Friday, November 23, 2012

இருண்ட தமிழகம்!

எங்கு பார்த்தாலும் ஒரே மயான அமைதி. இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த அனேக சௌகரியங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இப்பொழுது இந்த அசௌகரியங்களை பழகிக் கொள்ள முயன்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் குழந்தைகளையும், சிறு பிள்ளைகளையும் நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கின்றது.

ஓரிரு வயதாகியிருக்கும் குழந்தைகளுக்குக் கூட பரவாயில்லை. பிறந்ததிலிருந்தே, தொடர் மின்விசிறி காற்றில் தூங்காத இந்த நிலை பழக்கமாகியிருக்கும். ஆனால் மூன்று வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் படும் பாடு தான் காணச் சகிக்கவில்லை. பிறந்ததிலிருந்து இரவு நேரத்தில் முழு மின் விசிறிக் காற்றில் தூங்கப் பழகிவிட்டு, இப்பொழுது பாதி ராத்திரி புழுக்கமும், கொசுக்கடியும் தரும் அவஸ்த்தையில் துவண்டு போகிறார்கள்.

காலை ஆறு மணிக்கு கண் விழித்தாலே கூட கரண்ட் காணாமல் போய்விடுகிறது. அடுத்து பத்து மணிக்குத் தான் திரும்பவும் கரண்ட்டைக் கண்ணால் பார்க்க முடியும். ஆனால் அலுவலக வேலைக்குச் செல்பவர்களானாலும் சரி, தினக்கூலி வேலைக்குச் செல்பவர்களானாலும் சரி, காலை 8 லிருந்து பத்து மணிக்குள் வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற நியதி இருப்பதால், மின்சாரத்தை உபயோகிக்காமலேயே வேலைக்குச் சென்று விட வேண்டிய அவலம் தான் மிஞ்சுகிறது.

ஹீட்டரில் சுடுநீர் வைத்துக் குளிப்பது, காலையில் படிப்பது, மிக்ஸியில் சட்னி அரைப்பது, காலையில் உடைகளை சலவை செய்து கொள்வது, நல்ல வெளிச்சத்தில் அலங்காரம் செய்து கொண்டு வேலைக்குக் கிளம்புவது, செல்ஃபோன் சார்ஜ் செய்வது, காலைச் செய்திகளை டீவியிலோ, ரேடியோவிலோ கேட்பது, அக்வாகார்டில் குடிநீரைச் சுத்திகரித்துக் குடிப்பது, ....

என்ற இப்படியான எண்ணற்ற காலை வேலைகளுக்கு நமக்கு பேருதவியாக இருந்த மின்சாரம் இன்மையால், அனேகமாக அனைவர் வாழ்விலும் இந்த காலை நேரப் பணிகள் தடையாகித் தான் போயிருக்கிறது.

ஒரு வழியாக பத்து மணிக்கு வரும் மின்சாரம் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தன் கடமையை முடித்து விட்டு 12 மணிக்கெல்லாம் கடையைக் கட்டிவிடும்! அதற்குள்ளாக வீட்டுப் பெண்கள், குடும்பத்தினரின் மறுநாள் தேவைக்கான உடைகளை சலவை செய்வதா? வாஷிங் மெஷின் போட்டு அழுக்குத் துணிகளை துவைப்பதா? மிக்ஸி கிரைண்டரைப் பயன் படுத்தி மதிய உணவைச் சமைப்பதா? என்று அல்லாடித் தான்  போய்விடுவார்கள்!

இதில் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள டிவீ, ஃபேன் என்றெல்லாம் எப்படி எண்ணம் வரும்? 12 மணிக்குப் போன கரண்ட் மறுபடியும் மாலை நான்கு மணிக்குத் தான் வந்து கதவைத் தட்டும். அதற்குள்ளாக வியர்வையில் நனைந்தபடியே சாப்பிட்டு முடித்து.....   காலையிலிருந்து தொடர்ந்து வேலை செய்து, மதியும் உண்ட களைப்பும் சேர்ந்து கொள்ள கொஞ்சம் படுத்து உறங்கி புத்துணர்வு பெறலாம் என்றாலும், வியர்வையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தலைவலி வந்தது தான் மிச்சம் எம் தாய்க்குளங்களுக்கு!

தலைவலி தலையைப் பிளக்க ஆரம்பிக்கும் போதே சரியாக 4 மணிக்கு மின்சாரம் வந்து கதவைத் தட்ட, மீண்டும் அறக்கப் பறக்க ஓட்டத்தை ஆரம்பித்தாக வேண்டும். ஏனென்றால் வந்த கரண்ட், ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் கடையைக் கட்டிவிடுமே!

அந்த இரண்டு மணி நேரத்தில், அவசர அவசரமாக கிரைண்டர் போட்டு இட்லி மாவு அரைப்பது, இரவு டிபனுக்கு மிக்ஸி, குக்கர் இத்தியாதிகளை பயன் படுத்தி வேலைகளை முடித்துக் கொள்வது, தண்ணி டேங்க்குக்கு நீர் ஏற்றுவது, இத்தியாதிகளை முடித்தாக வேண்டும்!

ஒரு வழியாக ஆறு மணிக்கெல்லாம் கரண்ட் போன பின்பு முகம் கழுவிக் கொண்டு, இருட்டில் சென்ற கணவனையும் பிள்ளைகளையும், இருட்டோடு வீட்டிற்குள் வரவேற்று.....  அதன் பிறகு ஆறே முக்காலுக்கு வந்து ஏழேகாலுக்கு போகும் அரை மணி நேர கரண்ட்டில், கணவனும், குழந்தைகளும் டீவிக்கு அடித்துக் கொண்டிருக்க, இரவு டிபனுக்கு அம்மா ரெடி செய்து விடுவாள்.

ஏழேகாலுக்கு கரண்ட் போனவுடன், வாசலில் வந்து அனைவரும் அமர்ந்து கொண்டு கதை பேச.... சரியாக எட்டு மணிக்கு கரண்ட் வந்தவுடன், அவசர அவசரமாக அனைவரும் உள்ளே வந்து சீக்கிரமாக கரண்ட் இருக்கும் போதே சாப்பிட்டு முடித்து விட்டு, படுக்கையறைக்குள் புகுந்து விட வேண்டியது தான்! இல்லன்னா, மீண்டும் எட்டே முக்காலுக்கு கரண்ட் போயிடுமே! இதே கதை தான் இரவு முழுதும் பயணித்து, விடிகாலை 6 மணி வரை தொடரும்.

இது தான் இன்றை தமிழக குடும்பங்களின் ஒரு நாள் வாழ்க்கை முறையாக இருந்து கொண்டிருக்கிறது.  தன் சௌகரியத்துக்கு, தான் நினைத்தபடி எதையும் எப்பொழுதும் செய்து கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு படிப்பு, விளையாட்டு எதுவும் கிடையாது. பெரியவர்களுக்கு டிவீ, ரேடியோ என்ற பொழுதுபோக்கு அம்சங்கள் கிடையாது. பெண்களுக்கு மாவரைப்பது, சட்னி அரைப்பது, துணி துவைப்பது, சலவை செய்வது எல்லாம் சவாலாகிப் போய்விட்டன.

மொத்தத்தில் கரண்ட் இல்லாமல், மின் விசிறி இல்லாமல், இரவு பகல் எப்பொழுதும், வியர்வையில் பொசுங்கி, கொசுக்கடியில் அல்லலுற்று, தூக்கம் கெட்டு நடைப் பிணமாகத் தான் ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மாலை ஆறு மணிக்கு மேல் ஊரே இருண்டு கிடக்கிறது. நிறைய வழிப்பறிகளும், சங்கிலி அறுப்புகளும் சர்வசாதாரணமாகி விட்டன. பெண்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றார்கள். வாழ்க்கையே முடங்கிப் போனது போல் ஆகிவிட்டது ஒவ்வொருவருக்கும்.

மாலை நேரங்களில் கரண்ட் இல்லாத போது ஊரே ஒரு வித மயான அமைதியில் இருப்பது போன்ற ஒரு உணர்வு வருகின்றது...... இதெல்லாமே கரண்ட் இல்லாததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக மக்கள் அனுபவிக்கும் ஒருநாள் வாழ்க்கை முறை கஷ்டங்கள் மட்டுமே....!

ஆனால் இந்த மின் தடையால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பும், அதன் காரணமாக அவர்கள் படுகின்ற பாடும், தனிப் பெரும் பதிவாக எழுதக் கூடிய அளவிற்கு மிகவும் மோசமானது!!!!

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது, தமிழகம் இருண்டு விட்டது.. தமிழகம் இருண்டு விட்டது என்று!

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரருக்கு அப்பொழுதே தெரிந்திருக்கிறது போலும் தமிழகம் இருண்டுவிடும் என்று!!!!

Thursday, October 18, 2012

திரா சார் வீட்டு கொலு

என் தாய் வழிப் பாட்டியின் ஊர் பெருஞ்சேரி. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு உதாரணமாயிருக்கும் அழகிய கிராமம். அந்த ஊரைப் பற்றி நிறைய பல முறை எழுதிவிட்டதால் அப்படியே அதை கட் பண்ணிட்டு திரா சார் வீட்டுக்கு வருவோம்.

ஊரின் தென்பக்கமாக ஓடும் வீரசோழன் ஆற்றிலிருந்து நேராக கிராமத்துக்குள் நுழையும் ஒற்றையடிப் பாதையைக் கடந்து வரிசையாக பக்கத்திற்கு  பத்து வீடுகளைக் கொண்டிருக்கும் திருமஞ்சன வீதியையும் கடந்தால் ஊருக்குள் ஒரு நாளைக்கு 5 முறை வந்து செல்லும் ஒரே பேருந்தான எட்டம் நம்பர் பஸ்ஸுக்காகவே போடப்பட்டிருக்கும் கருங்கல் ரோட்டை வந்து முட்டலாம்.

