Thursday, October 18, 2012

திரா சார் வீட்டு கொலு

என் தாய் வழிப் பாட்டியின் ஊர் பெருஞ்சேரி. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு உதாரணமாயிருக்கும் அழகிய கிராமம். அந்த ஊரைப் பற்றி நிறைய பல முறை எழுதிவிட்டதால் அப்படியே அதை கட் பண்ணிட்டு திரா சார் வீட்டுக்கு வருவோம்.

ஊரின் தென்பக்கமாக ஓடும் வீரசோழன் ஆற்றிலிருந்து நேராக கிராமத்துக்குள் நுழையும் ஒற்றையடிப் பாதையைக் கடந்து வரிசையாக பக்கத்திற்கு  பத்து வீடுகளைக் கொண்டிருக்கும் திருமஞ்சன வீதியையும் கடந்தால் ஊருக்குள் ஒரு நாளைக்கு 5 முறை வந்து செல்லும் ஒரே பேருந்தான எட்டம் நம்பர் பஸ்ஸுக்காகவே போடப்பட்டிருக்கும் கருங்கல் ரோட்டை வந்து முட்டலாம்.

ரோட்டின் கிழக்குப் பக்கம் திரும்பி நடந்தால் வலப்பக்கத்தில் இருக்கும் முதல் ஓட்டு வீடு தான் திரா சார் வீடு. அந்த வீட்டின் கொல்லை திருமஞ்சன வீதியில் முன்னூறு அடிக்கு நீண்டிருக்கும். அந்த வீதியின் மேலண்டை பக்கத்தில் இருக்கும் முதல் நான்கு வீடுகளுக்கு திரா சார் வீட்டுக் கொள்ளை தான் எதிர் வீடு!

ஊரில் இருக்கும் மூன்று பிராமணக் குடும்பங்களில் இவருடையதும் ஒன்று. ஆனால் மற்ற இரண்டு குடும்பங்களுக்கும் இவருக்கும் வித்தியாசம் உண்டு. திரா சார் ஊர் மக்கள் அனைவருக்கும் மிகுந்த பரிச்சயமானவர். மற்ற இரண்டு பிராமனாள் வீட்டிற்கும் எல்லோராலயும் உள்ளே நுழைந்து விட முடியாது. அவர்களும் ஊரில் உள்ள எல்லோருடனும் சகஜமாகப் பேசிவிட மாட்டார்கள். அவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்துப் பேசுவார்கள் என்றால், அது ஊரில் இருக்கும் ஐந்தாறு பிள்ளைமார் வம்சத்து மிராசுதாரர் குடும்பத்தினரோடு மட்டும் தான்!

இந்தக் காரணத்தினாலேயே திரா சார் மேல் ஊர் மக்கள் அனைவருக்கும் கூடுதல் வாஞ்சை இருப்பது யதேச்சையாக அமைந்து விட்டது. அது மட்டுமல்லாமல் அவர் பெருஞ்சேரி மாணவர்கள் மட்டுமல்லாது, சுத்துப்பட்டு நாற்பது ஐம்பது கிராம மக்களும் பயிலுகின்ற மங்கைநல்லூர் கே.எஸ்.ஓ உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்ததும் ஒரு முக்கிய காரணம்.

இயற்கையிலேயே அப்பொழுது கிராமத்தைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, குறிப்பாக தமிழாசிரியர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது. அதனாலேயே, அவர் பெருஞ்சேரி எல்லையையும் கடந்து நாற்பது கிராமங்களிலும் பெயர் சொன்னால் விளங்கும் அளவிற்கு பிரபலம் ஆகியிருந்ததும், மக்களுக்கு அவர் மேல் அதிக மதிப்பு ஏற்பட காரணமாக அமைந்து விட்டது.

இதுக்கு மேல அவர் வீட்டுல வைக்கின்ற கொலு பற்றி சொல்லாவிட்டால் அடிக்க வருவீங்க...!

புரட்டாசி ஐப்பசி மாதங்கள் என்றாலே அந்த ஊரில் எல்லோருக்குமே திரா சார் நினைவு தானாகவே வந்து விடும். கொலு வைப்பதற்கு முதல் நாளோ அல்லது சில வருடங்களில் நவராத்திரியின் முதல் நாளான அன்றைய தினத்தின் காலையிலோ, அம்பாள் படி இறங்கும் வைபவம் என்று அமர்க்களப் படுத்திவிடுவார்.

அந்த வைபவத்திற்கு 12 நாட்களுக்கு முன்னதாகவே (அது என்ன கணக்கோ தெரியவில்லை) வீடே......! சாமான்கள் சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது, கழுவி விடுவது, துணி துவைப்பது என்று ஒரே களேபரமாகிவிடும். வீடு சுத்தம் பண்ணுவது முடிந்தவுடன், மச்சியிலிருந்து முதலில் கொலுப்படிக்கான பலகைகளைத் தான் இறக்குவார்.

