Monday, June 30, 2014

அரசியல்....மார்க்கெட்டிங்..!!!

ஒரு காலத்தில் மளிகை சாமான் வாங்க வேண்டும் என்றால், செட்டியார் கடை, முதலியார் கடை, அண்ணாச்சி கடை... இப்படியாக இருந்து ஒரு கட்டத்தில் பாய் கடையும் வந்து சேர்ந்தது...

அப்போ கடைக்குச் சென்றால் நம்மவர்கள் அப்பளம் வேண்டும், நல்லெண்ணை வேண்டும் என்று பொருட்களின் பெயரைச் சொல்லித்தான் கேட்பார்கள். கடைக்கார அண்ணாச்சியோ அவர் கடையில் வைத்திருக்கின்ற அப்பளத்தையும், எண்ணையையும் தந்து அனுப்புவார். 

சிலோன் ரேடியோ விளம்பரங்கள் எல்லாம் வர ஆரம்பித்த நிலையில் ஒரு சில பெரிய நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த துவங்கவும், நம்மவர்கள் பல்பொடி வாங்க கடைக்குச் சென்றால் கோபால் பல்பொடியே தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி வர ஆரம்பித்தார்கள். 

சரியாக இந்த இடத்தில் தான் சந்தை என்பது உற்பத்தி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களான (கஸ்டமர்) கடைக்காரர்கள் கையில் இருந்து நுகர்வோர்கள் (உபயோகிப்பாளர்கள்) கைகளுக்கு இடம் பெயர்கின்றது....
இது தொடர்கதையாகி, இப்பொழுது மக்கள் சுயசேவைப் பிரிவு (செல்ஃப் சர்வீஸ் கவுண்ட்டர்ஸ்) கடைகளிலேயே அதிகமாக பொருட்களை வாங்க ஆரம்பித்திருக்கின்றனர். 

இப்பொழுது எல்லாம் அண்ணாச்சிகள், நுகர்வோரிடம் இந்த நிறுவன தயாரிப்பு தான் நன்றாக இருக்கும் என்ற சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் மக்கள் அதை வாங்குவதில்லை. காரணம் அந்த பிராண்டை விற்றால் அண்ணாச்சிக்கு அதிக கமிஷன் கிடைக்கும் போலிருக்கிறது என்ற சந்தேகம் தான்...!!!

ஆகவே இப்பொழுது கடைக்காரர்கள் ஒரு பொருளுக்கு... உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் டூத் பேஸ்ட்டை எடுத்துக்கொண்டால், அதில் குறைந்தது பத்து வகை பிராண்டுகளை அடுக்கி வைக்க வேண்டியிருக்கின்றது. மக்கள் தங்கள் தேர்வுக்கு சிறந்த மாற்று உடனடியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். தான் வழக்கமாக உபயோகிக்கும் பேஸ்ட்டில் சிறு குறையை அவர்கள் உணர்ந்தால் கூட அடுத்த மாதம் வேறு ஒரு பிராண்டை முயற்சி செய்கின்றார்கள். 

இது கூட பரவாயில்லை, இப்பொழுது உள்ள இளைஞர்கள் சந்தைக்கு புதிதாக ஒரு பிராண்டு அறிமுகமானால், அதற்கு நல்ல விளம்பரம் ஊடகங்களில் கொடுக்கப்பட்டால் அதை உடனே வாங்கி உபயோகித்துப் பார்க்கும் பழக்கத்திற்கு வந்து விட்டிருக்கின்றனர்...

ஓக்கே.....

இதை இப்படியே நம்ம அரசியல் தளத்திற்கு கொண்டு வாருங்கள். ஒரு பொருளை வாங்குவதில் கடந்த 40 ஆண்டுகளில் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்ற இந்த மாற்றம் இப்பொழுது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதிலும் கூட தாவியிருப்பதைத் தான், சமீபத்திய தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துவதாக இருக்கின்றன.
இப்பொழுது எல்லாம் காமராஜர் சொன்னார், அண்ணா சொன்னார், கலைஞர் சொன்னார், எம் ஜி ஆர் சொன்னார் என்பதற்காகவெல்லாம் மக்கள் தங்கள் முடிவுகளை எடுப்பது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் 100 வருட பாரம்பரியம், 50 வருட பாரம்பரியம் எல்லாம் கூட வேலைக்காகவில்லை. 

