Thursday, May 31, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல் புறக்கணிப்பு - கலைஞரின் முடிவு சரிதானா?

புதுக்கோட்டையில் வேட்பு மனு தாக்கல் எல்லாம் முடிந்து தேர்தல் களம் உண்மையான வெப்பநிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் நேரடிப் போட்டி என்பது உறுதியாகி விட்டது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி முடியும் வரையிலும் கூட திமுகவினருக்கும், மற்ற அரசியல் பார்வையாளர்களுக்கும் கடைசி நிமிடத்தில் மனம் மாறி கலைஞர் களமிறங்கி விடுவாரோ என்ற எண்ணம் இருந்து கொண்டு தான் இருந்தது.

மக்களைப் பொருத்தவரை திமுகவின் இந்த இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை தவறு என்று சட்டென நிராகரித்துவிட முடியவில்லை. ஏனெனில் அதிலுள்ள நியாயமான காரணத்தினையும் அவர்களால் இலகுவாக கடந்துவிட முடியாது என்ற நிலையிலிருக்கின்றார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திமுக களத்தில் இல்லாதது கூட அவர்களுக்கு ஒரு வித நிம்மதியைத் தந்திருப்பது போலத்தான் தோன்றுகிறது.

காரணம் ஆளும் அரசு தங்கள் தொகுதிக்கு இந்த குறுகிய காலத்தில் செய்து முடித்திருக்கும் சில உட்கட்டமைப்பு வசதிகளும், செய்யவிருக்கின்ற சில மேற்படி விஷயங்களும், ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த முதல்வரிடமிருந்து அடுத்த மூன்றரை ஆண்டுகளும் எதாவது நல்லது கெட்டதுகளை செய்து கொள்ள இயலும் என்று புரிந்து வைத்திருப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக இது ஆட்சி மாற்றம் எதையும் கொண்டு வந்திடாது என்ற புரிதலும்....  ஆகிய காரணிகளால் திமுகவின் முகத்தில் கரி பூசும் தர்மசங்கடம் இல்லாமல் போனதே என்ற குற்ற உணர்வில்லாத மனநிலையோடு இருப்பதும் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் அரசியல் விமர்சகர்களும், திமுகவின் எதிராளிகளும் கலைஞரின் இந்த முடிவு, திமுக தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் மாதிரியானது என்று கேலி பேசுகின்றார்கள். தேமுதிகவின் வளர்ச்சிக்கு கலைஞரே பாதை அமைத்துத் தந்துவிட்டார் என்றும் ஆரூடம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், புதுக்கோட்டை தொகுதி திமுகவினர் எல்லாம் அதிமுகவுக்கு எதிரான தங்கள் மனநிலையை வெளிப்படுத்த தேமுதிகவுக்கு வாக்களிப்பதன் மூலம், அக்கட்சிக்கு கிடைக்கும் வளர்ச்சியை அதிமுகவுக்கு எதிராக திமுகவுக்கான மாற்றுக் கட்சி என்ற அந்தஸ்த்திற்கு கொண்டுவந்துவிடும் உத்தியை, ஆரிய ஊடகங்கள் கச்சிதமாக செய்து முடிக்கும் என்றும் கனவு காண ஆரம்பித்து விட்டார்கள்!

மேலோட்டமாக பார்க்கும் பொழுது இந்த மாதிரியான பேச்சுக்கள் நடைமுறை சாத்தியக்கூறுகள் உள்ளவை தான் என்று நம்மை நம்ப வைத்தாலும், இவ்விஷயத்தில் கலைஞரின் கணக்கு வேறு மாதிரியாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

தமிழகத்தில் முதன் முறையாக 1967 இல் காங்கிரஸ் வீழ்த்தப்பட்ட பிறகு, 1991 தேர்தல் வரையிலும் அக்கட்சிக்கு சராசரியாக 15 சதவிகித வாக்குகள் இருந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. இந்த காலகட்டத்தில், தலா முப்பதிலிருந்து முப்பத்தைந்து சதவிகிதம் வரை வாக்கு வங்கியை வைத்திருக்கும் திமுக அல்லது அதிமுக ஆகிய எந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தாலும் அக்கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்பது தான் இங்கு எழுதப்படாத சட்டமாக இருந்து வந்துள்ளது.