இதற்கெல்லாம் ஒத்தாசை செய்ய ஊரில் அவருக்கு அந்த வருடத்தில் பிடித்த ஐந்தாறு மாணவர்களை வைத்துக் கொள்வார். அவர்களுக்கு அந்த வருடம் பூராவும் ஊரில் பெரிய மரியாதை கிடைப்பதாக அவர்களே எண்ணிக் கொள்வார்கள்!

பலகைகளையும் அதன் கால்களையும் சுத்தம் செய்து, அதில் இருக்கின்ற சிறு சிறு உடைப்புகளைச் சரி செய்து, இதற்கு மேல் தாங்காது என்பவற்றை தூக்கி கடாசி விட்டு, அதற்குப் பதிலாக புதிதாக ஒன்றைச் செய்து பொருத்திக் கொள்வது என்று......!  அதற்குள் கொலுவிற்கு இன்னும் நான்கைந்து நாட்களே இருக்கும் என்ற நிலை வந்து விடும்.

கொலுப் படிகள் அவருக்கு முழு திருப்தி தந்துவிட்டது என்றதும் தான் கொலு பொம்மைகள் மச்சியிலிருந்து கீழிறக்கப்படும். பெரிய பொம்மைகள் எல்லாம் தனித்தனியாக வைத்திருப்பார். சின்ன பொம்மைகள் எல்லாம் ஐந்தாறு மரப் பெட்டிகளில் இருக்கும்.

மச்சி வாசல் அருகில் உள்ள உத்திரத்தில் ஏணியைச் சாற்றி, மச்சியில் இரண்டு பேர் உட்கார்ந்து ஒவ்வொரு பொம்மையாக எடுத்துக் கொடுக்க, அதை ஏணியில் நின்று கொண்டிருக்கும் ஒரு பையன் வாங்கி, கீழே நின்று கொண்டிருக்கும் திரா சாரிடம் தர அதை அவர் தன்னருகே நிற்கும் பையனிடம் கொடுத்து அவன் பத்திரமாக ஒவ்வொரு பொம்மையாக கீழே வைப்பான்.

அரை மணி நேரம் நடக்கின்ற இந்த நிகழ்வுக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே, வழக்கத்தை விட படு வாஞ்சையோடு குளித்து முடித்து சுத்தபத்தமாக வந்திருந்து, இந்த வேளையைக் கவனிப்பார்கள். 

கொலு பொம்மைகள் கீழே இறக்கப்பட்டவுடன், கொலு வைப்பதற்கான முழு களையும் அந்த வீட்டிற்கு வந்து விடும். அதன் பிறகு ஐந்தாறு பெண் பிள்ளைகளையும் களத்தில் இறக்கி விட்டுவிடுவார் திரா சார். அவைகள், அந்த பொம்மைகளை மிகவும் நாசுக்காக சுத்தம் செய்யும். பலவற்றை பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் துணியை நனைத்து அதைக் கொண்டு பொம்மைகளைத் துடைத்தும் சுத்தம் செய்வர்கள். சில பொம்மைகளை வெறும் உலர்ந்த துணியால் மட்டுமே சுத்தம் செய்வார்கள்.

ஊரிலுள்ள குயவர் வீட்டு பையனோ பெண்ணோ வரவழைக்கப்பட்டு வர்ணம் போன பொம்மைகளுக்கெல்லாம் புதிதாக வண்ணம் வைக்கப்படும். மர பொம்மைகளுக்கும் அவர்களே வண்ணம் வைத்து விடுவார்கள். ஐயர் வீட்டின் உள்ளேயே வந்து வண்ணம் வைப்பதாலோ என்னவோ அவர்கள் அதற்கு கூலி கூட வாங்கிக் கொள்ள மாட்டார்கள்!

அம்மன் படியிறங்கும் வைபவம் நாளை மறு நாள் நடைபெற இருக்கிறது. எல்லோருக்குமே ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். மொத்தமாக இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பொம்மைகள் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் குறைந்தது பத்துப் பதினைந்து பொம்மைகள் வரை சேர்த்துவிட வேண்டும் என்று திரா சார் விரும்புவதை மாணவர்கள் நிறைவேற்றி விடுவார்கள்.

ஊர் பெரிய மனிதர்களிடம் எல்லாம் சென்று இதற்காக ஊண்டி குலுக்கி காசு சேர்த்து, மாயவரம் சென்று புது பொம்மைகள் வாங்கி வந்து விடுவார்கள். அவர்களுக்கெல்லாம் கொலு என்பது வெறுமனே சாமி சம்பந்தப் பட்டது என்பது போக, ரயில் வண்டி பொம்மையைக் கூட கொலுவில் சேர்க்கலாம் என்பது அவர்கள் நினைத்திருந்த ஆன்மீகத்திற்கு புது வடிவம் அல்லது வர்ணம் கொடுத்தது போலிருந்தது.

புது பொம்மைகளுக்கென்றே இரண்டு பக்க வாட்டிலும் படிகள் வைக்கப் பட்டிருக்கும். அந்த வருடத்தில் அந்த இரண்டு படிகளிலும் உள்ள பொம்மைகளுக்குத் தான் அதிக மவுசு!

