Thursday, February 16, 2012

ஆட்டம் காண்கிறதா அதிமுக?!

அறுதிப் பெரும்பான்மை, மிருக பலம், வெகுஜன ஊடகங்களின் ஆதரவு என்று போய்க்கொண்டிருக்கும் 9 மாதங்களே ஆன அதிமுக ஆட்சிக்கு என்ன கஷ்டம்? அது ஏன் ஆட்டம் காணப்போகிறது? என்ற எண்ணத்துடன் யாராவது இக்கட்டுரையை வாசிக்க வந்திருந்தால்... ஸாரி!

இது அதிமுகவின் ஆட்சியைப் பற்றிய அலசலோ, விமர்சனமோ அல்ல. மாறாக அதிமுக என்னும் தமிழகத்தின் பிரதான இரு அரசியல் கட்சிகளில் ஒன்றினைப் பற்றிய ஊடுறுவல் பார்வையே.

எந்தவொரு மாநிலமானாலும் அதில் ஒரு கட்சி ஆட்சியமைக்கக் கூடிய அளவில் பெரிய இயக்கமாக தொடர்ந்து இருக்க வேண்டுமானால் பல்வேறு காரணிகளை நாம் அடுக்கிக் கொண்டே செல்லலாம். உதாரணமாக அக் கட்சியின் கொள்கைகள், ஆளுமைத்திறன் மிக்க தலைவர்கள், ஊழலுக்கு அப்பாற்பட்ட தலைவர்கள், இளமையும் சுறுசுறுப்புமிக்க தலைவர்கள்... என்று நிறைய சொல்லலாம்.

ஆனால் இந்த குணாதிசயங்களையெல்லாம் கொண்ட எத்தனையோ கட்சிகள் தமிழகத்தில் துறும்பைக்கூட கிள்ள முடியாத நிலையில் தான் இருந்து காணாமல் போயிருக்கின்றன அல்லது இன்னமும் சில அந்த நிலையை நோக்கி நகர்ந்த வண்ணம் இருந்து கொண்டிருக்கின்றன!

அப்படியென்றால் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்குமளவிற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு இருக்க வேண்டிய அந்த முக்கியமான தவிர்க்க முடியாத தகுதி தான் என்ன?

ரொம்ப சிம்ப்பிள்! மாநிலத்தின் மூலை முடுக்கு, இண்டு இடுக்கு என்று சொல்வார்களே அத்தனையிலும் அதாவது மாநில அளவில் ஆரம்பித்து, மாவட்டம், வட்டம், ஒன்றியம், கிளைக் கழகங்கள் என்று மாநிலத்தின் நிலப்பரப்பு முழுமைக்கும் வியாபித்திருக்கக் கூடிய அளவிற்கு அந்த கட்சியின் கிளைகள் பரந்து விரிந்து மண்ணோடு... மன்னிக்கவும் மக்களோடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும்!

இது தான், இந்தத் தகுதிதான் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் அதை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தக்கூடிய சூட்சுமம் அல்லது சூத்திரமாக இருக்கின்றது. இந்த தகுதியுள்ள ஒரு கட்சியின் தலைவர்களோ மற்ற பொருப்பாளர்களோ என்ன மாதிரியான அடாவடித்தனம், மொள்ளமாறித் தனம், அல்லது முடிச்சவிக்கித் தனம் செய்து கொண்டிருந்தாலும் அது பிரச்சினையில்லை!

இந்த டேஷ்..தனங்களையெல்லாம் ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சி செய்வதாக குபீரென்று குதித்தெழுந்த எதாவது ஒரு குழு அல்லது இயக்கம் அல்லது நன்கு பேச்சு அல்லது எழுத்துத் திறமையுள்ள ஒருவர் தேர்தலுக்கு சமீபமாக புறப்பட்டால், அவர்களுக்கு வெகுஜன ஊடக துணையுமிருந்தால் இந்தக் கட்சியின் ஆட்சி மக்களால் அகற்றப்பட்டுவிடும்.

இந்தக் கட்சி ஆட்சியை விட்டு வெளியேற்றப்படுகிறது என்றால் அதற்கு காரணமான அந்த குபீர், திடீர் குழுக்களோ, இயக்கங்களோ அல்லது எழுச்சி நாயகனோ..... என்று யாரும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட முடியாது! மாறாக புறந்தள்ளப்பட்ட கட்சியைப் போன்று மாநிலத்தின் குக்கிராமங்கள் வரையிலும் கிளை பரப்பி மக்களோடு பின்னிப் பிணைந்திருக்கும் இன்னொரு கட்சிதான் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும்!

இது தான் நிதர்சனம்! இது தான் எதார்த்தம்!! இது தான் இன்று வரையிலும் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது.

அதெல்லாம் சரி, அதிமுக பற்றி எழுதுவதாக சொல்லிவிட்டு, வேறு ட்ராக் மாறி போவது போல் தோன்றுகிறதே என்று யாராவது கேட்பீர்களேயானால்.... வெயிட்டீஸ்! அங்கு தான் வருகிறோம்.

நம் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் மேலே சொன்ன தகுதிகளோடு இருந்து கொண்டிருக்கும் கட்சிகள் திமுகவும் அதிமுகவும் மட்டுமே என்பது அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்கள் கூட தெரிந்து வைத்திருக்கும் ஒரு அடிப்படை விஷயம்!