அதன் பிறகு தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில், வெற்றி தோல்வியினை நிர்ணயிக்கும் கணிசமான வாக்கு வங்கிகளைக் கொண்ட பாமக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற ஜாதிக் கட்சிகளின் வளர்ச்சியும், ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் எடுத்த தவறான நிலைப்பாடும், வெற்றிக் கோட்டைத் தாண்டி தங்கள் கூட்டணிக் கட்சியை கொண்டு செல்லும் காங்கிரஸின் அந்த வாக்கு வங்கியை கொஞ்சம் கொஞ்சமாக கை நழுவிப் போக வைத்தது தான் மிச்சம்.

இந்த நிலையில், காங்கிரஸ் விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்தில் வாகாய் வந்து அமர்ந்து கொண்டது தான் தேமுதிகவின் தற்பொழுதைய பலம். தமிழகம் தழுவிய அளவில் சராசரியாக பத்திலிருந்து பன்னிரெண்டு சதவிகித வாக்கு வங்கியினை சேர்த்திருக்கும் அக்கட்சி, இனி யாருடன் கூட்டணி அமைக்குமோ அது தான் ஆளும் கட்சி என்ற நிலைமைக்கு வந்திருப்பதற்கு, கடந்த தேர்தலே ஒரு சிறந்த உதாரணம்.
                        
1991 தேர்தலில் முதன் முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவியைப் பிடித்ததற்கு, ராஜீவ் காந்தியின் மரணத்தால் வந்த அனுதாப அலை தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனாலும் அதை சட்டமன்றத்திலேயே மறுத்துப் பேசிய தற்பொழுதைய முதல்வர், விஜயகாந்த்தின் தேமுதிக தான் இந்த முறை தான் ஆட்சியில் அமர்ந்திருப்பதற்கான காரணம் என்பதை மனதார ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்க இயலுமா.....?

இயலாது தான். ஆனாலும் தேர்தல் என்று வருகின்ற போது, அதில் வெற்றியடைய வேண்டும் என்பது தலையாய பிரச்சினையாக உருவெடுக்கின்ற போது இந்தப் பக்கம் சிலரும், அந்தப்பக்கம் சிலருமாக கண்ணை மூடிக் கொண்டு கசப்பு மருந்தை உட்கொள்வது போல சகித்துக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றவுடன் அந்த வலியெல்லாம் மறந்து போகும் என்று மகுடி ஊதி, மீண்டும் அந்தக் கூட்டணி அமைந்து விட்டால்?

அதிமுக - தேமுதிக என்ற அந்த வெற்றிக் கூட்டணி தானே வெல்லும்? 35 + 12 +சில உதிரிக் கட்சிகளைச் சேர்த்தால் போதும் 50+ வாக்குகள் வாங்கி எளிதில் வென்றுவிடலாமே?!

மீண்டும் 30+ சதவிகித வாக்கு வங்கியினைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக திமுக விளங்கினாலும், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகக் கூட வர இயலாமல் மண்ணைக் கவ்வும் சோகம் தானே திமுகவுக்கு ஏற்படும்?

இந்த மனக்கணக்கைத்தான் கலைஞர் நிதானமாக போட்டுப் பார்த்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்ற முடிவை அறிவித்திருக்க வேண்டும்.
                                             

சரி அந்த மனக்கணக்கு கூட ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஆனால் அதற்கும், புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கும் என்ன சம்பந்தம்? அதனால் திமுகவுக்கு என்ன லாபம்?

