Friday, October 12, 2012

வறண்ட வாழ்க்கை....! இருண்ட தமிழகம்.....!

கடந்த நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இப்பொழுது தான் கரண்ட் வந்திருக்கு. இன்னும் ஒரு மணி நேரத்தில் மீண்டும் போய்விடும்(((  ஒரு நாளின் 24 மணி நேரத்தில் வெறும் 6 லிருந்து 8 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது.

இது தான் சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் இன்றைய நிலை....

சிறு குறு தொழில் செய்வோர்கள், வணிகர்கள், சேவைத் தொழிலில் ஈடுபட்டிருப்போர், இங்கெல்லாம் வேலை செய்வோர் என்று அனைவர் மனங்களிலும் ஒரு விதமான பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டதை கண்கூடாக காண முடிகிறது.

மின்சார துறையினரிடம் பேசும் போது நம்பிக்கையான பதில் அவர்களிடமிருந்து வராததே அனைவரின் இந்த பயத்திற்கும் காரணம்.

அரசும் அதன் தலைமையும் இது பற்றி வாயே திறக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், இப்படி ஒரு பிரச்சினை இல்லவே இல்லை என்பது போல வேறு வேறு விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதும், மக்கள் சுபிட்சமாக இருப்பது போல பேட்டி அளிப்பதும்.... மக்களை இன்னும் பெரிய அளவில், தங்கள்  நடைமுறை வாழ்க்கையை எதிர் கொள்வது பற்றி அச்சப்பட வைத்திருக்கின்றது.

சில பல லட்சங்கள் முதலீட்டில் சிறு தொழில் செய்பவர்கள் பத்திலிருந்து ஐம்பது ஊழியர்கள் வரை பணியிலமர்த்தி பொருட்களை உற்பத்தி செய்கின்றார்கள். பகல் வேலை நேரத்தில் பெரும்பாலும் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதால், நான்கில் ஒரு பங்கு உற்பத்தியைக் கூட இவர்களால் முழுமையாக செய்ய முடிவதில்லை.

அதனால் மூன்று பங்கு ஊழியர்களின் ஊதியமானது நட்டமாக வந்து தலையில் இடிபோல் இறங்குகின்றது. அதனால் பெரும்பாலான சிறு குறு தொழிற்சாலைகளில் பாதி அளவிற்கு மேல் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுக் கொண்டு அது செயல் முறைக்கும் வந்து விட்டது.

அப்படி வேலையிழப்பவர்களின் நிலைமையை எழுத வேண்டுமானால், பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம், ஆனால் அது நிமித்தம் மிக விரைவில் பெரிய புரட்சி வெடிப்பதற்கான சூழ்நிலையை அரசும் அதன் ஊடகங்களும் எவ்வளவு பெரிய திரை போட்டு மறைத்தாலும் தடுக்க முடியாது.

ஊழியர் எண்ணிக்கையைக் குறைத்து விட்டதால் அந்த குறு தொழில்கள் லாபமீட்டுகின்றனவா? என்றால் அதெல்லாம் இல்லை என்பதே பதில். பெரிய நட்டம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அவ்வளவே!

எந்த ஒரு நல்ல லாபம் ஈட்டும் நிறுவனத்திற்குமே உற்பத்தி அல்லது விற்பனையில் கால்பாகம் குறைந்தாலே பிரேக் ஈவன் எனப்படும் லாப-நட்டமில்லாத அந்த நிலைக்குக் கீழே சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இப்பொழுது உற்பத்தி வெறும் கால்பாகத்திற்கு சுறுங்கி விட்டதால், பெரும் நட்டம் என்ற நிலைக்கு இந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த நட்டத்தோடு இவர்கள் இன்னமும் தொழிலை மூடிவிட்டு ஓடாததன் காரணமென்ன?