கடந்த திமுக ஆட்சி பெரிய அளவில் ஊழல் செய்துவிட்டது, நிறைய அடாவடித் தனங்கள் செய்யப்பட்டன, இலங்கைப் பிரச்சினையில் துரோகம் இழைக்கப்பட்டது... என்றெல்லாம் பிரச்சாரம் செய்து தான் அந்த ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அப்படியென்றால் இந்த தவறுகளையெல்லாம் செய்யாத ஒரு வரலாற்றைக் கொண்ட கட்சியோ அல்லது இவ்வாறெல்லாம் பெரிய அளவில் பிரச்சாரம் அல்லது பரப்புரை செய்த நாம் தமிழர், மே 17, போன்ற இயக்கங்களோ அல்லது தமிழருவி மணியன், வைக்கோ, நெடுமாறன், தா.பாண்டியன் போன்றோர்களோ தானே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும்?!

ஆனால் அறுதிப் பெறும்பான்மையோடு ஆட்சி அமைத்திருப்பது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தானே?!  இது எதைக் காட்டுகின்றது?. ஆட்சியமைக்க தகுதியான காரணமாக மேலே நாம் சுட்டிக் காட்டிய சூத்திரம் மிகச் சரியானது என்பதைத் தானே?!

ஆகவே நாற்பது வருடங்களுக்கு முன்பாக அமரர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக, தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை கிளைகள் பரப்பி பொருப்பாளர்களை நியமித்து மக்களோடு பின்னிப் பிணைந்து செயல்பட்டு வருவதாலேயே தான் இன்றைக்கு திமுகவுக்கு மாற்று என்று வரும் பொழுது ஆட்சி அதிகாரத்தை தன்னகத்தே வசீகரித்துக் கொண்டிருக்கிறது.

இப்படி தமிழகத்தின் ஆளத்தகுதியுள்ள இரண்டு கட்சிகளில் ஒன்றான அதிமுக இந்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு இன்றைக்கு அக்கட்சியின் நிலை என்ன என்பதை சற்று தெளிவாகப் பார்ப்போம்.

ஒரு கட்சிக்கு மாநில அளவிலான பொருப்பாளர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட அக்கட்சி ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கு மாவட்ட கழக பொருப்பாளர்களும், நகர கழக, ஒன்றிய கழக மற்றும் கிளைக் கழகங்களின் பொருப்பாளர்களும் மிக மிக முக்கியமானவர்களாகின்றனர்.

மாநில பொருப்புகளைத் தவிர்த்து, சற்றேரக்குறைய, 40 மாவட்ட கழகத்திற்கான (நிர்வாக வசதிக்காக கட்சி மாவட்டம் என்பது கைக்கடக்கமாக அமைத்துக் கொள்வார்கள்) நிர்வாகிகள்,  இருநூற்றுக்கும் அதிகமான நகரக்கழகத்திற்கான  நிர்வாகிகள், 300 க்கும் அதிகமான ஒன்றிய கழகத்திற்கான நிர்வாகிகள், நகர கழகமென்றால் வார்டுகளும், ஒன்றிய கழகமென்றால் பஞ்சாயத்துகளுமாகச் சேர்ந்து சற்றேரக்குறைய ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான கிளைக் கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும்... என்று ஒவ்வொரு கழகத்திற்கும் குறைந்தது அல்லது சராசரியாக 6 பொருப்பாளர்கள் என்று வைத்துக் கொண்டால் கூட ..... ஆட்சியமைக்க தகுதியுள்ள ஒரு கட்சிக்கு கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் பொருப்பாளர்கள் பதவி வகித்துக் கொண்டிருப்பார்கள்!!!

இதெல்லாமே தலைமை கழகத்தின் மேலிருந்து கீழான அனைத்து கிளைகளின் நிர்வாகிகள் அல்லது பொறுப்பாளர்கள் மட்டுமே. இதைத் தவிர்த்து, கட்சியின் துணை அமைப்புகளான இளைஞர் அணி, மகளிர் அணி, சிறுபான்மையினர் அணி, மாணவரணி, வழக்கறிஞர்கள் அணி, மருத்துவரணி, தொழிற்சங்க அமைப்பு.... இப்படி ஒரு நீஈஈண்ட பட்டியலே அணி வகுத்து நிற்கும்.

இதில் இளைஞர் அணி, மாணவரணி, மகளிரணி, சிறுபான்மையினரணி போன்றவை தலைமைக் கழகங்கள் போலவே குக்கிராமங்கள் வரையிலும் கிளைகளைப் பரப்பி, பொறுப்பாளர்கள் செம்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

இப்படி துணை அமைப்புகள் அனைத்திலும் மட்டுமே தனியாக பத்து லட்சத்திற்கும் அதிகமான பொறுப்பாளர்கள் பதவியில் வலம் வந்து கொண்டிருப்பார்கள்.

இதில் இருக்கின்ற இன்னும் பல வகையான துணை அமைப்புகளையும் பற்றி முழுமையாக எழுத ஆரம்பித்தால், படிப்பவர்களுக்கு தலை சுற்றி மயக்கமே வந்து விடும்!

