில சுயாட்சி..!

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு திமுகழக தலைவராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர்...
தன்னுடைய ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக... திமுகழகத்தின் மிக முக்கிய, முதன்மையான ஐந்து கொள்கை முழக்கங்களில் ஒன்றாக...
மத்தியிலே கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை முன்னெடுத்து, அதற்காகவே தெள்ளத்தெளிவாக காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
இதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துவிட முடியாது, அதனால் நீண்ட கால இலக்குடன், படிப்படியாக... அதிகார மையத்தின் ஒவ்வொரு செங்கல்லாக உறுவி... இதன் தேவையை அனைத்து மாநிலங்களும் உணர வைத்து... இது ஏதோ தமிழக மக்களுக்கான தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல... மாறாக ஒட்டுமொத்த இந்தியாவின் அனைத்து பிராந்திய மக்களுக்குமான அத்தியாவசிய கோரிக்கை என்பதையும்...
படிப்படியாக இந்திய அளவில் உணர வைத்து, தேசியக் கட்சிகளையும் இந்த புள்ளியை நோக்கி நகர வைத்து... மாநில சுயாட்சியை சாத்தியப்படுத்தும் பணிக்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்.
இந்தப் பணியில் மறைந்த முன்னால் மத்திய அமைச்சர் ஐயா முரசொலி மாறன் அவர்களின் பங்கு அளப்பறியது.

அந்த திட்டத்தின் அடிப்படையில்...

திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பிராந்திய... அதாவது மாநில கட்சியாகவே செயல்பட்டுக் கொண்டு, இந்தியா முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு பிராந்தியக் கட்சிகள் தோன்றுவதையும் அவைகள் ஆட்சியை பிடிப்பதற்குமான அனைத்து வகையான உதவிக் கரங்களையும் நீட்டுவது. அவர்களுடன் நட்புறவாக செயல்படுவது...  இது முதல் நிலை..!
அடுத்ததாக, அந்த மாநில கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல்களிலும் தீவிரமாக போட்டியிட்டு அதிக இடங்களைக் கைப்பற்றி, மத்தியில் ஒரு தனி தேசியக் கட்சியின் ஆட்சி என்ற நிலையினை மாற்றி அமைப்பது... இது இரண்டாம் நிலை..!
தொடர்ந்து மத்தியில் ஒரு தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு மாநில கட்சிகளின் ஆதரவுடனான கூட்டணி அரசை அமைப்பது. அந்த கூட்டணி ஆட்சியினை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து எந்த சிக்கலும் இன்றி நடத்திக் காட்டுவது. அதேப் போன்று தொடர்ந்து கூட்டணி ஆட்சியையே அடுத்தடுத்து மத்திய அரசில் ஏற்படுத்துவது....  இது மூன்றாம் நிலை..!
இப்படியான நிலை தொடரும் பொழுது, இந்தியாவின் அனைத்து பிராந்தியங்களும் அவரவர்க்கு உரிய உரிமைகளையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மொழியையும்... எந்த சேதாரமும் இல்லாமல் பேணிப் பாதுகாத்து... தனித்தன்மையுடனும் அதே சமயம் இந்தியர் என்று நல் உணர்வுடனும் இருப்பதை உணர வைப்பது....  இது நான்காம் நிலை..!
இப்படியாக தொடரும் பட்சத்தில் தேசிய கட்சிகளே மாநில கட்சிகளின் சிந்தனைகளோடு.... அந்த சித்தாந்தத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பினார் கலைஞர்...  இதுவே இறுதி நிலை..!

