Tuesday, June 28, 2016

கல்விக் கடனும்.. விஜய் மல்லையாவும் - சிறுகதை

இது வெறும் கற்பனைக் கதை மட்டுமல்ல. அன்றாடம் நம்மைச் சுற்றி நாம் அறியாமலேயே நடந்து கொண்டிருக்கும் எண்ணற்ற நிஜங்களின் ஒரு சாம்ப்பிள் தான்..!
@@@@@@@@@

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் அந்தப் பெண்மணியை பார்த்து...

நன்றாக நினைவில் இருக்கிறது வங்கியில் ஒரு வேலை நிமித்தமாக மேலாளரை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது தான், அந்தப் பெண்மணியைப் பார்த்தேன். கொஞ்சம் நெடிசலான தேகம். சராசரிக்கும் சற்று உயரம்.. பாதிக்கு மேல் நரைத்த கேசம்.., வயது 60ஐ தொட்டுக் கொண்டிருக்கலாம், அல்லது சமீபத்தில் கடந்து கூட இருக்கலாம். அன்றைக்கும், இதோ இன்று அழைத்து வந்திருக்கும் அதே மகளோடு தான் வந்திருந்தார்.

ரொம்ப நன்றிங்கய்யா.. என்று தாயும், மகளும் மேலாளரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, அந்தப் பெண் படக்கென்று அவர் காலில் விழுந்து வணங்கியது. மேலாளர் இளம் வயதினர் தான். அதனாலோ என்னவோ படபடத்தவாறு... அதெல்லாம் வேண்டாம்மா..! அரசாங்கம் கொடுக்க சொல்லியிருக்கு.... நாங்க கொடுத்திருக்கோம். அவ்ளோ தான், நல்லா படிச்சி முடிச்சி, இந்த லோனை கரக்ட்டா கட்டி முடிச்சா போதும், அது தான் நீ எனக்கும், இந்த வங்கிக்கும் செய்கிற நன்றியாக இருக்கும் என்று சொன்ன போது எனக்கும் கொஞ்சம் நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

அவர்கள் சென்றவுடன் தான், மேலாளர் விவரங்கள் சொன்னார். ஏழ்மையான குடும்பம் சார். பக்கத்துல தான் அவங்க கிராமத்தின் பெயரைச் சொன்னார். இங்கிருந்து 18 கிலோ மீட்டர் இருக்கும். அது ஒத்த பொம்பள... கணவர் இறந்த பிறகு, கொஞ்சூண்டு நிலம், ஆடு, மாடு, கோழி எல்லாம் வச்சிக்கிட்டு, மூனு பொம்பள புள்ளைங்களையும் கொஞ்சம் கொஞ்சமா கறையேத்திக்கிட்டு வருது.

மொதோ ரெண்டு பொண்ணுங்களும் செவிலியர் பயிற்சி படித்து, வேலைக்குச் சேர்ந்து... காதல் திருமணம் செய்து செட்டிலாகிட்டாங்க. இது தான் கடைக்குட்டி... இப்போ இது ஒரு பாரம் மட்டும் தாங்கிறதுனால, இதையாச்சும் நல்லா படிக்க வைக்கலாம்ன்னு ஆசை. +2 ல ஓரளவு நல்ல மார்க்கு வாங்கினதுனால, பக்கத்து டவுன்ல இருக்குற தனியார் இஞ்சினியரிங் காலேஜ்ல சீட்டு கிடைச்சிடிச்சி. காலேஜுக்கு தினமும் பஸ்ஸுல போய்ட்டு வந்துடலாம். ஆனா அதுக்கும், மத்த மத்த படிப்பு செலவையும் இவங்களே எப்படியாவது வர்ற வருமானத்தை வச்சி மேனேஜ் பண்ணிடுவாங்க. ஆனா வருஷா வருஷம் ஃபீஸ் தான் மலைப்பா இருக்குன்னு வந்து நின்னாங்க.

நாலு வருஷத்துக்கும் சேர்த்து கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் வருது. வெளில கடன் கேட்டு பழக்கம் இல்ல. ஒத்த பொம்பளையா நின்னு, புள்ளைங்கள உழைச்ச காசுலயே கொஞ்சம் கொஞ்சமா கரையேத்திக்கிட்டு இருக்கேன். சொந்த பந்தமா இருந்தாலும், பக்கத்து வீடு, எதுத்த வீட்டு மனுஷங்களா இருந்தாலும் யாருட்டயும் ஒத்த காசு கடனாவோ, உதவியாவோ போயி நின்னு கேட்டு எம் புள்ளைங்கள வளர்த்துடக் கூடாதுன்னு, என் புருஷன் செத்தப்பவே உறுதி எடுத்துக்கிட்டேன்.

இந்த பன்னெண்டு வருஷத்துல, என்ன வருதோ அதுக்குள்ளாற தான் செஞ்சிக்கணும்ன்னு, நெலப்பாடா இருந்து ஓட்டிட்டேன். அதுல இந்து பொண்ணுங்களுக்கு எல்லாம் பல நேரம் ஆசப்பட்ட துணி மணிங்கள கூட வாங்காம, நினைச்ச மாதிரி படிக்க வைக்காம கூட, என்னால என்ன முடியுமோ அத மட்டும் செஞ்சி, ஆனா... அவங்க பின்னாள்ல தன் சொத்த கால்ல நின்னு சம்பாதிச்சி வாழற மாதிரியான படிப்பை கொடுத்து ஆளாக்கி விட்டுட்டேன்.

இந்த கடைக்குட்டிக்கும், துணி மணியெல்லாம் ஆசப்பட்ட மாதிரி வாங்கி கொடுக்காட்டியும், படிப்பையாவது நல்லபடியா குடுக்கலாமேன்னு ஆசை... பேங்க்ல கல்விக் கடன் கொடுக்குறதா சொல்றாங்க... அதான் வந்தேங்க சார். கிடைச்சுதுன்னா பி ஈ படிக்க வப்பேன்... இல்லாட்டி நர்ஸிங் தான்னு சொல்லி கூட்டியாந்துருக்கேன் சார். அவளுக்கு நர்சிங் பிடிக்கலையாம், அதனால பி எஸ் ஸி சேர்க்கலாம்ன்னு இருக்கேன்.

அந்த அம்மா சொன்னத கேட்டோடுன, அந்த பேச்சுல ஒரு உண்மையும், தெளிவும் தெரிஞ்சிது சார். அதான் பேப்பர்ஸ் எல்லாம் கொண்டுட்டு வரச் சொல்லி ஒரே வாரத்துல சேங்க்‌ஷன் பண்ணி கொடுத்துட்டேன். அதுக்கு தான் நன்றி சொல்லிட்டு போறாங்கன்னு அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... அவ்விருவரும் மீண்டும் உள்ளே நுழைந்தார்கள்.

காலேஜ்ல ஏதோ ஃபார்ம் கொடுத்து மேனேஜர் கிட்ட சீல் வச்சி கையெழுத்து வாங்கியாறச் சொன்னாங்க... அதை லோன் கிடைச்ச சந்தோஷத்துல மறந்துட்டு போயிட்டேன் சார்ன்னு இழுக்கவும்.. அதைக் கேட்டு வாங்கி கையெழுத்து போட்டு திருப்பிக் கொடுத்தவாறே... உங்களை பத்தித்தான் இவங்க கிட்ட பெருமையா சொல்லிக்கிட்டிருந்தேன்... என்று என்னைக் காட்டி அறிமுகப்படுத்தவே....

இருவரும் என்னை வணங்கினர். நானும் அவர்களை வணங்கி, ‘அம்மா’ன்ற வார்த்தைக்கு நீங்க தாம்மா உண்மையான தகுதியுள்ள பெண்மணின்னு சொல்லி, அந்தப் பெண்ணிடம், உங்க அம்மாவுக்கு சந்தோஷம் கொடுப்பது எப்படி உன்னுடைய முதல் கடமையோ... அதை விட முக்கியமானது, இதுவரை அவர்கள் கட்டிக் காப்பாற்றிய நாணயத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றுவது. அதுக்கு நீ செய்ய வேண்டியது, படிப்பைத் தவிர வேற எதுலயும் எண்ணத்தை வீணடிக்காமல், நன்கு படித்து உயர்ந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வது தான்.. என்றவுடன், அந்தப் பெண்ணும் உற்சாகமாக தலை ஆட்டியவாறே... நிச்சயம் செய்வேன் சார் என்றது..!