இப்படி ஒரு ஸ்திரமான கிளைகளையும், அமைப்புகளையும் கொண்ட ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் தலைமை சென்னையில் அமர்ந்து கொண்டு அரசுக்கு எதிரான ஒரு போராட்டத்தை அறிவிக்கிறது என்று சொன்னால், அது கன்னியாகுமரியிலிருந்து ஒரு டவுன் பஸ் ஏறி 15 கிமீ தூரத்திலிருக்கும் ஒரு ஊரில் இறங்கி, அங்கிருந்த ஒரு மினி பஸ் ஏறி 7 கிமீ தள்ளியிருக்கும் கிராமத்தில் இறங்கி, அங்கிருந்து பொடி நடையாக 2 கிமீ நடந்து சென்றால் வருமே ஒரு குக்கிராமம், அங்கிருக்கும் அக்கட்சியின் கிளைக்கழகத்திலிருக்கும் ஐந்தாறு பொருப்பாளர்கள், தங்களோடு இன்னும் பத்து உறுப்பினர்களையாவது சேர்த்துக் கொண்டு அந்த ஊரின் பஞ்சாயத்து போர்டு அலுவலகம் முன்பு கூடி கட்சிக் கொடிகளை கையிலேந்திக் கொண்டு, தலைமைக் கழகம் முதல் நாள் கட்சியின் அதிகாரப்பூர்வ தினசரியில் வெளியிட்டிருக்கும் வாசங்களை கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் செய்வார்கள்!

இது அந்த குக்கிராமத்திலிருக்கும் சில நூறு பொது மக்களின் கவனத்திற்கும் கட்டாயமாய் சென்று சேரும்!! அது மட்டுமா? அந்த ஊரில் நடக்கும் நல்லது கெட்டது திருவிழா என்று எதுவானாலும் இந்த கட்சி பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்தி அரசாங்கத்திலிருந்து பெற இயலும் அனைத்து விதமான சலுகைகளையும், உதவிகளையும் பெற்றுத் தர ஆவண செய்வார்கள்.

அப்படி செய்யத் தவறினால் அடுத்தடுத்து வரும் எந்த தேர்தலிலும் அந்த ஊர் மக்களிடம் சென்று வாக்கு கேட்க இயலாது. அரசாங்க உதவி என்றால் ஆளுங்கட்சியினரையும், அரசு முறைகேட்டுக்கு எதிரான போராட்டம் என்றால் அந்த இன்னொரு மாற்றுக் கட்சியினரையும் மக்கள் அரவணைத்துச் செல்லும் பழக்கம் இங்கு மிகவும் சகஜம்.

உண்மையில் சொல்லப் போனால் இந்த மாதிரி பொது ஜனம் தான் உண்மையான நடுநிலை வாதிகள். எந்த கட்சியின் மீதும் தேவைக்கு அதிகமான விருப்போ அல்லது அதீத வெறுப்போ இல்லாமல் பொதுவான நிலையில் வைத்தே பழகுவார்கள். இப்படிப் பட்டவர்கள் தான் வெற்றி தோல்வியையே நிர்ணயிக்கின்றார்கள்.

இதுவரையிலு அதிமுக என்ற கட்சிக்கு இந்த கட்சி அமைப்பு என்பது ஓரளவிற்கு திமுகவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் பலம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது என்றாலும், கடந்த மூன்று மாதங்களாக கட்சியின் அந்த அசைக்க முடியாத உறவு வலை நைந்து போக ஆரம்பித்திருக்கிறதோ என்ற ஐயப்பாடு எழுவதை நடப்பவைகளை பார்க்கும் போது தவிர்க்க இயலவில்லை.

நான் மேலே சொன்ன கட்சியின் அடி வேர் வரையிலான கிளைகளின் பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களையும் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டு செயலாற்ற வைப்பது என்பது ஒரு மிகப் பெரிய கலை. கட்சியின் தலைமை என்பது எப்பொழுதும் அவர்களுக்கு அருகிலேயே இருப்பதான தோற்றத்தையும், எந்த நேரத்திலும் கட்சி தங்களை கைவிட்டு விடாது என்ற நம்பிக்கையையும் வளர்க்கும் படி ஒரு உறவுப் பாலத்தை மேம்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

கடைக்கோடி கிளைகளின் நிர்வாகிகளும் தங்களுக்குள்ள பிரச்சினையை, நகர அல்லது ஒன்றிய நிர்வாகிகளிடமோ, அவர்கள் சரியில்லாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகிகளிடமோ பேசி சரிசெய்து கொள்ளும் வாய்ப்போடு அந்த நிர்வாகிகளை இவர்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் நெருக்கத்தோடு இருக்க வேண்டும். 

அப்படி தொடர்பிலிருப்பதோடு அவர்களின் நல்லது கெட்டதுகளிலும் அக்கரை கொண்டிருந்தால் தான் மாவட்ட அளவில் நடத்தப்படும், போராட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றில் கிளைக்கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு அவற்றை வெற்றியடையச் செய்து பொது மக்களை பிரமிக்க வைத்து கட்சிக்கான பலத்தை நிரூபித்துக் காட்டுவார்கள். 

அப்படி தங்கள் மாவட்டத்தை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருப்பவர்களால் தான் தலைமைக் கழகத்தில் நல்ல பெயரோடும், தொடர்ந்து அதே பொருப்பில் பணியாற்றும் வாய்ப்போடும் இருக்க முடியும்.!!

ஆக, ஆள்வதற்கு தகுதியுள்ள ஒரு கட்சியின் தலைமை முதல் அடிமட்டத்திலிருக்கும் ஒரு கிளையின் நிவாகி வரையிலும் ஒரு வித பின்னலுடன் மிக லாவகமாகவும், ஒட்டுறவோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின் போது ஜெயலலிதா, கட்சியினரோடு பெரிய அளவில் எந்தவிதமான உறவும் வைத்துக் கொண்டிருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. பெரும்பான்மை நேரத்தை அவர் பையனூரிலும், கொடநாட்டிலுமே கழித்தார் என்பதை நாடு நன்றாக அறியும்.