இந்த தெளிவான திட்டமிடலின் பொருட்டே....
தலைவர் கலைஞர் அவர்கள் பிராந்திய கட்சிகளான என் டி ஆரின் தெலுங்கு தேசம், அஸாம் கன பரிஷத், ராஷ்டிரிய ஜனதா தள், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜனதா தளம், அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம், பிஜு பட்னாயக், மம்தா பேர்னர்ஜி, கம்யூனிஸ்ட்டுகள், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்....
இப்படியாக பல்வேறு பிராந்திய கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளாக அறியப்பட்டாலும் குறிப்பிட்ட பகுதி மக்களுக்காக போராடுகின்ற கட்சிகள் என்று அன்றைய தேதியில் அசைக்க முடியாத தேசிய கட்சியாக விளங்கிய..., மற்றும் காங்கிரஸுக்கு மாற்றானவர்களை தொடர்ந்து ஒன்று கூட்டி, ஒருங்கிணைத்து... பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள், ஒருங்கிணைந்த போராட்டங்கள் என்று முன்னெடுத்து....
ஒரு கட்டத்தில் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த வி.பி. சிங் என்ற தேசிய அடையாளத்துடன் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து தேசிய முன்னணி என்ற அகில இந்திய அமைப்பை உருவாக்கி.... அந்த அமைப்பின் மூலம் அவரவர் அவரவருக்கு பலமுள்ள பகுதிகளில் போட்டியிட்டு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று....
முதன் முறையாக பல்வேறு பிராந்திய கட்சிகளின் கூட்டமைப்பாக வி.பி. சிங் தலைமையில் ஒரு கூட்டணி அரசை மத்தியில் அமைக்க மிக முக்கிய காரணியாக அமைந்தார் தலைவர் கலைஞர்.
முதல் முறையாக ஒரு கூட்டணி ஆட்சி, அதுவும் பல்வேறு பிராந்தியக் கட்சிகள் கொண்டு.... விட்டுவிடுமா காங்கிரஸ்..?!
அது தொடர்ந்து அதிகாரத்தில் இருந்த கட்சி... இவர்களுக்கோ மத்திய ஆட்சி என்பது புது அனுபவம்... தேசிய முன்னணியின் உள்ளேயே இருந்த சந்திரசேகரைப் பிடித்து அவருக்கு பிரதமர் ஆசையை காட்டி, தங்கள் கட்சியின் ஆதரவைக் கொடுத்து அவரை பிரித்து... அவரைக் கொண்டே தமிழகத்தில் சிறப்பாக ஆண்டு கொண்டிருந்த திமுக ஆட்சியையும் விடுதலைப் புலிகள் ஆதரவு என்ற காரணம் காட்டி கலைத்து விட்டு... சிறிது காலத்திற்குப் பிறகு அவர் ஆட்சியையும் கவிழ்த்து காங்கிரஸ்..!
கலைஞரின் முதல் முயற்சியில் உருவான மத்திய கூட்டணி ஆட்சி இரண்டரை ஆண்டு கால ஆயுளோடு முடிவுக்கு வந்தது. அது தான் வீழ்ந்தாலும் கூட பரவாயில்லை.... அத்தோடு சேர்த்து தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்த திமுகவின் ஆட்சியையும் இரண்டே ஆண்டுகளில் பலி கொண்டது தான் மிச்சம்..!
ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு வந்த தேர்தலில்... அந்த பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி அவர்கள் விடுதலைப் புலிகளால் தமிழகத்தில் வைத்து கொல்லப்பட, அந்த அனுதாப அலையில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அதன் காரணமாகவே முதன் முறையாக தமிழகத்தில் ஜெயலலிதாவும், மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியும் அமைந்தது..!
ஆனாலும் சற்றும் மனம் தளராத தலைவர் கலைஞர், அந்த ஐந்து ஆண்டுகளும் (1991 - 96) தொடர்ந்து தேசிய முன்னணியை தக்க வைத்துக் கொண்டு, 96இல் அடுத்த தேர்தலை அதே கூட்டணியோடு சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர் செய்தார் என்றால், முக்கிய ஒருங்கிணைப்பாளராக இருந்து அனைவரையும் தொடர்ந்து ஒரு குடையின் கீழ் நிற்க வைத்த பெருமை கலைஞரைச் சாரும் என்பதாகும்..!
இந்த நேரத்தில் நரசிம்மராவின் காங்கிரஸ் ஆட்சியும் ஒரு ஸ்திர தலைமை இல்லாத காங்கிரஸ் கட்சியும் செய்த பல்வேறு குளறுபடிகளால்... கடந்த தேர்தலில் 2 எம்பிக்களை மட்டுமே கொண்டிருந்த பாஜக என்ற கட்சி கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது..!
அடுத்து வந்த 96 தேர்தலில் தேசிய முன்னணி தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தாலும், இரண்டு மூன்று பிரதமர்கள் என்று மாறி... கடைசியில் பாஜகவின் 52 எம்பிக்கள் சதியால் அந்த ஆட்சியும் இரண்டே ஆண்டுகளில் வீழ்ந்தது.
மீண்டும் 98இல் தேர்தல் வரவே... இதில் பாஜக கூடுதல் இடங்களைப் பிடித்து, மற்ற பிராந்திய கட்சிகளின் துணையோடு கூட்டணி ஆட்சியை அமைத்தது. அப்பொழுது திமுகவுக்கு தேவையான எம்பிக்கள் கிடைக்காததால், ஜெயலலிதா ஆதரவோடு அமைந்த அந்த ஆட்சியும் பதின்மூன்றே மாதத்தில் ஜெயலலிதா புன்னியத்தால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்க்கப்பட்டது.
மீண்டும் 99இல் தேர்தல்... இதில் பாஜக கூடுதல் இடங்களைக் கைப்பற்றவே... திமுக தனது மாநில சுயாட்சி கொள்கையை நிலைநாட்ட வகுத்துக் கொண்ட தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில்....
அதன் மூன்றாம் படி நிலையான... மத்தியில் ஒரு தேசியக் கட்சியின் தலைமையில் பல்வேறு பிராந்தியக் கட்சியின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைப்பது என்ற திட்டத்தின் படி...
99இல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய ஆட்சிக்கு தங்களோடு ஏற்கனவே இணைந்திருந்த பல்வேறு மாநிலக் கட்சிகளையும் ஆதரவு தரவைத்து, ஒரு கூட்டணி ஆட்சியை அமைக்க அடித்தளம் போட்டார்.