அம்மன் படியிறங்கும் வைபவத்திற்கு அதிகம் யாரும் வரமாட்டார்கள். ஆரம்பத்திலிருந்து இந்த வேலையில் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகள் மட்டுமே வருவார்கள். ஊரிலிருந்து அவர் சித்தப்பா என்றழைக்கும் ஒரு முதிய பிராமணர் வந்திருந்து புரியாத மொழியில் மந்திரங்கள் சொல்ல, சர்க்கரைப் பொங்கல் எல்லாம் வைத்து படையல் போட்டு, இன்னும் என்னென்னவோ சாங்கியங்கள் எல்லாம் செய்து, வெற்றிகரமாக அந்த வருடத்திய கொலு ஆரம்பமாகிவிடும்.

நவராத்திரியின் முதல் நாள், புது பொம்மைகளைப் பார்ப்பதற்கென்றே பெரிய கூட்டம் கூடும். கிட்டத்தட்ட 100  பேர் வரையிலும் கூட வருவார்கள். திருமணமான பெண்களும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். அனைவரையும் கூடத்தில், தாழ்வாரங்களில், (மழை இல்லை என்றால்)முற்றத்தில், வெளித் திண்ணையில் உட்கார வைத்து, அவரே எதாவது தமிழ் பாடல்கள் ஒன்றிரண்டு பாடுவார்.

வந்திருப்பவர்களையும் பாடச் சொல்வார். குறைந்தது பத்து பேராவது பாடினால் தான் அன்றைக்கு தீப ஆராதனை காட்டி, சுண்டல் தருவேன் என்பார். அதற்காகவாவது பிள்ளைகள் பாடுவார்கள். வெளியூரிலிருந்து இந்த ஊருக்கு திருமணம் செய்து வந்திருக்கும் சில பெண்களும் பாடி, தங்கள் மேதமையை ஊருக்கு அறிவிப்பார்கள். நீராரும் கடலொடுத்து பாடல் கூட சில மாணவச் செல்வங்கள் பாடும். சிலர் திருக்குறள் மனப்பாடப் பகுதியை ஒப்புவிப்பார்கள். 

வீட்டிலும், ஊரிலும் தண்ணி தெளித்து விடப்பட்ட சிலதுகள் கூட நல்ல சினிமா பாட்டைப் பாடி கைத்தட்டல் பெற்று, ஊரோடு ஒத்து வருவார்கள்! எல்லாம் முடிந்து அவருக்கே ஒரு வித திருப்தி ஏற்பட்ட பிறகு, கடைசியாக அவர் வடமொழியில் ஏதோ பாடல் பாடி விட்டு தீபாராதனை காட்டி அனைவருக்கும் வாசலில் நின்று சுண்டல் தருவார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சுண்டலும், யாராவது அன்பர்கள் கொடுக்கும் தானியத்தைக் கொண்டு சமைத்த சாதமும் கொடுப்பார். அவ்வளவு ருசியாக இருக்கும். மாலை 6.30 லிருந்து 7.30 வரை அந்த வைபவமும், அதன் பிறகு அரை மணி நேரம் விநியோகமும் என்று 8 மணிக்கெல்லாம் ஒவ்வொரு நாள் நிகழ்வும் இனிதே நிறைவுறும்.

ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரித்த வண்ணம் தான் இருக்கும். அங்கு நிறைய பாடல்கள் அறங்கேறும். சாதி மத பேதமின்றி அனைவரும் அங்கு வருபவர் எல்லோரிடமும் ஒரு வித உற்சாகமும், சந்தோஷமும் பீறிட்டு பொங்கி வழியும். உண்மையான சமதர்மம் அங்கு ஓங்கியிருக்கும்.  ஆன்மீகம், ஆண்டவன் என்பதற்கான ஒரு புதிய  அல்லது உண்மையான வடிவம் அங்கு கட்டமைக்கப்படும்.

சாமான்யனின் திறமைகள் அங்கு வெளிக்கொணரப்படும், தாழ்வு மனப்பான்மைகள் அகற்றப்படும், என் தமிழ் அங்கு கொலு வீற்றிருக்கும்.

தி. ராமலிங்கம் என்கிற திரா சார் அவர்களே, உங்கள் உடலை மட்டும் தான் காலம் கொண்டு போக முடியும், உங்கள் நினைவுகளை, உங்கள் உணர்வுகளை, நீங்கள் விதைத்து வளர்ந்திருக்கும் எண்ணற்ற விருட்சங்களை என்றைக்கும் அழிக்க முடியாது,

நன்றிகள் திரா சார்!!!


Saturday, October 13, 2012

லாரி டிரைவர்

கணினித் துறை, ஆட்டோ மொபைல் துறை, சிறு தொழில் துறை, போலீஸ் துறை இத்தியாதிகள் என்று அனைத்தையும் பற்றி தினமும் செய்தித் தாள்கள், வார சஞ்சிகைகள் படிக்கும் பழக்கம் உள்ள அனைவருக்குமே ஓரளவிற்கு அத்துப்படி தான்.