நடுவில் ஓரிரு முறை அவர்களை வங்கியில் பார்த்திருக்கிறேன். அந்த அம்மாவும், புன்முறுவலோடு என்னை நலம் விசாரித்து ஓரிரு வார்த்தைகள் பேசுவார். அந்தப் பெண்ணின் படிப்பு பற்றி நானும் கேட்டு தெரிந்துகொள்வேன்.

வங்கியிலும் மேலாளர் இடமாற்றத்தில் வேறொரு ஊருக்குச் செல்ல, இன்னொருவர் பொறுப்பேற்றுக் கொண்டார்..

கடந்த ஆண்டு எங்கள் திருமண நாளை முன்னிட்டு, ரிங் எடுப்பதற்காக ஊரில் புதிதாக துவங்கியுள்ள நகைக் கடைக்கு மனைவியுடன் சென்ற போது தான் அதிர்ந்து போனேன்.
அந்தப் பெண்... அதே பெண் தான்...! கவுண்ட்டரில் நின்று விற்பனைப் பெண்ணாக நகைகளை வாடிக்கையாளருக்கு காட்டிக் கொண்டிருந்தார். என்னைப் பார்க்காமல் தவிர்த்து விட துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவாறே... அதை... அந்த தவிப்பிலேயே தொடர அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணத்துடன், நேரடியாகச் சென்று... என்னம்மா சௌக்கியமா?! என்று கேட்டவாறே அவள் எதிரில் நின்றேன்.

என் மனைவியிடமும், இவர்களைப் பற்றி ஏற்கனவே சொல்லி வைத்திருந்த காரணத்தால், அந்தப் பெண்ணை அறிமுகம் செய்ய அதிக நேரம் தேவைப்படவில்லை. என் மனைவியும் சற்று அதிர்ந்தவளாய், நீ ஏம்மா இங்க வேலை பார்க்கறே?! என்று கேட்டவுடன், அந்தப் பெண்ணின் விழியோரத்தில் சட்டென நீர்த்துளி எட்டிப் பார்த்தது.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். அந்தப் பெண்ணுக்கு தன் பிரச்சினைகளில் இருந்து வெளியேற ஒரு ஐஸ் பிரேக்கிங் மொமண்ட் தேவை. அது என் மனைவியால் இலகுவாக கிடைத்து விட்டது. என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் அந்தப் பெண்ணை அந்த இடத்தில் பார்த்த கணத்திலேயே இலகுவாக உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் அது அவளுடைய தவறு அல்ல, இந்த அரசாங்கத்தின் குற்றம் என்ற உண்மையை அவளுக்கு உணர்த்தி விட்டால், இனி யாரைப் பார்த்தும் வெட்கப்பட்டு பயந்து ஒழிந்து கொள்ளாமல், தான் எந்த வேலை பார்த்தாலும் அதை சந்தோஷத்துடன் முழு அர்ப்பணிப்புடன் செய்து, அந்தத் துறையில் அந்தப் பெண்ணால் முன்னுக்கு வர முடியும் என்று நம்பினேன்.

உண்மையில் ஒரு இஞ்சினியரிங் படித்த பெண்ணை நகைக்கடையில் வேலை பார்க்க வைத்திருப்பதற்கு, அரசாங்கமே வெட்கப்பட வேண்டும்... அவளுக்கான வேலை வாய்ப்பை அரசாங்கம் தான் உருவாக்கித் தந்திருக்க வேண்டும், மாறாக அவள் இதில் வெட்கப்பட ஏதுமில்லை என்று உணர்த்தி விட்டு வந்தேன். திரும்பி வரும் போது அந்தப் பெண்ணிடம் ஒரு தைரியம் குடிகொள்வதை புரிந்துகொள்ள முடிந்தது.

அதன் பிறகு இன்று தான் அந்தப் பெண்ணையும் தாயாரையும், வங்கியில் வைத்து பார்க்க நேர்ந்தது. நானே பேச்சை ஆரம்பித்தேன். அந்த அம்மா மட மடவென்று கொட்டித் தீர்த்து விட்டார்.

வருடா வருடம், ஃபீஸ்க்கு செக் வாங்கிச் சென்று கல்லூரியில் கொடுத்து... ஓராண்டு கடந்த நிலையிலேயே மாதாமாதம் வட்டியையும் சரியாக கட்டி வந்த நிலையில்... நான்காண்டு முடிந்த பிறகு, வேலை கிடைக்காமல் தான் அந்தப் பெண் மிகவும் அல்லாடியிருக்கின்றார். நூற்றுக் கணக்கான வேலைகளுக்கு அப்ளை செய்வது, பல இண்டர்வியூக்களுக்கு சென்னை, பெங்களூர் என்று சென்று வருவதாக, ஆறு மாதங்கள் அலைந்ததிலேயே, வங்கிக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு சில இடங்களில் வேலை கிடைத்தாலும் சம்பளமாக பத்தாயிரம் தான் கொடுப்பேன் என்கிறார்கள். தனியார் ஹாஸ்டல், சாப்பாடு, மத்த மத்த செலவுக்கெல்லாமே ஆறாயிரம் ஆயிடுது தம்பி. மாசத்துக்கு ஒரு தரம் வீட்டுக்கு வந்துட்டு போனாலே, பஸ் செலவு அது இதுன்னு ஆயிரம் ஆயிடுது. பாக்கி மூவாயிரத்தை வச்சிக்கிட்டு என்ன பண்றது?

அது தான் கொஞ்சம் கூட யோசிக்காம, இங்க நகைக்கடைல ஆளு எடுக்குறாங்க.... ஆறாயிரம் சம்பளம்ன்னு சொன்னாங்க, பஸ்ஸு செலவு ஆயிரம் போனா கூட, ஐயாயிரம் மிச்சமாகும்ன்னு சொல்லி தான் அந்த கடைல சேர்த்து விட்டேன். பாவம் புள்ளயும் நான் பி ஈ படிச்சிருக்கேன் திமிறு காட்டாம அந்த வேலைல போயி சேர்ந்துட்டா, அதுலயும் ஆயிரத்தி ஐநூறு வரைக்கும் பெரிய பெரிய கம்பெனிக்கெல்லாம் இண்டர்வியூ போறது, அப்ளிகேஷன் போடுறதுன்னே ஆயிடுது... மாசத்துக்கு மூவாயிரத்தை பேங்க்ல கட்டிக்கிட்டிருக்கேன்.

நேத்திக்கி தான் பேங்க்லேர்ந்து நோட்டீஸ் வந்திச்சி... அதான் அவள ஒரு ரெண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு இங்க கூட்டிட்டு வந்துருக்கேன். மேனேஜர் என்னென்னவோ சொல்றார். வட்டியோட சேர்த்து, ரெண்டு லட்சத்தி நாற்பது இருக்காம். உங்களை என் கூடப் பொறந்த தம்பியா நெனச்சித்தாம்பா சொல்றேன். கொஞ்சம் மேனேஜர்கிட்ட பேசி இத எப்படி செய்யலாம்ன்னு ஒரு வழிவகை செஞ்சிவுடுப்பா. உடனே கட்டணும்ங்கறார். அதுக்கு நிலத்தை வித்தாத்தான் சரிப்படும், அப்புடியே வித்தாலும் இவ்ளோ பணம் எல்லாம் தேறாது.... அதுவும் உடனே நடக்கற கதையா?! நான் வாங்குன பணத்தை இல்லன்னு சொல்ல மாட்டேன். என் தலைய அடமானம் வச்சாவது கட்டிடுவேன். ஆனா கொஞ்சம் அவகாசம் மட்டும் வாங்கிக் குடுங்க தம்பி

மேலாளரிடம் பேசினேன், பழைய மேலாளரிடம் ஃபோன் போட்டு அவர்களைப் பற்றி இவரிடம் சொல்லச் சொன்னேன். நான் வேண்டுமானாலும் ஷ்யூரிடி கையெழுத்து போடுவதாகச் சொன்னேன். அந்தப் பெண்மணி அவசரமாக குறுக்கிட்டு, வேணாம் தம்பி.. வேணாம்... அது மட்டும் வேணாம்... என் நிலம், ஆடு, மாடு எல்லாத்தையும் கூட வித்து குடுத்திடுறேன்.... ஆனா கடேசி வரைக்கும் யார் பண உதவியும் இல்லாம வாழ்ந்துடனும்ங்கற நெஞ்சுறுதிலேர்ந்து மாறிடக் கூடாது என்று சொன்னது.... எனக்கு பெரியதாக அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை... ஆனால் இந்த புது மேலாளர் சற்று ஆடித்தான் போனார்..!