ஆனால் பாஜகவின் கொள்கைகள் மீது இன்றளவிலும் இருக்கின்ற அந்த ஒவ்வாமைக்கு மாற்று மருந்தாக... குறைந்தபட்ச செயல் திட்டம் என்ற ஒன்றை உருவாக்கி, அதில் பாஜகவின் அடிப்படைக் கொள்கைகள் எதுவும் செயல்படுத்தக் கூடாது என்ற விதியோடு, அந்தந்த மாநிலக் கட்சிகளுக்கான அந்தந்த மாநில மக்களுக்கான அடிப்படை கோரிக்கைகளையும் இணைத்து... இந்த அடிப்படையில் தான் இந்த ஆட்சி செயல்படும் என்ற உறுதிமொழியோடு தான் அந்த ஆட்சி அமைக்கப்பட்டது..!
அதில் சற்றும் பிறழாமல் வாஜ்பாய் ஆட்சி செய்யவே, இந்திய வரலாற்றில் முதல் முறையாக பல்வேறு பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி எந்த விதமான சிறு சலசலப்பும் இல்லாமல் அமைதியுடனும் வெற்றிகரமாகவும் முழு ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்தது..!
அதாவது திமுக தனது மாநில சுயாட்சி கொள்கையை அடைதலின் மூன்றாம் படியில் வெற்றிகரமாக தடம் பதித்து விட்டது..!
ஆனால் முதல் முறை ஆட்சியை ருசித்த பாஜகவின் மூளையான ஆர் எஸ் எஸ், வாஜ்பாய்க்கு பதிலாக அந்தக்கால மோடியான அத்வானியை முன்னிலைப்படுத்தி, அடுத்து வரும் தேர்தலில் இந்துத்துவாவுக்கு நேர் எதிர் சிந்தனை கொண்ட திமுகவை தவிர்த்து விட்டு அடுத்த கூட்டணி ஆட்சியை அமைத்து தனது இந்துத்துவா அஜெண்டாவை நிறுவ வெளிப்படையாகவே செயலாற்ற...
இதைப் புரிந்து கொண்ட கலைஞர், காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட சோனியா காந்தியுடன் பேசி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கி, அதில் தன் ரெகுலர் பிராந்திய கட்சி சகாக்களையும் இணைத்து....
2004 தேர்தலை எதிர்கொண்டு, அமோக வெற்றி பெற, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மீண்டும் திமுக பங்கேற்றது. அடுத்து வந்த 2009 தேர்தலிலும் அதே கூட்டணியே வென்று ஆட்சியைப் பிடித்தது..!
ஆக, மொத்தம் பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது.
ஆனால் முதல் முறையே பாஜக செய்த அந்த தவறை, இரண்டாவது ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் செய்ய, காத்திருந்த பாஜக சைக்கிள் கேப்பில் தனித்தே 2014இல் ஆட்சியைப் பிடித்து.... இப்பொழுது நமக்கு பெரும் தலைவலியாக வந்து நிற்கின்றது.
இப்பொழுது இந்திய மக்களே கூட ஒரு விஷயத்தை புரிந்து கொண்டு விட்டனர். ஒரு தனிக்கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால்... அவர்கள் கேள்வி கேட்க ஆள் இல்லாததால் ஆடித் தீர்ப்பார்கள். மக்கள் நலனை பேண மாட்டார்கள் என்பதை..!
ஆகவே தேசியக் கட்சி ஆட்சியாளருக்கு ஒரு கடிவாளமாக சில நல்ல பிராந்தியக் கட்சிகளின் ஆதரவோடு கூடிய கூட்டணி ஆட்சியே இந்திய ஒன்றியத்துக்கு உகந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
அதெல்லாம் போகட்டும் சார்... இந்த கட்டுரையின் தலைப்பாகவே திமுக வென்று விட்டதாக கூறினீர்களே.... அந்த வெற்றி எங்கே சார்?! மாநில சுயாட்சி கிடைத்து விட்டதா என்ன? என்று கேட்பீர்களேயானால் உங்களுக்கான விடை தான் கீழே...
திமுக தனது மாநில சுயாட்சி கொள்கையினை ஈன்றெடுக்க, ஈடுபடும் முயற்சிகளில் கடைசி படிநிலையாக வைத்திருந்தது....
ஒரு தேசிய கட்சியின் தலைமையிலான பிராந்திய கட்சிகளின் ஆதரவோடு கூடிய கூட்டணி ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்...
ஏதேனும் ஒரு தேசியக் கட்சியே மாநில சுயாட்சி கொள்கைகளை நோக்கி மெல்ல அடி எடுத்து வைக்கும். அதில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ளும்... இந்தியா என்பது நாடு என்பதைக் கடந்து ஒன்றியம் என்ற நிலையினை உணரும்...
அப்படியொரு நிலை உருவாகும் பொழுது வெகு விரைவில் மாநில சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் (கூட்டணி ஆட்சி அல்ல) சாத்தியமாகும் என்ற திட்டத்தை தலைவர் கலைஞர் வகுத்திருந்தாரே....
அதை இன்றைக்கு சாத்தியமாகியிருக்கின்றது, நேற்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை...
அதிகாரப் பகிர்வு... அதாவது மாநில சுயாட்சியை அக்கட்சி ஏற்றுக் கொண்டிருப்பதையே அந்த தேர்தல் அறிக்கை காட்டுகின்றது..!
ஒரே ஒரு உதாரணம்... கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட பள்ளிக் கல்வியை.... மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றுவோம் என்று நேற்றைய காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது..!
இந்த ஒரு அறிவிப்பு போதும்.... மாநில சுயாட்சி விரைவில் சாத்தியமாகிவிடும் என்பதற்கு..!
இதுவே திமுகவுக்கு கிடைத்த வெற்றி. ஒரு இயக்கத்தின் மூன்றாம் தலைமுறை தலைவர்... அதாவது பேரறிஞர் அண்ணா... அடுத்ததாக தலைவர் கலைஞர்.... அவருக்குப் பிறகு தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தலைவர் தளபதியார்....
தன்னுடைய இயக்கம் உருவாக்கிக் கொடுத்த கொள்கையில் இருந்து சற்றும் வழுவாமல், உறுதியாக நின்று அதைத் தொடர்ந்து முன்னெடுத்த காரணத்தினால் தான்... மீண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை முன் மொழிந்து... முன் மொழிந்ததோடு நில்லாமல் அதற்கான அத்தனை அடித்தளங்களையும் அமைத்துக் கொண்டிருப்பதால் தான்...
(கடந்த ஓராண்டில் மட்டும், மூன்று முறை சிதறிக் கிடந்த இந்திய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்று கூட்டி, சென்னையில் மாநாடு நடத்தியிருக்கின்றார்..!)
திரு. ராகுல் காந்தி அவர்கள் அதிகாரப் பரவலை தங்கள் தேர்தல் அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார். அடுத்து அமையவிருக்கும் கூட்டணி ஆட்சிகளில் மாநில சுயாட்சியை திமுக நிலை நாட்டியே தீரும்..!