கடைக்காரர்கள்... அதாவது ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்லும் வாடிக்கையாளர்கள்... அதாவது கட்சியை மக்களிடம் கொண்டு செல்லுகின்ற மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் எல்லாம் மக்களுக்கு முக்கியமாகப் படவில்லை....

மாறாக, நிறுவனம்... அதாவது கட்சி..., அதன் தலைமையின் மீதான வசீகரம், நம்பகத்தன்மை, களங்கமற்ற நிலை, தன்னை முன்னிலைப் படுத்துகின்ற அந்த இலகுவான பாங்கு, பாரம்பரிய கதையெல்லாம் பேசிக்கொண்டிராமல், இன்றைக்கு இலங்கைப் பிரச்சினையில் என்ன செய்தாய்? இன்றைக்கு காவிரிப் பிரச்சினையில் என்ன செய்தாய்? இன்றைக்கு முல்லைப் பெரியாற்றில் என்ன செய்தாய்? இன்றைக்கு மக்கள் கண்களை உறுத்தாமல் உன் வாடிக்கையாளர்கள் (செயலாளர்கள்) எப்படி சேவை ஆற்றுகின்றார்கள்? இன்றைய என்னுடைய சாதாரண தேவைகளை நீ எப்படி பூர்த்தி செய்வாய்? அதற்காக உன்னிடம் உள்ள திட்டங்கள் என்ன?....

இப்படி நேரடியாக கட்சியின் தலைமையை மக்கள் பார்க்கின்ற நிலைமை தான் இன்றைக்கு நாட்டில் இருக்கின்றது. இது தான் காலுக்கு செறுப்பு கூட இல்லாமல், கிழிந்த டவுசரை போட்டுக்கொண்டு, யூனிஃபார்ம் போடாததால் பெஞ்ச் மேல் நின்று கொண்டு கல்வி கற்ற அனுபவம் இல்லாத, நடுத்தர வர்க்கத்து மக்களின் மனநிலை....!!!

எம் ஜி ஆர் ஆட்சிக்காலம் வரை அடித்தட்டு மக்கள் தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தார்கள். ஏனெனில் அன்றைக்கு அவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம். ஆனால் இன்றைக்கு மேற் சொன்ன நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்கள் தான் வெற்றி தோல்வியினை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றார்கள். 

ஆனால் அப்பொழுது திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த இந்த நடுத்தர வர்க்கம், துரதிருஷ்டவசமாக மேற் கூறிய இந்த நுகர்வோர் - நிறுவ்னம்.... அதாவது வாக்காளர் - கட்சித் தலைமை... என்ற புதிய சந்தைக் கலாச்சாரத்தின் அடிப்படைக்கு மாறி விட்டிருப்பதால், அதற்கு ஏற்றார் போல் திமுகவும் தன்னை மாற்றிக் கொண்டிருக்காத காரணத்தால்.. சட்டமன்றம், உள்ளாட்சி, பாராளுமன்றம் என்ற தொடர் தோல்விகளை திமுக சந்திக்க வேண்டியதாகிவிட்டது. 

ஆகவே இன்றைய அந்த நடுத்தர வர்க்கமும், இளைஞர்களும் எதிர்பார்க்கின்ற அல்லது விரும்புகின்ற மாதிரியான மாறுதல்களை முதலில் கட்சித் தலைமையில் திமுக உருவாக்க வேண்டும். 

அதற்கு திமுகவில் இருக்கின்ற ஒரே சாய்ஸ்... தளபதி மு.க. ஸ்டாலின் மட்டுமே. அவரை கட்சித் தலைவராகவும் முதல்வர் வேட்பாளராகவும் கட்சி முன்னிறுத்தினால் மட்டுமே, இளைஞர்கள் திமுகவுக்கு வாக்களிப்பதைப் பற்றி சிந்திப்பார்கள். 

திமுக மேடையில் நடுநாயகமாக கலைஞர், அவருக்கு பக்கத்தில் திருமாவளவன், அவருக்கு அடுத்து காதர் மொய்தீன், அவருக்கும் அடுத்தபடியாக நான்காவது இடத்தில் தளபதி உட்கார வைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்ற இளைஞர்களும், பெண்களும் தங்கள் கவனத்தை வேறு கட்சிகளின் மீது திருப்புகின்றார்கள்....