இல்ல சார். டி ஓ ஆஃபீஸ்லேர்ந்து ஹெவி பிரஷ்ஷர். அதான் எல்லாருக்கும் நோட்டீஸ் அனுப்பிட்டேன். எப்டி பண்ணலாம்ன்னு சொல்லுங்க. நாங்களும் மனுஷங்க தான்.

அவர்கள் நிலயை சுறுக்கமாகச் சொல்லி, மாதம் நாலாயிரம் கட்ட முடியும்ன்னு சொன்னேன்.

வட்டியே மூவாயிரத்தி சொச்சம் வருது சார். பிரின்சிபிள்ல ஒரு ஐயாரமாச்சும் சேர்த்து கட்டிட்டு வந்தா எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல சார்.

அவங்க மாசம் எட்டாயிரம் கட்டுவாங்க சார். அதுக்கு நான் பொறுப்பு. அதுக்கு ஷெட்யூல் போட்டு குடுங்க. அவங்க மாசம் தவறாம கட்டுவாங்க...

அந்த பெண்மணி இடைமறித்து ஏதோ சொல்ல முற்பட், எதுவும் பேச வேண்டாம் வெளில வாங்க பேசுவோம்ன்னு விடுவிடுவென வெளியேறினேன்.

தம்பி இவள வேற இண்டர்வியூ செலவெல்லாம் வச்சிக்க வேணாம்ன்னு சொல்லி அந்த ஐயாயிரத்தை அப்புடியே கட்டிடலாம். நான் பருத்தி போடும் போது வருஷத்துக்கு ஒரு இருவதாயிரம் கட்டிடறேன்... இதுக்கு நடுப்புற அவளுக்கு சம்பளம் கூட கிடைச்சுதுன்னா, அதையும் சேர்த்து கட்டிடறோம் தம்பி.

நீங்க சொல்றத தாம்மா நானும் சொல்றேன்... அந்தப் பொண்ணு ஐயாயிரம், நிங்க சொல்றது மாசத்துக்கு கணக்குப் பண்ணினா ஆயிரத்தி ஐநூறு... பாக்கி மாசம் ஆயிரத்தி ஐநூறு தான் துண்டு விழுது...!

அதுக்கு எங்க தம்பி நான் போவேன்?! சொன்னா சொன்ன படி கட்டுனா தானா நாளை மறுநாள், இங்க மானம் மரியாதையோட வந்து போவ முடியும்?!

எனக்கு வேண்டிய நண்பரோட சின்ன கம்பெனி பக்கத்துல இருக்கு. பெண்கள் தான் அதிகம் வேலை செய்யறதால, உற்பத்தி மேலாளருக்கு நல்லா படிச்ச பொண்ணு இருந்தா நல்லாயிருக்கும்ன்னு போன வாரம் தான் சொன்னார். ஆம்பளைங்கள வச்சா நிறைய ப்ராப்ளம் வருது அதான் பெண்ணாக இருந்தால் நல்லது என்றார். அவர் எட்டாயிரம் சம்பளம்ன்னு சொல்லியிருந்தார். ஆனா பி ஈ படிச்ச பொண்ணு, பத்தாயிரம் குடுத்தாதான் வரும்ன்னு சொல்றேன். அதோட உழைப்புக்கு நான் கேரண்டின்னு சொல்வேன்... ஆனா நகைக்கடை மாதிரி அங்க ஏசி இருக்காது அதை விட வேலை கொஞ்சம் கடினமாத்தான் இருக்கும்... பட்.. சாயந்திரம் 6 மணிக்கெல்லாம் வேலை முடிஞ்சிடும். அதுக்கு மேல இருந்துச்சின்னா ஓவர் டைம் போட்டு குடுப்பாங்க... என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே...

எனக்கு ஓக்கே சார்...! ஹார்ட் ஒர்க் ஒரு ப்ராப்ளமே இல்ல சார் எனக்கு. இதை விட நல்ல சம்பளம், நான் படிச்ச படிப்புக்கு கொஞ்சமாச்சும் சம்பந்தம் இருக்குறா மாதிரி வேலை... அதோட கம்பெனின்னாலே நல்லா வேலை செஞ்சா, எக்ஸ்பீரியன்ஸ் அதிகரிக்க அதிகரிக்க சம்பள உயர்வும் கிடைக்கும்... இங்க நம்ம ஊரு பக்கத்துலயே... டெய்லி இப்ப மாதிரியே வீட்டுக்கு போயிட்டு வந்திரலாம்.... வாங்குற சம்பளத்துல எட்டாயிரம் பேங்க்ல கட்டிட்டு... ஆயிரம் பஸ்ஸுக்கு போக, ஆயிரம் அம்மாக்கு குடுத்திடுவேன் சார்...!

எப்படியாச்சும் அந்த வேலைய வாங்கிக் குடுத்திடுங்க சார்..!

அந்த அம்மா கண்கள் பனிக்க என்னைப் பார்த்தார்...

நான் ஃபோனை எடுத்து நம்பரைப் போட்டேன்... ஹல்லோ... பரந்தாமன் நல்லாருக்கீங்களா?! நீங்க புரொடக்‌ஷன் மேனேஜருக்கு ஒரு கேண்டிடேட் கேட்டிருந்தீங்கள்ல?... பி ஈ படிச்ச பொண்ணு ஒன்னு இருக்கு. இருபதாயிரம் சம்பளத்துல் சென்னைல ஒரு வருஷமா ஒரு கார்ட்டன் பாக்ஸ் கம்பெனில புரொடக்‌ஷன்ல ஒர்க் பண்ணியிருக்கு..! அவங்க அம்மா இங்க பக்கத்துல கிராமத்துல தனியா இருக்கறதால, இங்கயே ஒரு நல்ல ஜாப் கிடைச்சா வந்துடலாம்ன்னு சொன்னுச்சி. எனக்கு ரொம்ப வேண்டியப்பட்டவங்க தான்.

அட்லீஸ்ட் 12 ஆயிரமாவது சேலரி இருந்தா இங்கயே இருந்துடுவேங்குது. ஆனா அருமையான டெடிகேடிவ் ஒர்க்கர். நல்ல ஷார்ப்.... உங்க ஞபகம் தான் வந்தது... என்ன சொல்றீங்க?!

நீங்க கேரண்டி கொடுத்தா ஓக்கே தான் ப்ரோ... பட்... இப்பத்திக்கு பத்தாயிரம் வேணா மாசம் தர்றேன்..! ஒரு ஆறு மாசம் வேலை செய்யட்டும். புரொபேஷனரி பீரியட் முடிஞ்சோடுன அவங்க கேக்குற மாதிரியே 12 ஆயிரம் பண்ணி கொடுத்திடுறேன். ஓகேவா? பேசிப் பாருங்க..!

சரி கேட்டுப் பார்த்துட்டு சொல்றேன்...!

@@@@@@@@@@


டெடிகேட்டட் டு : விஜய் மல்லையா...

காப்பி டு: மோடி மற்றும் ஜெட்லி..!

காப்பி டு: எஜுகேஷன் லோன் வாங்கிட்டு, கல்விக்கடனை ரத்து செய்வேன்னு வாக்குறுதி தந்த திமுகவுக்கு ஓட்டுப்போடாத குடும்பத்தினர்..!