வாழ்த்துக்கள் தலைவரே...! நீங்கள் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தாங்கள் அடைந்திருக்கும் முதல் வெற்றி இது. இயக்க அரசியலில் முதல் வெற்றியினை ஈட்டியிருக்கும் தாங்கள் அடுத்ததாக தேர்தல் அரசியலிலும் அமோக வெற்றியை ஈட்டிட வாழ்த்துக்கள்..!


Tuesday, February 26, 2019

ராஜாஜியின் குலக்கல்வியும்... எடப்பாடியின் பொது தேர்வுகளும்..!


இப்ப தமிழ்நாட்டுல நடப்பது எடப்பாடி ஆட்சியில்லை....  மாறாக இது பாஜகவின் எடுபுடி ஆட்சி தான்னு சொன்னா சொன்னா நம்பாதவங்களுக்கு இதை விட சிறப்பா எப்படி புரிய வைக்க முடியும்?!








Monday, February 18, 2019

திமுக - காங்கிரஸ்.... வெற்றிக் கூட்டணியா?!


திமுக - காங்கிரஸ் என்பது வெற்றிக் கூட்டணியா?!

இந்த கேள்விக்கான பதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தியிடம் தான் இருக்கின்றது. 

ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் எடுத்து வெளியிட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று கிட்டத்தட்ட ஃபுல் ஸ்வீப் அடிக்கும் என்றே தெள்ளத் தெளிவாக பதிவு செய்தன. ஆனால் ஓரிரு நாட்கள் முன்பாக டீவி விவாதம் ஒன்றில் பேசிய சுமந்த் சி ராமன் இரண்டு மாதங்கள் முன்பாக அப்படியொரு நிலை இருந்தது உண்மை தான். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு... என்று பல்வேறு காரணங்களை அடுக்குகிறார். அவர் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாது எனினும், அது மாதிரியான ஒரு ஃபீல் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு, அது மக்கள் மனதில் பதிவதையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 

ஆகவே, இக்கட்டுரைத் தலைப்புக் கேள்விக்கான விடை காண, தற்பொழுது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இக் கூட்டணி உருவான கால கட்டத்தையும் அதிலிருந்து இன்று வரையிலான பதினான்கு வருட கால சிறு வரலாற்று நிகழ்வுகளையும் சற்று உன்னிப்பாக கவனித்து அலசினாலே போதும். அதை தான் இபபொழுது நாம் செய்யப் போகிறோம்.




அது 2004 பாராளுமன்ற தேர்தலுக்கான முஸ்தீபுகளின் உச்சத்தில் தேர்தல் கமிஷன் உட்பட அனைத்து கட்சிகளும் இருந்த நேரம். காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டால்  வேரோடும் வேரடி மண்ணோடும் இந்திய அரசியலில் இருந்து பிடுங்கி எரியப்பட்டுவிடும் என்ற நிலை. அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்ற விவாதப் பொருளுக்குள் கூட ராகுல் வராத நேரமது. இன்னும் சொல்லப்போனால் பிரியங்கா தான் அரசியலுக்கு வருவார் என்று கூட பரவலாக எதிர்பார்க்கப்பட்ட காலம்.

கலைஞர் முயற்சியால் வி.பி.சிங் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய முண்ணனியிடம் தோற்றுப் போய் ராஜீவ் காந்தி பறிகொடுத்த காங்கிரஸ் ஆட்சி,  ராஜீவ் இறப்பு அனுதாப அலையில் 91 -96 இல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அது நரசிம்மராவின் செயல்பாடுகளால் ஒரு உறுதியான தலைமையை காங்கிரஸுக்கு காட்ட முடியாமல் காங்கிரஸையும் பலவீனப்படுத்தி...  அதன் பிறகு எட்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சிக்கே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தான் சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் செல்வாக்கான கட்சிகளை கூட்டணிக்காக தேடி அலையும் பரிதாபமான நிலை சோனியா காந்திக்கு. இந்த நிலையில் தான் தமிழகத்திலிருந்து தி.மு.க வின் சார்பாக காங்கிரஸுக்கு ஆதரவாக தெள்ளத்தெளிவான குரலை அழுத்தம் திருத்தமாக எழுப்புகிறார் கலைஞர்..! 

அவர் சொன்ன அந்த மந்திரச் சொல் தான்...   

இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க..! 

அதுதான் ஆரம்பம், அதன் பிறகு எல்லாமே அமர்க்களம் தான் காங்கிரஸுக்கு..!
2004 ல் காங். க்கு ஆதரவாக ஓங்கி ஒலித்த கலைஞரின் குரலாகட்டும், தேர்தலுக்குப் பின் காங். தலைமையில் ஆட்சி அமைய புதுடெல்லி சென்று தங்கி அவர் செய்த அரசியல் அதிரடி சித்து வேலைகளாகட்டும், பின்னர் சில பல கூட்டணி கட்சிகளால் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது தன்னுடைய உறுதியான ஆதரவை வெளிப்படுத்தி அதை முறியடித்த பாங்காகட்டும், இவைகளெள்லாம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிறந்த நிலைப்புத் தன்மையை ஏற்படுத்தித் தந்ததோடு... சோனியாவையும் இந்திய ஆட்சி அதிகாரத்தின் ஏக போக தலைவியாக்கியது. 

காங்கிரஸின் இந்த வளர்ச்சி நிலை தான் இலங்கையில் தனித் தமிழ் ஈழம் என்ற கனவு தவிடு பொடியாக்கப்பட்டு, புலிகள் அழிப்பு, பிரபாகரன் இழப்பு என்று போய் கடைசியில் முள் வேலி சித்ரவதை வரை கொண்டு வந்து நிறுத்தியது! இது தான் ஈழத் தமிழர்களின்/ஆதரவாளர்களின் கண்மூடித்தனமான கலைஞர் எதிர்ப்புக்கு வித்திட்டு விட்டது.

அடுத்தது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வரலாற்றின் இரண்டாவது அத்தியாயம் 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு ஆரம்பமாகிறது. இதில் தான் நம்முடைய முதல் பாரா கேள்விகளுக்கு காரணமான நிகழ்வுகள் தொடங்குகிறது. இந்த அத்தியாயத்தின் 'நெகடிவ் ஹீரோ' தான் ராகுல். அவரைச் சொல்லி குற்றமில்லை..., 

கடந்த முறை அதிகமான கட்சிகளின் துணை மற்றும் வெளி ஆதரவோடு கடும் நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், இந்த முறை குறைந்த அளவிலான நல்ல (நெருக்கடி கொடுக்காத) கட்சிகளுடைய ஆதரவோடு நிம்மதியான ஆட்சி செய்கிறது.  இந்த நிலையில் தான் ராகுலுக்கு கட்சியை வளர்ப்பதற்கான முக்கிய பொறுப்புக்கள் கொடுக்கப்படுகிறது. 

கூட்டணி ஆட்சி அமைக்கவே அவரது அன்னை சோனியா மாநிலக் கட்சிகளோடு எந்த அளவிற்கு கீழிறங்கி வந்து சமரசம் செய்து கொண்டார். அவருடன் அணி சேர்ந்த திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் மற்றும் அந்த  கூட்டணி ஆட்சியை வெற்றிகரமான ஆட்சியாக மாற்றிய கலைஞர் போன்றவர்கள் எப்படி அதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதையெல்லாம் ராகுல் அறிந்திருக்கவில்லை.

ராகுலுக்கு முன்பாக இருந்த கனவு / ஆசை எல்லாம் காங்கிரஸை தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவாக்கி தனிக்கட்சி ஆட்சியை மத்தியில் கொண்டு வர வேண்டும் என்பது தான். துரதிருஷ்டவசமாக அந்த கனவுக்கு தடையாக இருப்பது தங்கள் நண்பர்களான பிராந்தியக் கட்சிகள் மற்றும் கலைஞர் என்று அவர் நம்பியதன் விளைவு தான் மீண்டும் காங்கிரஸின் மாபெரும் வீழ்ச்சிக்கும், பாஜகவின் தனிக்கட்சி ஆட்சிக்கும் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது..!