இதைத் தான் ஊடகங்கள் கவனமாக கணக்கில் எடுத்து ஜெயலலிதாவுக்கான மாற்றை தேடுகின்ற மக்களின் கண் முன்னே தளபதி ஸ்டாலின் இடத்தில் வைக்கோவைக் கொண்டு வந்து வாரம் தவறாமல் தங்கள் இதழ்களின் கட்டுரைகள் வாயிலாக முன் நிறுத்துகின்றார்கள். மேலும் தளபதியின் புகழையும் குறைக்கின்ற வகையில் அவருக்கு ஆளுமைத் தன்மை இல்லாமல் மாவட்ட செயலாளர்கள் பின்னால் ஒழிந்து கொள்கிறார் என்பதாக ஒரு கட்டுரையும், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட இறந்து போன நபரின் பேட்டியில் அவர் ஸ்டாலினைச் சந்தித்ததாகச் சொன்னதையே ஒரு குற்றம் போலவும் சோடித்து ஒரு கட்டுரையுமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள்.....

ஆகவே நிலைமையின் அவசரத்தையும், அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் தலைவர் கலைஞர் புரிந்து கொண்டு, உடனடியாக தளபதி ஸ்டாலின் அவர்களை கட்சித் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து 2016 தேர்தலை எதிர் கொள்ள கட்சியைத் தயார் படுத்த வேண்டும்.

அவ்ளோ தான்....!

Sunday, June 29, 2014

உதயநிதி ஸ்டாலினும் அரசியல் பிரவேசமும்

உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வளர்ந்து வரும் ஒரு நல்ல சினிமா நடிகர். மற்ற நடிகர்களுக்கு இருப்பது போன்று அவருக்கும் ரசிகர் மன்றங்களும், அதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் இருக்கின்றார்கள்.
அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்த தலைவரான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் மகன்.
ஆனாலும் அவர் இதுவரையிலும் நேரடியாக திமுகவின் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் இறங்கியது கிடையாது. அப்படி அவருக்கு ஒரு எண்ணம் எழுந்தால், நேரடியாகவே அவர் திமுக சார்பாக அரசியலில் களம் இறங்கும் முழு உரிமையும் அவரையே சார்ந்தது. அவர் அரசியலில் இறங்கக் கூடாது என்று சொல்லும் எந்த அதிகாரமும் எவருக்குமே கிடையாது.
ஆனால் அரசியலில் நுழைந்தால் அவரை அக் கட்சியின் தொண்டர்களும் அடுத்ததாக தமிழகத்தின் பொது மக்களும் ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவளிக்கின்றார்களா? அதற்கு ஏற்றார் போன்று அவரும் உழைக்கின்றாரா என்பதும்... கட்சித் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் ம்ற்றும் அவருக்கும் இடையிலான பிரச்சினை.
அவர் சினிமா துறையில் இறங்கி முதலில் பட விநியோகம் செய்தார்... அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்கினார்... அதற்கடுத்தபடியாக கதாநாயகனாக நடிக்கவும் ஆரம்பித்தார். இதில் ஒவ்வொன்றையுமே அவர் செய்ய முற்படும் போதும் அவரை சிலர் விமர்சிப்பதை ஒரு ஆகச் சிறந்த கொள்கையாகவே வைத்துக்கொண்டிருந்தாலும், அவர் ஒவ்வொரு படியிலுமே தெளிவான வெற்றிகளை படிப்படியாக சந்தித்தே வந்து கொண்டிருக்கின்றார்.
அவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களுமே வியாபார ரீதியில் வெற்றிப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் அவர் விநியோகஸ்தர்களை மிரட்டுகிறார்... திரையரங்குகளை மிரட்டுகிறார்... அதனால் தான் படத்தை ஓட வைக்கின்றார் என்றார்கள். ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், அவர் மக்களையே மிரட்டி படம் பார்க்க வைக்கின்றார் என்ற அளவிற்கு எல்லாம் எழுதித் தள்ளியதையும், இதே இணையத்தில் நான் தலையில் அடித்துக்கொண்டவாறே பார்த்து கடந்து சென்றிருக்கின்றேன்.
திமுக ஆட்சி போனால், இவரு திரைத்துறையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிடுவார் என்றவர்களின் முகத்தில் கரி பூசுவது போன்று, இவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களுமே அதிமுக ஆட்சியில் தான் வெளி வந்து வெற்றியடைந்திருக்கின்றது.
இந்த அதிமுக ஆட்சியிலும் அவர் படத்தயாரிப்பையும், விநியோகத்தையும் கைவிடாமல் அதையும் வெற்றிகரமாகவே செய்து வருகின்றார்....
இந்நிலையில், இன்றைக்கு அவர் மனைவியின் பிறந்த நாள். அதற்கு வாழ்த்துச்சொல்லி அவர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களோ, திமுகவைச் சார்ந்த சிலரோ இங்கே பதிவிட்டால், ஏன் சிலருக்கு எரிச்சல் ஏற்படுகின்றது என்றுதான் புரியவில்லை?!
இங்கே நம் இணைய நண்பர்களின் பிள்ளைகள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள் இப்படி யாருக்காவது பிறந்த நாள், திருமண நாள் என்று எந்த நிகழ்வாக இருந்து அவர்கள் பதிவிட்டாலும், நாம் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை இயல்பான வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.
அதே நிலைப்பாட்டின் அடிப்படையில், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை திமுகவின் அடுத்த தலைவராக ஏற்றுக்கொண்டவர்களில் சிலர் அன்பு மிகுதியாலோ அல்லது வேறு ஏதோ சில எதிர்பார்ப்புகளின் காரணத்தாலோ (அப்படியும் சிலர் தவறான எண்ணத்தில் இருக்கலாம்) அவருடைய மருமகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை!
ஒரு கட்சித் தலைவரின் மனைவியோ, மகனோ, மகளோ, மருமகனோ, மருமகளோ எந்தத் தொழில் செய்தாலும் விமர்சிப்பதும், அந்த தலைவர் பிரச்சாரப் பயணம் செல்லும் போது உதவிக்காக பின் செல்வதும், அவர்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளை கொண்டாடுவதும், அதற்கு யாரேனும் வாழ்த்துச் சொல்வதும்.....
இதெல்லாம் கூடாது என்று சொல்வது என்ன மாதிரியான மனநிலை???
ஒரு கட்சியையோ, அதன் தலைவரையோ விமர்சிப்பதற்கு எவ்வளவோ அளவுகோல்களும், வழிமுறைகளும், காரண காரியங்களும் இருக்கும் போது, இந்த மாதிரியான அவர் குடும்பத்தினர் மீதான விமர்சனம் என்பது வெறும் காழ்ப்புணர்ச்சியாகவே என்னால் கருதமுடிகிறது.
இப்படியே போச்சுன்னாஆஆஆஆ... ஏன்? நான் அரசியலுக்கு வந்தால் தான் தப்பென்ன? என்று கூட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சிந்திக்க வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. அவர் சிந்திப்பது இருக்கட்டும், கட்சித் தொண்டர்களையும், பொது மக்களையுமே அப்படி இந்த நபர்கள் சிந்திக்க வைத்து விடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