ஆனாலும் திமுகவின் பலவீனங்களாக பரப்புரை செய்யப்பட்டவற்றை தனக்கு சாதகமாக மாற்றி அறுவடை செய்து கொள்ளும் அளவிற்கு கட்சியை மேற் சொன்ன உட்கட்டமைப்போடு வைத்திருந்ததில் சசிகலா & கோவிற்கு மிகப் பெரும் பங்கிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இப்பொழுது திமுகவின் தளபதி சுற்றிச் சுழன்று 30 வயதுக்குட்பட்டவர்களை சேர்த்து இளைஞரணியை மிகப் பெரும் சக்தியாக உருவாக்கிக் கொண்டிருப்பது போல, அப்பொழுது வெங்கடேஷ் என்ற சசிகலா உறவினர் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, நிறைய இளைஞர்களை அதன் உறுப்பினர்களாக்கி கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்க உதவியிருக்கின்றார்.

அதேப் போன்று சசிகலாவின் உறவினர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிவாரியாக கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் முதல் கடைமடை கிளைக்கழக நிர்வாகிகள் வரை கட்சி உட்கட்டமைப்பை எந்த இடைவெளியும் இல்லாமல் சிறப்பாக நடப்பதற்கு செயலாற்றிக் கொண்டிருந்தனர்.

அப்படி எல்லா மட்டத்திலுமே கட்சி உயிர்ப்போடு இருந்த காரணத்தினால் தான் திமுகவுக்கு மாற்று என்று மக்கள் நினைக்கும் போதே வேறு வாய்ப்பே இல்லாமல் அவர்கள் மனதில் அதிமுக வந்து உட்கார்ந்து கொண்டது! அதனால் ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றியது.

ஆனால் சசிகலா எப்பொழுது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ அன்றிலிருந்து நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது.

சசிகலாவையோ அல்லது அவர் உறவினர்களையோ வெளியேற்றியதால் அதிமுக என்ற கட்சி ஆட்டம் காண்கிறது என்று சொன்னால் என்னைவிட ஒரு முட்டாள் யாரும் இருக்க முடியாது!

ஆனால் உதாரணத்திற்கு சசியின் ஒரு உறவினரான ராவணன் என்பவர் மேற்கு மண்டலத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்களை நியமித்திருந்தார். ஆனால் அந்த நிர்வாகிகள் தான் கட்சிக்கு அந்த பகுதியில் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தார்கள் என்பதை மறுக்க முடியாமா? முடியாது!

ஆகையினால், அந்த ராவணனை கட்சியிலிருந்து தூக்குவதால் எந்த பிரச்சினையும் வந்து விடாது. ஆனால் அந்த துரோகியால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காக மட்டுமே அந்த மண்டலத்திலிருக்கும் அனைத்து அமைப்பு மற்றும் கிளைக் கழகங்களைச் சார்ந்த நிர்வாகிகளையும் மாற்றுவதோ அல்லது மட்டம் தட்டி வைத்திருப்பதோ என்று ஒவ்வொரு பகுதியிலும் செய்ய ஆரம்பித்திருப்பது தான் அதிமுக என்ற பெரும் இயக்கத்தை அடி வேரில் ஆட்டம் காண வைத்திருக்கின்றது!

அந்தந்த மாவட்ட கழக, நகர, ஒன்றிய கழக, கிளைக்கழக பொறுப்பாளர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள்? அதிமுக எதிர்க்கட்சியாய் இருந்த போது எவ்வளவு அவமானங்களையும், அடக்குமுறைகளையும் சந்தித்து, பொருட்செலவும் செய்து கட்சியை உயிர்ப்போடு வைத்திருந்திருப்பார்கள்?!

இவர்கள் இப்பொழுது வகிக்கின்ற பொருப்புக்களுக்கெல்லாம் ஆட்களை நியமிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து ராவணனையோ, திவாகரனையோ அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது யார்? இவர்கள் தான் தங்களை நியமிக்கவோ அல்லது தூக்கியெறியவோ அதிகாரம் பெற்றவர்கள் என்கிற போது அவர்களின் விசுவாசிகளாகவும்,  அடிமைகளாகவும் இந்த நிர்வாகிகள் இருந்ததில் ஆச்சர்யமில்லை தானே? 

இப்பொழுது அவர்கள் துரத்தியடிக்கப்பட்டு விட்டார்கள் என்ற நிலையில் தலைமையாகிய ஜெயலலிதா அந்த பகுதிக்கு யாரை கை காட்டுகிறாறோ அவர்களுக்கு ஒத்துழைப்பாய் இருந்து கழகத்தை வழிநடத்தப் போகின்றார்கள்!

கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் அதிமுக என்ற கட்சிக்கும் அதன் தலைவருக்கும் மட்டுமே என்றென்றைக்கும் நிரந்தர  விசுவாசிகள். இதைப் புரிந்து கொள்ளாமல் மேலிடம் எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தான் கட்சியை அமைப்பு ரீதியாக அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது.

இது தான் சமயமென்று பலர், யாருக்கும் கட்டுப்படாமல், அல்லது கேட்பதற்கு நாதியில்லை என்று தன்னிச்சையாக செயல்படுவதும், பிடிக்காதவர்களை சசிகலா பெயரைச் சொல்லி கட்டம் கட்டுவதும் என்று.... ஆணி வேர் இற்றுப் போய் தாய்மரம் பட்டுப்போன நிலையில், விழுதுகள் தாங்கிக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்திலேயே இன்றைய அதிமுக அறியப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்தால் பெரும் புயல் கூட வேண்டாம், ஒரு பலமான காற்று வீசினால் கூட அதிமுக என்னும் ஆலமரம் சாய்ந்து விடும் அபாயமிருக்கிறது!

