Monday, January 28, 2013

மோட்டுவலையப் பார்த்து யோசிச்சது...!!

அப்பப்ப நடக்குற சமுக மற்றும் நமது சொந்த பிரச்சினைகள் அல்லது நிகழ்வுகளை ஒட்டி, என் மனம் ஏற்றுக் கொண்ட கருத்துக்களை எல்லோரையும் போல் சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம்.....

அவற்றிலிருந்து ஒரு சிலவைகளின் தொகுப்பு தான் மேற்படி தலப்பில் சமீபமாக நான் பதிவு செய்யும் வரிசையில் இந்தப் பதிவும். மற்ற தளங்களில் பதிவிடப்படாத சில விஷயங்களும் கூட இதில் வரிசை கட்டும்!
***********************************************


சன் டீவியில் நேற்றிலிருந்து (27-01-13) சன் சிங்கர்என்ற ஒரு நிகழ்ச்சியை ஒ(லி)ளி பரப்புகின்றார்கள்......   பாதியிலிருந்து தான் பார்க்க ஆரம்பித்தேன்... ஏனோ மனசுல பச்சக்குன்னு உட்காரல!

ஆனா இன்னிக்கு தேதில உச்ச பாடகர்களான கார்த்திக், ரஞ்சித் எல்லாம் வந்திருந்து பாடியது பிடிச்சிருந்திச்சி. அவங்கள்லாம் பத்து ஆண்டுக்கு முந்தி சன் டீவில வந்த சப்தஸ்வரங்களின் தயாரிப்புகள் தான் என்று சொல்லி காட்டப்பட்ட அந்த க்ளிப்பிங்ஸைப் பார்த்த போது ரொம்ப வியப்பாக இருந்தது!

அப்போ அது ரொம்ப ஃபேமஸ். ஒட்டு மொத்த தமிழகமும் அந்தக்கால ஒளியும் ஒலியும்முக்கு பிறகு டீவி முன் திரண்டிருந்தது என்றால் அது சப்தஸ்வரங்களுக்காகத் தான் இருக்கும். இப்பொழுது விஜய் டீவியை சொல்வது போல, அப்பொழுதும் பாடகர்களை தேர்வு செய்வதில் ரமணன் பார்ஷியாலிடியோட தலையிடுவதா பேச்சு இருந்தது.....

ஆனாலும் ராமாயணம், மஹாபாரதத்தை விட அந்த ஷோவை அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு பார்த்ததை மறுக்க முடியாது....

ஆனந்த கீதன், ரெகோ, ஜேம்ஸ் வசந்த், ரபி பெர்னார்ட், பெப்சி உமா, என்று ரியாலிடி ஷோக்களில் வெளுத்து வாங்கிய வல்லுனர்கள் பலர் சன் டீவியை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட வரிசையில் ரமணனும் சேர்ந்தது தான் துரதிருஷ்டம்.....

ஆனால் சினிமாக்களும், சீரியல்களும் மட்டும் போதும் என்று அடுத்தடுத்து வந்த நிர்வாகிகள் எடுத்த முடிவு தான் சன் டீவிக்கு போட்டியாக விஜய் மற்றும் இன்னபிற சேனல்களும் நிலைத்து நிற்பதற்கும் வளர்ந்து வருவதற்கும் காரணமாய் அமைந்து விட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை.....

இன்றைக்கு அழுது வடிந்த சன் சிங்கரைப் பார்த்தவுடன் இதையெல்லாம் எழுதனும்ன்னு தோனியது....  அதான்!!!!

****************************************************** 

ச்சே இந்த அம்மா தான் கமலுக்கு எதிரா படத்தை தடைசெஞ்சிட்டாங்கன்னா, இந்த கலைஞரும் கமலுக்கு எதிரா இருக்குறத நெனச்சா தான் கடுப்பு கடுப்பா வருது...!!!

பின்ன என்னா சார்????

கமலை கடுமையா விமர்சிச்சி, விஸ்வரூபத்துக்கு எதிரா காட்டமான அறிக்கை ஒன்னு விட்ருந்தாருன்னாஆஆ.....

இந்நேரம் இந்தம்மா ராவோட ராவா படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி தந்திருக்க மாட்டாங்களா இல்லியா??????

போங்க கலைஞரே நீங்களும் இந்தம்மாவோட சேர்ந்து கமலை கவுத்திட்டீங்க!!!!!
********************************************

வீர சைவ பேரியக்க... நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்!!!

வைணவரான கமல்ஹாசன் தனது தசாவதாரம் படத்தில் வீர சைவராகிய குலோத்துக்க சோழ மன்னனை ஒரு மோசமான வில்லனாக நேரிடையாகவே தாக்கி சித்தரிப்பதை வன்மையாக கண்டித்து, அந்தப் படத்தை இனி எந்தத் திரையரங்கிலோ அல்லது சேட்டிலைட் சேனலிலோ திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோருகிறது இந்த எங்களுடைய பேரவை......!

அது மட்டுமின்றி, ஏற்கனவே அந்தப் படத்தை திரையிட்ட வகையில் யார் யார் எவ்வளவு லாபம் பார்த்தார்களோ அவ்வளவையும் வட்டியும் முதலுமாக எங்கள் வீர சைவ பேரியக்கத்தின் அக்கவுண்ட்டில் டெபாசிட் செய்யவும் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்....

மேலும் விபூதியை பட்டையாக இட்டுக் கொள்ளும் வழக்கமுடைய எங்கள் வீர சைவர்கள், அந்தப்படம் வெளிவந்த பிறகு, அப்படி பட்டையோடு வெளியில் செல்லவே அச்சப்பட்டும், வெட்கப்பட்டும் பட்டையடித்து வீட்டிலேயே மட்டையாகிக் கிடப்பதால், வீர சைவ குடும்பங்கள் அனைத்திற்கும் தலா ஐம்பதாயிரம் நஷ்ட ஈடு தருமாறும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்....

ஆனால் அந்தப் படத்தில் சைவர்களை இழிவாக சித்தரிக்கவில்லை என்று எங்களையெல்லாம் நம்ப வைக்கும் படி கமல்ஹாசன் விளக்கமளித்தால் அவருக்கு சிவனுக்கு நைவேத்யம் செய்த வெண்பொங்கல் விநியோகித்து பிரச்சினையை சுமுகமாக முடித்துக் கொள்வோம் எனவும் பல்டியடிக்கிறோம்.....    )))))))))

*********************************************

அது நேத்து நடந்திடுச்சி......

நான் அபுதாபில போய் இறங்குன கொஞ்ச நாள் கழிச்சு தான் மொதொ தடவையா அது நடந்துச்சி. அப்பறமா கல்யாணத்துக்காக ஊருக்கு வர்றப்ப தான், இதெல்லாம் ஊர்க்காரங்க பார்த்தா தப்பா நினைச்சி, ஊர் பரிகாசத்துக்கு ஆளாயிடுவோம்ன்னு பயந்து அதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு, போன மாதிரியே திரும்ப வந்துட்டேன்.

ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் மனைவியிடம் அதை மெதுவாகச் சொல்லி விட்டேன். காதலிச்ச பெண் தான் மனைவியா வந்ததாலோ என்னவோ அதை பெருசா எடுத்துக்கல. ஒரே ஒரு கண்டிஷன் தான், என்னோட இருக்கும் போது அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் என்பது தான் அது. அதுவே அந்த விஷயத்தைப் பற்றிய தைரியத்தை மனசுக்கு தந்துடிச்சி....

அதனால திரும்பவும் இந்தியாவுல வந்து செட்டில் ஆகுனும்ன்னு முடிவெடுத்தவுடனேயே, மீண்டும் அதை விட்டுட்டேன். என்ன தான் பொண்டாட்டிக்கு தெரிஞ்சிருந்தாலும், ஊர் உலகத்தின் வாய்க்குப் பயந்து அதைத் தவிர்த்து விட்டுத் தான் இந்தியாவுக்கு வந்தேன்....

அது ஆச்சு பதினாறு வருஷம். அப்பப்ப அந்த எண்ணம் மனசுக்குள்ள வந்து சபலம் தட்டினாலும் குடும்பம், கம்பெனி, சுற்றம் என்றெல்லாம் நினைத்து அந்த எண்ணம் எழுந்தவுடனேயே தூக்கியெறிந்து விடுவேன்.