ஓவர் டு:  கல்விக்கடனை வசூலிக்க ஆர்டர் பெற்றிருக்கும் ரிலையன்ஸ்..!



Saturday, June 25, 2016

நிர்மலா பெரியசாமியின் வேட்டி உருவும் பேச்சும், புதியதலைமுறையின் ஊடக தர்மமும்..!


நிர்மலா பெரியசாமி என்ற அதிமுக பெண் பேச்சாளர், புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் அரசியல் விவாத நிகழ்ச்சியில், கருணாநிதி ஏன் சட்டமன்றத்திற்கு வர மறுக்கின்றார்? வந்தால் அவர் வேட்டியை உருவிவிடுவோம் என்ற பயமா?...

என்று பேசி விட்டு... பேசிய பின்பு, தான் பேசியது தவறு என்ற உரைத்த காரணத்தினாலோ அல்லது தனது தவறான பேச்சுக்கு சப்பைக்கட்டு கட்ட வேண்டும் என்ற காரணத்தினாலோ, தான் வாய்தவறி வேகத்தில் கூறிவிட்டேன் என்று வருத்தம் தெரிவிக்காமல், எங்க அம்மா புடவையை உறுவியது போல நாங்கள் செய்ய மாட்டோம் என்று திரும்பத்திரும்பச் சொல்லி தனது வாதத்தை நியாயம் செய்ய முற்பட்டிருக்கின்றார்...!!

பல லட்சம் பேர் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவரும், உலக அளவில் மிக அதிக கால அனுபவமுள்ள சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரரும், உலக அளவில் 13 முறை தோல்வியே காணாத தொடர் வெற்றியாளருமாகிய... அனைத்திற்கும் மேலாக தொண்ணூற்றி மூன்று வயது முதியவரை...

வேட்டியை உறுவிவிடுவார்கள் என்று பேசுவது அதிலும் ஒரு பெண் பேசுவது என்பது என்ன மாதிரியான நாகரீகம் என்றே எனக்குப் புரியவில்லை! அதிலும் ஒரு பெண்ணை தனது கட்சித் தலைவராகக் கொண்டவர் பேசுவது தான் ஆச்சர்யம்..!

திமுகவையோ, அதன் தலைவரையோ எந்த அளவிற்கு ஒருவர் தரம் தாழ்ந்து பேசுகின்றார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கான பதவிகள் பதில் மொய்யாக வைக்கப்படும் என்ற அறிவிக்கப்படாத சட்டம் அதிமுகவில் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக, பல்வேறு உதாரணங்களால் புரிந்துகொள்ள முடிகின்ற நிலையில்...

ஒரு பெரிய பதவியினை எதிர்பார்த்தே, நிர்மலாவும் இப்படி கலைஞரை ஒரு ஆண் மகன் கூட பேசக் கூசிடும் வார்த்தைகளைக் கொண்டு பொதுவெளியில் விமர்சிக்க முனைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகின்றது..!

ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், அதன் தலைமையான ஜெயலலிதாவும், அதன் தொண்டர்களும் இப்படி தரம் தாழ்ந்து பேசுவதையோ, அதனை ஆதரிப்பதையோ அவர்கள் அப்படித்தான், நாகரீகம் தெரியாதவர்கள் என்று கடந்து சென்றாலும், அந்த தொலைக்காட்சி அப்படிப்பட்ட பேச்சாளரை எப்படி அதன் பிறகும் தொடர்ந்து வாதம் செய்ய அனுமதித்து என்பதைத்தான் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

தமிழகத்தில் ஊடகங்களின் நிலை இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து செல்வது என்பது ஏதோ திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் பிரச்சினை அல்ல. அது ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை.

உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீடு என்று சட்டம் போட்டு, பெண்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த பிறகு அது சும்மா ல்லுல்லூல்லாயிக்கு சொன்னேன் என்று திரும்பப் பெருவதாகட்டும், சத்துணவோடு மாம்பழ ஜுஸ் தருவேன் என்று சொல்லி ஓட்டு வாங்கி வென்ற பிறகு, அது முடியாது என்று பின் வாங்குவதாகட்டும், தனது மேயரையோ, சேர்மேனையோ தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களிடமிருந்து பிடுங்கியதாகட்டும்....

இப்படி எடுத்த எடுப்பிலேயே வாக்களித்த மக்களுக்கு அல்வா கொடுக்கும் ஜெயலலிதாவை கண்டிக்கக் கூட வேண்டாம்... அவரது அடிப்பொடிகளாக விவாதத்திற்கு வரும் இப்படி நாலாந்தரமாக பேசும் பேச்சாளர்களைக் கூட கண்டித்து விவாதத்திலிருந்து அவர்களை வெளியேற்றி தனது நேர்மையை, நடுநிலையை காப்பாறிக்கொள்ள துப்பில்லாத தமிழக ஊடகங்கள்...

ஒட்டுமொத்த தமிழகத்திற்கே நாளை தலைகுனிவை உண்டாக்காமல் ஓயாது...!
ஆகவே நிர்மலாக்களை கண்டிக்காத, அல்லது ஊக்கப்படுத்துகின்ற ஊடகங்கள் தமிழகத்திற்கே சாபக்கேடுகள் என்பதை உண்மையான உணர்வுள்ள தமிழர்கள் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.

நிர்மலாக்கள் ஒட்டுமொத்த தமிழக அரசியலுக்கே சாபக்கேடுகள் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்..!

அரசியல் நாகரீகத்தின் வேர்களில் ஆசிட் வீசும் நிர்மலாக்களையும், அவர்களை ஊக்குவிக்கும் அதன் தலைமையான ஜெயலலிதாவையும், அவர்களுக்கு வாய்ப்பளித்து பல்ளிளிக்கும் ஊடகங்களையும், மக்கள் இனிமேலாவது புரிந்து உள்ளாட்சித் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

மக்கள் கைகளில் தான் இந்த அராஜகவாதிகள், அநாகரீகவாதிகளை அடக்கும் வாக்குரிமை என்னும் ஆயுதம் இருக்கிறது. இந்த முறையும் அந்த ஆயுதத்தை சில நூறுகளுக்கு அடமானம் வைத்தால், வாழ்நாள் முழுவதும் அடிமையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கும்.

இன்னும் இரண்டொரு மாதத்தில் இவர்களை அடக்குவதற்கான ஆயுதத்தை இந்த முறையாவது தங்களுக்காக தமிழக மக்கள் பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையாவது அவர்கள் உணர வேண்டும்..!
உணர்வார்கள் என்றே நம்புகிறேன்...!


Friday, June 24, 2016

சுதேசி, விதேசி மாய்மாலமும், பாஜகவின் தில்லாலங்கடி வேலையும்..!


நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்.... ஜனசங்கம் என்ற கட்சி உருமாறி பாரதீய ஜனதா கட்சி என்ற பெயருடன் வாஜ்பாய் அவர்களை முன்னிருத்தி கால் பதித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது அவர்கள் சார்பாக அச்சடிக்கப்பட்ட பிட் நோட்டீஸ்... பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், கோவில்களிலும் விநியோகிக்கப்படும். அதில் ஆங்கிலேயரிடமிருந்து மீட்ட பாரத தாயை மீண்டும் அவர்களுக்கே அடிமையாக்க வேண்டுமா? சுதேசியை மீட்ட நாம் மீண்டும் விதேசிக்கு அடிமையாக வேண்டுமா? இப்படியாகவெல்லாம் இந்திய தேசிய உணர்வை  ஊட்டி....

சுதேசிப் பொருட்கள் எவையெவை? விதேசிப் பொருட்கள் எவையெவை என்றெல்லாம் ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டு....

உதாரணத்திற்கு கோல்கேட் விதேசிப் பொருளை புறம்தள்ளிவிட்டு... டாபரோ வேறு எதுவோ ஒரு பற்பசையான சுதேசிப் பொருளை பயன்படுத்துவோம் என்றெல்லாம் இருக்கும். இதில் தூண்டப்பட்ட பல இளைஞர்கள் அதைப் பின்பற்றும் வழக்கமும் ஏற்படலாயிற்று.