சசிகலா பெயரைச் சொல்லி கட்டம் கட்டப்பட்டதால் உண்மையான அதிமுக தொண்டரொருவர் எம்ஜிஆர் சமாதியில் தீக்குளித்ததும், சட்டசபையில் நேருக்கு நேர் நாக்கை துறுத்தி எச்சரித்த விஜயகாந்த்தின் படைகள் இன்னமும் தெனாவட்டாக வலம் வந்து அதிமுகவுக்கு ஒரு படி மேலே போய் போஸ்டர் யுத்தம் நடத்துவதும். அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களையும், கிளைக்கழகங்களின் பொருப்பாளர்களையும் ஒருங்கிணைத்து வழி நடத்திச் சென்று என்றென்றும் கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கக் கூடிய சக்திபடைத்த ஒரு நபரோ அல்லது குழுவோ அங்கு இல்லை என்பதுதான்  பொது மக்களாகிய நமக்கு உணர்த்துகின்ற உதாரணங்கள்.!!!

ஆகவே தோழர்களே அதிமுக என்னும் கட்சி அமைப்பு ரீதியாக ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கவனிக்காவிட்டால்,  அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றிக்கனி என்பது அதிமுகவுக்கு எட்டாக்கனியாகிவிடும!!!!!!!!












Tuesday, February 14, 2012

“இந்த வார்த்தையைச் சொல்ல ஏன் இத்தனை நாள் காக்க வைத்தீர்கள்?”

நெய்வேலியின் ‘சி’ ப்ளாக் வீடு அது. முன் பக்கம் இருக்கும் 30 அடி தோட்டத்தில் 12 அடிக்கு இழுத்து போடப்பட்ட ஒன் சைட் ஷெட் அது. அதில் தான் எனக்கு படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த ஷெட்டில் என்னுடன் அவள் தன் அக்கா, அண்ணன் மற்றும் தன் தம்பியுடன் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, என் மனது இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அந்த கல்லுளி மங்கைக்கு அப்படி எந்த உணர்வுமே இல்லாது போல் தான் தோன்றுகிறது!.

அது இன்றிலிருந்து 20 வருடம் முன்னோக்கிய ஒரு ஃபிப்ரவரி மாதத்தின் 26 ஆம் நாள். புரியவில்லையா? அதாங்க 1992. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. ப்ராஜெக்ட் முடிவதற்கு. கிட்டத்தட்ட 75 நாட்களை வீணடித்து விட்டேன். இன்னும் 6 நாட்களுக்குள் இதற்கு ஒரு முடிவு தெரியாவிட்டால் ப்ராஜெக்ட் முடிந்து கல்லூரிக்கு திரும்ப வேண்டியிருக்கும்.

அவள் என்னைக் காதலிக்கிறாள் என்று புரிந்து கொள்வதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை கடந்த ஒன்றரை வருட அவளது செயல்பாடுகள் மூலமாக என்னால் உறுதியாக கூற முடியும். அதே அளவிற்கான அவளது எதிர்மறை செயல்பாடுகளையும் கூட என்னால் பட்டியலிட முடியும்!!

என் மனம் எவ்வளவு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.... ஆனால் அவளைப் பாருங்கள், அவள் தம்பி ஜூனூனில் வந்த ஒரு மொக்கை ஜோக்கை சொன்னதற்கு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

ச்சே என்ன கருமம்டா இது?! நானும் எங்கூரு டைரக்டர் டி. ராஜேந்தர் மாதிரி ஒருதலை காதலனா ஆயிடுவேனோ? எங்க ஊரு ஆம்பள பசங்களுக்கெல்லாம் இது ஒரு சாபமோ?! ச்சீ ச்சீ... ச்சான்ஸே இல்ல. என்ன ஒரு கண்ணியமா இத்தனை நாளும் நடந்துக்கிட்டிருக்கேன். என் காதலை அவ மறுதலிச்சான்னா, அவ வேற எந்த பயலோடயுமே காதல் உணர்வுள்ள மனைவியா வாழ முடியாது (?!)

சௌமி, கூல் டவுன். ஏன் இப்படி நெகட்டிவ்வா திங்க் பண்ற? இப்ப என்ன நடந்துடிச்சி?  இல்ல.. அவ மேல உள்ள காதல்ல தான இவ்ளோ மன உளைச்சலோட தன்னந்தனியா, மைண்ட் வாய்ஸோட புலம்பிக்கிட்டு இருக்கேன். ஆனா அவள பாருங்க ஜாலியா சிரிச்சி பேசி அரட்டை அடிச்சிட்டிருக்கா.

அவளுக்கும் என் மேல.... சரி என் மேல கூட வேண்டாம் வேற எந்த கருமம் புடிச்சவனோடவாவது காதல் இருந்திச்சின்ன என்னய மாதிரிதான அவளும் புலம்பிக்கிட்டு இருக்கனும்?! இல்லியே, அதான் எரிச்சல் எரிச்சலா வருது!

விட்றா, விட்றா..., நீ சொல்ற படியே பார்த்தாலும் அவளுக்கு உன் மேல காதல் இருக்கோ இல்லியோ... ஆனா வேற எந்த நாதாரி கூடவும் லவ்வு இல்லன்னு புரிஞ்சு போச்சு! அதுவே ஒரு ப்ளஸ் பாயிண்டு தானே உனக்கு?!  அட ஆமால்ல? ஒரு வேளை என் காதல ஏத்துக்கலன்னாலும், க்ளீன் ஸ்லேட்னு தெரிஞ்சா போதும், அப்பறம் அத இத பேசி, செஞ்சி கரெக்ட் பண்ணிடலாம். எத்தன படம் பார்த்திருக்கோம்!!