ஆனா என் பையனுக்கு அவன் அஞ்சாவது படிக்கும் போதே இந்த விஷயம் என் மனைவியின் மூலமா தெரிஞ்சிடிச்சி. அதிலிருந்து அவனுக்கும் என் மனைவிக்கும் படிப்பு சம்பந்தமா சண்டை வரும் போதெல்லாம், அவங்க அம்மாவை டீஸ் பண்ணனும்கறதுக்காவே அவன் என்னிடம் வந்து, அப்பா நீங்க அந்த விஷயத்தை ஆரம்பிச்சிடுங்கப்பா என்று நச்சரித்து அவளை எரிச்சலூட்டுவான்...

இது இப்படியே போய்க் கொண்டிருக்க, அவன் பத்தாம் வகுப்பும் வந்துவிட, வழக்கம் போல படிப்பு சம்பந்தமாக அவனுக்கும் மனைவிக்கும் வாய்க்கா தகறாறு ஆரம்பமாயிற்று. பஞ்சாயத்துக்குப் போன என்னிடம், நான் 425க்கு மேல அரையாண்டுத் தேர்வில் எடுத்துட்டா, எனக்காக அந்த விஷயத்தை நீங்க பண்ணனும்ன்னு அவன் சொல்ல, நான் நல்ல பிள்ளையாக மனைவியைப் பார்த்தேன்.

அவளும் ஒரு முடிவுக்கு வந்தவளாய், எப்படியாவது தன் பிள்ளை நல்ல மார்க் வாங்கணுமேன்னு டீலுக்கு ஒத்துக்கிட்டா! மார்க் எல்லாம் வந்து விட கூட்டிப் பார்த்தா 428! எல்லோருமே வாயடைத்துப் போனோம்....

நேற்று காலை என்று, அதற்கான மூகூர்த்தம் குறிக்கப்பட்டது, மனைவியும் மகனும் பதற்றத்துடன் அருகே நிற்க, கண்ணாடிக்கு முன் நின்று கொண்டு மீசையில் ஷேவிங் ஃபோமை தடவ ஆரம்பித்தேன்.......!!

***************************************************

டீசலுக்கு இரட்டை விலை சோஷலிஸ சிந்தனைக்கு எதிரானது -  கலைஞர்

இதே மாதிரி நிறைய விஷயங்கள்ல லொள்ளு பண்ணிட்டிருக்குற மத்திய அரசுலேர்ந்து உங்க மந்திரிங்களை எல்லாம் வெளில வரச் சொல்லிட்டு களத்தில் இறங்குங்க.....

இல்லன்னா அதிமுகவோட சேர்ந்து நாங்களும் மத்திய அரசுக்கு எதிரா போராடப்போறோம்ன்னு அறிக்கை விடற கேவலமான நிலை வந்துடும்ங்கறதாவுது புரியுதா கலைஞர் அவர்களே?

***************************************************** 

செல்ஃபோன் கட்டணம் இனி நிமிடத்திற்கு 2 ரூபாய்...  செய்தி((((

ஸ்பெக்ட்ரம் ஊழல்ன்னு வாழ்கிழிய பேசுனவங்க எல்லாம் இப்ப மானியம் த்ருவாங்க......., 
அதை நம்புனவங்க எல்லாம் போய் க்யூ கட்டி நில்லுங்க மக்கா.....!!
பத்தொம்பதாயிரம் கோடிக்கே 30 காசுங்கறது ரெண்டு ரூபாயா ஆச்சுன்னா????......

ஒரு லட்சத்தி எழுபத்தஞ்சாயிரம் கோடிக்கு ஏலம் போயிருந்திச்சின்னா?????????

பத்து ரூவாய தாண்டிடுமே??????

அடங்கொன்னியா.......   இதுக்காகவாய்யா இவ்ளோ போராட்டம் பண்ணுனீங்க.......?????

Monday, January 21, 2013

திமுக Vs அதிமுக - பாராளுமன்ற தேர்தல்?!

இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா கன ஜோராய் ஆரம்பித்து விட்டது. அகில இந்திய அளவில் பார்த்தால், காங்கிரஸ் தனது உயர்மட்டக் குழு மாநாட்டைக் கூட்டி ராகுலை துணைத்தலைவராக அறிவித்து அவரை வெளிப்படையாக களம் இறக்கி விட்டிருக்கிறது. பாஜகவும் தனது தலைவரை தேர்ந்தெடுக்கும் முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது.

ஆனால் நமக்கு அதெல்லாம் இப்பொழுது பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக இரண்டில் யார் அதிக இடங்களைக் கைப்பற்றப் போகிறார்கள்? என்பது தான் ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்ப்பாப்பாகவுமே இப்பொழுது இருந்து கொண்டிருக்கிறது. வடக்கர்கள் அப்படி எதையும் காட்டிக் கொண்டிருக்காவிட்டாலும் தேசியக் கட்சிகள் மற்றும் மத்திய அரசைக் கட்டியமைக்கும் சூத்திரதாரிகள் அனைவரது அடி மனதுமே இப்படி ஒரு மன நிலையோடு தான் திக் திக் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

ஏனெனில் கடந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளாக (நடுவில் நரசிம்மராவ் ஆட்சிக்காலம் தவிர்த்து) திமுக அல்லது அதிமுகவின் ஆதிக்கம் தான் மத்திய அரசை அமைப்பதில் அதீதமாய் இருந்திருப்பதை அனைவரும் உணராமல் இருக்க முடியாது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், வாஜ்பாயில் ஆரம்பித்து, இரண்டு முறை மன்மோகன் சிங் அமைச்சரவை வரை ஆக மொத்தம் 15 ஆண்டுகளாக தொடர்ந்து திமுகவின் ஆளுமை மத்திய அரசில் இருந்ததை யாரும் மறுக்க இயலாது.

அதே எதிர்ப்பாப்பு வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் மீது இருப்பதை தவிர்த்து விட்டு அடுத்த மத்திய ஆளும் அமைச்சரவை பற்றி யாரும் எந்த கணிப்பையும் வெளிப்படுத்த முடியாது.

சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்! தமிழகத்தைப் பொறுத்த வரை வரும் பாராளுமன்றத் தேர்தல் என்ன மாதிரியான முடிவுகளைத் தரும்? அச்சு அசலாக யாரும் அதை இப்பொழுதைக்கு கணிக்க முடியாது எனினும், இது எந்தப் பாதையை நோக்கி நகரும் என்பதை ஓரளவிற்கு ஊகிக்க இயலும்.

அதிமுக வைப் பொறுத்த வரை, சமீபத்தில் அதன் பொதுக்குழுவில், ஜெயலலிதா அறிவித்ததைப் போன்று, 40 தொகுதிகளிலும் தனித்து நின்று தேர்தலை சந்திப்போம் என்ற நிலைப்பாடு தற்பொழுது வரை தொடர்ந்தாலும், அதிகபட்சம் 10 தொகுதிகள் வரை, சிறிய அல்லது சில்லறைக் கட்சிகளுக்கு ஒதுக்கும் மனநிலையில் இருப்பதாகத் தான் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான கட்சி நிர்வாகிகளின் எண்ண ஓட்டமும் அவ்வாறே இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கூட்ட்ணியின்றி போட்டியிடுவதை அவர்களே ஒரு கேலிப்பேச்சாக எண்ணி கடந்து போவதைத் தான் பார்க்க முடிகிறது. அது தற்கொலைக்குச் சமம் என்றே பலர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஜெயலலிதாவிடம் இதை நேரிடையாக சொல்லும் தைரியம் அவர்களுக்கு இல்லை என்றாலும், அம்மாவுக்கு எல்லாம் தெரியும், இப்போ சும்மா ல்லுல்லாவுக்குத் தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள், என்பது போல் தான் பேசுகின்றார்கள்!

அதே சமயம் திமுகவைப் பொறுத்தமட்டில் தற்பொழுது வரை காங்கிரஸுடன் கூட்டணி என்பதில் மிகத் தெளிவாக இருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். அதிமுகவுடன் குறைந்தபட்சம் வரும் தேர்தலிலாவது கூட்டணி வைக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடையாது என்பதால் விஜயகாந்த் திமுகவின் பக்கமாக சாயும் வாய்ப்புகள் தான் அதிகம்.

நாட்கள் நகர நகர எதிர்பாராத மாற்றங்கள், புதிய கூட்டணிகள் எல்லாம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றாலும், இப்பொழுதைய நிலையில் வரும் பாராளுமன்றத்திற்கான கூட்டணி என்பது......