ரொம்ப சிம்ப்பிள். இவர்கள் அனைவருமே புலி மேல் சவாரி செய்பவர்கள் தான்! வங்கிக் கடன், கொள்முதல் கடன், வரவேண்டிய பாக்கி, தன் குடும்பச் செலவுகள், பிள்ளைகளின் எதிர்காலம், மானம், மரியாதை என்று அனைத்துமே ஒரு புலியாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சி என்ற வடிவிலேயே இருக்கிறது.

அதை விட்டு இறங்கினால் அத்தனையும் கடித்துக் குதறிவிடும் அபாயம் மிகத் தெளிவாக இருக்கிறது. அதனால் இயன்ற வரை மூச்சைப் பிடித்து தாக்குப் பிடிக்க முயன்று கொண்டிருக்கின்றார்கள். இதற்கு ஒரு விடிவு காலம் வராதா? என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சேமிப்புகள் இருக்கும் வரையில் சமாளித்துப் பார்த்து விடுவது. அடுத்ததாக தங்கம் இருக்கின்ற வரை தற்காத்துக் கொள்வது என்ற முடிவில் இருக்கின்றார்கள். 

இந்த நிலையில் தான் அரசின் பாரா முகமும், தங்களுக்காக குரல் கொடுக்க  கூட முன் வராமல் அரசின் அராஜகப் போக்கால், நமக்கெதற்கு வம்பு என்று எதிர்க்கட்சிகள் பயந்து பதுங்கும் சூழ்நிலையும், இவர்களை ஒரு வித அச்ச உணர்வுக்கு கொண்டு சென்றுள்ளது.

இப்படி சிறு குறு தொழில் செய்பவர்கள் நிலையாவது பரவாயில்லை. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒப்பேற்றி விடுவார்கள். ஆனால் ஓரிரு வேலை ஆட்களை வைத்துக் கொண்டு, சில்லரை வர்த்தகத்திலும், சேவை வணிகத்திலும், விற்பனை வணிகத்திலும் ஈடுபட்டிருக்கும் பல லட்சம் தொழில்முனைவோரின் கதியும் அதோ கதிதான்! 

ஏனென்றால் அவர்களால் மாத வாடகையே முழு வியாபாரமும் நடை பெற்றால் தான் தர முடியும் என்ற நிலையில் தான் வரவு செலவும் இருக்கும். தினமும் 300 ரூபாயாவது வீட்டிற்கு எடுத்துச் சென்றால் தான் குடும்பம் சந்தோஷமாக வாழ முடியும். தினம் கூலி கொடுத்தால் தான் வேலையாள் அடுத்த நாள் வேலைக்கு வருவான்!

இந்த மாதிரி மின் தடை இன்னும் ஒரு மாதம் தொடர்ந்தாலே இவர்கள் கதையெல்லாம் கந்தையாகிவிடும்.

மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று தான் வாக்களித்தார்கள் இந்த மக்கள்......

உண்மையிலேயே இது மிகப் பெரிய மாற்றம் தான். தற்பொழுது 60 வயதுக்குள்ளாக இருக்கும் தமிழக தமிழர்கள் எவரும் கண்டிராத பெரிய மாற்றம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.....

வறண்ட வாழ்க்கை....!   இருண்ட தமிழகம்.....!

4 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

நூறாண்டு பேசும் இந்த ஆட்சியின் ஓராண்டு வேதனையை. சட்டிக்கு பயந்த மக்கள் இப்போது நேரடியாக அடுப்பிலேயே விழுந்துட்டாங்க.

ரஹீம் கஸ்ஸாலி said...

நூறாண்டு பேசும் இந்த ஆட்சியின் ஓராண்டு வேதனையை. சட்டிக்கு பயந்த மக்கள் இப்போது நேரடியாக அடுப்பிலேயே விழுந்துட்டாங்க.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் என்னனென்ன மாற்றங்கள் வரப்போகுதோ பார்ப்போம்

நன்பேண்டா...! said...

என்ன செய்வது நமது குரல் ஆட்சியாளர் காதுக்கு எட்டவில்லையே. நாம் கரண்ட் இல்லமல் வால பழகிகொள்ள வேண்டியதுதான் வெரு வழி இல்லை