இப்டியே மைண்ட் வாய்ஸ் கூட பேசிட்டிருந்ததுல என் தலை ஒரு 60 டிகிரிக்கு பின் பக்கமா சாய்ந்து ஒரு பக்க விட்டத்தை என் கண்கள் நோக்கிக் கொண்டிருந்தது போலிருந்தது.

போற போக்க பார்த்தா ஜெயங்கொண்டம் மெய்ன்ல கிடைக்கிற லிக்னைட்ட அக்கு வேற ஆணி வேறா பிரிச்சி மேஞ்சி நம்ம என் எல் சி லயே டிஜிஎம் ஆ வந்து உட்கார்ந்துடுவீங்க போலருக்கு என்று அவள் அக்கா சொன்ன போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்.

நாளக்கு ரொம்ப வேலையிருக்கு, காலைல சீக்கிரமே கிளம்பனும் அதான்... என்று சம்பந்தமில்லாமல் உளறி வைத்தேன். ஆனால் அந்த உளறல் தான் என் வாழ்க்கையிலேயே ஒரு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்று எனக்கு அந்த நிமிடத்தில் தெரிந்திருக்கவில்லை.

உடனே என்னவள், ஐயையோ அவங்க வேலையை நாம கெடுக்க வேண்டாம், வாங்க போய் படுக்கலாம் என்று சொல்லி, மற்றவர் பதிலை எதிர்பார்க்காமல் வெளி கேட்டை பூட்டச் சென்றாள். நானும் இது தான் சாக்கென்று பெஞ்சில் கட்டையை நீட்ட ஆயத்தமானேன். மற்றவர்களும் படுப்பதற்கு உள்ளே சென்று விட்டார்கள்.

அவள் வெளி கேட்டை பூட்டிவிட்டு, நான் படுத்திருந்த ஷெட் கதவை சாத்திக் கொண்டிருந்தாள். மிகவும் நிதானமாக அல்லது வேண்டுமென்றே தாமதித்து அவள் செயல்படுவது போல் ஒரு ப்ரம்மை. அது எனது மனதின் பழக்க தோஷம் என்று புறந்தள்ளிவிட்டு, அவளிடம் கேட்டுவிடுவது என தீர்மானித்து ஒரு வேகத்துடன் அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.  ம்ம் ஒன்னுமில்ல, உனக்கு என்ன கலர் பிடிக்கும்? ...... ஏன்?   ...ச்சும்மா!!   ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது. அந்த சிறிய இடைவெளி என் மனதில் மிகப் பெரிய தைரிய பூதத்தை கொண்டு வந்து உட்கார வைத்தது.

நானே மௌனத்தை உடைத்தேன். இல்லை... உன்னுடன் கொஞ்சம் தனியாக பேச வேண்டும். .....எப்போ?     ....எப்போ என்ற அந்த கேள்வியே என் மனதில் ஆயிரம் நம்பிக்கை கீற்றுகளை ஒரு சேர பளிச்சிட வைத்தது.

நாளைக்கு காலைல....?

ம்... பேசலாமே!

எங்க பேசலாம்?

ஒரு சிறிய புன்னகையுடன்.  நாளைக்கு சீக்கிரமா, ப்ராஜெக்ட் செண்டர்க்கு போகனும்னு சொன்னீங்கள்ல? நானும் ப்ராக்டிகல் எக்ஸாமுக்கு போகனும். 8 மணிக்கெல்லாம் காலேஜ்ல இருக்கனும். நீங்க ஏழு மணிக்கு கிளம்புனீங்கன்னா நானும் கூட வருவேன்.

சரி பச்சை கலர் ட்ரெஸ் போட்டுட்டு வர்றீயா?

............................................

ஏதோ கேட்க வாயெடுக்க... குட்நைட் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அந்த இரவு எனக்கு எப்படி இருந்திருக்கும்? அந்த 8 மணி நேரத்திற்கு மட்டும் நான் எண்பது பதிவுகள் போடலாம்! மறு நாள் காலை 6 மணிக்கே ஃபுல் மேக்கப்பில் ரெடியாக உட்கார்ந்து விட்டேன்.

வாசலில் கோலம் போட்டுவிட்டு வந்த அத்தை, என்ன தம்பி எப்பவும் எட்டரைக்கு தான கிளம்புவீங்க. இன்னிக்கு ஏன் சீக்கிரமா கிளம்பி நிக்கிறீங்க?

இல்லை அத்தை, ப்ராஜெக்ட் இன்னும் ஆறு நாள்ல முடியுதுல்ல, அதான் சீக்கிரம் முடிக்க நிறையா வேலை பாக்கியிருக்கு.  ஏழு மணிக்கே போயாகனும்.

ஐயையோ இன்னும் டிஃபன் ரெடி பண்ணலியே, சின்னவளும் சீக்கிரம் காலேஜ் போகனும்னு கிளம்பிட்டிருக்கா. அவள கேண்டீன்ல சாப்பிட சொல்லிட்டேன். ராத்திரியே சொல்லிருந்தா எதாவது டிஃபன் பண்ணிருப்பேனே!

பரவால்லத்தை, நானும் கேண்டீன்லயே சாப்டுக்கறேன். என்று சைக்கிளை எடுத்து வெளி வந்த போது தான், என்னவள் வெளியே வந்தாள். ஒரு தேவதை போல். பச்சை நிற பாவாடை தாவணியில். வளையல், பொட்டு, காது தொங்கல் உட்பட அனைத்துமே பச்சை தான்!!