திமுக - காங்கிரஸ் - தேமுதிக - விசி என்ற ஒரு அணியும், அதிமுக - இரு கம்யூனிஸ்ட்டுகள் - பாமக - மதிமுக - மற்றும் சில லெட்டர்பேடு கட்சிகள் என்ற இன்னொரு அணியும் தான் நம் கண் முன்னே குத்து மதிப்பாக தெரிகின்றன. இந்த அமைப்பிலேயே தமிழகத்தின் தேர்தல் களம் அமையும் என்றால் என்ன மாதிரியான தேர்தல் முடிவுகள் ஏற்படும் என்பதை நாம் கொஞ்சம் அலசலாம். 

எவ்வளவோ மக்கள் நலத் திட்டங்கள், உட்கட்டமைப்புகள், நல்ல நிர்வாகம், பணப்புழக்கம், தடையில்லா விவசாயம் என்று கடந்த திமுக ஆட்சியில் மக்கள் அனுபவித்திருந்தாலும், ஊடகங்களாலும், எதிர்க்கட்சிகளாலும் சரியாக திட்டமிடப்பட்டு பரப்புரை செய்யப்பட்ட ஐந்து விஷயங்களில் தான் தமிழக வாக்காளர்கள் மிகப் பெரிய மாற்றத்திற்கான எதிர்பார்ப்போடு இந்த அதிமுக ஆட்சியை கொண்டு வந்திருந்தார்கள்.

1. மின் தடை, 2. ஸ்பெக்ட்ரம், 3. குடும்ப அரசியல், 4. குறுநில மன்னர்களின் (நீண்ட கால மாவட்ட செயலாளர்கள்) அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் 5. விலைவாசி உயர்வு.....    இந்த ஐந்து விடயங்கள் தான் மக்களை திமுகவுக்கு எதிராக வாக்களிக்கத் தூண்டிய காரணிகளாகும்.

ஆனால் புதிய ஆட்சியில் முன்பை விட ஐந்து மடங்கு அதிகமான மின் தடை நடைமுறையில் இருப்பதும், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் பிசுபிசுத்துப்போய் ஏலம் விட்டும் சொல்லப்பட்ட அந்த அதீத தொகை வராமல் ஏமாற்றியதும், திமுகவின் குடும்ப அரசியல் குழப்பங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அடுத்தது ஸ்டாலின் தான் அதன் தலைவர் என்று கலைஞராலேயே அறிவிக்கப்பட்டிருப்பதும், குறுநில மன்னர்கள் எல்லாம் இப்பொழுது ஸ்டாலின் வருகையால் பல் பிடுங்கப்பட்ட நிலையில், வாரிசு அரசியலில் இல்லாத இளைஞர் அணி புது எழுச்சியுடன் கட்டமைக்கப்பட்டிருப்பதும், கடந்த ஆட்சியில் நியாயமாக சீரான வளர்ச்சியுடன் இருந்த விலை வாசி இப்பொழுது மடங்குகளில் உயர்த்தப்பட்டு விண்ணை முட்டி மக்களிடமும் பணப்புழக்கம் இல்லாத நிலையைக் கொண்டு வந்திருப்பதும்........

....தமிழக வாக்காளர்களின் மனநிலையை கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய மனநிலையில் இல்லாமல் மாற்றியிருப்பது கண்கூடான விஷயம்.......

விவசாயமும், சிறு குறு தொழில்களும் முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையில், அதிகாரமற்ற வாய்மூடி அமைச்சர்களால் அந்தந்தப்பகுதிக்குத் தேவையான தொலைநோக்குத் திட்டங்கள் மட்டுமல்லாது, உடனடித் தேவையான பல திட்டங்களும் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதால்....  மக்களின் மன நிலை ஆட்சிக்கு எதிராக இல்லை என்று ஆளுங்கட்சியும், பத்திரிகைகளும் நம்பினாலும், சட்ட மன்ற தேர்தல் நிலவரத்தைப் போல அதிமுகவுக்கு ஆதரவான மனநிலையில் இல்லை என்பதை அவர்களாலேயே மறுக்க முடியாது!

எனவே ஜெயலலிதா அறிவித்துள்ளதைப் போன்று தனித்து நின்றாலும் சரி, சரியான பலம் மிக்க கூட்டணி அமைக்கா விட்டாலும் சரி, வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு எதிரானதாகத் தான் அமையும்.

ஆனால் இதுவரையிலான ராகுல் காந்தியின் செயல்பாடுகள், திமுவுக்கு இணக்கமானதாக அமைந்திருக்கவில்லை என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், அதிமுகவினருக்கு ஆதரவான அல்லது திமுகவுக்கு எதிரான  மனநிலை கொண்ட சில காங்கிரஸாரின் போதனையால் தேமுதிக மற்றும் சில சில்லறைக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் தனியாக மூன்றாவது அணி அமைத்து களம் காணுகின்ற வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கலைஞர் Vs ஜெயலலிதா (அவரின் ஆலோசகர்கள்) என்ற நேரடி அரசியல் சாணக்கியத் தனங்களின் உச்சக்கட்ட வெளிப்பாட்டை தமிழக மக்கள் ஆவலுடன் கண்டு களிக்கலாம். ஆனால் அப்படி ஒரு பலம் மிக்க மூன்றாவது அணி அமைவது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி ஓட்டுக்கள் பிரியக் கூடிய வாய்ப்பு என்ற வகையில் அதிமுகவுக்கு ஆதரவான நிலையாகத் தான் அமையும். ஆகவே பலம் மிக்க மூன்றாவது அணி அமைக்க ஜெயலலிதாவே முயற்சிகளை திரைமறைவில் முன்னெடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் அதிகமாகவே இருக்கின்றன.

இப்படி ஒரு சூழ்நிலை அமையும் பட்சத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பரீட்சித்துப் பார்த்த, தனித்து நிற்கும் நிலைப்பாட்டை திமுக எந்த தயக்கமும் இன்றி எடுக்கும் என்பதையும் யாரும் மறுக்க முடியாது!

அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், திமுகவும் அதிமுகவும் ஆளுக்கு ஒன்றிரண்டு சில்லறைக்கட்சிகளை தங்களோடு இணைத்துக் கொண்டு கிட்டத்தட தனியாகவும், தமிழகம் முழுவதும் பரவலாக இருக்கும் தேமுதிகவும், காங்கிரஸும் தங்களோடு சில சில்லறைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு பலம் மிக்க மூன்றாவது அணியாகவும் நின்று, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் பரிமாணம் முன்னெடுக்கப்படும் வாய்ப்பை உருவாக்கும். இது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு மாற்றை கொண்டுவர பிரிபப்படும் கணிசமான பொதுமக்களுக்கு பெரியதொரு வரப்பிரசாதமாகவும்  அமையும்.

பொது மக்களுக்கு இப்படியென்றால், இந்த மாதிரியான சூழ்நிலை திமுக மற்றும் அதிமுக இரண்டுக்குமே தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கும், தங்களைப் பற்றிய மக்களின் உண்மையான மதிப்பீட்டை உணர்ந்து கொள்ளவும் வழி வகுக்கும்.

பாராளுமன்ற தேர்தல் எப்பொழுது வரும் என்றே தெரியாத நிலையில் ஆனால் ஒரு வருடத்திற்குள் நடந்து விட்டிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இன்றைய அரசியல் மேக மூட்டங்களை வைத்து இவ்வளவு தான் நம்மால் யூகிக்க முடியும் என்றாலும், தமிழகத்தில் பலம்மிக்க மூன்றாவது அணி அமைய நீண்ட காலத்திற்குப் பின் இப்பொழுது தான் சாதகமான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் நலன் கருதி அப்படி ஒரு அரசியல் கூட்டணிகள் அமைய வேண்டும் என்ற அவாவோடு இப்பொழுதைக்கு இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு பற்றிய கணிப்புகளின் முதல் அத்தியாத்தை நிறைவு செய்வோம்!




Thursday, January 17, 2013

பலூன் மாமா!

அவனுக்கு ஊர் எல்லையை மிதித்தவுடனேயே, அதுவரை குறுகுறுவென இருந்த மன மொட்டு வெடித்துச் சிதறிப் பூத்தது போன்ற ஒரு ஆரவார சந்தோஷம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு முதன் முறையாக தன் மனைவி பிள்ளைகளை அழைத்து வருகிறான்!

சொந்த மண்ணில் கால் வைத்ததுமே ஒரு பனிப்படலம் அவனது விழித் திரைகளுக்கு முன்னால் மட்டும் தோன்றி, காட்சிகளை மறைக்கிறது, ஓரிரு விநாடிகளிலேயே அது கரைந்து கண்களின் அடிப்பகுதியில் நீர்த்துளிகளாய் தேங்கி, வழிய ஆரம்பிக்கிறது.