இப்படி பொதுவான சில பல துறைகள் தவிர்த்து, நாம் படித்து அறிந்து கொள்ள இயலாததும், நம் கருத்துக்கு எட்டாததுமான பல முக்கிய தொழில் துறைகளும் அது சார்ந்த முதலாளிகளும் தொழிலாளிகளும் நடைமுறையில் இருப்பது பலராலும் ஊகிக்க முடியாதது தான்.

நம் தமிழகத்திலிருந்து தொலை தூர மாநிலங்களுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் பலவித சரக்குகளை பறிமாற்றம் செய்யும் லாரி போக்குவரத்துத் தொழில் ரொம்பவே சுவாரஸ்யமானதும், கொஞ்சம் கரடு முரடானதும்.....  அத்துடன் நாமெல்லாம் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு மிக மிக அத்தியாவசியமானதும் கூட!

கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் அரிசி உற்பத்தியானது விளை நிலங்கள் பட்டாவாகிப் போனதால், படிப்படியாக குறைய ஆரம்பிக்க, தமிழர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களான ஆந்திராவும், கர்நாடகாவும் தான் பெரிதும் அபயமளித்தன.

தமிழகத்தில் வேகமாக வீழ்ந்து வரும் அரிசி உற்பத்தியும், மக்கள் தொகை வளர்ச்சிக்கு நிகரான அதன் தேவை வளர்ச்சியும் ஆந்திரா, கர்நாடகாவையும் தாண்டி வட மாநிலங்களை நோக்கி நம்மைக் கையேந்த வைத்திருக்கின்றன.

அந்த வகையில் நம் தமிழர்களின் முக்கிய உணவான அரிசித் தேவைக்கு படியளக்கும் பங்காளியாக தற்பொழுது உருவெடுத்திருப்பவர்கள் வங்காளிகளே! உண்மை தான், நம் தமிழகத்தின் அரிசி உணவுத் தேவையின் ஒரு குறிப்பிடத்தக்க சதவிகிதத்தை மேற்கு வங்கம் தான் சமீப காலமாக பூர்த்தி செய்து வருகிறது.

அப்படி மேற்கு வங்காளத்திலிருந்து தமிழக டெல்ட்டா மக்களின் பசியைப் போக்க அரிசி ஏற்றிக் கொண்டு வரும் லாரிகளையும், அதன் ஓட்டுனர்களையும் நெருங்கி உற்று நோக்கினால், தமிழகத்தின் அதி அத்தியாவசியமான துறை ஒன்றைப் பற்றிய பல ஆச்சர்யமான அனுபவங்கள் தெரிய வரும்.

20 டன் வரையிலும் லோடு ஏற்றக் கூடிய டாரஸ் வகை பத்து சக்கர லாரிகள் தான் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன. மவராசன் வாஜ்பாய் புண்ணியத்தால் கல்கத்தாவும் சென்னையும் தங்கநாற்கரச் சாலை மூலம் இணைக்கப் பட்டிருப்பது தான் இன்றளவிலும் இந்தத் தொழில் நசிந்து விடாமல் நடந்து கொண்டிருக்க முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை.

தமிழகத்தின் ஒரு லாரி உரிமையாளர் இதேப் போன்று இரண்டு லாரிகள் வைத்திருந்தால் போதும், வருமானம் வருகிறதோ இல்லையோ பிரஷ்ஷர், சுகர், மாரடைப்பு போன்ற வியாதிகள் கேரண்டியுடன் வந்து சேர்ந்து விடும்!

ஒரு லாரி மாதத்திற்கு நான்கு சிங்கிள்கள் அடித்தாலே பெரிய விஷயம். (ஒரு சிங்கிள் = ஒரு அப் அல்லது ஒரு டவுன்).ஏதேதோ கணக்குப் போட்டு ஒரு சிங்கிளுக்கு 57 ஆயிரம் ரூபாய் வாடகை என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இதில் டீசல், டிரைவர் படி, செக் போஸ்ட் மாமூல் போக ஏழாயிரம் ரூபாய் நிகர லாபமாக கிடைக்கும்.

நாலு சிங்கிள் ஓடினால் ஒரு லாரிக்கு 28 ஆயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கும். இதில் தான் லாரிக்கான வங்கி மாதத்தவணை உட்பட, வண்டி பழுது பார்க்கும் செலவுகள் வரை அனைத்தினையும் முடித்துக் கொண்டு தங்கள் லாபத்தையும் பார்க்க வேண்டும்.

இது எப்படி சாத்தியம்?

வங்கிக் கடனில் தான் லாரி ஓடுகிறது என்றால், நிச்சயமாக இதை விற்பவருக்கும், வாங்குபவருக்குமான சேவைத் தொழிலாக மட்டுமே நடத்த முடியும்! ஆகையால் கடன் இல்லாமல் சொந்த முதலைப் போட்டு லாரி வாங்கி ஓட்டினால் தான் லாபம் என்ற வஸ்த்துவை மாதா மாதம் கண்களில் பார்க்க முடியும்.