தமிழகம் வந்தால் கலைஞரை அவர் சந்திப்பதில்லை அதனால் கூட்டணிக்குள் குழப்பம் என்றார்கள்..!   அது தவறு, அவர் கலைஞரை சந்திக்காததால் தான் கூட்டணி அப்பொழுது உடையாமல் இருந்தது! தமிழகத்தில் இந்த வெற்றி கூட்டணியை விளங்காத கூட்டணி லெவலுக்கு கொண்டு சென்றதில் ராகுல் காந்தியின் பங்கு அளப்பரியது. 

2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கூட்டணி 60 சதவீத வெற்றி மட்டுமே பெற்றதற்கு காரணம் இலங்கை பிரச்சினையில், சம்பந்தப்பட்ட பிராந்திய கூட்டணி கட்சியான திமுகவின் வழிகாட்டுதல் / கோரிக்கைகளை மதிக்காமல் செயல்பட்ட மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசின் தாந்தோன்றித்தனமான வெளியுறவு கொள்கை தான். அதற்கு மேல் திமுக அழுத்தம் கொடுத்தால், அதிமுகவின் 12 எம்பிக்களின் ஆதரவை ஜெயலலிதா அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்ததை ராகுல் காந்தி பயன்படுத்த தயாரானதும் தான்..! 

கூட்டணி தர்மம் மற்றும் இன்னபிற கருமாந்திர காரணங்களுக்காக இப் பிரச்சினையில் மெளனம் காத்ததற்கான விலையை தி.மு.க வும் கொடுத்தது. இல்லையென்றால், 2009இலும் கூட திமுக - காங்கிரஸ் கூட்டணி நாற்பதுக்கு நாற்பது அடித்திருக்கும்..!

அதன் பிறகு மற்ற கூட்டணி பிராந்திய கட்சிகள் மீதான இவரது ஆட்டம் ஆரம்பமாக... 

காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் அதகளப்பட்டு, பீகாரில் புரட்டி எடுக்கப்பட்டு, கேரளாவில் கலகலத்து, குஜராத்தில் கொஞ்சம் கூட முன்னேராமல்... இப்படியே இது ஒரு தொடர் கதையாகிவிட்டது.  அவர் தொட்டது எதுவுமே துலங்கவில்லை என்றும், பப்பு என்ற பட்டப்பெயரும்  அவரை மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியையே நிலை குலையச் செய்து விட்டது..!

அதற்கெல்லாம் பிறகும் கூட....   இவருக்கு திமுக மீது என்ன கோபமோ.....  இவர் அனுமதி கொடுத்ததாலோ அல்லது அடக்கி வைக்காததாலோ, 2011 சட்டமன்ற தேர்தல் வரை தமிழக காங்கிரஸ்  (தரு)தலைகள் அடித்த கூத்துக்கள் தான் அந்த தேர்தலில் இக் கூட்டணியின் வெற்றியை பதம் பார்த்து அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றது.  ஈவிகேஎஸ். இளங்கோவனில் ஆரம்பித்து, தனித்து ஒரு தேர்தலில் நின்றால் டெப்பாசிட் கூட வாங்க அருகதையற்ற தமிழக காங்கிரஸ் பிரதான கோஷ்டியின் தலைவர் வாசன், அவருடைய அடிப்பொடி இளைஞர் காங்கிரஸ் யுவராஜ், குபீர் குபீர் என பொங்கி அடங்கும் கார்த்திக் சிதம்பரம் இப்படியாக இன்னும் பல கோமாளிக் கூட்டம் வரை அடித்த கூத்துக்கள் தனக்குத் தானே குழிபறித்துக் கொள்ளும் விபரீத நிலையை இக் கூட்டணிக்கு ஏற்படுத்தி விட்டன.



அப்பொழுது சீமான் என்ன காரணத்திற்காக தி.மு.க வை எதிர்த்து அ.தி.மு.க வை ஆதரிக்கிறார் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமல் இந்த த(வளை)லைகள் காங்கிரஸை அ.தி.மு.க அணிக்கு கொண்டு செல்ல முயன்றது,  அகில இந்திய காங். க்கு பலம் பொருந்திய தலைமை ஒன்று இருக்கிறதா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. 

தென் தமிழகத்தில் தமது கட்சியின் மூன்றாம் கட்ட பேச்சாளர் ஒருவர், இதையெல்லாம் கண்டு பொறுக்க முடியாமல் காங்கிரஸ் தலைவர்களை குறை கூறி பேசினார் என்பதற்காக கட்சியிலிருந்து கட்டம் கட்டிய தி.மு.க தலைமை எங்கே..?!  தமக்குத்தாமே குழி பறிப்பவர்களை தும்பை விட்டு வாலை கூட பிடிக்க முற்படாத காங்கிரஸ் தலைமை எங்கே?

இன்றைக்கு  கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையிலேயே...  அயோக்கிய அதிமுக அரசை அனைத்து ஜனநாயக படுகொலைகளையும் செய்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் மோடியின் பாஜகே எங்கே....?!  

ஆனால் பொய்யான 2ஜி வழக்கை இஷ்டத்திற்கு ஆட வைத்து....  அதன் விசாரணையை மேல் தளத்திலும்...,  கூட்டணி பேச்சுவார்த்தையை கீழ் தளத்திலும் மேற்கொள்ளச் செய்த ராகுலின் ப. சிதம்பரம் வகையறாக்கள்  எங்கே..?!  அதைச் சொல்லித்தானே...  இன்னமும் கூட அனைத்து ஊடக விவாதங்களிலும் திமுக எதிர்ப்பாளர்கள் திமுகவினரை தலைகுனிய வைக்கின்றார்கள்..!

அதன் பிறகு...  அதாவது 2011 தேர்தலுக்குப் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக நடப்பது எல்லாம், அனைவருக்கும் சமீப காலம் என்பதால் நன்றாக நினைவில் இருக்கும் என்றே நம்புகிறேன். 