சட்டென தன் கண்களை துடைத்துக் கொண்டவன், தன் மனைவியைப் பார்க்கின்றான். அவன் உணர்வுகளைப் புரிந்து கொண்டவளாய் அவன் தோளில் கை வைத்து மெதுவாக அழுத்துகிறாள்......

நம்ம ராமசாமிக்கு வயது ஒரு முப்பத்தைந்து இருக்கும். மலேஷியாவில் வேலை. அவன் படித்து முடித்த பிறகு இரண்டு வருடம் வேலை தேடி நாயாய் அலைந்து, நான்கைந்து இடத்தில் வேலையில் சேர்ந்தாலும் அது சரிப்பட்டு வராமல் விரக்தியோடு சுற்றிக் கொண்டிருந்த நேரம் அது.

அப்பொழுது தான் அத்தையின் கணவர் சுந்தரமூர்த்தி மாமா, தான் வேலை பார்த்த ஒரு மலேஷிய பலசரக்கு கடையிலிருந்து ஒன்வேயில் வருகிறார். அந்த கடை முதலாளி உன் இடத்தில் நீயே ஒரு நல்ல பையனாக அமர்த்திவிடு என்று சொல்ல....,  நம்ம ராமசாமிக்கு அடித்தது யோகம்!

அங்கே இங்கே அலைந்து ஒன்றரை மாதத்தில் பாஸ்போர்ட் ரெடி பண்ணி, அதிலிருந்து பதினைந்தாவது நாள், அவன் கைக்கு விசா வந்து விட்டது. இரண்டு வருடம் நம்ம ஊரு வேலை வாய்ப்புத் துறை கொடுத்திருந்த அனுபவங்கள், அவனை அங்கே அடக்கமாக வேலை பார்க்க வைத்துக் கொண்டிருந்தது.

அந்த அடக்கமே அவனை படிப்படியாக உயர்த்தி, இன்று 15 கடைகள் கொண்ட ஒரு தொடர் சூப்பர் மார்க்கெட்டில் மேனேஜராக பதவியில் அமர்த்தியிருக்கின்றது. கை நிறைய சம்பளம். பழைய கடையிலிருந்து இந்த புதிய நிறுவனத்திற்கு மாறும் போது ஒன்வேயில் வர வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் தான் இந்த சொர்ணாவை கைப்பிடிக்கும் வைபோகம் நடந்தேறியது.

இது தான் அவனது தந்தைக்கு பூர்வீக கிராமம் என்றாலும், அவனது பதினைந்தாம் வயதில் தந்தைக்கு விவசாய கூலி வேலை சரியாக தொடர்ந்து கிடைக்காத காரணத்தால், 15 கி மீ தள்ளியிருக்கும் அந்த சிறிய நகரத்துக்கு அவனது குடும்பம் குடி பெயர்ந்தது. அங்குள்ள ஒரு மரவாடியில் அவன் தந்தை வேலைக்குச் சேர்ந்தார்.

கிராமத்து ஓட்டு வீட்டை விற்று, அந்த தொகையை போக்கியமாக கொடுத்து மரவாடிக்குப் பக்கத்திலேயே ஒரு சிறிய வீட்டில் அவனது குடும்பம் குடியேறியது. நம்ம ராமசாமி தான் மூத்த வாரிசு. அவனுக்குக் கீழே இரண்டு பெண் குழந்தைகள். அவன் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் வரை வாய்க்கும் கைக்குமே பற்றாத நிலையில் தான் அவனது குடும்ப பொருளாதாரம் இருந்து வந்தது.

அவன் தாய் மாமா, ஃபீஸ் கட்டியதால், அந்த ஊர் அரசு கல்லூரியில் அவனால் எந்த செலவும் இன்றி பி.ஏ படிக்க முடிந்தது. ஆனால் அவன் தந்தைக்கு, அவன் உடனே வேலைக்குச் சென்றால், தன் பாரம் கொஞ்சம் குறைந்து பெண் பிள்ளைகள் திருமணத்திற்கு எதாவது சேர்த்து காலா காலத்தில் கட்டிக் கொடுத்து விடலாமே என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தது. ஆனாலும் தன் ஒரே மகன் டிகிரி படித்தால் கொஞ்ச காலத்திற்கு கஷ்டம் தொடர்ந்தாலும், நம் அடுத்த தலைமுறையின் வாழ்க்கைத் தரம் ஒரு படி மேலே ஏறிவிடுமே என்று எண்ணி தன்னுடைய துன்பச் சுமையே இன்னும் சில வருடங்களுக்கு சுமக்கத் தயாராகி விட்டார்.

ஏதோ கனவுகள் போன்று பழைய சம்பவங்கள் எல்லாம் மனக் கண் முன்பாக ரீல் போல ஓடிக் கொண்டிருக்க...  ஹை..... என்ற ஆரவாரமான தனது இளைய மகன் அஸ்வினின் குதூகலக் குரல் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. ராமசாமியின் கையை உதறிக் கொண்டு அந்த ஐந்து வயது பாலகன் ஒரே பாய்ச்சலாக ஓட, அந்த திசையைப் பார்த்த போது தான் இவனுக்கும் அந்த குதூகலம் தொற்றிக் கொண்டது.

வண்ண வண்ண பலூன்கள் விதவிதமான வடிவங்களில் நூல்களில் கட்டி கைக்கு எட்டாத தூரத்தில் பறக்க வைக்கப் பட்டிருந்தன. நடுவின் அதற்கான உபகரணங்களுடன் ஒருவன் அமர்ந்து கேட்கும் வடிவத்தில் பலூன்களை செய்து தந்து கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் இளஞ்சிறார்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

ஆடு, மாடு, மயில், முயல், வாத்து, லவ் சிம்பள், குட்டிப் பெண், சுட்டிப் பையன் என்று பல்வேறு விதமாக அவன் பலூன் செய்யும் லாவகம் நம்ம ராமசாமிக்கு பெரும் வியப்பாய் இருந்தது. கூட்டத்தோடு முட்டிக் கொண்டிருந்த அஸ்வினைத் தூக்கிக் கொண்டு, பத்து ரூபாயை எடுத்து நீட்டியவாறு மயில் பலூன் ஒன்று செய்து குடு தம்பி என்று இரண்டு மூன்று முறை கத்தியும் அவன் நிமிர்ந்த பாடில்லை.

கடுப்பாகி இவன் திரும்ப எத்தனிக்க, மேலே பறந்து கொண்டிருந்த ஒரு மயில் பலூனின் நூலை கட் பண்ணி, இந்தாங்க சார் என்று கொடுத்தான். பணத்தைக் கொடுத்து அந்த பலூனை வாங்கும் போது தான் அந்தப் பையனை குறிப்பாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனவன், தம்பி நீ மாரிமுத்து பையனா? என்று கேட்கவும், அந்த பலூன் விற்கும் தம்பி அன்னாந்து இவனைப் பார்த்து, கண்களில் ஒரு மகிழ்ச்சியான புன்னகையுடன், ஆமாம் சார்......  நீங்க....? என்று ஒற்றை வார்த்தையில் கேள்வி ஒன்றைப் போட்டான்.

அதுவரை சொந்த ஊரை பல வருடங்களுக்குப் பிறகு மிதித்து விட்ட, அதுவும் கௌரவமான நிலையில் வண்டி வாகனம், மனைவி, பிள்ளைகள் என்று வந்திருந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தவன், இப்பொழுது பேயரைந்தவன் போல் காணப்பட்டான்.

நான்.... நான் வந்து...!

...ம் உங்க அப்பாவை எனக்கு நல்லா தெரியும். இந்த திருவிழவுக்கு வருடா வருடம் வந்து பலூன் கடை போடுவாரே......  அப்போ அவருடன் எனக்கு நல்ல பரிச்சயமுண்டு....

ஆனா நான் உங்கள பார்த்ததில்லையே சார்....., எப்புடி என்னைய கண்டுபுடிச்சீங்க? என்று பலூன் காரன் கேட்கவும்.....

இல்லப்பா, அப்ப உங்கப்பா வரும் போது குடும்பத்தோட தான் பத்து நாளும் இங்க வந்து தங்கியிருப்பாரு. திருவிழாவுக்கு ஒரு வாரம் முன்னதாகவே வந்துடுவாங்க. அப்ப இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட உன்னையும் உங்க அம்மா இடுப்புல தூக்கிக்கிட்டே வருவாங்க.....