ரோட்டின் கிழக்குப் பக்கம் திரும்பி நடந்தால் வலப்பக்கத்தில் இருக்கும் முதல் ஓட்டு வீடு தான் திரா சார் வீடு. அந்த வீட்டின் கொல்லை திருமஞ்சன வீதியில் முன்னூறு அடிக்கு நீண்டிருக்கும். அந்த வீதியின் மேலண்டை பக்கத்தில் இருக்கும் முதல் நான்கு வீடுகளுக்கு திரா சார் வீட்டுக் கொள்ளை தான் எதிர் வீடு!

ஊரில் இருக்கும் மூன்று பிராமணக் குடும்பங்களில் இவருடையதும் ஒன்று. ஆனால் மற்ற இரண்டு குடும்பங்களுக்கும் இவருக்கும் வித்தியாசம் உண்டு. திரா சார் ஊர் மக்கள் அனைவருக்கும் மிகுந்த பரிச்சயமானவர். மற்ற இரண்டு பிராமனாள் வீட்டிற்கும் எல்லோராலயும் உள்ளே நுழைந்து விட முடியாது. அவர்களும் ஊரில் உள்ள எல்லோருடனும் சகஜமாகப் பேசிவிட மாட்டார்கள். அவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்துப் பேசுவார்கள் என்றால், அது ஊரில் இருக்கும் ஐந்தாறு பிள்ளைமார் வம்சத்து மிராசுதாரர் குடும்பத்தினரோடு மட்டும் தான்!

இந்தக் காரணத்தினாலேயே திரா சார் மேல் ஊர் மக்கள் அனைவருக்கும் கூடுதல் வாஞ்சை இருப்பது யதேச்சையாக அமைந்து விட்டது. அது மட்டுமல்லாமல் அவர் பெருஞ்சேரி மாணவர்கள் மட்டுமல்லாது, சுத்துப்பட்டு நாற்பது ஐம்பது கிராம மக்களும் பயிலுகின்ற மங்கைநல்லூர் கே.எஸ்.ஓ உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்ததும் ஒரு முக்கிய காரணம்.

இயற்கையிலேயே அப்பொழுது கிராமத்தைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, குறிப்பாக தமிழாசிரியர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது. அதனாலேயே, அவர் பெருஞ்சேரி எல்லையையும் கடந்து நாற்பது கிராமங்களிலும் பெயர் சொன்னால் விளங்கும் அளவிற்கு பிரபலம் ஆகியிருந்ததும், மக்களுக்கு அவர் மேல் அதிக மதிப்பு ஏற்பட காரணமாக அமைந்து விட்டது.

இதுக்கு மேல அவர் வீட்டுல வைக்கின்ற கொலு பற்றி சொல்லாவிட்டால் அடிக்க வருவீங்க...!

புரட்டாசி ஐப்பசி மாதங்கள் என்றாலே அந்த ஊரில் எல்லோருக்குமே திரா சார் நினைவு தானாகவே வந்து விடும். கொலு வைப்பதற்கு முதல் நாளோ அல்லது சில வருடங்களில் நவராத்திரியின் முதல் நாளான அன்றைய தினத்தின் காலையிலோ, அம்பாள் படி இறங்கும் வைபவம் என்று அமர்க்களப் படுத்திவிடுவார்.

அந்த வைபவத்திற்கு 12 நாட்களுக்கு முன்னதாகவே (அது என்ன கணக்கோ தெரியவில்லை) வீடே......! சாமான்கள் சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது, கழுவி விடுவது, துணி துவைப்பது என்று ஒரே களேபரமாகிவிடும். வீடு சுத்தம் பண்ணுவது முடிந்தவுடன், மச்சியிலிருந்து முதலில் கொலுப்படிக்கான பலகைகளைத் தான் இறக்குவார்.

இதற்கெல்லாம் ஒத்தாசை செய்ய ஊரில் அவருக்கு அந்த வருடத்தில் பிடித்த ஐந்தாறு மாணவர்களை வைத்துக் கொள்வார். அவர்களுக்கு அந்த வருடம் பூராவும் ஊரில் பெரிய மரியாதை கிடைப்பதாக அவர்களே எண்ணிக் கொள்வார்கள்!

பலகைகளையும் அதன் கால்களையும் சுத்தம் செய்து, அதில் இருக்கின்ற சிறு சிறு உடைப்புகளைச் சரி செய்து, இதற்கு மேல் தாங்காது என்பவற்றை தூக்கி கடாசி விட்டு, அதற்குப் பதிலாக புதிதாக ஒன்றைச் செய்து பொருத்திக் கொள்வது என்று......!  அதற்குள் கொலுவிற்கு இன்னும் நான்கைந்து நாட்களே இருக்கும் என்ற நிலை வந்து விடும்.

கொலுப் படிகள் அவருக்கு முழு திருப்தி தந்துவிட்டது என்றதும் தான் கொலு பொம்மைகள் மச்சியிலிருந்து கீழிறக்கப்படும். பெரிய பொம்மைகள் எல்லாம் தனித்தனியாக வைத்திருப்பார். சின்ன பொம்மைகள் எல்லாம் ஐந்தாறு மரப் பெட்டிகளில் இருக்கும்.

மச்சி வாசல் அருகில் உள்ள உத்திரத்தில் ஏணியைச் சாற்றி, மச்சியில் இரண்டு பேர் உட்கார்ந்து ஒவ்வொரு பொம்மையாக எடுத்துக் கொடுக்க, அதை ஏணியில் நின்று கொண்டிருக்கும் ஒரு பையன் வாங்கி, கீழே நின்று கொண்டிருக்கும் திரா சாரிடம் தர அதை அவர் தன்னருகே நிற்கும் பையனிடம் கொடுத்து அவன் பத்திரமாக ஒவ்வொரு பொம்மையாக கீழே வைப்பான்.

அரை மணி நேரம் நடக்கின்ற இந்த நிகழ்வுக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே, வழக்கத்தை விட படு வாஞ்சையோடு குளித்து முடித்து சுத்தபத்தமாக வந்திருந்து, இந்த வேளையைக் கவனிப்பார்கள். 

கொலு பொம்மைகள் கீழே இறக்கப்பட்டவுடன், கொலு வைப்பதற்கான முழு களையும் அந்த வீட்டிற்கு வந்து விடும். அதன் பிறகு ஐந்தாறு பெண் பிள்ளைகளையும் களத்தில் இறக்கி விட்டுவிடுவார் திரா சார். அவைகள், அந்த பொம்மைகளை மிகவும் நாசுக்காக சுத்தம் செய்யும். பலவற்றை பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் துணியை நனைத்து அதைக் கொண்டு பொம்மைகளைத் துடைத்தும் சுத்தம் செய்வர்கள். சில பொம்மைகளை வெறும் உலர்ந்த துணியால் மட்டுமே சுத்தம் செய்வார்கள்.

ஊரிலுள்ள குயவர் வீட்டு பையனோ பெண்ணோ வரவழைக்கப்பட்டு வர்ணம் போன பொம்மைகளுக்கெல்லாம் புதிதாக வண்ணம் வைக்கப்படும். மர பொம்மைகளுக்கும் அவர்களே வண்ணம் வைத்து விடுவார்கள். ஐயர் வீட்டின் உள்ளேயே வந்து வண்ணம் வைப்பதாலோ என்னவோ அவர்கள் அதற்கு கூலி கூட வாங்கிக் கொள்ள மாட்டார்கள்!

அம்மன் படியிறங்கும் வைபவம் நாளை மறு நாள் நடைபெற இருக்கிறது. எல்லோருக்குமே ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். மொத்தமாக இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பொம்மைகள் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் குறைந்தது பத்துப் பதினைந்து பொம்மைகள் வரை சேர்த்துவிட வேண்டும் என்று திரா சார் விரும்புவதை மாணவர்கள் நிறைவேற்றி விடுவார்கள்.

ஊர் பெரிய மனிதர்களிடம் எல்லாம் சென்று இதற்காக ஊண்டி குலுக்கி காசு சேர்த்து, மாயவரம் சென்று புது பொம்மைகள் வாங்கி வந்து விடுவார்கள். அவர்களுக்கெல்லாம் கொலு என்பது வெறுமனே சாமி சம்பந்தப் பட்டது என்பது போக, ரயில் வண்டி பொம்மையைக் கூட கொலுவில் சேர்க்கலாம் என்பது அவர்கள் நினைத்திருந்த ஆன்மீகத்திற்கு புது வடிவம் அல்லது வர்ணம் கொடுத்தது போலிருந்தது.

புது பொம்மைகளுக்கென்றே இரண்டு பக்க வாட்டிலும் படிகள் வைக்கப் பட்டிருக்கும். அந்த வருடத்தில் அந்த இரண்டு படிகளிலும் உள்ள பொம்மைகளுக்குத் தான் அதிக மவுசு!

அம்மன் படியிறங்கும் வைபவத்திற்கு அதிகம் யாரும் வரமாட்டார்கள். ஆரம்பத்திலிருந்து இந்த வேலையில் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகள் மட்டுமே வருவார்கள். ஊரிலிருந்து அவர் சித்தப்பா என்றழைக்கும் ஒரு முதிய பிராமணர் வந்திருந்து புரியாத மொழியில் மந்திரங்கள் சொல்ல, சர்க்கரைப் பொங்கல் எல்லாம் வைத்து படையல் போட்டு, இன்னும் என்னென்னவோ சாங்கியங்கள் எல்லாம் செய்து, வெற்றிகரமாக அந்த வருடத்திய கொலு ஆரம்பமாகிவிடும்.

நவராத்திரியின் முதல் நாள், புது பொம்மைகளைப் பார்ப்பதற்கென்றே பெரிய கூட்டம் கூடும். கிட்டத்தட்ட 100  பேர் வரையிலும் கூட வருவார்கள். திருமணமான பெண்களும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். அனைவரையும் கூடத்தில், தாழ்வாரங்களில், (மழை இல்லை என்றால்)முற்றத்தில், வெளித் திண்ணையில் உட்கார வைத்து, அவரே எதாவது தமிழ் பாடல்கள் ஒன்றிரண்டு பாடுவார்.