ராகுல் காந்தி அதுவரை செய்து வந்த காரியங்கள் அனைத்தும் 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலையில் மொத்தமாக வந்து இறங்கியது. அதுவரை காங்கிரஸுக்கு ஆதரவளித்து வந்த பிராந்திய கட்சிகளில் கிட்டத்தட்ட திமுக தவிர்த்து ஏனைய அனைத்துக் கட்சிகளுமே பாஜகவின் தேசிய முண்ணனி கூட்டணிக்கோ அல்லது தனித்து நிற்கவோ தயாராகி தேர்தலை சந்திக்க...    காங்கிரஸோ அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சிக்கு தேவையான எண்ணிக்கையில் கூட எம் சீட்டை பெறாமல் போன சோகம் தான் நிகழ்ந்தது. 

காலம் கடந்து வந்த கோபத்தில்...  திமுகவும் கூட கொள்கை என்கிற நிலைப்பாட்டில் பாஜகவோடு கூட்டணி அமைக்கா விட்டாலும், காங்கிரஸை கழட்டி விட்டு தனியாகவே கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலை சந்தித்தது.  

இந்த அளவிற்கான ஃப்ளேஷ் பேக் போதும் என்றே நினைக்கிறேன்..!  இனி தலைப்பு மேட்டருக்கு வருவோம் 

தன்னுடைய முதல் அரசியல் பிரவேசத்தில், தான் எடுத்த வியூகங்கள் அனைத்துமே வீணாகிப் போய்...  தன்னுடைய அன்னை தன்னை மிக மிக வறுத்திக் கொண்டு, கீழிறங்கி சமரசங்கள் செய்து மீண்டும் கட்டமைத்த காங்கிரஸ் இயக்கத்தை  தன்னுடைய தவறான வியூகம் அதல பாதாளத்திற்கு தள்ளி விட்ட அந்த பெரும் தோல்வியானது ராகுல் காந்தியை முழுமையாக புரட்டிப் போட்டுவிட்டது.!  

மெல்ல மெல்ல அவருக்கு அரசியலும்...  அதன் சித்தாந்தமும், மக்களும், நண்பர்களும், எதிரிகளும், துரோகிகளும் புரிய ஆரம்பித்தார்கள்.  யாரை மதிக்க வேண்டும்....  எவர் அலட்சியப்படுத்தும் தகுதி கொண்டவர் என்பதெல்லாம் அவருக்கு புரிய ஆரம்பித்தது..!

விளைவு....  அடுத்ததாக வந்த பீகார் சட்டமன்ற தேர்தலில்,  மிக மிக கீழிறங்கி, தொகுதி எண்ணிக்கை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், தான் அமைத்த அணி வெல்ல வேண்டும்....  அதாவது காங்கிரஸ் கூட்டணி வென்றதாக இந்தியா முழுவதும் செய்தி பரவ வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு செயல்பட்டார். அதில் வெற்றியும் கண்டார். காங்கிரஸுக்கு அதில் தனிப்பட்ட வகையில்...  அதாவது எம் எல் ஏக்கள் கிடைப்பதில் எந்த சிறு லாபமும் இல்லையென்றாலும், அகில இந்திய அளவில் சோர்ந்து போயிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு உயிர் தண்ணீர் ஊற்றி துளிர்த்தெழச் செய்த அந்த பெரும் பலன் கிடைத்தது..!

அதேப் போன்று தமிழக 2016 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவோடு நிறைய சமரசங்கள் செய்து....  அதாவது முன்பு போல 63 தொகுதிகள் வேண்டும், இன்னின்ன தொகுதிகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டினை எல்லாம் எடுக்காமல், திமுக கொடுத்த 42 தொகுதிகளில் நின்று.... அக்கூட்டணி முன்பிருந்ததை விட மிகப் பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.  ஆட்சியைப் பிடிக்க வெறும் 1.1 சதவிகித வாக்குகளே அக்கூட்டணிக்கு குறைவாகிப் போனதற்கு வைக்கோ, திருமா, கம்யூனிஸ்ட்டுகள் அமைத்த மக்கள் நல கூட்டணி என்கிற ஜெயலலிதா நலச் சங்கமும்...  தேர்தலுக்கு முந்தின தினம் 144 போன்று தமிழகம் முழுவதும் மின் தடை ஏற்படுத்தி அரங்கேற்றப்பட்ட அட்டகாசமான பண விநியோகமும் தான் காரணம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று...!

அதற்குப் பிறகு ஜெயலலிதா மரணமும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, தினகரன் அடித்த கூத்துக்களும். சசிகலா சிறை சென்றதும், அதிமுக நெட்டுக்குத்தாக பிளவுபட்டு தினகரன் தலைமையில் சென்றிருப்பதும், மக்கள் நல கூட்டணி திமுகவோடு தோழமையாகியிருப்பதும், விஜயகாந்த் மிகப்பலமாக பலவீனப்பட்டுப் போயிருப்பதும்.....  அனைத்திற்கும் மேலாக அதைச் செய்வார், இதைச் செய்வார் என்று பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட மோடி, முழுமையாக ஏமாற்றமளித்ததும்....

இப்படியாக அனைத்து நிகழ்வுகளும், அடுத்ததாக எந்த தேர்தல் வந்தாலும் அது திமுக - காங்கிரஸ் கூட்டணியை அமோகமாக வெற்றியடையச் செய்யும் என்ற பொதுப்புத்தியை ஒட்டுமொத்த வாக்காளர்களின் மனதிலும் ஆழமாக பதிய வைத்து விட்டது. 

இதற்கு முன்னதாக கலைஞர் உடல்நலம் குன்றி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த நிலையில்...   அதற்கு முன்பு பத்து ஆண்டுகள் தங்கள் கூட்டணி ஆட்சியில் பங்கேற்ற ஒரு மூத்த அரசியல் தலைவரை ஒரே ஒரு முறை கூட அவர் இல்லத்திற்கோ, கட்சி அலுவலகத்திற்கோ வந்து நேரில் சந்தித்திராத....  இன்னும் சொல்லப்போனால் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் புதிய தலைமைச் செயலக கட்டிட திறப்பு விழாவுக்கு சென்னை வந்திருந்த பொழுது... அவர்கள் உடன் வந்திருந்தும்,  விமானநிலையத்திலிருந்து நேரடியாக காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற அந்த ராகுல் காந்தி..... ஓராண்டுக்கு முன்பாகத்தான் முதல் முறையாக கலைஞரை நேரில் வந்து அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெறுகின்றார். 