நீண்ட நாளைக்கப்பறம், அதே திருவிழா, அதே பலூன் கடை ஆனால் அதில் வித்தியாசமான முயற்சியுடன், இளம்பிள்ளை வாதத்தால்  நடக்க முடியாமல் உட்கார்ந்து வியாபாரம் செய்யும் உன்னை பார்த்தோடுன, முடிவு பண்ணிட்டேன், நீ மாரிமுத்து மகனாய்த் தான் இருக்க வேண்டும் என்று!

இந்த அளவுக்கு என்னையும், எங்க குடும்பத்தையும் கூர்ந்து கவனிச்சி இத்தனை வருடத்திற்குப் பிறகும் என்னை தெரியுதுன்னா, எங்க அப்பாவோட உங்களுக்கு ரொம்ப பரிச்சயமா சார்?

ம்..ம்.. நல்ல பழக்கம் தான். வருடத்திற்கு பதினைந்து இருபது நாட்கள் குடும்பத்தோடு இந்த ஊரில் வந்து தங்குபவரை எங்களுக்குத் தெரியாமல் இருக்குமா? ... சரி உங்க அப்பா அம்மால்லாம் இப்ப உன் கூட வர்றதில்லையா?

அப்பா இல்ல சார்....!

இல்லன்னா??...    உசுரோட இல்ல சார்....

பகீர் என்றது ராமசாமிக்கு. இன்றைக்கு இருந்தாலும் ஐம்பது வயசுக்குள்ள தானே இருக்கும்? என்ற யோசனையுடனே மெதுவாக தலையை உயர்த்தி அந்தப் பையனைப் பார்த்தான்.

என்ன ஆச்சு? எப்படி இறந்தார்?

இருவது வருஷம் ஆச்சு சார்! நான் ரொம்ப சின்னப் புள்ள. நூறு, இருநூறுன்னு நாலஞ்சு பேருகிட்ட கடன் வாங்கி ஆயிரம் ரூவாக்கி சரக்கு எடுத்து வந்து இங்க திருவிழாவுக்கு கடைய போட்ருக்காங்க......

இங்கன வந்து அத ஏழெட்டுப் பேருக்கு பிரிச்சிக் கொடுத்து எல்லா இடத்துலயும் நிக்க வச்சி, வியாபாரம் கனஜோரா ஆரம்பிச்சிருக்கு.......  8 மணிக்கு கரண்ட்டு சிப்ட்டு மாத்தும் போது, எல்லா எடத்துலயும் பறந்துக்கிட்டிருந்த பலூன் எல்லாம் பொட்டு பொட்டுன்னு வெடிச்சிடிச்சி....

கரண்ட்டு வந்தோடுனதான் தெரிஞ்சிது, விளையாட்டுப் பசங்க, ஜாலிக்காக கரண்டு நிக்கற நேரத்துல கல்லு உப்ப விட்டெறிஞ்சி பலூனை எல்லாம் வெடிச்சிருக்காங்கன்னு......!!!

மிச்ச சொச்சம் இருந்த கொஞ்சூண்டு பலூனையெல்லாம் மறுநாள் வித்துட்டு, ஊருக்கு திரும்பிருக்காங்க. கடன் காரங்க, அசலும் வரல, வட்டியும் தரலன்னோடுன கேவலமா பேசினத பொறுக்க முடியாம ராவோட ராவா தூக்குல தொங்கிட்டாரு....!!!

கால் வைத்திருந்த தரை நழுவிக்கொண்டே செல்வது போல இருந்தது ராமசாமிக்கு. சுழன்று கொண்டிருக்கும் தேர்ச்சக்கரத்தின் முன்னே தடை விழுந்து நகரமுடியாமல் குலுங்கி நிற்பதைப் போல, நெஞ்சுக்குள் ஒரு கட்டை விழுந்து, இதயம் துடிப்பது ஒரு கணம் நின்றுவிட்டுத் தொடர்ந்தது....

அதீத மௌனத்துடன் கார் ஓடிக் கொண்டிருந்தது. பிள்ளைகள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். சின்னவன் தான் ரொம்பவும் அழுது விட்டு அப்படியே தூங்கி விட்டான். பத்து நாள் திருவிழாவும் ஊரில் தங்கி கொண்டாடும் ஆர்வத்துடன் வந்திருந்தவர்கள், முதல் நாளிலேயே திரும்பினால் வருத்தம் வரத்தானே செய்யும்?!

அவன் மனைவிக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவனாக பேசட்டும் என்று காத்திருந்தாள். அந்த நகரத்தில் இருக்கும் வீட்டிற்கு கூட வந்திருக்கலாம். ஆனால் விடிவதற்குள் அந்த ஊரை விட்டு வெகு தூரம் ஓடி விட்டிருக்க வேண்டும் போல் அவன் மனசு துடித்துக் கொண்டிருந்தது.

இருக்காதா பின்னே? குற்ற உணர்ச்சி மனசை பிடிங்கித் தின்கிறது!

அன்றைக்கு பந்தயம் கட்டி விளையாண்ட எட்டுப் பேரில் இவன் தான் ஒரு பலூன் கூட மிச்சம் வைக்காமல் கல் உப்பை எறிந்து வெடித்து வெற்றி பெற்றிருந்தான்!! மத்த பசங்களால எல்லா பலூன்களையும் முழுமையாக வெடிக்க முடியவில்லை. அதனால் அன்றைக்கு ராமசாமி வெற்றி பெற்று பந்தயப் பணம் எட்டு ரூபாயையும் தனதாக்கிக் கொண்டான்!!

  

Thursday, January 10, 2013

விஸ்வரூபம் - திரை விமர்சனம்

எண்ணித் துணிய வேண்டும் ஒரு காரியத்தில்....

இறங்கிய பின்பு அது பத்தி யோசிச்சி பின் வாங்குறது ரொம்ப கேவலம்!!!

இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தியே இத இவ்ளோ தெளிவா திருவள்ளுவர் சொன்னதே நம்ம கமல்ஹாசனுக்குத் தானோ என்று தான் தோன்றுகிறது!

அவர் ஒரு படத்தை எடுக்கறார், 90 கோடி பணம் போட்டிருக்கேன் என்கிறார். படம் அற்புதமாக வந்திருப்பதாக சொல்கிறார்.  இந்த இடத்துல அப்டியே கட் பண்ணி கீழ வாங்க.......

சினிமாத்துறை என்பது ஒரு தொழிற்களம். அதில் சினிமா தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் என்ற முக்கிய மூன்று பிரிவுகள் ஒன்றுக்குள் ஒன்று இழையோடி பின்னிப் பிணைந்திருப்பவை. இதில் ஒரு படம் வந்து அது தோல்வி என்றாலும் அதில் பாதிக்கப்படாமல் பல சந்தர்ப்பங்களில் தயாரிப்பு தரப்பு தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் இருந்தாலும், விநியோகம் மற்றும் திரையிடல் ஆகிய இரு தரப்புக்களும் பெரும்பாலும் அந்த நட்டத்தை பங்கிட்டுக் கொண்டு கையை சுட்டுக்கொள்ளும் நிலைமை தான் பரிதாபத்திற்குறியது.

இதில் சினிமா தயாரிப்பு என்ற பிரிவில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, இத்தியாதிகள் என்று கிட்டத்தட்ட ஒரு சதம் அளவிற்கு வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு இருந்து கொண்டிருக்கிறது. அத்துனை துறைகளுக்கும் வலுவான சங்கங்கள் தனித்தனியாகவும் இருக்கின்றன. அதைத் தவிர்த்து ஒட்டுமொத்த துறைகளுக்கென்றும் தனியாக ஒரே அமைப்புச் சங்கமும் இருக்கிறது.

இந்தச் சங்கங்களின் மூலம் அந்தத்த துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனித் திறன், உழைப்பு விகிதம் மற்றும் நுணுக்கங்களுக்கு ஏற்ப நியாயமான சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட்டு,  அவைகள் யாவும் பழுதில்லாமல் அவர்களுக்கு வந்து சேர வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

அதனால் இந்த தயாரிப்பு பிரிவில் இயங்கும் துறைகள் சார்ந்த தொழிலாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட படத்தின் வெற்றி தோல்வி என்பது எந்த விதத்திலும் பொருளாதார ரீதியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது தான் உண்மை. அது போகட்டும்!

ஆனால் இந்த தயாரிப்பு பிரிவில் வரும் நடிப்புத் துறையில், பல நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும்,  அதிக பட்ஜெட் படங்களில் ஒரே ஒரு நடிகர் சமபந்தப்பட்ட செலவுகள் என்பது அந்த படத்தின் பட்ஜெட்டில் பாதியைச் சில சமயங்களில் கடந்து விடுவது கண்கூடு.