ஒரு சில விநாடிகள் இதயம் துடிக்க மறந்து போய்... பிறகு வேலை செய்ய ஆரம்பித்தது. தொண்டையின் உள்பக்க தோல் மேலண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது. இதைத் தான் விக்கித்து நிற்பது என்று சொல்வார்கள் போலிருக்கிறது!

அம்மா, அவங்களை கொஞ்சம் வெய்ட் பண்ண சொல்லுங்க. காலை நேரம் ரோட்டில் யாருமே இருக்க மாட்டாங்க. பயமா இருக்கும். காலேஜ் வழியா தான் காட் செண்டர்க்கு போகனும், கொஞ்சம் துணையா வரச்சொல்லுங்க என்று அவசமாக சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்!

நான் பேயரைந்தது போல் அத்தையை மெதுவாக பார்க்க... ஆமாம் தம்பி கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. ரோடெல்லாம் வெறிச்சோடி கிடக்கும். இந்த ஊர் பசங்களே சரியில்லாதவனுங்க.ன்னு சொல்லிக்கொண்டே, சீக்கிரம் கிளம்புடி அந்த புள்ள வெய்ட் பண்ணுதுன்னு உள்ளே சென்றார்கள்.

எனக்கு மூன்று மணி நேரமாகத் தெரிந்த அந்த முப்பது விநாடிகளில் அவளும் தன்னுடைய சைக்கிளை தள்ளிக் கொண்டே வெளியில் வந்தாள்.

மெதுவாக ஆரம்பித்தது எங்கள் பயணம். நெய்வேலியின் நீள நீளமான இரட்டைச் சாலைகள். கழுவி விட்டாற்போன்ற ஒரு பொலிவு. இரண்டு பக்கமும் அடர்த்தியான உயர்ந்த மரங்கள். ஃபிப்ரவரி மாத இதமான பனி. இரவு முழுதும் பயணித்து, பூமியைத் தொடும் முன்பாக எங்களையும் நனைத்துக் கீழிறங்கிக் கொண்டிருந்தது.

அவள் படித்துக் கொண்டிருந்த ஜவஹர் கல்லூரிக்கு ஒரு ஃபர்லாங் முன்னதாக பரந்து விரிந்த ஒரு பகுதி. வெட்டவெளி என்றும் சொல்ல முடியாது... ஆனால் அதிக மரம் செடி கொடிகளும் கிடையாது. அது வரையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசிக் கொண்டிருக்க வில்லை. மனம் படபட வென்று ஒரு சீரான, ஆனால் இனம்புரியாத சந்தோஷத்துடன் ஒரே தாளத்தில் அடித்துக் கொண்டிருந்தது.

இன்னும் ஓரிரு நிமிடங்களில், எங்களுக்குள் நடைபெறப்போகும் உரையாடலுக்குப் பிறகு ஒன்று உச்சஸ்த்தாயியில் துடிக்கலாம்... அல்லது சிலபல விநாடிகள் இடைவெளிவிட்டு, பிறகு ஏன் துடிக்க வேண்டும் என்று சுரத்தில்லாமல் கூட மெதுவாக துடிக்க ஆரம்பிக்கலாம். எது வேண்டுமானாலும் நடக்கும்.

நான் தான் பேச்சை ஆரம்பித்தேன். எடுத்த எடுப்பிலேயே....

உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்...!! உனக்கு சம்மதமா?!

அவள் நிச்சயம் இந்த மாதிரியான அணுகுமுறையை எதிர்பார்த்திருக்க மாட்டாள் தான்.....!  ஆனாலும் சுதாரித்துக் கொண்டு பேசினாள்.....

“இந்த வார்த்தையைச் சொல்ல ஏன் இத்தனை நாள் காக்க வைத்தீர்கள்?”


Monday, February 6, 2012

புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி.. நன்றி... நன்றி!!!

அன்புள்ள அம்மா அவர்களுக்கு தமிழகத்தின் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தலைவன் எழுதும் நன்றி மடல்:

அம்மா..., கடந்த ஆட்சிக்காலங்களில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டிற்கான மின் கட்டணம் சராசரியாக ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு வரையிலும் கட்டிவந்தேன்.

ஆனால் தாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னால் படிப்படியாக மின் தடை நேரம் அதிகரித்த படியாலும், கடந்த ஆட்சிக் காலத்தில் எங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் மின் சாதனங்களை அதிகம் பயன்படுத்தாத பட்டப்பகல் நேரத்தில் மட்டுமே மின் தடை செய்துவந்த நிலையில்....,

தங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு, எங்கள் வீட்டில் உள்ள அனைத்து மின் விளக்குகள், மின்விசிறிகள், டி.வி மற்றும் மின் சாதனக்களையும் முழுமையாக உபயோகப்படுத்தும் நேரமான மாலை ஆறு முப்பதுக்கு மேல் இரவு பத்து மணிக்குள் 2 மணி நேரம் மின் தடை செய்யப்படுவதால், நாங்கள் தினமும் உபயோகிக்கும் மின்சாரத்தின் அளவு வெகுவாக குறைந்து விட்டது.

இதன் காரணமாக தற்பொழுதெல்லாம் இரண்டு மாதத்திற்கொருமுறை ரூபாய் ஆயிரத்து ஐநூறிலிருந்து ஆயிரத்து எண்ணூறு வரையிலும் மட்டுமே மின் கட்டணம் செலுத்தும் உன்னதமான வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்கு வாய்த்திருக்கின்றது.