வந்திருப்பவர்களையும் பாடச் சொல்வார். குறைந்தது பத்து பேராவது பாடினால் தான் அன்றைக்கு தீப ஆராதனை காட்டி, சுண்டல் தருவேன் என்பார். அதற்காகவாவது பிள்ளைகள் பாடுவார்கள். வெளியூரிலிருந்து இந்த ஊருக்கு திருமணம் செய்து வந்திருக்கும் சில பெண்களும் பாடி, தங்கள் மேதமையை ஊருக்கு அறிவிப்பார்கள். நீராரும் கடலொடுத்து பாடல் கூட சில மாணவச் செல்வங்கள் பாடும். சிலர் திருக்குறள் மனப்பாடப் பகுதியை ஒப்புவிப்பார்கள். 

வீட்டிலும், ஊரிலும் தண்ணி தெளித்து விடப்பட்ட சிலதுகள் கூட நல்ல சினிமா பாட்டைப் பாடி கைத்தட்டல் பெற்று, ஊரோடு ஒத்து வருவார்கள்! எல்லாம் முடிந்து அவருக்கே ஒரு வித திருப்தி ஏற்பட்ட பிறகு, கடைசியாக அவர் வடமொழியில் ஏதோ பாடல் பாடி விட்டு தீபாராதனை காட்டி அனைவருக்கும் வாசலில் நின்று சுண்டல் தருவார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சுண்டலும், யாராவது அன்பர்கள் கொடுக்கும் தானியத்தைக் கொண்டு சமைத்த சாதமும் கொடுப்பார். அவ்வளவு ருசியாக இருக்கும். மாலை 6.30 லிருந்து 7.30 வரை அந்த வைபவமும், அதன் பிறகு அரை மணி நேரம் விநியோகமும் என்று 8 மணிக்கெல்லாம் ஒவ்வொரு நாள் நிகழ்வும் இனிதே நிறைவுறும்.

ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரித்த வண்ணம் தான் இருக்கும். அங்கு நிறைய பாடல்கள் அறங்கேறும். சாதி மத பேதமின்றி அனைவரும் அங்கு வருபவர் எல்லோரிடமும் ஒரு வித உற்சாகமும், சந்தோஷமும் பீறிட்டு பொங்கி வழியும். உண்மையான சமதர்மம் அங்கு ஓங்கியிருக்கும்.  ஆன்மீகம், ஆண்டவன் என்பதற்கான ஒரு புதிய  அல்லது உண்மையான வடிவம் அங்கு கட்டமைக்கப்படும்.

சாமான்யனின் திறமைகள் அங்கு வெளிக்கொணரப்படும், தாழ்வு மனப்பான்மைகள் அகற்றப்படும், என் தமிழ் அங்கு கொலு வீற்றிருக்கும்.

தி. ராமலிங்கம் என்கிற திரா சார் அவர்களே, உங்கள் உடலை மட்டும் தான் காலம் கொண்டு போக முடியும், உங்கள் நினைவுகளை, உங்கள் உணர்வுகளை, நீங்கள் விதைத்து வளர்ந்திருக்கும் எண்ணற்ற விருட்சங்களை என்றைக்கும் அழிக்க முடியாது,

நன்றிகள் திரா சார்!!!


Saturday, October 13, 2012

லாரி டிரைவர்

கணினித் துறை, ஆட்டோ மொபைல் துறை, சிறு தொழில் துறை, போலீஸ் துறை இத்தியாதிகள் என்று அனைத்தையும் பற்றி தினமும் செய்தித் தாள்கள், வார சஞ்சிகைகள் படிக்கும் பழக்கம் உள்ள அனைவருக்குமே ஓரளவிற்கு அத்துப்படி தான்.

இப்படி பொதுவான சில பல துறைகள் தவிர்த்து, நாம் படித்து அறிந்து கொள்ள இயலாததும், நம் கருத்துக்கு எட்டாததுமான பல முக்கிய தொழில் துறைகளும் அது சார்ந்த முதலாளிகளும் தொழிலாளிகளும் நடைமுறையில் இருப்பது பலராலும் ஊகிக்க முடியாதது தான்.

நம் தமிழகத்திலிருந்து தொலை தூர மாநிலங்களுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் பலவித சரக்குகளை பறிமாற்றம் செய்யும் லாரி போக்குவரத்துத் தொழில் ரொம்பவே சுவாரஸ்யமானதும், கொஞ்சம் கரடு முரடானதும்.....  அத்துடன் நாமெல்லாம் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு மிக மிக அத்தியாவசியமானதும் கூட!

கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் அரிசி உற்பத்தியானது விளை நிலங்கள் பட்டாவாகிப் போனதால், படிப்படியாக குறைய ஆரம்பிக்க, தமிழர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களான ஆந்திராவும், கர்நாடகாவும் தான் பெரிதும் அபயமளித்தன.

தமிழகத்தில் வேகமாக வீழ்ந்து வரும் அரிசி உற்பத்தியும், மக்கள் தொகை வளர்ச்சிக்கு நிகரான அதன் தேவை வளர்ச்சியும் ஆந்திரா, கர்நாடகாவையும் தாண்டி வட மாநிலங்களை நோக்கி நம்மைக் கையேந்த வைத்திருக்கின்றன.

அந்த வகையில் நம் தமிழர்களின் முக்கிய உணவான அரிசித் தேவைக்கு படியளக்கும் பங்காளியாக தற்பொழுது உருவெடுத்திருப்பவர்கள் வங்காளிகளே! உண்மை தான், நம் தமிழகத்தின் அரிசி உணவுத் தேவையின் ஒரு குறிப்பிடத்தக்க சதவிகிதத்தை மேற்கு வங்கம் தான் சமீப காலமாக பூர்த்தி செய்து வருகிறது.

அப்படி மேற்கு வங்காளத்திலிருந்து தமிழக டெல்ட்டா மக்களின் பசியைப் போக்க அரிசி ஏற்றிக் கொண்டு வரும் லாரிகளையும், அதன் ஓட்டுனர்களையும் நெருங்கி உற்று நோக்கினால், தமிழகத்தின் அதி அத்தியாவசியமான துறை ஒன்றைப் பற்றிய பல ஆச்சர்யமான அனுபவங்கள் தெரிய வரும்.

20 டன் வரையிலும் லோடு ஏற்றக் கூடிய டாரஸ் வகை பத்து சக்கர லாரிகள் தான் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன. மவராசன் வாஜ்பாய் புண்ணியத்தால் கல்கத்தாவும் சென்னையும் தங்கநாற்கரச் சாலை மூலம் இணைக்கப் பட்டிருப்பது தான் இன்றளவிலும் இந்தத் தொழில் நசிந்து விடாமல் நடந்து கொண்டிருக்க முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை.

தமிழகத்தின் ஒரு லாரி உரிமையாளர் இதேப் போன்று இரண்டு லாரிகள் வைத்திருந்தால் போதும், வருமானம் வருகிறதோ இல்லையோ பிரஷ்ஷர், சுகர், மாரடைப்பு போன்ற வியாதிகள் கேரண்டியுடன் வந்து சேர்ந்து விடும்!

ஒரு லாரி மாதத்திற்கு நான்கு சிங்கிள்கள் அடித்தாலே பெரிய விஷயம். (ஒரு சிங்கிள் = ஒரு அப் அல்லது ஒரு டவுன்).ஏதேதோ கணக்குப் போட்டு ஒரு சிங்கிளுக்கு 57 ஆயிரம் ரூபாய் வாடகை என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இதில் டீசல், டிரைவர் படி, செக் போஸ்ட் மாமூல் போக ஏழாயிரம் ரூபாய் நிகர லாபமாக கிடைக்கும்.

நாலு சிங்கிள் ஓடினால் ஒரு லாரிக்கு 28 ஆயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கும். இதில் தான் லாரிக்கான வங்கி மாதத்தவணை உட்பட, வண்டி பழுது பார்க்கும் செலவுகள் வரை அனைத்தினையும் முடித்துக் கொண்டு தங்கள் லாபத்தையும் பார்க்க வேண்டும்.

இது எப்படி சாத்தியம்?

வங்கிக் கடனில் தான் லாரி ஓடுகிறது என்றால், நிச்சயமாக இதை விற்பவருக்கும், வாங்குபவருக்குமான சேவைத் தொழிலாக மட்டுமே நடத்த முடியும்! ஆகையால் கடன் இல்லாமல் சொந்த முதலைப் போட்டு லாரி வாங்கி ஓட்டினால் தான் லாபம் என்ற வஸ்த்துவை மாதா மாதம் கண்களில் பார்க்க முடியும்.

இதுல வருடத்திற்கு ஒரு முறை வரும் இன்ஷ்யூரன்ஸ், எஃப் சி எடுக்கும் செலவெல்லாம் தனி. ஒரு சில மாதங்களில் எக்ஸ்ட்ரா சிங்கிள் ஓட்டி சரிக்கட்டிக்க வேண்டியது தான் இதையெல்லாம்.

இந்தத் துறையில் லாரிகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களின் முக்கியத்துவம் அளப்பறியது. ஒரு வண்டிக்கு இரண்டு டிரைவர்கள். கிளீனர் வைத்துக் கொள்வதெல்லாம் பழைய ஸ்டைல். அதற்கான ஆட்களும் இப்பொழுது வருவதில்லை. 2500 கிமீ ஒரு சிங்கிளுக்கு ஓட்ட இரண்டு அனுபவமுள்ள ஓட்டுநர்கள் இருந்தால் தான் சரிப்பட்டு வரும்.

ஒரு அப் & டவுன் அதாவது இரண்டு சிங்கிள் போய் வந்தால் அவர்களுடைய சாப்பாடு உட்பட அனைத்து செலவுகளும் போக ஆளுக்கு எட்டாயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கும். அதற்கு கிட்டத்தட்ட பன்னிரெண்டிலிருந்து பதினைந்து நாட்கள் வரையிலும் ஆகும்.