இங்கே நான் அந்த நடிகரின் சம்பளம் என்று குறிப்பிடவில்லை. அவர் சம்பந்தப்பட்ட செலவுகள் என்றே குறிப்பிடுகின்றேன். காரணம், அவருடைய சம்பளம் மட்டுமல்லாது, அவர் சுட்டிக்காட்டும் நடிகையைத்தான் கதாநாயகியாக புக் செய்யும் நிர்ப்பந்தம் ஏற்படுவதால், சம்பந்தப்பட்ட நடிகையின் சம்பளம் தயாரிப்பு செலவுகள் பட்ஜெட்டை மீறி போய்விடும். அது தவிர அவர் சொல்லும் வெளிநாடுகளில் பாடல் காட்சிகள், அவர் சம்பந்தப்பட்ட மற்ற (கேரவன் வசதி போன்ற) இன்னபிற செலவினங்கள், அவருக்காக காத்திருக்கும் நாட்களுக்கான நஷ்டங்கள்... என்று, அந்த பெரிய நடிகருக்கான செலவுகள் படத்தின் மொத்த பட்ஜெட்டில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

சரி, ஏன் அவருக்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி இயல்பாக எழுந்தாலும், அந்த நடிகருக்கென ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டம் இருக்கிறது, அதனால் அந்தப் படம் மினிமம் கியாரண்டி நாட்கள் திரையில் ஓடுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதாலேயே தான் அவர் சம்பந்தப்பட்ட செலவினங்களுக்கு தயாரிப்பு தரப்பு மண்டையை ஆட்ட வேண்டியிருக்கிறது.

ஆனால் படம் வெளி வந்தவுடன், சம்பந்தப்பட்ட நடிகர் குடும்பத்துடன் கிளம்பி வெளி நாட்டுச் சுற்றுலாவுக்குச் சென்றுவிடுவார்! படத்தின் வெற்றி தோல்வி பற்றி அவருக்குக் கவலை இல்லை. இதற்குத் தான் கடிவாளம் போடும்படியாக படம் மினிமம் கியாரண்டி அளவிற்கு ஓடவில்லை என்றால், அந்த நடிகரிடமே பணத்தை திரும்ப கேட்கும் உத்தியை சமீப காலமாக கையாண்டு கொண்டிருக்கின்றார்கள்......

அப்டியே இந்த இடத்தில் கட் பண்ணி மேலே உள்ள கமல்ஹாசன் மேட்டருக்கு இப்ப நாம போவோமா?

கமல் எப்பவுமே இந்த மாதிரியான டிபிகல் நடிகர் தான். அன்பே சிவம், மன்மதன் அம்பு என்றால் நல்ல பிள்ளையாக தன் அடுத்த வேளையைக் கவனிக்க போய்விடுவதும், மருதநாயகம், மர்மயோகி என்று அவ்வப்பொழுது கட்டிங், குவாட்டர், ஆஃப்ன்னு தடுக்கி விழுவதும்....   ஆனால் தேவர் மகன், விருமாண்டி என்றால் அலப்பரை பண்ணுவதுமாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத ஒன்று அல்ல!

அந்த வரிசயில் இப்பொழுது லேட்டஸ்ட் அலப்பரை தான் விஸ்வரூபம். தானே கைக்காசு போட்டு எடுத்திருப்பதால், எப்படியாவது நல்ல விற்றுமுதல் பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறார். அதில் தப்பில்லை. நியாயம் தான். அப்படி இந்தப் படத்தில் நல்ல லாபம் வந்தால், அவரை வைத்து நட்டமடைந்த பழைய தயாரிப்பாளர்களில் தரவரிசை அடிப்படையில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்றும் யாரும் கேட்கவில்லை.

இப்படி இருக்கும் சூழ்நிலையில், இது வரை தாயும் பிள்ளையுமாக இருந்த, நட்டம் என்று வந்தால் பல சந்தர்ப்பங்களில் தயாரிப்பு தரப்பை காப்பாற்றி விட்டு தாங்கள் மட்டுமே விஷத்தை உண்ட விநியோகம் மற்றும் திரையிடல் தரப்பினரை நட்டாற்றில் விட்டு விட்டு, இந்தப் படத்தின் லாபம் முழுமையும் தனக்கே, அதுவும் நேரிடையாகவே வந்து விட வேண்டும் அதுவும் ஒரே வார காலத்திற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட வேண்டும் என்று தொலைத் தொடர்பில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கினார்.

ஆனால் கமல் சொல்வது போல, அவரது பொருளை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்ற உரிமை அவரிடம் மட்டுமே உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அதே சமயம் அவர் தனது பழைய சந்தையிலும் அதை விற்பனைக்கு கொண்டு வருவேன் என்கிற போது தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இதைப் புரிந்துகொள்ள நல்ல உதாரணம் சொல்லலாம். கோல்கேட் கம்பெனி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்டாக்கிஸ்ட்டை நியமனம் செய்து அந்த ஊர்களில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்யச் சொல்கிறது. அந்த ஸ்டாக்கிஸ்ட்டும் கடை கடையாக ஏறி தினம் வசூல் என்ற அடிப்படையில் கடனுக்கு பொருட்களைப் போட்டு விற்பனை செய்கிறார். கடைக்காரர்களும் ஷோகேஸ்களில் அழகாக அடுக்கி மக்களுக்கு அதை விற்பனை செய்கின்றார்கள்.

இப்போ, அந்த கோல்கேட் கம்பெனி ஊருக்கு ஐந்து பேரை களம் இறக்கி வீடு வீடாகச் சென்று கோல்கேட்டை அதாவது தனது தயாரிப்பை நேரடியாக விற்பனை செய்கிறது என்று வைத்துக் கொள்வோம்......

இதைத் தான் இப்பொழுது விஸ்வரூபம் படத்தில் கமல் செய்ய முற்பட்டிருக்கின்றார். சரி அதில் தவறில்லை தனது பொருளை எப்படி சந்தைப் படுத்த வேண்டும் என்கிற உரிமை அவரிடமே இருக்கிறது என்பது ஒத்துக் கொள்வோம். ஆனால் மக்களிடமும் நேரடியாக விற்பனை செய்வேன், ஸ்டாக்கிஸ்ட்டுகள் மூலமாக கடைகள் வழியாகவும் விற்பனை செய்வேன். ஏனென்றால் அந்த ஐந்து பேரால் எல்லா தரப்பு மக்களையும் நேரடியாக சென்று சந்தித்து விற்பனை செய்ய முடியாது, அதனால் மீதமிருப்போருக்கு பழைய வழக்கப்படியே விற்பனை செய்கிறேன் என்று சொல்கிறார்...!

இங்கு தான் பிரச்சினையே ஆரம்பம் ஆகிறது. உன்னுடைய பொருள் புதிதாக மக்களுக்கு அறிமுகமில்லாமல் இருந்த காலத்திலிருந்தே விற்பனை செய்கின்றோம். அப்பொழுது ஏற்பட்ட நட்டத்தையெல்லாம் நாங்களே சுமந்திருக்கின்றோம், உங்களை மக்களுக்கு யார் என்று தெரியாத போதே வீதி வீதியாகச் உங்கள் சரக்கை தலையில் தூக்கிச் சென்று விற்றவர்கள் நாங்கள். அப்போ போணியாகாததையெல்லாம் நாங்களே நீலகண்டர்களாக இருந்து உங்களை வளர்த்தெடுத்தோம், இப்பொழுது எங்களை மீறி நேராக மக்களை சந்தித்து விற்பதாக சொல்கின்றீர்கள், பரவாயில்லை விற்றுக் கொள்ளுங்கள், ஆனால் பாதி விற்று விட்டு மீதியை எங்களிடம் கொடுத்து விற்கச் சொன்னால் என்ன நியாயம்?

அது முடியாது? முடிந்தால் முழுவதையும் நீங்களே கீழிறங்கி விற்றுக் கொள்ளுங்கள், முடியாவிட்டால்,  முழுமையாக எங்களிடம் கொடுத்து விற்கச் சொல்லுங்கள். ஆனால் உலக்கைப் பிடியை நீங்கள் பிடித்துக் கொண்டு அருவாப் பிடியை எங்களைப் பிடிக்கச் சொன்னால் அதற்கு ஏமாறுகின்ற கேணைகள் நாங்கள் அல்ல.....

இது தான் விநியோக மற்றும் திரையிடல் தரப்பின் வாதம்....!!