தளபதி- 2016 பாகம்-1

ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 22.06.2014  தமிழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு ஒரு சிறந்த சான்று...

கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல், உள்ளட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்று தொடர் தோல்வி. அதிலும் கடைசியாக வந்தது கட்சியின் வாக்குவங்கியையே கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கான பெரும் தோல்வி....

அதைத் தொடர்ந்து கட்சியில் களையெடுப்பு வேலைகள் உட்பட கட்சியை மறு சீரமைப்பு செய்து மீண்டும் புதுப் பொலிவுடனும் உற்சாகத்துடனும் அதன் தொண்டர்களை உசுப்பி விட்டு பொதுமக்களிடம் நன் மதிப்பைப் பெற வேண்டிய அந்த கடும் பணியில் இரவு பகல் பாராது உழன்று கொண்டிருக்கின்ற வேளையில்....

தான தலைமைப் பொறுப்பேற்றிருக்கின்ற கழகத்தின் இளைஞரணி சார்பாக தொடர்ந்து நடைபெற்று வரும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்களில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கும் மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் சென்று கலந்து கொண்டு 469 மாணவச் செல்வங்களுக்கு ரூபாய 56 லட்சத்திற்கும் அதிகமான தொகையினை பங்கிட்டு பரிசளித்துள்ளார் அந்த மாமனிதர்...

ஊடகங்களால் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்ட, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு இப்பொழுது எங்கே இருக்கின்றார்கள் என்றே தெரியாத நிலையில் தான் இருக்கின்றார்கள். அமோக வெற்றி பெற்ற ஆளுங்கட்சியினரோ, தேர்தல் நேரத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்ட பிறகு இனி அடுத்த தேர்தலுக்கு வந்தால் போதும் என்ற நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றார்கள்....