நல்ல கேள்வி. இப்பொழுது இடைத்தேர்தல் களத்தில் குதித்திருக்கும் தேமுதிகவின் ஒரே குறி அதிமுக தான். இத்தேர்தலில் வென்றால் தமிழகத்தில் ஆட்சியையே பிடித்த மாதிரியான ஒரு நிலை உருவாகும். இப்படியொரு வாய்ப்பை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்களா? சுற்றிச்சுழல ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் பலம் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதிமுகவை மிக அதிக பட்சமாக எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.......

அதிமுகவினரோ, இவர்களை பத்து சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் வாங்க அனுமதித்தால் அது தங்கள் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிடும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் ஊழியர் கூட்ட செய்திகளும் அவ்வாறே வெளிப்படையாக அறிவிக்கின்றன. சாதாரணமாகவே விஜயகாந்தின் டிமாண்ட் (தேர்தல் இடப்பங்கீட்டில்) அதிகமாக இருக்கும். இந்தத் தேர்தலில் 15 சதத்திற்கு மேல் வாக்குகளை அள்ள அவரை அனுமதித்தால் அடுத்த தேர்தல் இடப்பங்கீட்டில் அவரது டிமாண்ட் மிக அதிகமானதாக இருக்கும்.

அப்படியொரு நிலை உருவானால் அதற்கு அதிமுகவும் சம்மதித்தால் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அதிமுகவின் செல்வாக்கு சரிந்து போய் விடும். அப்படியொரு நிலையை ஜெயலலிதாவால் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது. ஆகையால் இந்த இடைத்தேர்தலோடு விஜயகாந்த்தின் தேமுதிகவை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற மன நிலையோடு தான் அதிமுக களப்பணிகளைச் செய்ய முற்படும். அப்படித்தான் அங்கு செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.

ஆகையால் இந்த இடைத்தேர்தல் முடியும் போது அதிமுகவும் தேமுதிகவும் இனி எப்பொழுதும் கூட்டணி அமைக்க இயலாத அளவிற்கு எதிரிக் கட்சிகளாக மாறிப் போயிருக்கும்! தேமுதிக ஒரு வேளை டெபாசிட் வாங்காவிட்டால், அதிமுகவினர் பேசிப் பேசியே அவர்களை குத்திக் குதறியெடுத்து விடுவார்கள்.

 ஒருவேளை தேமுதிக 15 சதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிட்டால், அவர்கள் ஆடும் ஆட்டத்தைப் பொறுக்க இயலாமல், ஜெயலலிதா அக்கட்சியை சிதறடிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதோடு, எதிர்காலத்தில் அக்கட்சியோடு கூட்டணி என்ற சமரசத்திற்கு வரும் வாய்ப்பும் அடியோடு தகர்ந்து போகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விரு கட்சிகளின் தொண்டர்களும் எதிர் காலத்தில் இணைந்து பணியாற்றும் சூழல் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும். அப்படியே ஒரு சிலரின் சீரிய முயற்சியினால் அக்கூட்டணி அடுத்த தேர்தலில் அமைந்தாலும், "கூடா நட்பு கேடாய் விளையும்" என்று தான் விளைவுகள் இருக்கும்.

ஆக புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற கலைஞரின் முடிவு, ஆகச் சிறந்த ராஜ தந்திரத்தின் வெளிப்பாடு என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை!!!


 




Tuesday, May 22, 2012

ராஜீவ் காந்தி கொலையான தினமும்... சில நினைவலைகளும்...

அது தேர்தல் ஜூரம் உச்சபட்சமாக தகித்துக் கொண்டிருந்த நேரம். மாயவரம் பார்க் மைதானத்தில் திமுக வின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம். கவர்னர் பர்னாலா தான் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.....