ரோட்டோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டால் கட்டுப்படியாகாது என்று இவர்களே சமைத்துக் கொள்கிறார்கள். வண்டியிலேயே மண்ணென்ணை ஸ்டவ், சமையல் சாமான்கள், மற்ற உப்பு,  எண்ணெய், மசாலாப் பொடிகள், அரிசி அனைத்தையும் கொண்டு சென்று விடுகின்றார்கள்.

ஓட்டுனர் அறையிலேயே ஒரு ரேக் அடித்து அனைத்தையும் சேகரித்து வைத்து விடுகின்றனர். வழியில் இருக்கின்ற கடைகளில் ஆட்டிறைச்சி, குடல் அல்லது கோழி இறைச்சியை வாங்கியவுடன், வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு டிரைவர் காற்கறி நறுக்க ஆரம்பித்து விடுகிறார். அடுத்து வரும் நல்ல நிழலான ரோட்டோரத்தில் லாரியை நிறுத்தி விட்டு, ஸ்டவ்வில் குக்கர் வைத்து சாதம் சமைத்து, காய்கறி, இறைச்சியெல்லாம் போட்டு ஒரே குழம்பாக வைத்து விடுகின்றார்கள்.

வழியில் தயிர் பாக்கெட் வாங்கிக் கொண்டால், விருந்து சாப்பாடு தான். அதையே இரண்டு வேளைகளுக்கும் வைத்துக் கொள்கிறார்கள். மழை பெய்தால் கூட, லாரியின் பக்க கதவை கழட்டி விட்டு அடிக்கட்டையை குறுக்கே வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் படி வைத்து அதன் மேல் ஸ்டவ் வைத்து சமைத்து விடுவார்களாம்!

இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து வண்டியிலேயே இருந்து, ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சேர்த்துக் கொண்டு இறங்கி, வெளி நாடு சென்று வருவது போல வீட்டுக்கு வந்து ஓரிரு மாதங்கள் தங்கி பிறகு வண்டியேறும் ரகத்தினர் தான் அதிகம் இருக்கின்றார்கள்.

இவர்களுக்குள்ள முக்கிய பிரச்சினையாக வழிப்பறியைத் தான் அதிகம் சொல்கின்றார்கள். பல வழிப்பறிகளில் வெட்டுக் குத்து காயம், கை, கால் இழப்பு என்பதோடு போய் விடும். சில சம்பவங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுவதுண்டு. இது பொதுவாக எல்லா மாநில ஓட்டுனர்களுக்குமே உள்ள பிரச்சினையாகத் தான் இருக்கின்றது.

உயிரிழப்பு ஏற்படுகின்ற போது உடலை தமிழகம் கொண்டு வருவதில் நிறை செலவு பிடிக்கும் நடைமுறைகள் இருக்கின்றன. அதனால் அந்த லாரி உரிமையாளர் சம்பந்தப்பட்ட ஓட்டுனரின் குடும்பத்தில் பேசி ஒரு லட்சம் வரை பணம் கொடுத்து அங்கேயே அடக்கம் செய்து விடுவதும் நடக்கிறது. 

பெரும்பாலான வியாபாரிகள் சரக்கு டெலிவரி செய்யும் இடத்திலிருந்து ரொக்கமாக வாங்கிவரச் சொல்வது தான் பிரச்சினைக்கு முக்கிய காரணமே! சரக்கு வாங்குபவரை வங்கியில் பணத்தைக் கட்டச் சொல்லலாமே என்று கேட்டால், பேங்க் காரன் டியூ பணத்தை கழித்து விடுவான் அதனால் தான் ரொக்கமாக எடுத்துவரச் சொல்கிறார்கள் என்று அவர்கள் சொல்லும் போது, இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் அடி நாதமான பிரச்சினை பளீர் என மூளையில் தைத்து மனதை கொஞ்சம் பிழியத்தான் செய்கிறது.

இது கூடப் பரவாயில்லை, இதையும் மீறி இந்த வேலையை விரும்பித்தான் செய்கிறோம் என்று ஓட்டுனர்கள் சொல்லும் போது அவர்கள் மேல் ஒரு வித மரியாதை தான் ஏற்படுகிறது.

ஆனால் அவர்கள் சொல்லும் இன்னொரு விஷயம், இந்தத் தொழில் மெல்ல நசிந்து வருவதையும், இன்னும் பத்து வருடங்களுக்குள் இதற்கான மாற்று வழியை பற்றிக் கொள்ள வேண்டியிருப்பதன் அத்தியாவசியத்தையும் நமக்கு உணர வைக்கின்றது.

புதிதாக் இந்த வேளைக்கு இளைஞர்கள் வருவது வெகுவாக குறைந்து போய் விட்டது என்பது தான் அந்த விஷயம். காரணம் கேட்டால், யாரும் பெண் கொடுக்க முன்வர மறுக்கிறார்கள் என்பதாகத் தான் இருக்கிறது. 

சார், எனக்கு பல இடத்துல பொண்ணு பார்த்து எல்லாமே தட்டி போயிடிச்சி சார். நானும் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமா மறுத்துட்டேன் சார். ஆனா எங்க அப்பன் ஆத்தா தான் புடிவாதமா இந்த ராணிய புடிச்சி என் தலையில கட்டி வச்சிட்டாங்க. அதுக்கே அந்த வியாதி இருக்கா? இந்த வியாதி இருக்கான்ன்னு ஆயிரத்தெட்டு டெஸ்ட்டு எடுத்து தான் ஒத்துக்கிட்டாங்க சார்.....

அந்தக் காலத்துலேர்ந்து, இந்த சினிமாக் காரனும், கதை எழுதறவனும் எங்களப் பத்தி ஒரு மாதிரியா காட்டிக் காட்டியே, கெடுத்து வச்சிட்டனுங்க சார். நூத்துக்கு பத்து இருவது பேரு தான் அப்பிடி இப்பிடி இருப்பாங்க, பாக்கி எல்லாருமே இது மாதிரி வாய வயித்த கட்டி வூட்டுக்கு தான் சான் கொண்டு போயி கொட்டுறான். அதப் பத்தி ஒருத்தனுமே படம் எடுத்து காட்ட மாட்டேங்குறான் சார்......

என்று ஒரு ஓட்டுனர் தனது மனக் குமுறலைக் கொட்டுகின்ற போது ஏற்படுகின்ற அந்த வலி, திரைப் பட இயக்குனர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இந்த சமூக கட்டமைப்பில் இருக்கின்ற பங்களிப்பும், அதை அவர்கள் எவ்வளவு பொறுப்பில்லாமல் சிதைத்துப் போடுகிறார்கள் என்ற கோபமும் தான் தலைக்கேறுகிறது.

எந்தத் துறையில் தான் அந்த 20 சதவிகித விதிவிலக்குகள் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று நம் மனது தானாவே கேட்டுக்கொள்வதையும் நம்மால் தடுக்க இயலவில்லை!

இந்தத் துறையைப் பொறுத்த வரை லாரி உரிமையாளர்களுக்கும்-ஓட்டுனர்களுக்கும், அதாவது முதலாளிக்கும், தொழிலாளிக்கும் ஒரே அளவிலான லாபமும், நட்டமும்; இன்பமும், துன்பமும் இருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. வண்டி தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தால் தான் இருவருக்குமே பிழைப்பு. அதையும் தாண்டி, பொருளாதார ரீதியிலாக மட்டுமல்லாமல் உயிர் வரையிலும் பந்தயம் வைக்க வேண்டியிருக்கிறது.

இந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியுடன் நடை பெற்றுக் கொண்டிருந்தால் தான், அரிசிச் சோற்றுக்காக வட மாநிலங்களை அன்னாந்து பார்க்க வேண்டிய சூழலில் சிக்கியிருக்கின்ற நாம், வரும் காலங்களில் அரிசிச் சோற்றை தினமும் உண்ண முடியும், இல்லாவிட்டால், பழைய காலம் மாதிரி தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே பணியாரம் போல இட்லி, தோசையை உண்ணுகின்ற நிலைமைக்கு வந்து விட வேண்டியது தான்!

காலச்சக்கரம் நம்மை மீண்டும் அங்கு கொண்டு சென்று விடும் என்றே தோன்றுகிறது!!



Friday, October 12, 2012

வறண்ட வாழ்க்கை....! இருண்ட தமிழகம்.....!

கடந்த நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இப்பொழுது தான் கரண்ட் வந்திருக்கு. இன்னும் ஒரு மணி நேரத்தில் மீண்டும் போய்விடும்(((  ஒரு நாளின் 24 மணி நேரத்தில் வெறும் 6 லிருந்து 8 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது.

இது தான் சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் இன்றைய நிலை....

சிறு குறு தொழில் செய்வோர்கள், வணிகர்கள், சேவைத் தொழிலில் ஈடுபட்டிருப்போர், இங்கெல்லாம் வேலை செய்வோர் என்று அனைவர் மனங்களிலும் ஒரு விதமான பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டதை கண்கூடாக காண முடிகிறது.

மின்சார துறையினரிடம் பேசும் போது நம்பிக்கையான பதில் அவர்களிடமிருந்து வராததே அனைவரின் இந்த பயத்திற்கும் காரணம்.

அரசும் அதன் தலைமையும் இது பற்றி வாயே திறக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், இப்படி ஒரு பிரச்சினை இல்லவே இல்லை என்பது போல வேறு வேறு விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதும், மக்கள் சுபிட்சமாக இருப்பது போல பேட்டி அளிப்பதும்.... மக்களை இன்னும் பெரிய அளவில், தங்கள்  நடைமுறை வாழ்க்கையை எதிர் கொள்வது பற்றி அச்சப்பட வைத்திருக்கின்றது.

சில பல லட்சங்கள் முதலீட்டில் சிறு தொழில் செய்பவர்கள் பத்திலிருந்து ஐம்பது ஊழியர்கள் வரை பணியிலமர்த்தி பொருட்களை உற்பத்தி செய்கின்றார்கள். பகல் வேலை நேரத்தில் பெரும்பாலும் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதால், நான்கில் ஒரு பங்கு உற்பத்தியைக் கூட இவர்களால் முழுமையாக செய்ய முடிவதில்லை.