அப்பொழுது எல்லாம் கோகோ கோலா இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடை இருந்த காலம்.

பாரதிய ஜனதா கட்சி தங்களது அடித்தளத்தை பலப்படுத்திக்கொள்வதற்காக, சுதேசி, விதேசி என்ற தளத்தில் மிகப் பலமாக நின்று அடித்து ஆடிக்கொண்டு, மத்திய அரசினை விமர்சித்து மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கி வந்த நேரம் அது...

அது அப்படியே தொடர்ந்து, அதன் பரிணாம வளர்ச்சியாக மதங்கள், கடவுள்கள் என்று அதே சுதேசி, விதேசி பாகுபாடுகள் முன்னெடுக்கப்பட்டு.... சுதேசி மதமான இந்து மதத்தை ஆதரித்து விதேசி மதங்களான இஸ்லாமிய, கிருத்துவ மதங்களை புறக்கணிப்போம் என்பது மாதிரியான பிரச்சாரமாக வலுப்பெற்று... அதன் ஒரு களப்போராட்ட அடையாளமாக பாபர் மசூதி இடிப்பு வரை சென்று...

அவற்றின் பலன்களாக ஓரிலக்கத்திலிருந்து ஈரிலக்கத்திலான பாராளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் பாஜக கூலியாகப் பெற்ற வரலாறெல்லாம் நாம் அறிந்ததே...!

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் பிரதமராக நரசிம்மராவ் அவர்கள் பொறுப்பேற்றவுடன், 
அவருக்கான நிதி சம்பந்தப்பட்ட அனைத்துக்குமாக மன்மோகன் சிங் அடையாளங்காணப்பட்ட நிலையில்.... 
இந்தியா என்றாலே வறுமையின் சின்னமாக உலக நாடுகளால் அடையாளம் காணப்பட்ட நிலையில்... 
இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களில் 99.5 சதவிகிதம் பேர் அடித்தட்டு கூலி வேலைகளுக்கு மட்டுமே செல்லக் கூடியவர்களாக இருந்த நிலையில்...
அப்பொழுது இந்தியாவில் இருந்த ஆயிரத்தில் ஒரு குடும்பத்தில் மட்டுமே டீவி, வாஷிங் மெஷின், டூ வீலர்.. இத்தியாதிகள் இருந்த நிலையில்....
நூற்றில் ஒரு குடும்பத்தினரிடம் மட்டுமே, சைக்கிள், ரேடியோ, வாட்ச் போன்றவை இருந்த நிலையில்...
வேலை வாய்ப்பு உள்ளிட்ட எதுவுமே அனைவருக்கும் சாத்தியமாகாத நிலையில்.., கிட்டத்தட்ட சரிபாதி குடும்பங்கள் மூன்றில் ஒருவேளை சாப்பாட்டை தவிர்த்து வந்திருந்த நிலையில்....
இதற்குமேல் இந்தியாவை ஒரு இஞ்ச் முன்னேற்ற வேண்டுமானாலும், வெளி உதவி தேவை என்ற நிலையில்...

உலக பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட நரசிம்மராவ் அரசு முடிவெடுத்து அதில் கையெழுத்திட்டு, உலகலாவிய வர்த்தக வாய்ப்பிற்கு அனுமதியளித்ததன் காரணமாக பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிக்க காரணமாக அமைந்தார்...!!

ஆனால் அதை அவர் செய்வதற்கு அவர் என்ன மாதிரியான எதிர்ப்பை பாஜக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்டோரிடம் எதிர்கொண்டார் என்றால்... அவர் இந்திய அரசியலின் கொடூரமான வில்லனாக சித்தரிக்கப்பட்டு.... கிட்டத்தட்ட அவரது அரசியல் மற்றும் தனி நபர் வாழ்க்கையே அத்தோடு அஸ்தமனமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு.....

அப்படி சுதேசி பொருட்களுக்காக, இந்தியாவின் சுயசார்பு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஆதரவான ஒட்டுமொத்த அதாரிடியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு பலப்படுத்தியதன் காரணமாக பாஜக பாராளுமன்றத்தில் கணிசமான இடங்களை வென்றதும் நடந்தேறியது..!

பாஜகவை நம்பி உடனடியாக மக்கள் வந்துவிடத்தயாரில்லாத நிலையில்... 96க்குப் பிறகு முதல் கட்டமாக காங்கிரஸ் அல்லாத... ஒரு கூட்டணிக்கு ஒரு முறையும், அவர்களே தம்மைத் தாமே கவிழ்த்துக்கொண்ட நிலையில், பாஜக தலைமையில் ஒரு பலவீனமான கூட்டணிக்கு ஒரு முறையும் மக்கள் வாக்களித்து... அதையும் ஜெயலலிதாவின் அகங்காரத்தில் கவிழ்த்த நிலையில்....

சரி... பாஜகவுக்கு ஒரு முறை ஓரளவிற்கு பலமான கூட்டணி அரசு அமைக்க வாய்ப்பளிப்போமே என்று மக்கள் கடிவாளத்துடன்.... 
அதிலும் பாஜகவுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட திமுகவுக்கு அந்த கடிவாளத்தைக் கொடுத்து ஆட்சியில் அமர்த்தி ஐந்து ஆண்டுகள் ஆள மக்கள் அனுமதி கொடுத்தார்கள்..!

அதாவது இதுவரை நடந்ததை சுறுக்கமாகச் சொல்ல வேண்டுமானால்...

ஜனசங்க இமேஜை மாற்ற பாஜக என்ற புதுப் பெயரோடு... இந்தியா, இந்தியர்கள், இந்திய பொருட்கள், இந்திய மதங்கள், இந்திய கடவுளர்கள் என்று படிப்படியாக தங்கள் வாக்கு வங்கியை மிக மெதுவாக உயர்த்தியபடியே முன்னேறி...
ஒரு கட்டத்தில் இந்திய வளர்ச்சிக்கு காங்கிரஸ் எடுத்த முன்னேற்ற பொருளாதார நடவடிக்கையை மக்களிடம் திசை திருப்பி, குழப்பி பிரச்சாரம் செய்து..,
ஆனாலும் மக்கள் தன்னை முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்ளாத நிலையில்... இடைக்காலமான மூன்று வருடங்களில் இரண்டு ஆட்சி மற்றும் நான்கு பிரதமர்கள் மூலம்... தங்கள் கட்சி மட்டுமே ஒரு மாற்று என்ற எண்ணத்தை மக்கள் மனத்தில் விதைத்து.... அப்படியும் மக்கள் நம்பாமல் போனதால், தனக்கான கடிவாளமாக தங்கள் கொள்கைகளுக்கு நேரெதிரியான திமுகவை தங்கள் கடிவாளமாக மக்கள் முன்னால் நிறுத்தி நம்பிக்கையைப் பெற்று...

முதல் முறையாக பாஜக கூட்டணி அரசை ஐந்து ஆண்டுகளுக்கு வாஜ்பாய் நடத்தினார்...!!

ஆனால் எந்த ஒரு கொள்கையை எதிர்த்து (உலக வர்த்தகமயக்கலுக்கு எதிரான சுதேசிக்கு ஆதரவான) அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ... அதற்கு நேரெதிராக, இவர்கள் விமர்சித்து வெளியேற்றிய நரசிம்மராவ் இந்தியாவுக்கு அளித்த உலக பொருளாதார தடை நீக்கம் என்ற தாராளமயமாக்கலை.... தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்தி.... சிறந்த பொருளாதார நிபுணரான முரசொலி மாறனை காமர்ஸ் மினிஸ்டராக அறிவித்து அவரை உலகம் முழுக்க பயணிக்க வைத்து பன்னாட்டு முதலீடுகளை இந்தியாவில் குவித்து, முதல் முறையாக இந்தியாவின்... இந்தியர்களின் தனிநபர் வருமானத்தையும், வாழ்க்கை வசதிகளையும் உயர்த்தி, ஜன்னலைத் திறந்து விட்டதன் மூலம் உலகின் விஸ்தாரத்தையும், அழகியலையும், வளர்ச்சியையும், இன்பத்தையும் காட்டிக் கொடுத்தது...!!