இதுல வருடத்திற்கு ஒரு முறை வரும் இன்ஷ்யூரன்ஸ், எஃப் சி எடுக்கும் செலவெல்லாம் தனி. ஒரு சில மாதங்களில் எக்ஸ்ட்ரா சிங்கிள் ஓட்டி சரிக்கட்டிக்க வேண்டியது தான் இதையெல்லாம்.

இந்தத் துறையில் லாரிகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களின் முக்கியத்துவம் அளப்பறியது. ஒரு வண்டிக்கு இரண்டு டிரைவர்கள். கிளீனர் வைத்துக் கொள்வதெல்லாம் பழைய ஸ்டைல். அதற்கான ஆட்களும் இப்பொழுது வருவதில்லை. 2500 கிமீ ஒரு சிங்கிளுக்கு ஓட்ட இரண்டு அனுபவமுள்ள ஓட்டுநர்கள் இருந்தால் தான் சரிப்பட்டு வரும்.

ஒரு அப் & டவுன் அதாவது இரண்டு சிங்கிள் போய் வந்தால் அவர்களுடைய சாப்பாடு உட்பட அனைத்து செலவுகளும் போக ஆளுக்கு எட்டாயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கும். அதற்கு கிட்டத்தட்ட பன்னிரெண்டிலிருந்து பதினைந்து நாட்கள் வரையிலும் ஆகும்.

ரோட்டோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டால் கட்டுப்படியாகாது என்று இவர்களே சமைத்துக் கொள்கிறார்கள். வண்டியிலேயே மண்ணென்ணை ஸ்டவ், சமையல் சாமான்கள், மற்ற உப்பு,  எண்ணெய், மசாலாப் பொடிகள், அரிசி அனைத்தையும் கொண்டு சென்று விடுகின்றார்கள்.

ஓட்டுனர் அறையிலேயே ஒரு ரேக் அடித்து அனைத்தையும் சேகரித்து வைத்து விடுகின்றனர். வழியில் இருக்கின்ற கடைகளில் ஆட்டிறைச்சி, குடல் அல்லது கோழி இறைச்சியை வாங்கியவுடன், வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு டிரைவர் காற்கறி நறுக்க ஆரம்பித்து விடுகிறார். அடுத்து வரும் நல்ல நிழலான ரோட்டோரத்தில் லாரியை நிறுத்தி விட்டு, ஸ்டவ்வில் குக்கர் வைத்து சாதம் சமைத்து, காய்கறி, இறைச்சியெல்லாம் போட்டு ஒரே குழம்பாக வைத்து விடுகின்றார்கள்.

வழியில் தயிர் பாக்கெட் வாங்கிக் கொண்டால், விருந்து சாப்பாடு தான். அதையே இரண்டு வேளைகளுக்கும் வைத்துக் கொள்கிறார்கள். மழை பெய்தால் கூட, லாரியின் பக்க கதவை கழட்டி விட்டு அடிக்கட்டையை குறுக்கே வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் படி வைத்து அதன் மேல் ஸ்டவ் வைத்து சமைத்து விடுவார்களாம்!

இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து வண்டியிலேயே இருந்து, ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சேர்த்துக் கொண்டு இறங்கி, வெளி நாடு சென்று வருவது போல வீட்டுக்கு வந்து ஓரிரு மாதங்கள் தங்கி பிறகு வண்டியேறும் ரகத்தினர் தான் அதிகம் இருக்கின்றார்கள்.

இவர்களுக்குள்ள முக்கிய பிரச்சினையாக வழிப்பறியைத் தான் அதிகம் சொல்கின்றார்கள். பல வழிப்பறிகளில் வெட்டுக் குத்து காயம், கை, கால் இழப்பு என்பதோடு போய் விடும். சில சம்பவங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுவதுண்டு. இது பொதுவாக எல்லா மாநில ஓட்டுனர்களுக்குமே உள்ள பிரச்சினையாகத் தான் இருக்கின்றது.

உயிரிழப்பு ஏற்படுகின்ற போது உடலை தமிழகம் கொண்டு வருவதில் நிறை செலவு பிடிக்கும் நடைமுறைகள் இருக்கின்றன. அதனால் அந்த லாரி உரிமையாளர் சம்பந்தப்பட்ட ஓட்டுனரின் குடும்பத்தில் பேசி ஒரு லட்சம் வரை பணம் கொடுத்து அங்கேயே அடக்கம் செய்து விடுவதும் நடக்கிறது. 

பெரும்பாலான வியாபாரிகள் சரக்கு டெலிவரி செய்யும் இடத்திலிருந்து ரொக்கமாக வாங்கிவரச் சொல்வது தான் பிரச்சினைக்கு முக்கிய காரணமே! சரக்கு வாங்குபவரை வங்கியில் பணத்தைக் கட்டச் சொல்லலாமே என்று கேட்டால், பேங்க் காரன் டியூ பணத்தை கழித்து விடுவான் அதனால் தான் ரொக்கமாக எடுத்துவரச் சொல்கிறார்கள் என்று அவர்கள் சொல்லும் போது, இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் அடி நாதமான பிரச்சினை பளீர் என மூளையில் தைத்து மனதை கொஞ்சம் பிழியத்தான் செய்கிறது.