அதன் பிறகு தான் பப்பு என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் காந்தி....  அரசியல் அரங்கில் பாஜகவுக்கு பெரிய ஆப்பாக மாறிப்போனார்.  அதன் பிறகு ரஃபேல் விவகாரத்தில் மோடிக்கு எதிராக பாராளுமன்றத்தில் அவர் ஆடிய தனி ஆவர்த்தனம் தான் அவரது அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்..!  பின்பு குஜராத்தில் பாஜகவின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, காங்கிரஸை வளர்த்திருக்கின்றார்...  கர்நாடகவில் பாஜகவின் தில்லாலங்கடி வேலைகளுக்கு மத்தியிலும் மிகப் பெரிய சமரசம் செய்து பாஜக ஆட்சி அமைப்பதை தவிடு பொடியாக்கியிருக்கின்றார். சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் மூன்றில் பாஜகவை விரட்டி அடித்து காங்கிரஸை வெற்றி வாகை சூட வைத்துள்ளார். 

ராகுலின் கடந்த ஓராண்டு ப்ராக்ரஸ் தான்....  தங்களுக்கு எதிரிகளே இல்லை என்று மார்தட்டிக் கொண்டிருந்த பாஜகவை மெகா கூட்டணிக்காக எடப்பாடி காலில் எல்லாம் விழ வைத்திருக்கின்றது..!

இந்த மாற்றம் ஒரு மாயை போல திடீரென்று ஒரே வருடத்திற்குள்ளாக எப்படி நிகழ்ந்தது?!  அவர் கூற்றின் வாயிலாகவே இதற்கான விடையை நாம் கண்டு பிடித்துவிடலாம். ஆம், கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது,  தலைவர் கலைஞரை முதன் முதலாக சந்திக்க அவர் இல்லம் செல்கின்றேன்.  நான் எண்ணியிருந்தேன் அதிக காலம் முதல்வராக இருந்தவர், மத்திய ஆட்சியில் வெகுகாலம் பங்கேற்ற கட்சித் தலைவர், இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதி....  அவரது இல்லம்....  எப்படியெல்லாமோ இருக்கும் (ராகுலின் பாடி லாங்குவேஜ்...  அந்த இல்லம் மும்பையில் உள்ள அம்பானி வீட்டினைப் போல் இருக்கும் என்று நினைத்திருப்பார் போல) என்று எண்ணியிருந்தேன்.....    ஆனால் அவரது இல்லமோ, ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து மனிதரின் வீட்டினைப் போன்று, நிறைய வீடுகள் அடுத்தடுத்து இருக்கின்ற ஒரு தெருவில்  இருக்கின்ற இன்னொரு வீடு போல் தான் இருந்தது என்கிறார். அவர் மக்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார், மக்களுக்காகவே போராடியிருக்கின்றார்.....  இப்படியாக ராகுல் காந்தி அவர்கள் வானத்தைப் பார்த்து பேசிக்கொண்டே சென்று.... 

அதற்கு முன்னதாக கலைஞர் பற்றி தனக்கு இருந்த மதிப்பீடு சுத்தமான பொய்...  அன்று அவர் பார்த்த கலைஞர் என்பது தான் நிஜம் என்று உணர்ந்தவராய்...  அவரைப் போலத்தான் இனி தன்னுடைய அரசியலை முன்னெடுப்பேன் என்று பட்டவர்த்தனமாக அந்த மேடையிலேயே அறிவித்தார்..!

கலைஞர் தரிசனத்திற்குப் பிறகு ஞானம் பெற்று வெற்றிகளை ஈட்டும் தகுதியோடு இருக்கும் அந்த ராகுல் காந்தியைத் தான் அன்றைக்கு அதே மேடையில் திமுகழக தலைவர் ஸ்டாலின் அவர்கள்...  வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக தங்கள் கட்சியின் சார்பாக அறிவித்தார். காங்கிரஸே கூட இன்று வரையிலும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தயங்குகின்ற ராகுலை...  ஸ்டாலின் அவர்கள் பகிரங்கமாக அன்று அறிவித்தார். அதன் பிறகு காட்சிகள் தேசிய அளவில் மெல்ல மெல்ல மாறின... முதலில் எதிர்ப்புகள் ஆங்காங்கே முளைத்தாலும்...  இன்றைக்கு ஆந்திரா, கர்நாடகா, பீகார் என்று ஒவ்வொன்றாக அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள துவங்கிவிட்டனர்..!

ஆனால் அதற்கான விதையைப் போட்டது திமுக..!

இப்பொழுது வருவோம் இந்த கட்டுரையில் தலைப்புக் கேள்விக்கு...!

திமுக - காங்கிரஸ் இம்முறை வெற்றிக் கூட்டணியா என்றால்...   ஆம் அது வெற்றிக் கூட்டணி தான்....  ஆனால் அது ராகுல் காந்தியின் செயல்பாட்டில் தான் ஒழிந்துகொண்டுள்ளது என்பது தான் நிதர்சனமான பதில்..!

ஆம்...  கடந்த சட்டமன்ற தேர்தலையே நாம் கணக்கில் எடுத்துக்கொள்வோம்.  திமுக தான் நின்ற தொகுதிகளில்  52 சதவிகித இடங்களில் (89/173) வென்றுள்ளது. அதே சமயம் காங்கிரஸோ  தான் நின்ற தொகுதிகளில் வெறும் 19 சதவிகித இடங்களில் மட்டுமே (9/42) வெற்றி பெற்றுள்ளது. 

இன்னுமொரு கணக்கையும் கூட நாம் பார்க்கலாம்.  திமுக தான் நின்ற தொகுதிகளில் வாங்கிய ஓட்டு சதவிகிதத்தை விட 1.1 சதவிகிதம் குறைவாகவே காங்கிரஸ் ஓட்டு வாங்கியுள்ளது.  ஆகவே அதிமுக ஆட்சி அமைக்க ஏதுவான கூடுதல் தொகுதிகள் அனைத்துமே காங்கிரஸிடமிருந்து பறிக்கப்பட்டவையே..!