இதுவும் சரியாத்தானே இருக்கு? அப்பறம் என்ன கமல் சார், நீங்க பல உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்து அந்த  சினிமாக்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்களையெல்லாம் கற்றறிந்து தானே நேரடியாக மக்களிடம் செல்லும் டிடிஹச் முறையை கொண்டு வந்திருப்பீர்கள். அப்படியே செய்யுங்கள், அறிவியல் வளர்ச்சியில் எதையும் யாரும் தடுத்துவிட முடியாது என்ற தத்துவத்தை நாங்களும் ஏற்கிறோம் என்று மக்களும் கமலுக்கு ஆதரவாக கொஞ்சம் கொஞ்சமாக கைதூக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எல்லாமே சரியாத்தான் போயிட்டிருப்பதாக எல்லோரும் நினைத்தார்கள். ஆயிரம் ரூபாய் கட்டுப்படியாகுமா? அந்த நேரத்தில் கரண்ட் போனால் என்ன செய்வது? என்று பலதையும் அலசி ஆராய்ந்து, பத்து பேர் சேர்ந்து பார்த்தால் லாபம் தான், கரண்ட்டு பிரச்சினைக்கு இன்வெர்ட்டர் பயன்படுத்திக்கலாம் என்றெல்லாம் முடிவெடுத்து டிடிஹச் காரர்களிடம் பணமும் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்....

கமலும் எல்லா டிடிஹச்சிலும் தோன்றி கால் மணிக்கு ஒரு முறை 1000 ரூபாய் கட்டி படம் பார்க்கச் சொன்னார், முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தலைகாட்டாத கமல், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியருக்கெல்லாம் வந்து மணிக்கணக்கில் உட்கார்ந்து, குழந்தைகளின் பாடல்களை விமர்சனம் செய்து தன் படத்தைப் பார்க்க மக்களிடம் ஆதரவு திரட்டினார்.....

இவ்வளவு தெளிவாக வேலைகள் நடக்கின்றன, கமலும் பெரிய நாணயஸ்த்தர், டிடிஹச் காரர்களும் பெரிய தொழிலதிபர்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக் கணக்கானோர் படம் பார்க்க பணம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள், இன்னும் லட்சக்கணக்கானோர் கட்டத் தயாராகி விட்டார்கள்......

இந்த நிலையில் படம் இப்பொழுது சொன்ன தேதியில் சின்னத்திரையில் திரையிடப்படாது என்று அறிவிக்கிறார் கமல். பணம் கட்டியவர்கள் பதபதைத்து கம்பெனிக்காரனிடம் கேட்டால் எப்போ படம் போடுகிறோமோ பார்த்துக் கொள்ளுங்கள், பணமெல்லாம் வாபஸ் கிடையாது என்கிறார்கள்...

என்ன கொடும சார் இது?

உங்களை நம்பித்தானே சார் பணம் கட்டினோம்? முதல் நாள் படம் பார்க்கும் ஆசையில் தானே கட்டினோம்? பொங்கல் விடுமுறையில் ஊருக்குச் சென்று குடும்பத்தோடு சேர்ந்து முதல் நாளே பார்க்கும் ஆசையில் தானே பணம் கட்டினோம்? இப்பொழுது அந்தத் தேதியில் இல்லை, பிறகொரு உங்களுக்குச் சௌகரியமான தேதியில் காட்டப்போவதாக சொல்கின்றீகள்... அதுவும் தியேட்டரில் போட்ட பிறகு தான் சின்னத் திரையில் காட்டப் போவதாகவும் சொல்கின்றீர்கள்...

இது அநியாயம் இல்லையா கமல் சார்? உங்கள் நாணயத்திற்கு இது அழகா?

உங்கள் நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பெரிய முதலீட்டில் புதிய முயற்சியில் இறங்கும் போது, கண்ணால் பார்க்க முடியாத இடத்திலிருந்தெல்லாம் பிரச்சினைகள் வரும். அதேப் போல் உங்களுக்கும் வந்திருக்கலாம். ஆனால் உங்களது அந்தப் பிரச்சினையில், சம்பந்தமே இல்லாமல் அப்பாவி ரசிகர்கள் அல்லது பொது மக்களின் பணத்தை அவர்கள் சம்மதமே இல்லாமல் எப்படி நீங்கள் பணயம் வைக்கலாம்?

உங்களுக்கு எதிர் தரப்பிலிருந்து சிக்கல்கள் வந்து அதை சமாளிக்க முடியாமல் போயிருந்தால், உடனடியாக நீங்கள் செய்திருக்க வேண்டிய காரியம் என்ன? உங்கள் புது முயற்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு கை நீட்டிப் பணம் தந்தவர்களுக்கு அதைத் திருப்பித் தர ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

அதைச் செய்ய தவறியதோடு மட்டுமல்லாமல், அது பற்றி வாயே திறக்காமல் இன்னமும் உங்களைப் பற்றியே யோசித்து பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் தமிழ்ச் சமுதாயத்தின் முன்னால் ஒரு குற்றவாளியே!

எண்ணித் துணிந்திருக்க வேண்டும்! துணிந்த பிறகு பின்வாங்கினாலே இழுக்கு என்கிறார் திருவள்ளுவர். ஆனால் நாங்கள் அதைக் கூடச் சொல்லவில்லை, பின்வாங்கும் போது நம்பி பணம் போட்டவர்களை நட்டாற்றில் விட்டு விட்டீர்களே அதைத் தான் குற்றம் என்கிறோம்!!!

உலகநாகயகன் இனி தமிழக மக்கள் மனதில் வில்லனாகவோ, காமெடியனாகவோ தான் வலம் வருவார்!



Tuesday, January 8, 2013

திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் நீர்த்து போனதா?

கடைசியில் அது நடந்தே விட்டது என்பது போல் தான் தோன்றுகிறது....!

தனது பதின்ம வயதுகளில் தொடங்கி கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கும் மேலாக தன் வாழ்வை தான் சார்ந்த இயக்கத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்ட ஒருவருக்கு அக் கட்சியின் தலைவரால் அடுத்த தலைமை பொறுப்பு இவர் வசம் தான் வரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தான் சமீபத்திய தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.

கட்சித் தலைமையின் இந்த அறிவிப்பானது அக் கட்சியின் பெரும்பாலான தொண்டர்களையும் தாண்டி, பொது மக்களில் குறிப்பிடத் தக்க சதவிகிதத்தினருக்கு மத்தியிலும் ஒரு வித இன்ப அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது தான் இதில் முக்கியமாக கவனிக்கப்படும் விஷயமாக இருக்கின்றது.

ஆம், திமுகவின் பொருளாளரும் அதன் தொண்டர்களின் தளபதியுமாகிய ஸ்டாலினை அவரது தந்தையும், கட்சியின் தலைவருமான கலைஞர் அவர்களால், “திமுகவின் அடுத்த தலைமைப் பதவிக்கு ஸ்டாலின் பெயர் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. க. அன்பழகன் அவர்களால் ஏற்கனவே முன் மொழியப்பட்டு விட்டதால், இப்பொழுது அதை நான் வழிமொழிவதாக அறிவிக்கிறேன்” என்று பத்திரிகையாளர்கள் முன்பாக அறிவித்திருப்பது தான் சமீபத்திய தமிழக அரசியலில் உச்சக்கட்ட தீயை பற்ற வைத்திருக்கின்றது.

எப்பவுமே திமுக அல்லது கலைஞர் எதைச் செய்தாலும் அல்லது பேசினாலும் எதிர்மறையாக விமர்சிக்கும் சிலர் இந்த அறிவிப்பு வந்தவுடன் உடனடி எதிர்வினையாக, திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் செத்து விட்டது, திமுக என்ன சங்கரமடமா என்று கேட்டவர் இப்பொழுது தானே வாரிசு அரசியலை ஊக்கப் படுத்தலாமா? என்றெல்லாம் தங்களுக்கு கிடைத்த தளங்களில் எல்லாம் வழக்கம் போல் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த எதிர்வினைக்காரர்களின் கேள்விகளையும் நாம் கொஞ்சம் விரிவாக விவாதிக்க வேண்டித்தான் இருக்கின்றது. ஏனெனில் அது தான் ஸ்டாலின் அவர்களின் திமுக தலைமைப் பதவி என்ற விருட்சத்திற்கான நல்ல உரமாக அமையும். இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் கடந்து போனால், அந்தக் கேள்விகள் எப்பொழுதுமே விருட்சத்தின் வேர்களை அரித்துக் கொண்டே இருக்கும்!