அதற்கு அடுத்தடுத்து வந்த மன்மோகன் சிங் ஆட்சியில் அந்தப் பாதை அற்புதமாக சீர் செய்யப்பட்டு கட்டுக்கோப்புடன் செயல்பட்டு, 2008இல் உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும் இந்தியாவும், இந்தியர்களும், சிறு அதிர்வைக் கூட உணராமல் காப்பற்றப்பட்ட நிலையில் தான்...

மோடியின் அரசு பதவி ஏற்றது..!

அன்றைக்கு சுதேசி விதேசி என்று சொல்லி மக்களை நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்த வாஜ்பாய்..., தான் எதைக் கொண்டுவந்ததால் பலியாக்கப்பட்டாரோ அதே நரசிம்மராவ் கொண்டு வந்த அன்னிய முதலீட்டு வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் ஆட்சியை பலப்படுத்திக் கொண்டு விட்டு....

அதற்கடுத்து வந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தத்தை மிகக் கடுமையாக விமர்சித்து மீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடித்த நிலையில்....

மீண்டும் அதே பாஜகவின் மோடி அவர்கள்...

மன்மோகன் சிங் தனது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையை, நிறுத்தி வைத்திருந்த பாதுகாப்பு எல்லையில் இருந்து டேஞ்சரஸ் ஸோன் என்ற நிலைக்கு உயர்த்தி....

அதாவது.... அம்பானி, அதானி, மல்லையா போன்றோருக்கும், வெளிநாட்டினருக்கும் மட்டுமே பயனளிக்கும் நிலைக்கு....

பெருவாரியான துறைகளில் முழுமையான அன்னிய முதலீட்டுக்கு அனுமதியளிப்பதன் மூலம்.... அதிலும் குறிப்பாக பாதுகாப்புத் துறையில் முழுமையான அன்னிய முதலீட்டுக்கு கதவைத் திறப்பதன் மூலம்... இந்திய பொருளாதார சிற்பியான ரகுராம் ராஜனை சற்றே தள்ளியிரும் பிள்ளாய் என்று நகர்த்துவதன் மூலம்...

கிட்டத்தட்ட இந்தியா என்பது ஒரு அபாயத்தை நோக்கி செல்கிறதோ என்ற அச்சத்தையே ஏற்படுத்திவிட்டார்..!

ஒரு கட்சி தான் ஆட்சி அமைக்க யாருடன் வேண்டுமானாலும் மாறி மாறி கூட்டணி அமைக்கலாம். ஆனால் அக் கட்சியே தான் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணத்தை கட்டியம் கூறும் கொள்கைகளை மாற்றிக்கொள்ளலாமா?!

திமுக என்ற கட்சி எந்தக் காலத்திலும் தன்னுடைய சமூகநீதி கொள்கையை எப்படி கை விடாமல் நிற்கிறதோ... அதேப் போன்று தானே பாஜகவும் தனது சுதேசிக் கொள்கையில் நின்றிருக்க வேண்டும்?!

சரி... ஆரம்பத்தில் தாங்கள் எதிர்த்த விதேசி பொருட்களை ஏற்றுக்கொண்ட பாஜகவும் மோடியும், விதேசி நிறுவனங்களை ஏற்றுக்கொண்ட பாஜகவும், மோடியும்....
அதேப் போன்று விதேசி மதங்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுமா?! ஏற்றுக்கொள்வார்களா?!

டாட்..!


Wednesday, June 22, 2016

ஜெயலலிதா, ஸ்டாலின், எதிர்க்கட்சி, கடவுள்... இன்னபிற..!


தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை...

விவசாய சங்கத்தினர் வந்து சந்தித்து, அவர்களது விவசாயக் கடன் தள்ளுபடி கோரிக்கையை சட்டமன்றத்தில் வலியுறுத்தி பெற்றுத் தருமாறு கோரிக்கை வைக்கின்றார்கள்..!

சிறு, குறு தொழில் முனைவோர் வந்து சந்தித்து, தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மனு கொடுக்கின்றார்கள்..!

இன்றைக்கு பால் உற்பத்தியாளர் சங்கத்தினரும் வந்து தளபதியைச் சந்தித்து கோரிக்கை வைக்கின்றார்கள்...!!

இப்ப தமிழ்நாட்டுல என்ன தான் நடக்குது?!

மக்களுக்கே தெரியுது...! ஸ்டாலின் தான் தங்களுடைய முதல்வர் என்று...!!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே தென்படவில்லை - ஜெயலலிதா..!

இப்போ பார் கண் கொள்ளா அளவிற்கு உன் எதிரே எதிரிகள் நிரம்பி வழிய வைத்து விட்டேன் - கடவுள்..!

முதல்வர் பதவியின் மேல் எனக்கு ஆசையே இல்லை. அது தானாக என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டது - ஜெயலலிதா..!

கவலைப்படாதே நீ ஆசைப்படாதது விரைவில் உன்னைவிட்டு விலக ஆசீர்வதிக்கிறேன் - அதே கடவுள்..!

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக இப்படி ஜெயித்தால் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன்... ஜெயலலிதா (நக்கீரன் செய்தியில்)

உன் விருப்பப்படியே நடக்கட்டும் ஆமென் - அதே கடவுள்.


Tuesday, June 21, 2016

முரண்பாடுகளின் மொத்த உருவம்.. கலைஞரா? ஜெயலலிதாவா?!


இப்படி ஒரு வாக்கியத்தை கலைஞருக்கு எதிராகச் சொன்னால், தன்னுடைய தலைவி ஜெயலலிதாவின் ஒட்டு மொத்த முரண்பாடுச் செயல்களும் மக்கள் மனக்கண் முன்னே வரிசை கட்டி கடந்து போகுமே என்று செம்மலைக்கு தெரியாமல் போனது தான் வியப்பாக இருக்கிறது..!

எம் ஜி ஆர் இனி சரிப்பட்டு வர மாட்டார், அவரை நீக்கி விட்டு என்னை முதல்வராக்கவும் என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தை மறை(ற)த்(ந்)து விட்டு... அவர் இறந்த பின்னால், தானும் அவரோடு உடன்கட்டை ஏறி விடலாம் என்று எண்ணினேன் என்று ப(வி)ம்மியதை விடவா ஒரு முரண் இருந்துவிடப் போகிறது?!

எம் ஜி ஆருக்கு ஜானகி அம்மாள் தான் மோரில் விஷம் வைத்துக் கொன்றார் என்று வாய் கூசாமல் சொல்லிவிட்டு, கொஞ்ச நாளிலேயே அவருடன் சமரசமாகி இணைந்து அதிமுகவை கைப்பற்றியதை விடவா இன்னொரு முரண்பாடு இருந்துவிடப் போகிறது?!

ராஜீவ் காந்தி கொலைக்கு திமுகவின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயல்பாடு தான் காரணம் என்று சொல்லி மக்களை மதி கலங்கச் செய்து முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு....
ராஜீவ் காந்தி கொலையால் தான் ஆட்சியைப் பிடித்து முதல்வராகவில்லை என்று ஒரே போடாக போட்டதை விடவா வேறொரு முரண்பாடு இருக்கப் போகிறது?!

91 தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவளித்ததாகச் சொல்லி ஆட்சியைப் பிடித்து விட்டு..., 2011 தேர்தலில் அதே விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவளிக்கவில்லை என்று கூறி ஆட்சியைப் பிடித்ததை விடவா மோசமான முரண்பாட்டை நாம் காணப்போகிறோம்?!

ஒரு இளைஞனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து, உடனடியாக அவனுக்கு பிரம்மாண்டமாக திருமணமும் நடத்தி.... கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவன் மேலேயே கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளி, மகன் அங்கீகாரத்தை ரத்து செய்ததை விடவா இன்னொரு முரண்பாட்டை நாம் காணப் போகிறோம்?!

உதிர்ந்த ரோமங்கள் என்று வசை பாடிய நெடுஞ்செழியன் உள்ளிட்டோரை மீண்டும் தலையில் ஒட்ட வைத்துக் கொண்டதை விடவா வேறு முரண்பாடு இருக்கிறது?!