இதன் காரணமாக தாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது வரையிலும் மூவாயிரம் ரூபாய் வரையிலும் மின் கட்டணம் மூலமாக மிச்சமாகி எங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைத்திருக்கின்றோம்! இதே நிலையில் மின் தடை நேரத்தை நீங்கள் தக்கவைத்துக் கொண்டிருந்தீர்களேயானால், தங்களின் ஐந்து வருட ஆட்சி முடிவுறும் தருவாயில் என்னைப் போன்ற ஊதாரித்தனமாக செலவு செய்யாத ஒவ்வொரு தமிழக குடிமகனுக்கும் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலும் மின் சிக்கனத்தால் மட்டுமே சேமிப்பு கிடைத்துவிடும்!

இது ஒரு நேரிடையான பொருளாதார சேமிப்பு என்றல், இன்னும் மறைமுகமான எண்ணற்ற பலன்களையும், நல்ல பழக்கவழக்கங்களையும், உடல் ஆரோக்கியத்தையும் எங்கள் குடும்பத்தார் பெற்று சொல்லொனா இன்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக என் மகன் மாலையில் விளையாடி முடித்து கை, கால் கழுவி படிக்க உட்காரும் பொழுது சரியாக மின் தடை ஏற்பட்டுவிடுவதால்..., முன்பெல்லாம் வீட்டு ஹாலில் ஓடிக்கொண்டிருக்கும் டீ.வி யிலேயே கவனம் சென்று கொண்டிருந்தது இப்பொழுது நிவர்த்தியாகி, மெழுகுவர்த்தி ஒளியிலேயே படிப்பதால், கண்ணும் மனமும் (வேறு வாய்ப்பிலாததால்) பாடப்புத்தகத்தின் மேலேயே லயித்து மனதை மிக விரைவாக ஒரு நிலைப் படுத்தி நன்றாக படித்து அதிக மதிப்பெண்களைப் பெற ஆரம்பித்திருக்கின்றான்!

அது மட்டுமா, முன்பெல்லாம் படித்து முடித்துவிட்டேன் பேர்வழி என்று இரவு 9.00 மணிக்கெல்லாம் டீ.வி பார்க்க உட்கார்ந்து பதினொன்று அல்லது பன்னிரெண்டு மணி வரையிலும் பார்த்து விட்டு, அதன் காரணமாக காலை ஏழரைக்கு மேல் தான் விழித்து அவசரமாக பள்ளிக்கு கிளம்பிச் செல்லும் என் மகன், இப்பொழுதெல்லாம் (மின்சாரம் இல்லாததால்) இரவு 9.00 மணிக்கெல்லாம் சரியாகப் படுத்து விடுகின்றான்.

அதன் காரணமாக மறுநாள் அதிகாலை ஐந்தரைக்கே எழுந்து ஒரு மணி நேரம் படித்து விட்டுத் தான் பள்ளிக்கு கிளம்பிச் செல்கிறான். இதைப் பார்க்கும் பொழுது எனக்கும் என் மனைவிக்கும் என் பெற்றோர்களுக்கும் கண்கள் பணிக்கின்றன... இதயம் இனிக்கின்றன!!

இது மட்டுமா, காலை எட்டு மணிக்கெல்லாம் மின் தடை செய்யப்பட்டு விடுவதால், அவசரமாக பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் எங்களுக்கு (வேறு வழியின்றி) அம்மியிலேயே சட்னி அரைக்கும் நிலை என் மனைவிக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆரம்பத்தில் இது சிரமமாகத் தோன்றிய அவளுக்கு இப்பொழுது இது ஒரு நல்ல உடற்பயிற்சியாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. இப்பொழுது அவளுடைய (அதிக கொழுப்பினால் குண்டாகியிருந்த) கைகள் எல்லாம் மெலிந்து இடுப்பு சதைகள் குறைந்து ...., தான் ஸ்லிம்மாகவும் அழகாகவும் மாறிக்கொண்டிருப்பதாக அடிக்கடி சொல்லிக் கொள்கிறாள்!

என் மகனைப் போலவே அவளும் என்னோடு காலை ஐந்தரை மணிக்கெல்லாம் (இரவு சீக்கிரமாக படுத்து விடுவதால் விழிப்பு தானாக வந்து விடுகிறது) எழுந்து (சும்மா உட்கார்ந்திருப்பதற்கு பதில்) வீடு, வாசல் பெருக்கி காலை ஆறரை மணிக்கெல்லாம் என் பெற்றோருக்கும் எனக்கும் காஃபி கொடுத்து விடுகின்றாள்.  (உன் உடம்பு மெலிந்து அழகாக தோற்றமளிக்க இந்த உடற்பயிற்சியும் ஒரு காரணம் என்று அவளிடம் நான் சொல்லி வைத்திருப்பது தனிக்கதை)

ஆகவே அம்மா அவர்களே உங்கள் ஆட்சியில், மிக முக்கிய தருணங்களிலெல்லாம் மின் தடை செய்து, எங்கள் குடும்பத்திற்கு நல்லதொரு பொருளாதார சேமிப்பை உருவாக்கிக் கொடுத்திருப்பதோடு, என் மகன், மனைவி உட்பட அனைவரும் தத்தமது கடமைகளை மிகச் சிறப்பாக செய்து, "நல்லதொரு குடும்பம் பலகலைக் கழகம்" என்பது போல் மிகுந்த மகிழ்ச்சியுடனும், குதூகலத்தோடும், ஆரோக்கியத்தோடும் வாழ வழி செய்த உங்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!!