ஆனால் இந்த நம்முடைய தலைவனோ, தான் சார்ந்த இயக்கமானது வெறும் தேர்தல் அரசியலுக்கானது மட்டுமல்ல என்பதை தெளிவாக உணர்ந்த காரணத்தினால் தான், மக்கள் சேவையை அரசு சார்பாக நிறைவேற்றித் தரும் பொறுட்டே எங்களுக்கு தேர்தல் அரசியல் என்பது தேவை, அதில் தோல்வியுற்றாலும், எங்கள் கரங்களைக் கொண்டு இயன்ற அளவிற்கு செய்கின்ற மக்கள் சேவையை எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர்ந்து செய்வோம் என்று கூறி.....

 கோவையில் மையம் கொள்கிறார்.... மாநிலம் முழுவதும் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கின்ற மாணவச் செல்வங்களின் பட்டியல் படி, அந்த 469 பேரையும் அந்தந்த மாவட்ட இளைஞரணி தோழர்கள் அவரவர் பெற்றோருடன் தங்கள் செலவில், பாதுகாப்பில் அழைத்து வந்து விழாவில் பங்கெடுக்க வைத்து அவர்களுக்கு தாம் பெற்ற உயர்வுக்கான தரச் சான்றிதழையும் ஊக்கத்தொகையினையும் அந்தத் தலைவரின் கரங்களால் வழங்கி மீண்டும் அவர்களை அவரவர் இல்லங்களில் பத்திரமாக கொண்டு சேர்க்கும் வரை பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படுத்தியிருக்கின்றார்கள்...

இந்த நிகழ்வானது தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இது மட்டுமன்றி அண்ணா பிறந்தநாள் விழாவின் போதும் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்கும் வகையில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்தி அதில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெறுகின்ற முதல் மூன்று பேர் என்கிற வகையில் ஆயிரக்கணக்கானோருக்கும் இதேப் போன்று பரிசுகள் வழங்கி இந்த இயக்கத்தின் சார்பாக இந்த மாமனிதர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றார்.

இந்த மனிதர் திராவிட இயக்கக் கருத்துக்களில் பற்று கொண்டிருக்கின்றாரா? அதற்காக ஏதாவது செய்கின்றாரா? என்று கேட்பவர்களுக்கு..... வருடம் தோரும் ஒரு லட்சம் மாணவச் செல்வங்கள் பெரியார், அண்ணா, திராவிட இயக்கக் கொள்கைகள், சமூக நீதி போன்றவை சார்ந்த தலைப்புகளை மட்டுமே கொடுக்கப்படும் அந்த கட்டுரை, பேச்சுப்போட்டிகளின் மூலம் அவற்றை தேடிப் பிடித்து படிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தித் தருகின்றார். அமைதியாக அதேசமயம் இவ்வியக்கத்தின் கொள்கைகளை ஆணி வேரிலிருந்து பலப்படுத்தும் வேலையை தொடர்ந்து இந்த மாமனிதர் செய்து வருவதற்கு இதைவிட வேறு சான்று என்ன இருக்க முடியும்?

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு மக்கள் நலப் பணியானது, அதிலும் குறிப்பாக மாணவச் செல்வங்கள் சம்பந்தப்பட்ட பணியானது, ஒரு கட்சியின் அல்லது அதைச் சார்ந்த தலைவரின் தனிப்பட்ட வெற்றி தோல்வியின் காரணமாகவோ, வேலைப் பளுவின் காரணமாகவோ எந்தத் தடையும் ஏற்பட்டுவிடாமல் தொடர்ந்து அதே உற்சாகத்துடன் நடைபெறுவதற்கு உறுதியளிக்கும் ஒரு மாமனிதரையே நாம் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்...

அந்த வகையில் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை என் தலைவர் என்று சொல்லிக்கொள்வதில் நிச்சயம் நான் பெருமைப்படுகின்றேன்.