இந்த இடத்தில் ராகுல் காந்தி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.  பாஜகவுக்கு கூட தமிழகம் முழுவதும்  கட்சி அமைப்புக்கள் உண்டு. ஊராட்சி மற்றும் வார்டு கிளைக்கழக அளவில் இல்லை என்றாலும் கூட பகுதி, ஒன்றிய, நகர அமைப்புக்கள் வரையிலும் உண்டு. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளிலும் பூத் கமிட்டியும் போட்டுள்ளது. இது தவிர  பாஜகவுக்கு அனைத்து வகைகளிலும் உதவிட ஆர் எஸ் எஸ், இந்துமுண்ணனி போன்ற சார்பு அமைப்புக்கள் இருக்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி இருக்கின்றது, தேர்தல் கமிஷன் இருக்கின்றது, பணம் இருக்கின்றது, ஊடகங்கள் இருக்கின்றது..!

இவை எதுவுமே காங்கிரஸுக்கு கிடையாது. தமிழகம் முழுவதும் கட்சிக்கான அமைப்போ, தொண்டர்களோ கூட கிடையாது.  அவர்கள் எந்த தொகுதியில் நின்றாலும், முழுக்க முழுக்க கூட்டணிக் கட்சியான திமுகவை மட்டுமே நம்பி நின்றாக வேண்டும். திமுகவினர் இல்லாமல் அவர்களால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியாது. 

ஆனால் இவ்வளவு பலமும் இருக்கின்ற பீகார், கர்நாடகாவிலேயே கூட நிறைய விட்டுக்கொடுத்து நிற்கும் போது... தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கின்ற நிலையில் கூட்டணி விவகாரங்களில் ராகுல் காந்தி எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாம் சொல்லவே தேவையில்லை. 

ஒரு மாதம் முன்பு வரையிலும் கூட நீங்கள் இந்த மனநிலையில் தான் இருந்தீர்கள்.  அப்பொழுதெல்லாம் காங்கிரஸின் எந்த தமிழக தலைவரிடமிருந்தும் சிறு முனுமுனுப்புக் கூட வந்திருக்கவில்லை. மக்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் நம்பினர் இது உடைக்க இயலாத கூட்டணி என்று. 

ஆனால் இன்றைக்கு புதிய தலைவர் கே.எஸ். அழகிரி, திமுகவை கமல் விமர்சித்த பிறகும் அவரை கூட்டணிக்கு அழைத்ததும், இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்குள் வர வேண்டும் என்று அழைப்பதும்...  வசந்த குமார், எங்களுக்கு 16 சீட்டுக்கள் வேண்டும் என்று கேட்பதும், இந்த கூட்டணி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் கொண்டு செல்கின்றது. அதை தெளிவாக செய்து முடிக்க பாஜக ஆதரவு ஊடகங்களும் அற்புதமாக துணை போகின்றன. 

இன்றைக்கு இந்திய அளவில் மற்ற கட்சித் தலைவர்களை விட...  இன்னும் ஒரு படி தெளிவாக சொல்ல வேண்டுமானால் உங்கள் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களை விட...   காங்கிரஸ் தலைமையிலான ஒரு கூட்டணி ஆட்சியும் அதில் நீங்கள் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் உறுதியாகச் சொல்லக் கூடிய தலைவர் திரு மு.க. ஸ்டாலின் மட்டுமே.  அவர் தன்னுடைய நேர்மையை இன்னும் ஒரு படி மேலே சென்று....  ஒருவேளை பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் கூட நாங்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்  என்று போஸ்ட் போல் முடிவையும் கூட பகிரங்கமாக அறிவித்து விட்டார். 

அப்படிப்பட்ட தெளிவான பாஜக எதிர்ப்பாளரைப் பார்த்து மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சியின் தலைவரைப் பார்த்து மோடி - அமித்ஷா கூட்டணியே அலறுகின்றது. ஆகையால் அவர்கள் வகுத்த திட்டமே, திமுக - காங்கிரஸ் கூட்டணி வென்றாலும் கூட திமுக அதிக இடங்களில் வெல்லக் கூடாது என்பதாகும்..!

ஆனால் கள யதார்த்தமோ, வாக்கு வங்கி கூட்டல் கழித்தல்களோ சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், திமுக எத்தனை தொகுதிகளில் நின்றாலும் வெல்லும் என்பது தான். ஆகவே தான் பாஜக காங்கிரஸை பல்வேறு வகைகளில் உசுப்பேற்றி விட்டு, மற்ற சிறு, குறு கட்சிகளையும் பேச வைத்து திமுக நிற்கின்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முற்படுகின்றது. அதற்காகவே அதிமுக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைப்பது போல தோற்றத்தை உருவாக்கி, அந்த அணி அமைந்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்க்கு பலத்த சவாலாக இருக்கும் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி....  அதைக் கொண்டு திமுகவை குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில்  போட்டியிட வைத்து விடலாம் என்று கணக்குப் போட்டு...  மோடி - அமித்ஷா கூட்டணி அதை செயல்படுத்தியும் வருகின்றது..!

உங்களுக்கே கூட அந்த சபலம் ஏற்பட்டிருக்கலாம். உங்கள் மாநில தலைவர்கள் திமுகவை வளரவிட்டால் மத்திய ஆட்சியில் நம்மை ஆட்டிப் படைப்பார்கள் அதனால் அவர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று உங்களை வளைத்திருக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில், திமுகவுக்கு கிடைக்கின்ற அதிகப்படியான எம்பிக்கள் தான் மாயாவதி, முலாயம்சிங், மம்தா போன்றவர்களுக்கு கடிவாளம் போட்டு இழுக்க உங்களுக்கு உதவும்.  திமுகவின் எண்ணிக்கை குறைந்து மேற் சொன்னவர்களின் எண்ணிக்கை கூடினால், அது உங்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருக்காது. அப்படியே அமைந்தாலும் அவர்களிடம் தினம் தினம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் அது பாஜக மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க கூட வழி வகுத்துவிடும் அபாயமும் இருக்கின்றது..!

ஆகவே மீண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய ராகுல் காந்தி செய்ய வேண்டியது எல்லாம், தமிழக கூட்டணி விவகாரங்களை முழுக்க முழுக்க திமுக தலைவர் ஸ்டாலினிடமே விட்டு விடுவது தான்.  நீங்கள் எதையும் செய்யுங்கள் ஆனால் நாற்பது தொகுதிகளையும் சிந்தாமல் சிதறாமல் கொண்டு வாருங்கள் என்ற நிபந்தனையோடு, திமுகவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு,  நிம்மதியாக மற்ற மாநிலங்களில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்துவது தான்..!

இதைச் செய்தாலே திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி தான்..!