டான்ஸி வழக்கில் தன்னுடைய கையெழுத்தே அது இல்லை என்று சொல்லி குட்டுப் பட்டு மாற்றிக் கொண்டதை விடவா இன்னொரு முரண்பாட்டை தமிழகம் கண்டுவிடப் போகிறது?!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்று விரட்டி விரட்டி கைது செய்து தடா, பொடா என்றெல்லாம் வருடக் கணக்கில் உள்ளே தள்ளிய வைக்கோவை 2001 வெற்றிக்காக கூட்டணியில் சேர்த்துக்கொண்டதை விடவா இன்னொரு முரண்பாடு இருந்துவிடப் போகிறது?!

மதமாற்ற தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடைச் சட்டம் போன்றவற்றை ஆரவாரமாக கொண்டு வந்து விட்டு, 2004 தேர்தலில் கிடைத்த ஆப்பிற்குப் பிறகு தடாலடியாக வாபஸ் பெற்றதை விடவா இன்னொரு முரண்பாட்டை மக்கள் கண்டிடப் போகிறார்கள்?!

திமுக ஆட்சியில் சோனியா காந்தி, நளினிக்கு காட்டிய கருணையை அசிங்கமாக விமர்சித்து விட்டு, இப்பொழுது ஏழு பேர் விடுதலைக்காக தீர்மானம், இத்தியாதியெல்லாம் போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதை விடவா இன்னொரு நகை முரண் இருந்துவிடப் போகிறது?!

மெட்ரோ ரயில் வேஸ்ட்... மோனோ ரயில் தான் பெஸ்ட்.. அதை நான் கொண்டு வருவேன்னு சொல்லிட்டு, கடைசி வரை அதற்காக சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாமல், மெட்ரோ ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டி போஸ் கொடுத்ததை விடவா வேறொரு முரண் இருந்துவிடப் போகிறது?!

இப்பொழுது கூட கலைஞர் சட்டமன்றத்திற்கு வருவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்ன்னு சொல்லி ஊடகங்களின் பாராட்டினைப் பெற்று விட்டு.... சட்டமன்ற விதிகளை காரணம் காட்டி சின்னபுள்ளத்தனமான அரசியல் விளையாட்டு விளையாடுவதை விடவா வேறொரு முரண்பாட்டை தமிழக மக்கள் கண்டுவிடப் போகிறார்கள்?!

கலைஞர் முரண்பாடுகளின் மொத்த உருவம்ன்னு சொன்ன செம்மலைக்கு.... அவர் தலைவின் முரண்பாட்டுப் பட்டியலில் ஒரு சிறு சாம்ப்பிள் மட்டுமே மேலே உள்ளது என்பதும் நன்றாகத் தெரியும்...!!

இனிமேயாச்சும் சட்டமன்றத்தில் இந்த மாதிரி சின்னத்தனமான அரசியல் செய்யாமல், சீரியஸான மக்கள் பிரச்சினையை பேசுங்க ஆஃப்பீஸர்...!


Saturday, June 18, 2016

மு.க.ஸ்டாலின் கார் வேணாம்ன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?!


தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசால் தமக்கு கொடுக்கப்பட்ட இன்னோவா காரையும் இரு ஓட்டுனர்களையும் வேண்டாம் என்று மறுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
இதில் என்ன தவறு இருக்கிறது?!
நடுநிலை நக்ஸ் எல்லாம் சொம்பை தூக்கிக்கிட்டு வீக் எண்ட் அக்கப்போருக்கு கெளம்பிட்டாய்ங்க...!!
அது எப்படி... இப்படி சொல்லலாம். அரசை அவமதிப்பது போல் அல்ல்வா இருக்கிறது??!!
இவர் வசதியானவர் என்றால் இவர் வசதிக்கு அரசு பெரிய பெரிய கார் எல்லாம் கொடுக்க முடியுமா??!!
கார் விஷயத்தில் கூட அரசுக்கு இணக்கமாக இல்லாதவர் எப்படி ஒரு நல்ல எதிக்கட்சித் தலைவராக நாணயமாக செயல்படுவார் என்று நம்புவது??!!
இப்டிக்காஆஆஆஆ.... இன்னும் நிறைய ஆட்டுப் புழுக்கை மாதிரி எழுதி் போட்டுக்கிட்டே போயிட்டிருக்காங்க, இந்த நல்லவிங்க எல்லாம்...!!
ஏம்பா நல்லவிங்களா... உங்களுக்கு எல்லாம் நாட்டுல நடக்குற பிரச்சினை வேற எதுவுமே கண்ணுக்கு தெரியலையா?!
ஒரே வாரத்துல மூனு தடவை பெட்ரோல், டீசல் விலைய ஏத்தியிருக்காரே மோடி அதெல்லாம் தெரியலையா?
ஜெயலலிதா டெல்லி விசிட், பிரதமர் சந்திப்பு பத்தியெல்லாம் எதுவுமே புரியவில்லையா?
500 டாஸ்மாக் கடையை உனடியா மூடுவேன்னு சொல்லிட்டு இன்னமும் இழுத்துக்கிட்டிருக்காங்களே... அதெல்லாம் தெரியலையா?
தமிழகம் முழுக்க அறிவிக்கப்படாத மின் வெட்டு தினம் 4 மணி நேரம் இருக்கே அது கூட தெரியலையா?
இந்த மாச மின் கட்டணம் கொஞ்சம் ஜாஸ்த்தியா வந்துருக்கே அதெல்லாம் தெரியலையா?
சென்னைல சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிதே அதெல்லாம் தெரியலையா?
பருப்பு விலை, தக்காளி விலை எல்லாம் மூனு மடங்கு உயர்ந்திருக்கே அதெல்லாம் தெரியாதா?
இந்தியாவிலேயே மூத்த சட்டமன்ற வாதியும், உலக அளவில் சட்டமன்ற அனுபவத்தில் வேறு எவரையும் விட நீண்ட அனுபவம் கொண்டவருமான கலைஞருக்கு அவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு உரிய இடத்தை சட்டமன்றத்தில் அளிக்காமல், நொள்ளை நொட்டை காரணங்களை, விதிமுறைகளை அடுக்கிக் கொண்டிருக்கும் அதிமுகவினர் பற்றி தெரியவேயில்லையா?
சபாநாயகர் இருக்கையிலேயே விதியை மீறி சசிகலாவை அமர வைத்த விதி மீறலுக்குச் சொந்தக்காரர்கள் இதற்கு மட்டும் விதியை துணைக்கு அழைப்பதைப் பற்றி புரிந்துகொள்ள இயலவில்லையா?
தமிழக அரசுக்கு முன்னால் இருக்கின்ற மிக மோசமான நிதி நெருக்கடி பிரச்சினை பற்றி கண்ணே தெரியவில்லையா?
இன்னும் இது மாதிரி ஏகப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் விட்டுவிட்டு.... ஸ்டாலின் அரசு வாகனத்தை வேண்டாம் என்று மறுத்தது தான் இப்போ உங்களுக்கு பெரிய பிரச்சினையா தெரியுதா?!
தனக்கென்று சொந்தமாக ஒரு வாகனம் இருக்கின்றது அதற்கான எரிபொருளுக்கும், மற்ற செலவினங்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் செலவு செய்ய தனக்கு போதிய வருமானம் இருக்கின்றது.....! இந்த நிலையில், தேவையில்லாமல் அரசு பணத்தை தான் ஏன் விரயம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்..., அந்த பணத்தை வேறு நல்ல மக்கள் நல திட்டங்களுக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளலாமே என்ற சமூக சிந்தனையோடு அதை அவர் மறுத்தால்....
அதற்கெல்லாம் கூடவா வியாக்கியானம் பேசுவீர்கள்?!
அரசு வாகனம் கூடவா வேண்டாம் என்றார்?!
தனது வாகனத்தில் சைரன் விளக்கு கூட வேண்டாம் என்று தானே சொல்லிவிட்டார்...!! பாண்டிச்சேரியில் இனி சைரன் கார் கிடையாது என்று கிரண்பேடி சொன்னவுடன் ஆஹோ... ஓஹோ... பேஷ் பேஷ் என்று உச்சா கொட்டினவன் எல்லாம் இதுக்கு மட்டும் ஏன் ரிவர்ஸ் கியர் போட்டு பம்மாத்து காட்டுகின்றீர்கள்?!
உங்களுக்கு எல்லாம் என்ன தான் பிரச்சினை?!
தமிழ்நாடு உருப்படவே கூடாது. இன்னும் கொஞ்சம் சிம்ப்பிளாக சொல்லணும்ன்னா, கண்டதுக்கு எல்லாம் ஜெயலலிதாவை தூக்கிப் பிடித்தது போக, எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் நல்ல காரியத்தைக் கூட விஷமத்தனமாக விமர்சித்து, ஜெயலலிதாவை நல்லவராக காட்ட முயற்சித்து.... அந்த ஜெயலலிதவை திருந்தவே விட மாட்டீர்களா?!
எந்த ஆங்கிள்ல போனாலும் அந்த அம்மாவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து, அவருக்கு எதிரானவர்களை கண்ணை மூடிக்கொண்டு விமர்சிப்பதைப் பார்த்தால்....
அந்தம்மாவை தன் தவறுகளில் இருந்து மீளவே முடியாத புதைகுழியில் தள்ளாமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறது...!!
இரண்டாவது முறை ஆட்சியில் அமர்ந்திருக்கும் அதிமுகவை... இனி எந்தத் தவறானாலும் கடந்த ஆட்சியின் குறைபாடு என்று சொல்லி தப்பிக்க வைக்க முடியாத நிலையில்...., இப்படி அற்ப விஷயங்களை... அதிலும் ஆரோக்கியமாக பார்க்க வேண்டிய நல்ல விஷயங்களை... அவதூறாக பேசுவதன் மூலம் ஈடு கட்டிவிடலாம் என்று நினைத்தால்..... உங்கள் முட்டாள் தனத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...!