Friday, June 27, 2014

இந்தி ஆதரவு போராட்டம்- ஒரு பார்வை

பாஜகவின் இல. கணேசன், தமிழகத்தில் இந்தி ஆதரவு போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருப்பதைப் பார்த்து எனக்கு எந்தக் கோபமும் வரவில்லை. மாறாக அவரது அறியாமையின் மீதான பச்சாதாபமும், இந்த மாதிரியான வாதங்களால் பாஜகவை தமிழகத்தில் மீண்டும் தனது ஒரிஜினலான பழைய நிலைக்கே திரும்பக் கொண்டு போய் சேர்க்கும் அந்த நிகழ்வையும் காணும் ஆவல் தான் ஏற்படுகின்றது..!
அறுபதுகளில் தமிழகத்தில் மிகப் பலமாக நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமானது, திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே நடத்தி அதை நம்பி மக்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து அரியணையில் முதன் முதலாக அமர வைத்தார்கள் என்று யாராவது நினைத்தால் அது தவறு...!!
இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் ரத்தத்தில் அல்ல..... குரோமோசோம்களில்.. ஜீன்களில் இயல்பாகவே வடிவமைக்கப்பட்ட ஒரு தீர்மானம். அதற்கு ஆதரவான போராட்டத்தை அதாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கும் எந்த அமைப்பு அல்லது இயக்கத்துடனும் தமிழக இளைஞர்கள் இயல்பாகவே ஒருங்கிணைந்து போராடுவார்கள்.... இது தான் உண்மை.
திமுக முன்னெடுத்த அந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழக மாணவ சமுதாயமும் சாரை சாரையாக வந்து தானாகவே தன்னை இணைத்துக் கொண்டது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் தார்மீக ரீதியிலான தங்களது ஆதரவினை அந்த போராட்டத்திற்கு வழங்கினர். அதை மிகச் சரியாக நாடி பிடித்துப் புரிந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம், தனது மாணவர் அணியையே அப்போராட்டத்தை முன்னெடுக்க பணித்து... அப்போராட்டத்தை மிகத் தெளிவாக முன்னெடுக்கவும் பக்கபலமாய் நின்றது.
ஒரு கட்டத்தில் திமுகவின் பெரும் தலைவர்களாலேயே மாணவர்களின் அந்த எழுச்சியையும் அதனால் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளால் மாணவர்கள் பலியாவதையும் கட்டுப்படுத்தக் கூட இயலாத அளவிற்கு தமிழகத்தின் இள ரத்தங்கள் சூடேறிக் கிடந்தன.
ஆகவே அன்று நடந்த அந்த இந்தித் திணிப்பு எதிப்புப் போராட்டமானது, ஒட்டுமொத்த தமிழர்களும் முன்னெடுத்ததொரு போராட்டம். அதை மக்களுக்காக நடத்திக் கொடுத்து வெற்றி பெற வைத்தது திமுக அவ்வளவு தான்!!!
அன்றைக்கு காணாமல் போன காங்கிரஸ் தமிழகத்தில் இன்னமும் எழ முடியவில்லை. அன்றைக்கு அன்னாசிப் பழத்தைக் கொண்டு சென்று தோற்றுப் போய் ஆப்பு வாங்கிய காங்கிரஸார்.... இன்றைக்கு மோடியின் முடிவையும், இல. கணேசன்களின் பேச்சையும் கேட்டு.... பலாப்பழத்தோடு போட்டிக்குச் செல்லும் பாஜகவுக்கு கிடைக்கப்போகும் பலனை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர்....!!!
இல. கணேசன்களே, இப்பொழுது புரிகிறதா? உங்கள் அறிக்கையின் மீது எனக்கு ஏன் கோபம் வரவில்லை என்று???!!!

நாளைய திமுக

திமுகவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கும் சில புறம்போக்க்குகளின் பேட்டியை எடுத்துப் போட்டு சில ஊடகங்கங்கள், நடந்து முடிந்திருக்கும் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு தளபதி ஸ்டாலினுடைய அனுபவமின்மையும், சரியான கூட்டணி அமைக்காததுமே காரணம் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கின்றன....

இன்றைய நிலையில் நாளை திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டுமானால், மக்கள் முன்னே திமுகவின் சார்பான ஒரே ஈர்ப்பு சக்தி என்றால் அது ஸ்டாலின் மட்டுமே. அந்த சக்தி பலம் வாய்ந்ததாக இருக்கின்ற வரை ஜெயலலிதாவுக்கும் சரி, மற்ற தமிழகத்தின் சில்லரைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் சரி திமுக மீதான பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

ஆகவே தான் இப்பொழுது ஒட்டுமொத்த திமுக எதிர்ப்பாளர்களின் கவனமும் தளபதி ஸ்டாலினுடைய புகழை கலங்கப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றது.