கலைஞர் ஆட்சிக்கு எதிராக சட்டம் ஒழுங்கு சரியில்லை, அது இது புண்ணாக்கு என்றெல்லாம் மத்திய அரசு அறிக்கை கேட்க, அப்படியெல்லாம் தரமாட்டேன் என்று கவர்னர் பதவியில் அமர்ந்து கொண்டே கர்ஜித்த பஞ்சாப் சிங்கம் தான் அவர். அதையும் மீறி ஆரிய சூழ்ச்சியால் கலைக்கப்பட்ட திமுக ஆட்சியை மீண்டும் கலைஞர் தலைமையில் அரியணை ஏற்றிட பதவி தன் கால் தூசுக்கு சமம் என்று சொல்லிவிட்டு, தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும், திமுக மேடைகளில் நடந்தது என்ன என்ற உண்மையை மக்களிடம் விளக்கிக் கொண்டிருந்த காலம் அது....!!

அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் பதின்மூன்று வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு, திமுகவை மீண்டும் அரியணை ஏற்றியிருந்தார் தலைவர் கலைஞர். முதன் முதலில் திராவிடம் அரியணை ஏறியதை தாங்கமாட்டாமல், சர்க்காரியாவை ஏவி வீழ்த்திவிட்டோம் என்று மமதையில் இருந்த ஆரிய சக்திகள், மீண்டும் திராவிட ஆட்சியா? அதுவும் கலைஞர் தலைமையிலேயேவா? இவன் சகாப்தம் முடிந்து விட்டது என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தோம், நம்மைக் கருவருக்க வந்து விட்டானே என்று பதைபதைத்துப் போயிருந்தார்கள்!

அவர்கள் பயந்த மாதிரியே, கனஜோராய் ஆரம்பித்த கலைஞர் ஆட்சி, அதுவரையிலும் மாநில அளவில் மட்டுமே சட்ட உரிமை வழங்கப்பட்டிருந்த (அதுவும் திராவிட ஆட்சியின் உபயம் தான்) பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு அளவிலும் நடைமுறைப் படுத்த பரிந்துரைக்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், என்ற கோரிக்கையோடு அகில இந்திய அளவில் பிரபலமான தலைவர்கள் மற்றும் ஆங்காங்கே மக்கள் செல்வாக்குள்ள குட்டிக் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி, மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று ஆரியர்களுக்கு அங்கும் ஆப்பு வைக்கும் வேலையினை மிக மும்மரமாக செய்து கொண்டிருந்தார். அதில் வெற்றியும் கண்டு கொண்டிருந்தார்.

சர்க்காரியா கமிஷனை வைத்து பூச்சாண்டி காட்டியவர்களுக்கு, மண்டல் கமிஷன் மூலம் கடுக்காய் கொடுத்துக் கொண்டிருந்தார்!!!

விடுவார்களா? மூளையைக் கசக்க ஆரம்பித்து விட்டார்கள்.
முதலில் மாநில அரசின் ஆட்சி அதிகாரத்திலிருந்து இவர்களை அகற்ற வேண்டும். அதை வைத்துக் கொண்டு தானே அகில இந்திய அளவில் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைக்கிறார்கள்?! .....ஆனால் அடுத்த தேர்தலுக்கோ இன்னும் மூன்றாண்டுகள் இருக்கின்றதே?. அதுவரை விட்டு வைத்தால் அடிமடியிலேயே கைவைத்து விடுவாரே?! அதற்குள்ளாக எந்த வழியிலாவது ஆட்சியை விட்டு இறக்க வேண்டியது தான்!

இருக்கவே இருக்கின்றது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356. அந்தப் பிரிவின் படி ஒரு மாநில அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால் இரண்டு காரணங்களில் ஒன்று இருந்தாலே போதும். கவர்னரிடம் அறிக்கை வாங்கி கலைத்து விடலாம். ஒன்று: அந்த மாநில அரசால் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருக்க வேண்டும். அல்லது இரண்டாவது காரணமான: இனி ஆட்சியை நடத்த முடியாத அளவிற்கு நிதி நிர்வாகம் சீர் கெட்டுப் போயிருக்க வேண்டும்.