இது கூடப் பரவாயில்லை, இதையும் மீறி இந்த வேலையை விரும்பித்தான் செய்கிறோம் என்று ஓட்டுனர்கள் சொல்லும் போது அவர்கள் மேல் ஒரு வித மரியாதை தான் ஏற்படுகிறது.

ஆனால் அவர்கள் சொல்லும் இன்னொரு விஷயம், இந்தத் தொழில் மெல்ல நசிந்து வருவதையும், இன்னும் பத்து வருடங்களுக்குள் இதற்கான மாற்று வழியை பற்றிக் கொள்ள வேண்டியிருப்பதன் அத்தியாவசியத்தையும் நமக்கு உணர வைக்கின்றது.

புதிதாக் இந்த வேளைக்கு இளைஞர்கள் வருவது வெகுவாக குறைந்து போய் விட்டது என்பது தான் அந்த விஷயம். காரணம் கேட்டால், யாரும் பெண் கொடுக்க முன்வர மறுக்கிறார்கள் என்பதாகத் தான் இருக்கிறது. 

சார், எனக்கு பல இடத்துல பொண்ணு பார்த்து எல்லாமே தட்டி போயிடிச்சி சார். நானும் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமா மறுத்துட்டேன் சார். ஆனா எங்க அப்பன் ஆத்தா தான் புடிவாதமா இந்த ராணிய புடிச்சி என் தலையில கட்டி வச்சிட்டாங்க. அதுக்கே அந்த வியாதி இருக்கா? இந்த வியாதி இருக்கான்ன்னு ஆயிரத்தெட்டு டெஸ்ட்டு எடுத்து தான் ஒத்துக்கிட்டாங்க சார்.....

அந்தக் காலத்துலேர்ந்து, இந்த சினிமாக் காரனும், கதை எழுதறவனும் எங்களப் பத்தி ஒரு மாதிரியா காட்டிக் காட்டியே, கெடுத்து வச்சிட்டனுங்க சார். நூத்துக்கு பத்து இருவது பேரு தான் அப்பிடி இப்பிடி இருப்பாங்க, பாக்கி எல்லாருமே இது மாதிரி வாய வயித்த கட்டி வூட்டுக்கு தான் சான் கொண்டு போயி கொட்டுறான். அதப் பத்தி ஒருத்தனுமே படம் எடுத்து காட்ட மாட்டேங்குறான் சார்......

என்று ஒரு ஓட்டுனர் தனது மனக் குமுறலைக் கொட்டுகின்ற போது ஏற்படுகின்ற அந்த வலி, திரைப் பட இயக்குனர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இந்த சமூக கட்டமைப்பில் இருக்கின்ற பங்களிப்பும், அதை அவர்கள் எவ்வளவு பொறுப்பில்லாமல் சிதைத்துப் போடுகிறார்கள் என்ற கோபமும் தான் தலைக்கேறுகிறது.

எந்தத் துறையில் தான் அந்த 20 சதவிகித விதிவிலக்குகள் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று நம் மனது தானாவே கேட்டுக்கொள்வதையும் நம்மால் தடுக்க இயலவில்லை!

இந்தத் துறையைப் பொறுத்த வரை லாரி உரிமையாளர்களுக்கும்-ஓட்டுனர்களுக்கும், அதாவது முதலாளிக்கும், தொழிலாளிக்கும் ஒரே அளவிலான லாபமும், நட்டமும்; இன்பமும், துன்பமும் இருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. வண்டி தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தால் தான் இருவருக்குமே பிழைப்பு. அதையும் தாண்டி, பொருளாதார ரீதியிலாக மட்டுமல்லாமல் உயிர் வரையிலும் பந்தயம் வைக்க வேண்டியிருக்கிறது.

இந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியுடன் நடை பெற்றுக் கொண்டிருந்தால் தான், அரிசிச் சோற்றுக்காக வட மாநிலங்களை அன்னாந்து பார்க்க வேண்டிய சூழலில் சிக்கியிருக்கின்ற நாம், வரும் காலங்களில் அரிசிச் சோற்றை தினமும் உண்ண முடியும், இல்லாவிட்டால், பழைய காலம் மாதிரி தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே பணியாரம் போல இட்லி, தோசையை உண்ணுகின்ற நிலைமைக்கு வந்து விட வேண்டியது தான்!

காலச்சக்கரம் நம்மை மீண்டும் அங்கு கொண்டு சென்று விடும் என்றே தோன்றுகிறது!!



Friday, October 12, 2012

வறண்ட வாழ்க்கை....! இருண்ட தமிழகம்.....!

கடந்த நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இப்பொழுது தான் கரண்ட் வந்திருக்கு. இன்னும் ஒரு மணி நேரத்தில் மீண்டும் போய்விடும்(((  ஒரு நாளின் 24 மணி நேரத்தில் வெறும் 6 லிருந்து 8 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது.

இது தான் சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் இன்றைய நிலை....