அதனால் மூன்று பங்கு ஊழியர்களின் ஊதியமானது நட்டமாக வந்து தலையில் இடிபோல் இறங்குகின்றது. அதனால் பெரும்பாலான சிறு குறு தொழிற்சாலைகளில் பாதி அளவிற்கு மேல் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுக் கொண்டு அது செயல் முறைக்கும் வந்து விட்டது.

அப்படி வேலையிழப்பவர்களின் நிலைமையை எழுத வேண்டுமானால், பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம், ஆனால் அது நிமித்தம் மிக விரைவில் பெரிய புரட்சி வெடிப்பதற்கான சூழ்நிலையை அரசும் அதன் ஊடகங்களும் எவ்வளவு பெரிய திரை போட்டு மறைத்தாலும் தடுக்க முடியாது.

ஊழியர் எண்ணிக்கையைக் குறைத்து விட்டதால் அந்த குறு தொழில்கள் லாபமீட்டுகின்றனவா? என்றால் அதெல்லாம் இல்லை என்பதே பதில். பெரிய நட்டம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அவ்வளவே!

எந்த ஒரு நல்ல லாபம் ஈட்டும் நிறுவனத்திற்குமே உற்பத்தி அல்லது விற்பனையில் கால்பாகம் குறைந்தாலே பிரேக் ஈவன் எனப்படும் லாப-நட்டமில்லாத அந்த நிலைக்குக் கீழே சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இப்பொழுது உற்பத்தி வெறும் கால்பாகத்திற்கு சுறுங்கி விட்டதால், பெரும் நட்டம் என்ற நிலைக்கு இந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த நட்டத்தோடு இவர்கள் இன்னமும் தொழிலை மூடிவிட்டு ஓடாததன் காரணமென்ன?

ரொம்ப சிம்ப்பிள். இவர்கள் அனைவருமே புலி மேல் சவாரி செய்பவர்கள் தான்! வங்கிக் கடன், கொள்முதல் கடன், வரவேண்டிய பாக்கி, தன் குடும்பச் செலவுகள், பிள்ளைகளின் எதிர்காலம், மானம், மரியாதை என்று அனைத்துமே ஒரு புலியாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சி என்ற வடிவிலேயே இருக்கிறது.

அதை விட்டு இறங்கினால் அத்தனையும் கடித்துக் குதறிவிடும் அபாயம் மிகத் தெளிவாக இருக்கிறது. அதனால் இயன்ற வரை மூச்சைப் பிடித்து தாக்குப் பிடிக்க முயன்று கொண்டிருக்கின்றார்கள். இதற்கு ஒரு விடிவு காலம் வராதா? என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சேமிப்புகள் இருக்கும் வரையில் சமாளித்துப் பார்த்து விடுவது. அடுத்ததாக தங்கம் இருக்கின்ற வரை தற்காத்துக் கொள்வது என்ற முடிவில் இருக்கின்றார்கள். 

இந்த நிலையில் தான் அரசின் பாரா முகமும், தங்களுக்காக குரல் கொடுக்க  கூட முன் வராமல் அரசின் அராஜகப் போக்கால், நமக்கெதற்கு வம்பு என்று எதிர்க்கட்சிகள் பயந்து பதுங்கும் சூழ்நிலையும், இவர்களை ஒரு வித அச்ச உணர்வுக்கு கொண்டு சென்றுள்ளது.

இப்படி சிறு குறு தொழில் செய்பவர்கள் நிலையாவது பரவாயில்லை. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒப்பேற்றி விடுவார்கள். ஆனால் ஓரிரு வேலை ஆட்களை வைத்துக் கொண்டு, சில்லரை வர்த்தகத்திலும், சேவை வணிகத்திலும், விற்பனை வணிகத்திலும் ஈடுபட்டிருக்கும் பல லட்சம் தொழில்முனைவோரின் கதியும் அதோ கதிதான்! 

ஏனென்றால் அவர்களால் மாத வாடகையே முழு வியாபாரமும் நடை பெற்றால் தான் தர முடியும் என்ற நிலையில் தான் வரவு செலவும் இருக்கும். தினமும் 300 ரூபாயாவது வீட்டிற்கு எடுத்துச் சென்றால் தான் குடும்பம் சந்தோஷமாக வாழ முடியும். தினம் கூலி கொடுத்தால் தான் வேலையாள் அடுத்த நாள் வேலைக்கு வருவான்!

இந்த மாதிரி மின் தடை இன்னும் ஒரு மாதம் தொடர்ந்தாலே இவர்கள் கதையெல்லாம் கந்தையாகிவிடும்.

மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று தான் வாக்களித்தார்கள் இந்த மக்கள்......

உண்மையிலேயே இது மிகப் பெரிய மாற்றம் தான். தற்பொழுது 60 வயதுக்குள்ளாக இருக்கும் தமிழக தமிழர்கள் எவரும் கண்டிராத பெரிய மாற்றம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.....

வறண்ட வாழ்க்கை....!   இருண்ட தமிழகம்.....!

Tuesday, October 9, 2012

விமர்சனம் மாதிரி...!!


கடுமையான மின் தடையோடு போராடி கடந்த மூன்று நாட்களில் சுந்தர பாண்டியன் படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து முடித்தேன்.

இப்பல்லாம் இந்த மாதிரி லைட் மைண்டட் படங்கள் தான் ரொம்ப பிடிக்குது. அந்தக்கால கார்த்திக்-பிரபு  படங்களிலிருந்து 50 சதவிகிதமும், ராமராஜன் படங்களிலிருந்து 25 சதவிகிதமும், ஆர். சுந்தர்ராஜன் - ரங்கராஜ் படங்களிலிருந்து 25 சதவிகிதமும் கலந்த ஒரு கலவையாக இந்தப் படம் வந்திருக்கின்றது.

பாடல்கள் மட்டும் ஹிட் ஆகியிருந்தால் இந்த வருடத்திய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இது அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. சசிகுமார் சம்பந்தப்பட்ட படங்களில் இருக்கின்ற வக்கிர காட்சிகளில் பாதி கூட இதில் இல்லை என்றாலும், இருப்பதையே இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால், பார்வையாளர்களுக்கு இந்தப் படம் இன்னும் கொஞ்சம் சந்தோஷத்தைக் கூடுதலாக கொடுத்திருந்திருக்கும்.

ஒரு குடும்பத்தில் தாத்தா-பாட்டி, தாய்-தந்தை, பேரன் - பேத்திகள் சேர்ந்து உட்கார்ந்து பார்க்கின்ற படங்கள் தான் வெள்ளித் திரையில் வெள்ளி விழா காண்கின்றன. இந்த ஃபார்முலா ஏன் எந்த டைரக்டருக்கும் தெரியவில்லை என்றே புரிய மாட்டேன் என்கிறது.

குடும்பத்துடன் படம் பார்க்கக் கூடியவர்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள்? முதலில் மிகத் தெளிவான ஒரு கதை. பார்க்கும் போது மனதை அதிகமாக பாதிக்க வைக்காத வக்கிரக் காட்சிகள் மற்றும் சோகங்கள். அடுத்ததாக படம் நெடுகிலும் (திணிக்கப்படாத) கதையின் முக்கிய கதா பாத்திரங்களோடு பின்னி பிணையப்பட்ட இயல்பான நகைச்சுவை. கண்களையும், காதுகளையும் படுத்தி எடுக்காத ஒளி, ஒலிச் சேர்க்கை இல்லாத ரம்மியமான பாடல் காட்சியமைப்புகள்.

பாடல் காட்சிகளின் போது அழகான நாயகன் - நாயகியின் தெளிவான முக பாவனைகளைக் காட்டும் குளோசப் காட்சிகள். படம் ரிலீஸுக்கு முன்பே நன்கு ஹிட் ஆன பாடல்கள்.

ஓரிரு செண்டிமெண்ட் காட்சிகள், நறுக்குத் தெரித்த வசனங்கள். தேவையெனில் வக்கிரமில்லாத சண்டைக் காட்சிகள்......

அவ்வளவு தான்! மேற் சொன்னவற்றில் 60 சதவிகிதத்தைக் கடந்து விட்டார் சுந்தர பாண்டியன். இன்னும் ஒரு 20 சதவிகிதத்திற்கு முக்கியிருந்தால் இந்த வருடத்தில் வெள்ளித்திரை வெள்ளிவிழாவை இந்தப் படம் கொண்டாடியிருக்கும் என்பது என் எண்ணம்.

Tuesday, September 11, 2012

கூடங்குளம், சிங்களர் கார்ட்டூன், இன்னபிறவும்... மக்கள் மனநிலையும்.



இணையத்தை திறந்து மற்ற சொந்த வேலைகளை எல்லாம் முடித்த பின்பு, பொழுது போக்கிற்கான வெட்டி அரட்டை வேண்டி சமூக வலைத்தளங்களுக்குள் நுழைந்தாலே, நாட்டின் அன்றாட பிரச்சினைகள் குறித்து வெட்டுக் குத்து விவாதங்கள் தான் களை கட்டுகின்றன.

இப்போ சமீபமாக களை கட்டியிருக்கும் இரு பிரச்சினைகள் கூடங்குளமும், தமிழக முதல்வரையும், இந்திய பிரதமரையும் இழிவு படுத்தி சிங்கள பத்திரிகை ஒன்று  வெளியிட்டிருக்கும் கேலிச்சித்திரமும் தான்!

இதேப் போன்று எந்தப் பிரச்சினையானாலும், இணைய இளைஞர்களில் மிகக் குறைந்த சதவிகிதத்தைச் சேர்ந்தவர்களுக்கே, இரு எதிர்நிலைக் கருத்துக்களில் ஏதோ ஒன்றினை வலுவாக ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பேசக்கூடிய ஆற்றலும் துணிச்சலும் இருக்கிறது.

இதில் பெரும்பாலான சதவிகிதத்தினர், மெஜாரிட்டி எந்தப் பக்கமோ அந்த ஸ்டாண்டை எடுத்து விடுகின்றனர். இது கூட பரவாயில்லை, ஒரு குறிப்பிட்ட சதவிகித இளைஞர்களுக்கு என்ன ஸ்டாண்டு எடுப்பது என்பதிலேயே குழப்பம் அதிகமிருப்பது தான் வேடிக்கையின் உச்சம்!