ஆனால் தமிழகமோ அமைதிப் பூங்காவாகத்தான் இருக்கின்றது. நிதி நிர்வாகமும் நல்லபடியாகத்தான் இருக்கின்றது. என்ன செய்யலாம்?
ஒஹ்... இருக்கவே இருக்கின்றது இலங்கைப் பிரச்சினை!
ஆரிய அடிவருடிகளான சிங்கள அரசுக்கு கை கொடுத்த மாதிரியும் இருக்கும். திமுகவையும் ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கி விட்ட மாதிரியும் ஆகும். ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!!  .... ம்.. ஆரிய ஊடகங்களின் தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்.....!!!

விடுதலைப் புலிகளின் ஊடுறுவல் தமிழகத்தில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இருக்கிறது. திமுக அரசின் உதவியால் அவர்கள் சர்வ சுதந்திரத்துடன் இங்கு முகாம்கள் அமைத்து பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்பட்டு மக்கள் ஒரு வித அச்ச உணர்வில் தத்தளிக்கின்றார்கள் என்று  இன்றைய ஈழத்தாயும் என்றுமே ஆரியமாதாவுமாகிய அம்மையார் முன்னுரை வாசிக்க, அதை அப்படியே சுனா சாமிகளும், சோ, வெங்கட்ராமன் வகையறாக்களும் வழிமொழிய....   ஆரிய ஊடகங்கள் இந்த கருத்தியலுக்கு விதவிதமான பொழிப்புரைகள் எழுத ஆரம்பித்து விட்டன.

அதே சமயம், இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை அங்குள்ள தமிழர்களையே சூறையாடுவதாக பலமான குற்றச்சாட்டு அங்கிருந்து எழ, அது உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் வெடிக்கிறது. ஆளும் கட்சியான திமுகவின் அமோக ஆதரவால் போராட்டம் விண்ணைத் தொட, மத்திய அரசு வேறு வழியின்றி கட்டுப்படுகிறது.

சென்னையில் வந்திறங்கிய இந்திய அமைதிப்படையை, இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படி மாநில முதல்வர் சென்று வரவேற்க வேண்டும்.  அரசியலமைப்புச் சட்டப்படி என் இனத்தை கொன்று மானபங்கப்படுத்திய உன்னை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று, என் ஆட்சிக் கட்டிலை இறுக்கப் பிடிப்பேன் என்று நினைத்தாயோ....... என்று கலைஞர் அதை மறுதலித்து விட்டார்.

இது போதாதா அவர்களுக்கு? இந்திய இறையாண்மையையே கேலிக்கூத்தாக்கி விட்டார், விடுதலைப் புலிகள் வேறு தமிழகத்தில் நர்த்தணம் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள், தமிழக மக்களோ பீதியில் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றார்கள். ஆகையால் உடனடியாக இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுபோத்கான் சகாய் நேரடியாக வந்து சென்று அறிக்கை சமர்ப்பிக்க... ஆட்சி கலைக்கப்படுகிறது!

அதன் தொடர்ச்சியாகத்தான் கவர்னர் ஆட்சி. மீண்டும் சட்டமன்றத்துக்கு தேர்தல் வரவேண்டும். இந்த ஒரு காரியத்துக்காகவே காத்திருந்தது போல மத்திய அரசில் 63 எம்பிக்கள் மட்டுமே கொண்ட சந்திரசேகர் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்து கொண்டிருந்த ஜெயலலிதாவின் கூட்டாளியான ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் கட்சி, தனது ஆதரவை விலக்கிக் கொள்ள, பாராளுமன்றத்திற்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆக, பாராளுமன்றம் மற்றும் தமிழக சட்ட மன்றத்திற்கான தேர்தல் இரண்டுக்குமான தேதி குறிக்கப்பட்டு, பிரச்சாரம் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த நேரம் தான் நாம் ஆரம்பத்தில் பார்த்த ஒரு மாலை நேர தேர்தல் பிரச்சாரம். எந்தவொரு சிறு தவறும் சுட்டிக் காட்ட இயலாத அளவிற்கான இரண்டாண்டு கால ஆட்சியை திமுக கொடுத்திருந்தது. இலங்கைப் பிரச்சினையிலும் மக்கள் ஒட்டுமொத்தமாக திமுகவையே ஆதரித்துக் கொண்டிருந்தார்கள். தவறான காரணத்தைக் காட்டி இரண்டே ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்ட அனுதாப அலை வேறு.