Friday, June 17, 2016

தினமணியும்... அதீத சுயசாதிப் பாசமும்..!



கடந்த ஒன்பதாம் தேதி மாலை மூன்று மணி நேரம் சென்னை தீவுத் திடல் புத்தக கண்காட்சியில் நானும் என் மனைவியும்... சஞ்சாரம் செய்தோம்..!

நிறைய பார்த்தோம், கேட்டோம், அறிந்தோம்... வாங்கினோம்.... அதையெல்லாம் பற்றி தனித்தனிப் பதிவாக எழுத வேண்டும். அதற்கு முன்னால் இந்த காண்ட்ரவர்ஷியல் அவதானிப்பை அவசரமாக பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற கோபத்தில் தான் இதை பதிவு செய்கின்றேன்...!

சுற்றி வந்த போது... தினமணி ஸ்டால் வந்தவுடன் சற்றே மிரண்டு தான் போனேன். முழு ஸ்டாலுக்குமான பேக் ட்ராப் என்று பார்த்தால்.... அவர்களுடைய ஒரு நாள் நாளிதழின் முதல் பக்கம்..... 

அந்த முதல் பக்கத்தில் ஜெயலலிதாவுக்கான விளம்பரம்....!!!!!! 

விளம்பரம் என்றால் அதிமுக கொடுத்தது இல்லை... இவர்களாகவே செய்தி வடிவில் மக்களை அதிமுகவுக்கு ஆதரவாக மடைமாற்ற பதிவு செய்யும் கொட்டை எழுத்துச் செய்திகள்...!

500 மதுக்கடைகள் மூடல்.... மற்றும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்.... என்ற ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்வின் டுபாக்கூர் அறிவிப்பைத்தான் தங்களது விளம்பரமாகவும்....

வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுகவின் முதன்மை விளம்பரமாகவும் வைத்திருந்தார்கள்...!

தமிழகத்தின் ஆகச்சிறந்த நடுநிலை அச்சு ஊடகம் என்று சொல்லிக்கொள்ளும் தினமணி.... அதிமுகவின்.... குறிப்பாக ஜெயலலிதா என்ற சுயசாதிப் பெண்ணுக்கான செய்தித் தொடர்பு செயலகமாக செயல்படுவதைப் பார்த்தவுடன்....

கலைஞரை இன்னமும் கருணாநிதி என்று சொல்லிக்கொண்டு நடுநிலை வேடமிடும் சன் ஊடகமும்...., முக்கியமான நேரங்களில் கூட லேகிய வியாபார விளம்பர ஸ்லாட்டும், கல்விச் சேவை, ஸ்டாக் மார்கெட் சேவை வியாபாரமும் செய்யும் கலைஞர் டீவியையும் நினைத்து......

மெர்சலாயிட்டேன்....!!!

எத்தனை தொண்டர்கள்....?! சில நாட்களில் மூன்றில் ஒரு வேளை சாப்பாட்டிற்கே அம்மா உணவத்தை தேடி ஓடும் தொண்டர்களும்..., ஐந்தாயிரம் சம்பளத்தில் ஐநூறு ரூபாய்க்கு டேட்டா கார்டு போட்டு திமுகவுக்கு ஆதரவாக தளமாடும் தொண்டர்களும் இருக்கின்ற கட்சியில்..... 

சன் மற்றும் கலைஞர் டீவி எங்கே???!!!! 

தன்னுடைய இத்தனை கால நற்பெயரையே தன் இனப்பெண்மனிகான அடமானம் வைத்து ஆதரவு திரட்டும் தினமணி எங்கேஏஏஏஏஏஏஏ???!!!

ஆரியத்தை ஏன் இன்னமும் திராவிடத்தால் வெற்றிகொள்ள இயலவில்லை என்று எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பிக்கிறது... சற்றே ஆழமான மன வேதனையுடன்...!


Thursday, June 16, 2016

சம்ஸ்கிருதம் கத்துக்கிறோம்.. பட் இந்த டீலுக்கு ஓக்கேவா?!


சமஸ்கிருதம் நாங்க கத்துக்கணும்ன்னு நீங்க சொல்றத நாங்களும் ஏத்துக்கறோம்... கத்துக்கறோம்...!

பட் ஒன் கண்டிஷன்...

சமஸ்கிருதம் நாங்க கத்துக்கிட்டா.... கத்துக்கிட்டவங்களுக்கு எல்லாம் அரசாங்கம் ஒரு சர்டிஃபிகேட் வழங்கணும். 

அந்த சான்றிதழ் வச்சிருக்குற அனைவரையும் பதிவு மூப்பு அடிப்படையிலோ அல்லது நுழைவுத் தேர்வு வைத்தோ.... தமிழக கோவில்கள் அனைத்திலும் அர்ச்சகர்களாக நியமிக்கனும்...! 

ஓக்கேவா?!

அதுல முக்கியமான விஷயம் என்னன்னா????

SC, MBC, BC, OC... இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தான் அர்ச்சகர் வேலை கொடுக்கனும்.

இதுல இன்னோரு முக்கிய விஷயம் என்னன்னா????

சமஸ்கிருதம் படிச்சவிங்களுக்கு எண்ட்ரன்ஸ் தேர்வு வச்சி.., அதுல அதிக மார்க் வாங்குறவனுக்கு..., ரேங்க் அடிப்படையில் அதிக வருமானம் உள்ள பெரிய பெரிய கோவில்களில் அர்ச்சகர் வேலை கொடுக்கணும்...!!  ரேங்க் வாங்காதவங்களுக்கு எல்லாம் தெரு முக்குகளில் இருக்கும் சின்ன கோவில்களில் அர்ச்சகர் வேலை கொடுத்தால் போதும். 

ஓக்கேவா???!!!

வாங்கடியோவ்.... எங்காளுங்க பத்து லட்சம் பேருக்கு உடனடி வேலை வாய்ப்பு இருக்கும் போது... நீங்க சொல்ற சம்ஸ்கிருதம் என்ன? ஜப்பான் மொழிய கூட கத்துக்க நாங்க தயாரா இருக்கோம்...!!

டீலா? நோ டீலா?!