ஆனால் இது மாதிரியாக இணையத்தில் சூடாக விவாதிக்கப்பட்டு தீர்ப்பெழுதப்படும் பல விடயங்களில் பொது மக்களின் கருத்து என்ன மாதிரியாய் இருக்கின்றது என்று பார்த்தோமானால் நமக்கு மிகப் பெரிய ஆச்சர்யமே பதிலாக காத்திருக்கிறது.

கூடங்குளம் பிரச்சினையைப் பொருத்தவரை நான் சந்தித்தித்த அத்தனைப் பேரின் நிலைப்பாடும், போராட்டக் காரர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோருக்கு  பகல் இரவு என்று பாராமல் கண்ட நேரங்களில் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் அதிகமாக ஏற்படும் மின் தடை மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதை கண்கூடாகக் காண முடிகின்றது.
சாதாரணமாக இது போன்ற விடயங்களில் அரசுக்கு எதிராக கம்யூனிச சிந்தனையுடன் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாகப் பேசக் கூடியவர்கள் கூட, “சார், இன்னிக்கு வீட்டை விட்டு கீழ இறங்குறவங்க, உசிரோட வீடு திரும்பறதுக்கு என்ன சார் உத்தரவாதம் இருக்கு? பஸ்ஸுலயோ, ரயிலிலோ போனால் கூடத்தான் விபத்து ஏற்பட்டு சாகுறாங்க, அதனால அதுல போகாம இருக்கோமா? அது மாதிரி தான் அணு உலையையும் எடுத்துக்கனும்”. என்று பக்காவாக லாஜிக் பேசுகிறார்கள்.

அரசு இவ்விஷயத்தில் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாகவும் சிலர் கூறுவதைக் கேட்டால் அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது. அதேசமயம் மிகப் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது.

மேலும் இவ்விஷயத்தில் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாக இணையத்தில் ஆவேசமாக எழுதுகின்ற பெரும்பாலானோரைப் பார்த்தால் அவர்கள் வெளி நாடுகளில் பல வருடங்களாக தங்கள் குடும்பத்தோடு செட்டில் ஆனவர்களாகத் தான் இருக்கின்றார்கள்.

அளவுக்கு அதிகமான மின் தடையால் தான் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் ஏறியிருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள். அதனால் தான் விவசாயம் தடைபட்டதாகவும் வாதிடுகின்றனர். விலைவாசி ஏற்றம் மிகப் பெரிய அளவில் மக்களை கோபப்படுத்தியிருப்பதை கண்கூடாகக் காண முடிகிறது.
                                                                                                                      
கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வந்தால், மின் தடை நேரம் பெருமளவில் குறையும் என்றும் நம்புகின்றார்கள். என்னைக் கேட்டால், கூடங்குளத்து போராட்டக் காரர்களின் ஆவேசத்துக்கு நிகரானதொரு பெருங்கோபம் நீரு பூத்த நெருப்பாய் பொது மக்களிடமும் மேற் சொன்ன காரணங்களுக்காக ஏற்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

இதேப் போன்று தான் சிங்கள பத்திரிகையின் கேலிச் சித்திரம் பற்றி பெரும்பான்மையான பொது மக்களுக்கு தெரிந்திருக்கவே இல்லை. அது பற்றி அறிந்திருந்த ஒரு சிலரும், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. “சாமி கும்புட வந்தவன துரத்தியடிச்சா அவன் படம் போட்டுத் தான் காறித் துப்புவான்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.

ஆனால் இணையப் போராளிகளைப் பொருத்தவரை இதில் நகை முரண் என்னவென்றால், எதற்கெடுத்தாலும் சுற்றி வளைத்து ஜெயலலிதவை ஆதரிக்கின்றவர்களும், அப்படி முடியாதபட்சத்தில் அதில் கலைஞரை சம்பந்தப்படுத்தி அவரை திட்டித் தீர்ப்பவர்களும், சிங்கள கேலிச் சித்திரத்திற்கு எதிராக பொங்கித் தீர்த்தவர்களும், இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக பொங்கும் பொழுது நாசுக்காக ஜெயலலிதாவை நகர்த்தி வைத்து விட்டு போலீஸ்காரர்களை மட்டும் கண்டமேனிக்கு திட்டித் தீர்க்கின்றார்கள்.

என்னே ஒரு நடுவுநிலை இவர்களது?!

Monday, September 10, 2012

லக்பிமாவாவது இந்தியாவை திருத்துமா?!



கொஞ்சம் வெறுப்பு வரத்தான் செய்கிறது அந்த கார்டூனைப் பார்த்தால். “லக்பிமா” என்னும் சிங்களப் பத்திரிகையில் தான் அது வந்திருக்கின்றது. அந்த பத்திரிகையின் முதலாளி ராஜபக்‌ஷே அரசில் ஒரு மந்திரி என்றும் சொல்கிறார்கள்.

நமது தமிழக முதல்வரையும், இந்திய பிரதமரையும் ஒரு சேர, உடற்மொழி ரீதியாக மிக அசிங்கமாக சித்தரித்து கேலிச் சித்திரம் வரைந்து வெளியிட்டிருக்கின்றார்கள்.
விளையாடுவதற்காகவும், புனித யாத்திரைக்காவும் தமிழகம் வந்த சிங்களவர்கள் சிலரை திருப்பி அனுப்பிய தமிழக அரசின் செயலுக்கு எதிர்வினையாகத் தான் இந்த கேலிச்சித்திரத்தை அவர்கள் வெளியிட்டிருக்கக் கூடும்.

தமிழக அரசின் அந்தச் செயலுக்கான ஒரு எதிர் வினையை நாம் நிச்சயமாக எதிர்கொள்ளத் தான் வேண்டும். ஆனால் ஒரு நாட்டின் எதிர்வினை என்பது குறிப்பிட்ட வரைமுறைக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை விட நிச்சயமாக ஒரு நெறிமுறைக்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதை உண்மையான நடுநிலையாளர்கள் யாரும் மறுக்க முடியாது.

சரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவ்வப்பொழுது தமிழுணர்வாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதும், அதன் ஒரு எல்லையாக சிங்களர்களை துரத்தியடித்ததும் சிங்கள அரசை கோபப்பட வைத்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்த அதே சமயத்தில்......

40 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்ட தமிழகம் மற்றும் புதுவை மக்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை அரசின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான விதி மீறலுடன் கூடிய போர் என்ற பயங்கரவாதத்தை (லட்சக் கணக்கான சிவிலியன்கள் கொள்ளப்படுவதை போர் என்று ஏற்றுக் கொள்ள இயலாது. அது பயங்கரவாதம் தான்) அமைதியாக வேடிக்கைப் பார்த்ததுமின்றி, ஆதரவும் நல்கிய மன்மோகன் சிங் அரசு செய்த, துரோகத்துக்கு துணை போன செயலை மறந்து விட்டு அவரையும் அசிங்கப்படுத்தி கேலிச் சித்திரம் வரைந்திருப்பதின் காரணம் தான் என்ன?

உலக அளவில் இதை உற்று நோக்கினால், ஒரு பெரிய நாட்டின் சக்தி வாய்ந்த அதிகாரம் மிக்கவர் மற்றும் ஆட்சித் தலைவரை அதே நாட்டின் ஒரு மாகாண பெண் ஆட்சியாளரோடு உடற்மொழி ரீதியாக மிக கேவலமாக, அருகாமை நாட்டின் முழு அரசு ஆதரவு பெற்ற பத்திரிகையில் கேலிச் சித்திரம் வெளியிட்டிருப்பது எதைக் காட்டுகிறது?

அந்த நாட்டை தனது எதிரி நாடாக பிரகடனப் படுத்துகிறது என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும். 

இவ் விடயத்தைக் கொண்டு, அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா தமிழ் ஈழ விஷயத்தில் அதிகம் ஸ்கோர் செய்து விடுவார் என்றெல்லாம் எண்ணி, என்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை முதலில் ஒரு தமிழ் நாட்டுத் தமிழனாகவும், அடுத்தபடியாக ஒரு இந்தியனாகவும் தான் அணுக வேண்டும் என்பது என் நிலைப்பாடு.  நம் தமிழக முதல்வர் அதுவும் ஒரு பெண்ணை பின்னால் இருந்து தாக்குவது போல் கோழைத் தனமாக நான்காம் தர மஞ்சள் பத்திரிகையின் எண்ண ஓட்டத்தோடு கேலிச் சித்திரம் வரைந்த லக்பிமா சிங்கள தினசரியை வன்மையாக என்னுடைய இந்த கட்டுரையின் மூலம் கண்டிக்கிறேன்.

அதேப் போன்று நமது பாரதப் பிரதமரை இழிவுபடுத்தி நாகரீகமற்ற முறையில் தனது ஆதரவு பத்திரிகையின் மூலம் கேலிச் சித்திரம் வரைந்து தன்னை இந்தியாவின் எதிரி என்று பிரகடனப்படுத்திக் கொண்ட இலங்கை அரசுக்கு என் வந்தனங்கள்!

ஏனெனில் இத்தனை நாட்களாக நாமெல்லாம் கூவினாலும் காதில் விழாதவாறு செயல்பட்டு வந்த இந்திய தலைமைக்கு, இப்பொழுதாவது மண்டையில் உரைக்காதா என்ற எதிர்பார்ப்பு தான் அந்த “வந்தனத்திற்கான” காரணம்!

பட்டணத்தி வீட்டு மீன் குழம்பு.

இது காக்காய் தூக்கிப்போன எனது பழைய வலைப்பூவில் பதிவேற்றியது........!
இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்.......!!