இக்காரணிகளால் திமுக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அனைத்து பத்திரிகைகளின் சர்வேக்களும் தெள்ளத் தெளிவாகக் கூறின. தராசு பத்திரிகையின் சர்வே 175 இடங்கள் வரை திமுக வெல்லும் என்று அடித்துக் கூறியிருந்தது.

ஓவர் டு தேர்தல் பிரச்சாரக் கூட்டம்....

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக ராஜீவ் காந்தியின் ஆப்த நண்பரும் இந்திய வெளியுறவுத்துறை ஆட்சிப்பணியில் இருந்த மணி சங்கர் ஐயர் அறிவிக்கப்பட்டிருந்தார். வெற்றி வாய்ப்பு நிலை சரியில்லாததால், அவருக்காகவே மயிலாடுதுறை பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காக அன்றைய தினம் ராஜீவ் காந்தி தமிழக பிரச்சாரத்திற்கு வருவதாக மாயவரம் முழுவதும் செய்தி பரவியிருந்தது. அந்தக் கூட்டம் இரவு பத்து மணிக்கு மேல் மாயவரம் பெரிய ராஜன் தோட்டத்தில் நடைபெறுவதாக இருந்தது.

மிகப் பெரிய அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிராமங்களிலிருந்து வேன்கள் மூலம் ஆட்கள் கொண்டுவந்து குவிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்படி காசுவாங்கி வந்த கூட்டத்தில் ஒரு பெரும் பகுதி மாலை 7 மணிக்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவர்னர் பர்னாலா கூட்டத்திற்கு ஆவலோடு திரண்டு வந்திருந்தனர். பார்க் மைதானம் முழுமையும் நிரம்பி, பார்க்கிலும் மக்கள் வெள்ளம் குடிபுகுந்தது. இந்தப் பக்கம் பியர்லஸ் தியேட்டர் ரோடு, அந்தப் பக்கம் பஸ்ஸ்டாண்டு வரையிலும் கூட்டம் நிரம்பி வழியவே, போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போனது.

பர்னாலா கிட்டத்தட்ட ஒரு மணி பத்து நிமிடம் உரை நிகழ்த்தினார். தன் பேச்சைக் கேட்பதற்காக இவ்வளவு பெரிய மக்கள் வெள்ளத்தை தன் வாழ்நாளில் கண்டதேயில்லை என்று குறிப்பிட்டார். அந்த உற்சாகத்திலேயே  "நான் கிளம்பியவுடன், இங்கு வரவிருக்கும் ராஜீவ் காந்தியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்" என்று அவரைப் பற்றியும் கிழித்துத் தைத்தார்.

கூட்டம் இனிதே நிறைவுற்றது. இந்தத் தேர்தலில் திமுக 200 சீட்டுகளுக்கும் அதிகமாக பெறும் என்று உற்சாகமாக பேசிக் கொண்டே கிளம்பினோம். வீட்டிற்கு செல்லும் வழியில் ராஜன் தோட்டம் வழியாகச் சென்றோம். மைதானத்தில் கால்வாசி கூட நிரம்பியிருக்கவில்லை. போலீஸ் தலைகள் தான் நிரம்பியிருந்தன. ஸ்ரீ பெரும்புதூரிலும் கூட்டம் பேசிவிட்டு வருவதால் இங்கு வர 12 மணி ஆகிவிடும் என்றார்கள். அப்பொழுதே மணி ஒன்பது ஆகிவிட்டிருந்தபடியால், இதற்கு மேல் இங்கு கூட்டம் சேராது என்று கேலி பேசிக் கொண்டே, திமுகவின் வெற்றி அப்பொழுதே எங்கள் கைகளில் வந்துவிட்டது போன்ற களிப்பில் வீடு வந்து சேர்ந்தோம்.