சிறு குறு தொழில் செய்வோர்கள், வணிகர்கள், சேவைத் தொழிலில் ஈடுபட்டிருப்போர், இங்கெல்லாம் வேலை செய்வோர் என்று அனைவர் மனங்களிலும் ஒரு விதமான பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டதை கண்கூடாக காண முடிகிறது.

மின்சார துறையினரிடம் பேசும் போது நம்பிக்கையான பதில் அவர்களிடமிருந்து வராததே அனைவரின் இந்த பயத்திற்கும் காரணம்.

அரசும் அதன் தலைமையும் இது பற்றி வாயே திறக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், இப்படி ஒரு பிரச்சினை இல்லவே இல்லை என்பது போல வேறு வேறு விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதும், மக்கள் சுபிட்சமாக இருப்பது போல பேட்டி அளிப்பதும்.... மக்களை இன்னும் பெரிய அளவில், தங்கள்  நடைமுறை வாழ்க்கையை எதிர் கொள்வது பற்றி அச்சப்பட வைத்திருக்கின்றது.

சில பல லட்சங்கள் முதலீட்டில் சிறு தொழில் செய்பவர்கள் பத்திலிருந்து ஐம்பது ஊழியர்கள் வரை பணியிலமர்த்தி பொருட்களை உற்பத்தி செய்கின்றார்கள். பகல் வேலை நேரத்தில் பெரும்பாலும் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதால், நான்கில் ஒரு பங்கு உற்பத்தியைக் கூட இவர்களால் முழுமையாக செய்ய முடிவதில்லை.

அதனால் மூன்று பங்கு ஊழியர்களின் ஊதியமானது நட்டமாக வந்து தலையில் இடிபோல் இறங்குகின்றது. அதனால் பெரும்பாலான சிறு குறு தொழிற்சாலைகளில் பாதி அளவிற்கு மேல் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுக் கொண்டு அது செயல் முறைக்கும் வந்து விட்டது.

அப்படி வேலையிழப்பவர்களின் நிலைமையை எழுத வேண்டுமானால், பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம், ஆனால் அது நிமித்தம் மிக விரைவில் பெரிய புரட்சி வெடிப்பதற்கான சூழ்நிலையை அரசும் அதன் ஊடகங்களும் எவ்வளவு பெரிய திரை போட்டு மறைத்தாலும் தடுக்க முடியாது.

ஊழியர் எண்ணிக்கையைக் குறைத்து விட்டதால் அந்த குறு தொழில்கள் லாபமீட்டுகின்றனவா? என்றால் அதெல்லாம் இல்லை என்பதே பதில். பெரிய நட்டம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அவ்வளவே!

எந்த ஒரு நல்ல லாபம் ஈட்டும் நிறுவனத்திற்குமே உற்பத்தி அல்லது விற்பனையில் கால்பாகம் குறைந்தாலே பிரேக் ஈவன் எனப்படும் லாப-நட்டமில்லாத அந்த நிலைக்குக் கீழே சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இப்பொழுது உற்பத்தி வெறும் கால்பாகத்திற்கு சுறுங்கி விட்டதால், பெரும் நட்டம் என்ற நிலைக்கு இந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த நட்டத்தோடு இவர்கள் இன்னமும் தொழிலை மூடிவிட்டு ஓடாததன் காரணமென்ன?

ரொம்ப சிம்ப்பிள். இவர்கள் அனைவருமே புலி மேல் சவாரி செய்பவர்கள் தான்! வங்கிக் கடன், கொள்முதல் கடன், வரவேண்டிய பாக்கி, தன் குடும்பச் செலவுகள், பிள்ளைகளின் எதிர்காலம், மானம், மரியாதை என்று அனைத்துமே ஒரு புலியாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சி என்ற வடிவிலேயே இருக்கிறது.

அதை விட்டு இறங்கினால் அத்தனையும் கடித்துக் குதறிவிடும் அபாயம் மிகத் தெளிவாக இருக்கிறது. அதனால் இயன்ற வரை மூச்சைப் பிடித்து தாக்குப் பிடிக்க முயன்று கொண்டிருக்கின்றார்கள். இதற்கு ஒரு விடிவு காலம் வராதா? என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சேமிப்புகள் இருக்கும் வரையில் சமாளித்துப் பார்த்து விடுவது. அடுத்ததாக தங்கம் இருக்கின்ற வரை தற்காத்துக் கொள்வது என்ற முடிவில் இருக்கின்றார்கள். 

இந்த நிலையில் தான் அரசின் பாரா முகமும், தங்களுக்காக குரல் கொடுக்க  கூட முன் வராமல் அரசின் அராஜகப் போக்கால், நமக்கெதற்கு வம்பு என்று எதிர்க்கட்சிகள் பயந்து பதுங்கும் சூழ்நிலையும், இவர்களை ஒரு வித அச்ச உணர்வுக்கு கொண்டு சென்றுள்ளது.