அது ஆகிவிட்டது முப்பது வருடங்களுக்கும் மேல். எனக்கு ஒரு பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கும். இரண்டு நாள் விடுமுறையானாலும் சரி, இரண்டு மாத விடுமுறையானாலும் சரி நாங்கள் கொண்டாடுவதற்காக கொண்டு செல்லப்படும் இடம் "பெருஞ்சேரி". நடுவில் ஒரு சிவன் கோவில், அதன் நான்கு பக்கமும் அதனதன் திசைகளை முன் இணைப்பாகக் கொண்ட நான்கு தெருக்கள். ஊரை நட்ட நடுவில் பிளந்து கொண்டு செல்லும் ஒரு மெயின் ரோடு. ஊரின் கீழ எல்லையில் கிட்டத்தட்ட 50 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வாழும் ஒரு பெரிய, 'சேரி' என்று அழைக்கப்படும் தெரு.

மேற்கிலிருந்து கிழக்காகச் செல்லும் சாலை. மேல எல்லையில் ஒரு பெரிய கடைத்தெரு. மூன்று டீ கடைகள், ஒரு செட்டியார் மளிகைக் கடை, இரண்டு பெட்டிக் கடைகள், ஒரு பார்பர் கடை, ஒரு சாராயக் கடை என்று கலகலப்பான பெரிய கடைத்தெரு. கீழ எல்லையில் ஒரு சிறிய கடைத்தெரு. இரண்டு டீ கடைகள், ஒரு பெட்டிக் கடை, ஒரு குடியானவர் வைத்திருக்கும் குட்டி மளிகைக் கடை. இரண்டு எல்லைக்கும் இடைப்பட்ட தூரம் சற்றேரக் குறைய ஒரு கிலோ மீட்டர் வரும். வடக்கு எல்லையில் கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்த விளை நிலங்கள். தென்னண்ட எல்லையில் இரண்டு ஃபர்லாங் மட்டுமே வயல்வெளியும் அதை ஒட்டி வீர சோழன் ஆறும் கம்பீரமாக ஓடிக் கொண்டிருக்கும்.
அப்பாடி..., ஒரு வழியாக எங்களது விடுமுறைக் கொண்டாட்டங்களுக்கு ஒரு பத்துப் பதினைந்து வருடங்கள் தீனி போட்ட சுற்றுலாத் தளத்தை நான்கெல்லை வகுத்து மக்களுக்குப் படம் போட்டுக் காட்டியாகி விட்டது! இனி மேட்டருக்கு வந்து விடலாம். அந்த கிராமத்தில் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு ஏகப்பட்ட மேட்டர்கள் இருந்தாலும் இப்பொழுது நாம் கொசுவத்தியைச் சுழல விடுவது ஒரு சுவை நிறைந்த சுவாரஸ்யமான மேட்டருக்குத் தான்.

பெருஞ்சேரியைப் பற்றிச் சொன்னேன், அந்த ஊருக்கும் எனக்குமான தொடர்பைப் பற்றிச் சொல்லவில்லை பாருங்கள். எங்கள் அம்மாவினுடைய பிறந்த ஊர் அது. அங்கிருக்கும் என் பாட்டி வீட்டிற்கு தான் நாங்கள் செல்வோம். மாமாவுக்கு திருமணம் ஆகாத காலம் அது. பாட்டியும் மாமாவும் மட்டுமே. மாமாவுக்கு மாயவரத்தில் உள்ள் CRC டெப்போவில் வேலை. 12 கிலோ மீட்டர் தூரம் தான், அதனால் தினசரி சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

இன்று வரை மீன் குழம்பு என்றால் எனக்கு அவ்ளோ பிடிக்கும். அந்தச் சின்ன வயதில் கேட்கவே வேண்டாம். என் மாமாவுக்கும் அதேப் போல் மீன் மோகம் உண்டு. நாங்கள் அங்கு சென்றாலே மாமா, பாட்டியிடம் 'அம்மா தம்பிபயலுக்கு (எனக்கு தான்) மீனுன்னா ரொம்ப உசிரு, மத்தியானமா போயி சமுத்திரத்து மீனை வாங்கியாந்து சமைச்சு வச்சிடு, ராத்திரி நான் வந்தோடன எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்' ன்னுட்டு, மீனுக்காக ஐந்து ரூபாய் பணத்தை பாட்டியிடம் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்!

அப்ப எனக்கு ஆரம்பிக்கிற ஊறல் (சலைவா தாங்க) ராத்திரி, முதல் வாய் மீன் குழம்பு சாதத்தை வாயில் வைக்கும் வரை நான் ஸ்டாப்பா ரவுண்டு கட்டும். காலைல கொஞ்சமா சோப்பு போட்டு (சிக்கனமா இருந்தா தான் எங்க பாட்டிக்கு பிடிக்கும்) நல்லா குளிச்சிட்டு, அஞ்சாறு இட்லிய உள்ள வுட்டுட்டு,  லஞ்ச் க்காக வெயிட் பண்ணுவேன். நடுவில் பக்கத்து வீட்டு நடராஜன் விளையாட கூப்பிட்டால் எங்க பாட்டிய விட்டே அவன விறட்டச் சொல்வேன். (அவ்வளவு நல்ல பிள்ளையாக்கும்!) இரவு நல்ல வெயிட்டான சாப்பாடு என்பதால் மதியம் காமா சோமான்னு ஒரு ரசம் ப்ளஸ் மோர் அவ்வளவுதான். நார்த்தங்கா ஊறுகாயை தொட்டுக்கிட்டு தேவாமிர்தமா, இரவு மீன் குழம்பை நினைத்துக் கொண்டு சாப்பிட்டு விடுவேன்.

அந்த கிராமத்தில் எப்பொழுதுமே குளத்து மீன் தான். அதுவும் தூண்டில் மீன் தான். குரவைக் குட்டி போன்று சிறு சிறு மீன்கள் தான் கிடைக்கும். அவைகளும் நல்ல ருசியாகத் தான் இருக்கும். ஆனாலும் அம்மா செய்யும் கோழி வருவலை விட KFC சிக்கன் மேல் ஒரு ஈர்ப்பு வருமே, அதேப் போலத்தான் எப்பொழுதும் கிடைக்கும் நாட்டு மீனை விட, சமுத்திரத்து மீன் என்றால் ஒசத்தி என்ற ஒரு எண்ணம் அன்றைய கால கட்டத்தில் எல்லோருக்கும் உண்டு.

தரங்கம்பாடி, சந்திராப்பாடி கடல்களில் பிடிக்கும் மீன்கள் மதியம் 12 மணிக்கு கரை வந்தவுடன், முப்பது - நாற்பது சைக்கில்களில் பெரிய கூடை வைத்துக் கட்டி, அதில் ஏற்றிக் கொண்டு வீரசோழன் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள குறுகிய சாலையின் வழியாக வருவார்கள். வரும் வழியில் சங்கரன்பந்தல், பெரம்பூர், மங்கைநல்லூர், பேரளம், பூந்தோட்டம் என்று ஒவ்வொரு முக்கிய ஊர்களிலும் உள்ள மெயின் ரோட்டு முச்சந்தியில் தரைக்கடை போட்டு, ஊருக்குத் தகுந்தாற் போல் இரண்டிலிருந்து ஐந்து சைக்கில்கள் வரை நிறுத்தி மாலை 6 மணிக்குள் வியாபாரத்தை முடித்து விடுவார்கள்.

எங்கள் கிராமத்தின் தென்பகுதி எல்லையில் வீரசோழன் ஆறு ஓடும் என்று சொன்னேனே, அதைக் கடந்து அக்கரைக்குச் சென்றால் மலைக்குடி என்ற கிராமம் வரும். அந்தக் கிராமத்தின் வழியாகத் தான் இந்த மீன் கூடை சைக்கிள்கள் எல்லாம் சீரான இடைவெளியில் சென்று கொண்டிருக்கும். அவர்கள் நடுவில் எங்குமே ஸ்டாப்பிங் போட மாட்டார்கள். அப்படிப் போட்டால் திட்டமிட்ட ஊர்களில் கடை போட்டு மாலை ஆறு மணிக்குள் விற்றுத் தீர்க்க முடியாது.

ஆனால் இங்கு தான் ஆண்டவன் எங்களுக்கு ஆதரவாக கண்ணைத் திறந்திருந்தான்! அந்த மலைக்குடி மெயின் ரோட்டில் ஒரு சிறிய குடிசை போட்டுக் கொண்டு நம் வலையுலக பாஷயில் சொன்னால் ஒரு மீனவனும் அவர் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் காலத்து என் பாட்டியின் பாஷையில் சொன்னால் ஒரு பட்டிணத்தானும், பட்டணத்தியும் வாழ்ந்து வந்தார்கள். அவர் ஏதோ கோவத்தில் சொந்த ஊரை விட்டு வெளியேறி இங்கு வந்து குடிசை போட்டுக் கொண்டதாகவும், அப்பொழுது கொஞ்ச நாள் எங்கள் பாட்டி வீட்டில் வேலை பார்த்ததாகவும், அந்த நன்றிக் கடனுக்காகத் தான் இன்றைக்கும் அவன் தமக்கு உதவுவதாகவும், ஒவ்வொரு முறை மலைக்குடிக்கு மீன் வாங்கச் செல்லும் பொழுதும் மறக்காமல் என் பாட்டி சொல்வார்.
மதியம் ஒன்றரை மணிக்கெல்லாம் நானும் என் பாட்டியும் அந்த மீனவர் வீட்டுக்குச் சென்று திண்ணையில் அமர்ந்து விடுவோம். ஒவ்வொரு மீன் சைக்கிளாக வர ஆரம்பிக்கும். அதை அவர் நிறுத்துவதும், என் பாட்டி சென்று கூடையைப் பார்த்து சரியில்லை என்று தவிர்ப்பதுமாக, குறைந்த பட்சம் பத்திலிருந்து அதிக பட்சமாக இருபது வண்டிகள் வரையிலும் கூட தொடரும். கடைசியில் பாட்டி 5 ரூபாய்க்கு மீன் வாங்குவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாவது ஆகிவிடும்.