ஒரு மாதமாக கடும் உழைப்பு. மக்களிடம் திமுகவுக்கு ஆதரவாக பெரும் எழுச்சி ஏற்பட்டிருப்பதை இன்றைய கவர்னர் பொதுக்கூட்டத்தில் கண்கூடாக காண முடிந்தது. அதே சமயம் அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்காக, காசு கொடுத்துக் கூட அவர்களால் கூட்டம் கூட்ட முடியவில்லை. இன்னும் இரண்டு தினங்களில் தேர்தல். நிச்சயம் வெற்றி நமக்குத்தான் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டே நிம்மதியாக கண்ணயர்ந்தேன். (என்னைப் போலத்தான் ஒவ்வொரு திமுக காரனுக்கும் அந்த இரவு கழிந்திருக்கும்)

அப்பொழுதெல்லாம் எங்கள் ஊரிலேயே மொத்தமாக 30 பேர் வீட்டில் டீவி இருந்தாலே பெரிய விஷயம். அதுவும் தெளிவாகத் தெரியாது. எங்களுக்கெல்லாம் ரேடியோ தான் ஒரே பொழுது போக்கு சாதனம். காலை 6.50 நியூஸ் ரொம்ப பிரபலம். கொஞ்சம் சமூக அரசியல் சிந்தனை உள்ளவர்கள் அதைக் கேட்கத் தவறமாட்டார்கள். அதுவும் தேர்தல் நேரம். காலை எழுந்து பல் துலக்கி, காப்பியோடு ரேடியோவை ஆன் செய்தால்......  தலைவர்கள் இறந்தால் ஓடும் சோக கீதம் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

யாராய் இருக்கும்? இன்னும் பத்து நிமிடத்தில் செய்திகளில் சொல்லிவிடுவார்கள். அதற்குள் அவசரம். வெளியில் வந்து கேட்டால் தெருவிலும் யாருக்கும் தெரியவில்லை. சட்டையை மாட்டிக் கொண்டு தெருமுக்கு, மெயின் ரோடு வந்தால் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிச் சென்று விசாரித்தால், நேற்று இரவு ராஜீவ் காந்தி மீட்டிங்குக்கு வரலியாம். அவருக்கு தான் ஏதோ பிரச்சினைன்னு ஃபோன் வந்து காங்கிரஸ்காரங்கல்லாம் போயிருக்காங்களாம்....

ரேடியோ சோக கீதம் அவருக்காக இருக்குமோ? அவசரமாக வீட்டுக்கு ஓடினேன். சரோஜ் நாராயணசாமி அழும் குரலில் பேசிக் கொண்டிருந்தார். ராஜீவ் உடல் சிதறி இறந்ததாக. காங்கிரஸின் அப்போதைய மாநில தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பேசினார். விடுதலைப் புலிகளை வைத்து கருணாநிதி தான் ராஜீவ் காந்தியைக் கொன்றதாக பட்டவர்த்தனமாக அறிவித்தார்.....

ரெடி ஸ்டார்ட் மீஜிக்........!!!   அப்பொழுது திமுகவினருக்கு எதிராக ஆரம்பித்த கலவரம் அடங்க பத்து நாட்கள் ஆகின!!!!!

உடனடியாக நடைபெற்ற தேர்தலில் கலைஞர் மட்டுமே திமுக சார்பாக துறைமுகம் தொகுதியிலிருந்து வெற்றிவாகை சூடினார்.....   முதன் முறையாக ஜெயலலிதா தமிழக முதல்வரானார்!!

ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, முதலில் செய்தது..... இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு முழுமையான தடை வாங்கிக் கொடுத்ததும், அவர்களுக்கு ஆதரவான எந்த இயக்கத்தையும், பேச்சுக்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கியதும் தான். அப்படிப்பட்ட ஜெயலலிதா தான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் ஈழத்தாய் என்றும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றும் வானளாவ புகழப்பட்டார்!!!!!!