நடந்து முடிந்த தேர்தலில், அதிமுக எந்தக் கூட்டணியும் அமைக்காமலேயே திமுக வாங்கியதை விட மிகச் சரியாக ஒரு மடங்கு... அதாவது 100% அதிகமான வாக்குகளை வாங்கியிருக்கின்றது. மக்கள் வாக்குப்பதிவுக்கு முன்பே மிகத் தெளிவானதொரு மனநிலையோடு தான் அதிமுகவுக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்பதைத் தான் இந்த 100 சதவிகித வாக்கு வித்தியாசம் நமக்கு உணர்த்துகின்றது.

இதை மீறி அதிமுக என்ற கட்சியைத் தவிர்த்த தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து கூட்டணி கண்டு திமுக இந்த தேர்தலை சந்தித்திருந்தாலும், நிச்சயம் வென்றிருக்க முடியாது. இது தான் எதார்த்தம்.

ஆகவே கூட்டணி விஷயத்தில் தளபதி எந்த தவறான முடிவையும் எடுக்கவில்லை என்பதும், விசி, மமக, புத போன்ற கட்சிகளோடு திமுக கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டிருந்தாலும் கூட இதே 22.6 சதவிகித வாக்குகளைத்தான் திமுக பெற்றிருக்கும் என்பதும் கண்கூடு...!

மேலும் விசிக்களோடு கூட்டணி என்பது தலைவர் கலைஞரின் தனிப்பட்ட விருப்பம் என்பதும்..., மமக மற்றும் புத போன்ற கட்சிகளோடு கூட்டணி என்பது கனிமொழியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான பதில் மொய் என்பதும் தான் உண்மை. ஆகவே இதில் தளபதியைக் குறை கூற எந்த முகாந்திரமும் இல்லை. ஆகவே தளபதி தவறான கூட்டணியை அமைத்ததே தேர்தல் தோல்விக்கு காரணம் என்பது அடிப்படையே இல்லாத அர்த்தமற்ற பேச்சாகும்.

அடுத்ததாக, கடந்த நாற்பது ஆண்டுகளாகவே திமுகவின் அடிப்படை கட்சிப்பணிகளிலிருந்து படிப்படியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, திமுகவின் உணர்வுமிக்க ஒரு அடிப்படைத் தொண்டன், கட்சிக்காக அறிவிக்கப்பட்ட சிறை நிரப்புப் போராட்டம் உட்பட அனைத்து போராட்டங்களிலும் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு, தமிழகம் முழுவதும் தலைவர் கலைஞருக்கு இணையாக மூளை முடுக்கு, இண்டு இடுக்கு என்று அனைத்து பகுதிகளுக்கும் சுற்றிச் சுழன்றி, கழகம் ஆட்சியில் இல்லாத காலங்களிலும் மிகக் கூடுதலாக கட்சிப்பணியாற்றி....

கழகத்தின் கடைகோடித் தொண்டனையும், நம் தலைவர் கலைஞர் போலவே பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு கழகத்தோடு ஐக்கியமாகியிருக்கும் தளபதி ஸ்டாலினுக்கு இல்லாத அனுபவம் வேறு யாருக்குமே இருக்க வாய்ப்பில்லை என்பது தான் என் நிலைப்பாடு.

தலவர் கலைஞர் அடைந்த தேர்தல் வெற்றிகளை விட தோல்விகளே அதிகம். அதற்காக அவருக்கு அனுபவம் இல்லை என்று நாம் சொல்ல முடியாது.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு மிகப் பெரிய கலாச்சார மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. அந்த மாற்றத்தை எதிர்கொள்கின்ற அளவிற்கு திமுக தன்னை மாற்றியமைத்துக்கொள்ளவில்லை என்பது தான் இந்த தோல்விக்கான காரணம். இன்னமும் அழகிரி, கனிமொழி, மாறன் பிரதர்ஸ், 2ஜி, ஈழ துரோகம், குறுநில மன்னர்களின் அராஜகம் என்று பற்பல பிரச்சினைகளுக்கு பதில் சொல்வதிலேயே திமுக தொண்டர்களின் 90 சதவிகித சக்தி விரயமாகிக் கொண்டிருக்கின்றது.....

கட்சியை அதன் தொண்டர்கள் நேர்மறையாக (பாஸிடிவ் ஆக) முன்னெடுத்துச் செல்லுகின்ற வகையில் கட்சித் தலைமை அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரிடமும் வாக்குச் சேகரிக்கச் செல்லும் ஒவ்வொரு திமுக தொண்டனும், அந்த வாக்காளரிடம்......