இதற்கிடையில் அந்த மீனவப் பெண்மனி முதல் வண்டியிலேயே மீன் வாங்கி (அவர்களுக்கு இலவசம்) கழுவி சமைத்தும் முடித்து விடுவார். அவர் அடுப்பில் சட்டியை வைத்து மீன் கொதிக்க ஆரம்பித்தவுடனேயே, என்னால் இருப்பு கொள்ள இயலாது. அந்த வீட்டின் திண்ணை என்று சொல்லப்படும் மேட்டில் உட்கார்ந்தாலேயே ஒட்டுமொத்த வீடும் துப்புறவாகத் தெரியும். மீன் குழம்பு பற்றிய என் கொலை வெறியைப் பார்வையிலேயே புரிந்து கொண்ட அந்தப் பெண்மனி, சாப்புடுறியா கண்ணுன்னு முதல் மரியாதை ராதா ஸ்டைல்ல தட்டுல சாதம் மீன் குழம்பு, மீன் எல்லாம் போட்டு எடுத்து வந்துவிடும்.

அதற்கு பதில்வினையாக, நான் செயல்பட எத்தணிக்கும் முன்பே பாட்டி குறுக்கே புகுந்து, "ஐயையோ அவங்க அப்பா என்னைய மாதிரி கெடையாது, இந்த மாதிரி இடத்துக்கெல்லம் அவன் வந்தது தெரிஞ்சாலே அவன கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டுடுவாரு. எனக்கு இந்த மேசாதி, கீழ்சாதி அப்டின்னெல்லாம் பார்க்க தெரியாது ஆனா எங்க மாப்ள அப்படி இல்லையே, என்னா பண்றது?" என்று தன்னுடைய ஒட்டுமொத்த தீண்டாமை அழுக்கையும் என் தந்தையில் மேல் பூசிவிட்டு, என்னுடைய ஆசைக் கனவை தவிடு பொடியாக்கி விடுவார். ஒவ்வொரு தடவை அங்கு செல்லும் பொழுதும் அவர் எடுக்கும் தீண்டாமைப் பாடம் மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் ஆவியாய் மறைந்து விடும்.

ஆனால் அன்றைக்கு ஒரு முடிவோடும், திட்டத்தோடும் தான் பாட்டியோடு மலைக்குடிக்கு பயணமானேன். குடிசையின் திண்ணையில் உட்கார்ந்து விட்டேன், பாட்டியும் ஒவ்வொரு சைக்கிளாகச் சென்று பார்க்க ஆரம்பித்து விட்டார். இங்கு மீன் கொதிக்க ஆரம்பித்து விட்டது. வாசமும் தூக்க ஆரம்பித்து விட்டது. நான் எப்பொழுதும் மறைத்துக் கொள்ள முயலும் என் ஆசையை அன்று மறக்காமலே முக பாவனையில் வெளியிட ஆரம்பித்தேன். அதை பாட்டி, பட்டணத்தி இருவருமே நன்றாக கவனித்தும் விட்டார்கள். ஒரு சில தடவைகளாக சாப்பிடச் சொல்லி கேட்காத அந்தப் பெண்மணியும் அன்று வழக்கம் போல் தட்டில் நிறைய சோறு, குழம்பு, மூன்று மீன்கள் போட்டு கொண்டுவந்து சாப்பிடு கண்ணுன்னு சொன்னார்.

உடனே பாட்டி அப்பா கதைய அவிழ்க்க ஆரம்பிக்க..., நான் குறுக்கே புகுந்து பாட்டி நான் அப்பாட்ட இந்த முறை கேட்டுட்டேன். அவரும் "நான் முன்னாடி காங்கிரஸ்ல இருக்கும் போது தான் அப்படி புரியாம நடந்துகிட்டேன், அண்ணா கட்சில சேர்ந்ததிலேருந்து மனுஷனா மாறிட்டேன், உனக்கு அவங்க வக்கிற மீன் குழம்பு பிடிக்கலன்னாலும் அவங்கள சந்தோஷப் படுத்துறதுக்காகவாவது சாப்பிடனும்" னு சொல்லிட்டாரே! அப்டின்னு ஒரே போடா போட்டுட்டு, பாட்டிய திரும்பிக் கூட பார்க்காம தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.

நான்கு தட்டுகள் வரை சாதம் வாங்கி, கிட்டத்தட்ட பத்து மீன் துண்டுகள் வரை சாப்பிட்டுவிட்டேன். "நீ அவ்ளோ அழகு"ன்னு சிம்ரன பார்த்து சூர்யா சொல்வது போல "நீ அவ்ளோ ருசி"ன்னு அந்த மீனையும், குழம்பையும் பார்த்து சொல்லிகிட்டே அவ்வளவையும் சாப்பிட்டு விட்டேன்.  என் பாட்டியோ ஒன்றும் செய்ய முடியாமல், அங்கு கோபத்தையும் அவர்கள் எதிரில் காட்ட முடியாமல், புள்ள சாப்ட்டதுக்கு வச்சுக்கன்னு அஞ்சு ரூவாய அந்த மீனவனிடம் கொடுக்க, அவரோ என்ன ஆச்சி இது மொத தடவயா புள்ள எங்க வூட்டுல ஒக்காந்து சாப்ட்ருக்கு, அதுக்கு காசு வாங்குறதா? ன்னு சொல்லி அந்த ஐந்து ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிற்கு ஒரு சைக்கிளில் மீனை வாங்கி பாட்டியிடம் கொடுத்து விட்டார்.
அதன் பிறகு ஆற்றைக் கடக்கும் வரையிலும் அமைதியாக வந்த பாட்டி (அவர்கள் குடிசையிலிருந்து பார்த்தால் தெரியும் என்பதாலோ என்னவோ), இக்கரை வந்தவுடன் ஒரு வேப்பங்குச்சியை ஒடித்துக் கொண்டு என் முழங்காலுக்குக் கீழே வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார். அவர் கையைப் பிடித்து தடுக்க முற்பட்ட போது, "அடேய் நாயே என்ன தொட்டுடாத, உன்னையவே தீட்டு கழிச்சாவனும்" னூ ஏதேதோ சத்தம் போட்டு, ஆடு மாடுகளை விரட்டி வருவது போல் கையில் கம்போடு என் பின்னே ஆவேசமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

வீடு வந்தவுடன் உள்ளே நுழைய முற்பட்ட என்னை தடுத்து சந்து படலை திறந்து விட்டு, பம்படியில் என் டிராயர், சட்டையைக் கழட்டச் சொல்லி அந்தக் கம்பினாலேயே அதைத் தூக்கி தொட்டியில் இருந்த தண்ணீரில் நனைத்து விட்டு, என்னை உட்காரச் சொல்லி மூன்று வாலி தண்ணீரை தலையில் ஊற்றி, மாட்டுக் கோமியத்தை கொண்டுவந்து தலையில் தெளித்து, கையில் ஊற்றி ஒரு மிடரு விழுங்கவும் சொன்னது தான் உச்சக்கட்டம். மறுத்து ஒதுங்கிய போது கம்பை ஓங்கவே, தொல்லை விட்டால் சரி என்று ஒரு மிடறு குடித்து வைத்தேன்!

பிறகு சாமி அறைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள சாமிகளிடம் மன்னிப்பெல்லாம் தானும் கேட்டு என்னையும் கேட்கச் சொல்லி ஒன்னேகால் ரூபாயை என் கையில் கொடுத்து உண்டியலிலும் போடச் சொல்லி, என்னால் ஏற்பட்ட தீட்டை கழித்துவிட்ட திருப்தியில் மீன் அலம்பச் சென்று விட்டார்.

அவர் தீட்டுக் கழித்து விட்டதாக நினைத்து தன் அலுவல்களைக் கவனிக்க ஆரம்பித்தாலும், அது வரையிலும் நான் பிரியமுடன் பழகிவந்த என் பாட்டி, அன்று முதல் ஏதோ அழுக்குப் பிடித்தவராக, இருள் சூழ்ந்தவராகவே என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தார். ஒரு மீனவன் பிடித்துக் கொண்டுவரும் மீனை சிபாரிசு வைத்து வாங்கி வந்து வாயில் வைத்து விழுங்கத் தெரிகிறது. ஆனால் அவன் செய்து தரும் சாப்பாட்டை தின்னா தீட்டு ஒட்டிக்குமா...?

அதன் பிறகு எனக்கும் பாட்டிக்குமான நெருக்கத்தில் அனிச்சையாகவே ஒரு சரிவு ஏற்பட ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் அதுவே நிரந்தர இடைவெளியை எங்களுக்குள் ஏற்படுத்திவிட்டது. அதன் பிறகு அங்கு சென்றாலே என் மாமா, அவர் மனைவி, பிள்ளைகள் இத்தோடு என் பேச்சு வார்த்தை நின்று போனது. நான் பூண்டி புஷ்பம் கல்லூரியில் எம்.எஸ்.ஸி படித்துக் கொண்டிருக்கும் பொழுது பாட்டிக்கு உடல் நலமில்லை என்று செய்தி வந்து, புறப்பட்டு பெருஞ்சேரி வந்தேன்.

மரணப் படுக்கையில் இருந்ததால், சுற்றிலும் மகன், மகள்கள், பேரக் குழந்தைகள் என்று அவர் இறக்கும் தருணத்திற்காக வெயிட்டிங். நான் வந்தவுடன் என்னையும் பால் ஊற்றச் சொன்னார்கள். ... ஊற்றினேன். லேசாக கண்ணை விழித்துப் பார்த்த பாட்டி, என் கையைப் பிடித்து முடியாமல் சிரித்துக் கொண்டே, "ஒரு பட்டணத்திய பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறியா?" ன்னு மெதுவாகக் கேட்க, அந்த சம்பவத்தை அறிந்த மாமாவும், அம்மாவும் மட்டும் சிரித்தார்கள். எனக்கும் லேசாக சிரிப்பு வந்தது. பாட்டி கண்ணில் லேசாக கண்ணீர்... ஒரு ஐந்து நிமிட இடைவெளியில் பாட்டி இறந்து விட்டதாக சுற்றிலும் நின்று கொண்டிருந்தவர்கள் ஃபார்மலாக அழ ஆரம்பித்தார்கள்...!!!