இப்படி சிறு குறு தொழில் செய்பவர்கள் நிலையாவது பரவாயில்லை. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒப்பேற்றி விடுவார்கள். ஆனால் ஓரிரு வேலை ஆட்களை வைத்துக் கொண்டு, சில்லரை வர்த்தகத்திலும், சேவை வணிகத்திலும், விற்பனை வணிகத்திலும் ஈடுபட்டிருக்கும் பல லட்சம் தொழில்முனைவோரின் கதியும் அதோ கதிதான்! 

ஏனென்றால் அவர்களால் மாத வாடகையே முழு வியாபாரமும் நடை பெற்றால் தான் தர முடியும் என்ற நிலையில் தான் வரவு செலவும் இருக்கும். தினமும் 300 ரூபாயாவது வீட்டிற்கு எடுத்துச் சென்றால் தான் குடும்பம் சந்தோஷமாக வாழ முடியும். தினம் கூலி கொடுத்தால் தான் வேலையாள் அடுத்த நாள் வேலைக்கு வருவான்!

இந்த மாதிரி மின் தடை இன்னும் ஒரு மாதம் தொடர்ந்தாலே இவர்கள் கதையெல்லாம் கந்தையாகிவிடும்.

மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று தான் வாக்களித்தார்கள் இந்த மக்கள்......

உண்மையிலேயே இது மிகப் பெரிய மாற்றம் தான். தற்பொழுது 60 வயதுக்குள்ளாக இருக்கும் தமிழக தமிழர்கள் எவரும் கண்டிராத பெரிய மாற்றம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.....

வறண்ட வாழ்க்கை....!   இருண்ட தமிழகம்.....!

Tuesday, October 9, 2012

விமர்சனம் மாதிரி...!!


கடுமையான மின் தடையோடு போராடி கடந்த மூன்று நாட்களில் சுந்தர பாண்டியன் படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து முடித்தேன்.

இப்பல்லாம் இந்த மாதிரி லைட் மைண்டட் படங்கள் தான் ரொம்ப பிடிக்குது. அந்தக்கால கார்த்திக்-பிரபு  படங்களிலிருந்து 50 சதவிகிதமும், ராமராஜன் படங்களிலிருந்து 25 சதவிகிதமும், ஆர். சுந்தர்ராஜன் - ரங்கராஜ் படங்களிலிருந்து 25 சதவிகிதமும் கலந்த ஒரு கலவையாக இந்தப் படம் வந்திருக்கின்றது.

பாடல்கள் மட்டும் ஹிட் ஆகியிருந்தால் இந்த வருடத்திய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இது அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. சசிகுமார் சம்பந்தப்பட்ட படங்களில் இருக்கின்ற வக்கிர காட்சிகளில் பாதி கூட இதில் இல்லை என்றாலும், இருப்பதையே இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால், பார்வையாளர்களுக்கு இந்தப் படம் இன்னும் கொஞ்சம் சந்தோஷத்தைக் கூடுதலாக கொடுத்திருந்திருக்கும்.

ஒரு குடும்பத்தில் தாத்தா-பாட்டி, தாய்-தந்தை, பேரன் - பேத்திகள் சேர்ந்து உட்கார்ந்து பார்க்கின்ற படங்கள் தான் வெள்ளித் திரையில் வெள்ளி விழா காண்கின்றன. இந்த ஃபார்முலா ஏன் எந்த டைரக்டருக்கும் தெரியவில்லை என்றே புரிய மாட்டேன் என்கிறது.

குடும்பத்துடன் படம் பார்க்கக் கூடியவர்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள்? முதலில் மிகத் தெளிவான ஒரு கதை. பார்க்கும் போது மனதை அதிகமாக பாதிக்க வைக்காத வக்கிரக் காட்சிகள் மற்றும் சோகங்கள். அடுத்ததாக படம் நெடுகிலும் (திணிக்கப்படாத) கதையின் முக்கிய கதா பாத்திரங்களோடு பின்னி பிணையப்பட்ட இயல்பான நகைச்சுவை. கண்களையும், காதுகளையும் படுத்தி எடுக்காத ஒளி, ஒலிச் சேர்க்கை இல்லாத ரம்மியமான பாடல் காட்சியமைப்புகள்.

பாடல் காட்சிகளின் போது அழகான நாயகன் - நாயகியின் தெளிவான முக பாவனைகளைக் காட்டும் குளோசப் காட்சிகள். படம் ரிலீஸுக்கு முன்பே நன்கு ஹிட் ஆன பாடல்கள்.

ஓரிரு செண்டிமெண்ட் காட்சிகள், நறுக்குத் தெரித்த வசனங்கள். தேவையெனில் வக்கிரமில்லாத சண்டைக் காட்சிகள்......

அவ்வளவு தான்! மேற் சொன்னவற்றில் 60 சதவிகிதத்தைக் கடந்து விட்டார் சுந்தர பாண்டியன். இன்னும் ஒரு 20 சதவிகிதத்திற்கு முக்கியிருந்தால் இந்த வருடத்தில் வெள்ளித்திரை வெள்ளிவிழாவை இந்தப் படம் கொண்டாடியிருக்கும் என்பது என் எண்ணம்.