அழகிரியின் அராஜகம், தினகரன் அலுவலக எரிப்பு, தா.கி கொலை, 2ஜி ஊழல், அதன் காரணமாக ஈழ விவகாரத்தில் விட்டுக்கொடுத்தது, அந்ந்தந்த மாவட்ட செயலாளர்களின் அடிப்பொடிகளின் அராஜகங்கள்.... என்று இப்படியாக பல பிரச்சினைகளுக்கு சப்பைக்கட்டு கட்டிவிட்டுத்தான், நாம் செய்த சாதனைகளை அந்த வாக்காளரிடம் எடுத்துக் கூற வேண்டியதாக இருக்கின்றது.

உடனடியாக... ஜெயலலிதா குற்றம் இழைக்கவில்லையா? அராஜகம் செய்யவில்லையா? ஊழல் செய்யவில்லையா? என்று சிலர் கேட்பார்கள். அதற்கெல்லாமான தண்டனையை 96இல் ஜெயலலிதாவுக்கு மக்கள் தந்துவிட்டார்கள். ஆனால் அதன் பிறகு அதிமுகவைப் பொறுத்தவரை இந்த மாதிரியான தவறான நபர்களாக ஜெயலலிதாவைத் தவிற வேறு யாரையும் மக்களால் உடனடியாக கை காட்ட முடியாத அளவிற்கு பார்த்துக்கொள்கிறார்.

மக்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்றால்.... “நான் மாநில தலைமை அராஜகம் செய்தால் பொறுத்துக்கொள்கிறேன். காரணம், 8 கோடிப்பேரில் நானும் ஒருவன். அந்த பெரிய ஆளுமையின் அராஜகத்தினால் நான் நேரடியாக பாதிக்கப்படப்போவதில்லை. ஆனால் என் வார்டில், என் நகரத்தில், என் ஒன்றியத்தில், என் மாவட்டத்தில்... அதைத்தவிரவும் மாநில அளவில் பல்வேறு அதிகார மையங்கள் என்று தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சினையில் ஒரு அராஜகப் பேர்வழியிடம் நான் மண்டியிடவோ, அடிமைப்பட்டுக்கிடக்கவோ, பயந்து நடுங்கி வாழவோ விரும்பவில்லை....!”

இது தான் இன்றைய மக்களின் மனநிலை. அதிகார மையம் என்பது மாநில அளவில் ஒன்று இருந்தால் போதும் என்று நினைக்கின்றார்கள் மக்கள்! தன் வார்டில், தன் நகரத்தில், தன் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கட்சிக்காரன் தன்னை அச்சுறுத்துபவனாக இருக்கக் கூடாது என்று விரும்புகிறான். இது இயல்பான ஒரு நடுத்தர வர்க்க மனநிலை தான். இதில் குறை கூற எதுவும் இல்லை.

இதற்கு ஏற்றார் போன்ற மாற்றத்தை திமுகவின் தலைவர் கலைஞர் தான் கழகத்தில் நிறுவ வேண்டும். அப்பொழுது தான் மக்கள் திமுகவின் பக்கமாக மீண்டும் தமது பார்வையை திருப்புவார்கள். இதற்கு ஒரே வழி.... தளபதி ஸ்டாலின் அவர்களை கட்சியின் செயல் தலைவராக அறிவித்து, முதவர் வேட்பாளராகவும் மக்கள் முன் நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் திமுகவின் அழகிரி, கனிமொழி, மாறன், ராஜாத்தி என்று தனித்தனி கோஷ்டிகள் இல்லாமல், தளபதி தலைமையில் ஒரே அணியாக இருக்கும். கீழ் நிலையில் உள்ள பொறுப்பாளர்களும், தான் தவறு இழைத்தால் இன்னொரு கோஷ்டித் தலைமையைப் பிடித்து தப்பித்துக்கொள்ள வழியில்லாமல், செவ்வனே தத்தமது கடமையை ஆற்றுவார்கள்....!!!

ஆகவே தலைவர் கலைஞர் மாற்றத்தை மேலே இருந்து கொண்டுவர வேண்டும். அதாவது பன்முக தலைமையை ஒழித்துக்கட்டி... திமுகவில் ஒரே முகம்... அது தளபதியின் முகம் என்ற ஒற்றைத் தலைமை முறையைக் கொண்டு வந்தால்... கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும், தொண்டர்களும் தளபதி தலைமையில் ஒரே அணியாக செயல்பட்டு கழகத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பார்கள்.