சரி விஷயத்திற்கு வருவோம்! இவர்கள் எல்லாம் சொல்வது போல திமுகவில் உட்கட்சி ஜனநாயம் செத்து விட்டதா?

ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்ற ஒரு சூழ்நிலை அடுத்தடுத்த பொதுக்குழு கூட்டங்களில் ஏற்பட்டால், அதை (அந்த தீர்மானத்தை) நான் வழி மொழிவேன் என்ற கலைஞரின் கருத்து எப்படி அந்தக் கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாக மாறும்?

மிகத் தெளிவாக இருக்கின்றது அவரது வார்த்தைகள். திமுகவில் அடுத்த தலைமைப் பதவியை ஒருவர் ஏற்க வேண்டுமானால், அது அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற வேண்டும். இதைத் தானே கலைஞர் தனது வார்த்தைகளில் பிரதிபலித்திருக்கின்றார்.

பொதுக்குழுவில் தலைமைப் பதவிக்கான போட்டியில் வேறு யாரும் போட்டியிடக் கூடாது என்று எங்காவது சொல்லியிருக்கின்றாரா? உண்மையிலேயே தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கின்ற ஒருவர் கலைஞர் மகனாக இல்லாது இருந்தாலும், தலைவர் பதவிக்கான தேர்வில் நின்று தொண்டர்கள் அவரை தேர்ந்தெடுத்து விட்டால் அவர் தான் கட்சியின் அடுத்த தலைவராக வர முடியும்.

நிச்சயமாக அப்படி ஒரு ஆள் இன்றைய தேதியில் திமுகவில் இல்லை என்பது தான் நிதர்சனம்.  நாற்பது வருடங்களுக்கும் மேலாக கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஒரு அடிமட்டத் தொண்டனாக தனது கட்சிப் பணியை துவக்கி, முதன் முதலாக கட்சிக்கு இளைஞர் அணி என்ற அமைப்பை உருவாக்கி, அதை ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இன்றளவும் வைத்திருக்கின்ற அந்த ஆளுமை தான் இந்த அளவிற்கு ஸ்டாலின் அவர்களை உயர்த்தியிருக்கிறது.

கட்சித் தலைவரின் மகன், அதுவும் சிறந்த செயல்வீரன் என்ற காரணத்தினால் தானே கல்யாணமான இரண்டே மாதங்களில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் மிகக் கொடூரமான அடக்குமுறைகளையெல்லாம் எதிர் கொண்டு வெளி வர வேண்டியிருந்தது?!

கட்சித் தலைவரின் மகன் என்ற காரணத்திற்காக, முதன் முதலில் அவர்  தேர்தல் களத்திற்கு வந்த போது எளிதில் வெல்லக் கூடிய பாதுகாப்பான தொகுதியிலா களம் இறக்கப்பட்டார்? இல்லையே...  அதிமுக அமைச்சரவையில் எம் ஜி ஆரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மிஸ்டர் க்ளீன் என்று சொல்லப்பட்ட மூத்த அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமிக்கு எதிராகவல்லவா களமிறக்கப்பட்டார்.

அப்பொழுது சென்னை திமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்டாலும், தனிப்பட்ட செல்வாக்கினால் ஆயிரம்விளக்கு தொகுதி மட்டும் கேஏகே வின் கோட்டையாகவே இருந்தது. அதில் நின்றால் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும், பலர் அதைத் தடுத்தும், கலைஞர் அந்தக் கோரமான கடலில் அல்லவா ஸ்டாலினை தூக்கிப் போட்டார்?!

அந்தத் தேர்தலில் தோற்றாலும், அதே தொகுதியில் தொடர்ந்து களப்பணியாற்றி அடுத்தடுத்த தேர்தல்களில் அதே தொகுதியில் வென்று சாதனைப் படைத்தாரே. அப்படி முதல் முறையாக வென்று சட்டமன்ற உறுப்பினராக ஆனதும், அவரை கலைஞர் தனது அமைச்சரவையில் சேர்த்துக்
கொண்டாரா? இல்லையே, முதல் முறை வெறும் சட்டமன்ற உறுப்பினராகத் தானே அமர்ந்து சட்டசபை பாடம் பயின்றார்!

இந்த இடத்தில் வைக்கோவைப் பற்றியும் நாம் பேச வேண்டியிருக்கிறது. விமர்சகர்களில் சிலர் சொல்லும் குற்றச்சாட்டு.....  “இன்றைய தேதியில் ஸ்டாலின் அளவிற்கு தொண்டர்பலம் கொண்டவர்கள் திமுகவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்படி தொண்டர் பலம் கொண்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து கட்டம் கட்டி, இவருக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது கலைஞரின் ராஜதந்திரம்” என்பது தான் அது.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது? இவர் முதன் முறையாக எம் எல் ஏ வாக வென்ற போது வைக்கோ மூன்றாவது முறையாக, தேர்தலையோ மக்கள் மன்றத்தையோ சந்திக்காமல், கலைஞரால் எம்பி ஆக்கப்பட்டிருந்தார். அதாவது வைக்கோ நோகாமல் நோன்பு கும்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஸ்டாலின் மக்களோடும், கட்சியின் அடிமட்ட மற்றும் இளைஞரணி தொண்டர்களோடும் இரண்டரக் கலந்து போராடி சட்டமன்ற உறுப்பினர் என்ற முதல் வெற்றியைப் பெற்றிருந்தார்!

மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டதாலும், எப்பவுமே தலைவர் கலைஞரின் பக்கத்திலேயே நின்று கொண்டு மீடியா வெளிச்சத்தில் இருந்ததாலுமே தனக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டம் இருப்பதாக நம்ப ஆரம்பித்த வைக்கோ, தனக்கென ஒரு கூட்டம் அமைத்துக் கொள்ளுதல், கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுதல், அதன் காரணமாக கட்சிக்கு பற்பல சமயங்களில் சங்கடங்களை ஏற்படுத்துதல் என்ற நிலைக்கு கட்சியை கொண்டு சென்று, ராஜீவ் கொலைக்கு திமுக தான் காரணம் என்ற எதிர்கட்சியினரின் வாதத்தை மக்கள்  நம்பும் சூழ்நிலைக்கு தமது செயல்பாடுகளால் நிறுவியிருந்தார் என்பது தான் நிதர்சனம்.

இதன் காரணமாக தேர்தலில் தோல்வியுற்று ராஜீவ் கொலை சம்பந்தமான வழக்குகளையும், கட்சி அங்கீகாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளையும் கட்சி சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் சப்பைக் காரணங்களைச் சொல்லி கட்சியிலிருந்து வெளியேறி, திமுகவையே கைப்பற்றும் செயலில் ஈடுபட்டு அதில் தோல்வியும் கண்டார்.

இந்த மாதிரியான ஒரு மிக இக்கட்டான நேரத்தில், தனது இளைஞர் அணியின் மூலமாக கட்சிக்குள் இள ரத்தத்தைப் பாய்ச்சி, திமுகவை ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக மிகவும் வலிமையோடு, மீண்டும் எழுச்சிபெற வைத்து தமிழகம் முழுவதும் கலைஞருக்கு இணையாக சுற்றுப்பயணம் செய்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் திமுகவை ஆட்சிக் கட்டிலில் மீண்டும் அமர்த்தும் அந்த பெரும் பணியை ஆற்றி முடித்தவர் தளபதி ஸ்டாலின்.

அந்த இக்கட்டான கால கட்டத்தில், நீண்டகால தடைக்குப் பிறகு உயிரூட்டப்பட்ட சென்னை மாநராட்சிக்கு நடந்த தேர்தலில்  மேயர் பதவிக்கான தேர்தலில் நின்று, வெற்றி பெற்று சென்னைக்கு ஒரு புதிய பரிமாணத்தையே பெற்றுத் தந்தார். கலைஞர் முயற்சியால் கட்டப்பட்ட சென்னை ஜெமினி பாலத்திற்குப் பின்பு, சென்னையில் கட்டப்பட்டுள்ள கிட்டத்தட்ட அனைத்து மேம்பாலங்களுமே ஸ்டாலினாலும் அவர் வழித்தோன்றல்களாலும் கட்டப்பட்டவையே ஆகும்.

ஸ்டாலினின் பெருமுயற்சிகளால் இந்தப் பாலங்கள் கட்டப்பட்டிருக்காவிட்டால் சென்னை இன்றைக்கு முட்டுச் சந்துகளில் முட்டிக் கொண்டு தான் நின்றிருந்திருக்கும்!

இதற்குப் பிறகு தான் கலைஞர் அமைச்சரவையிலேயே அவருக்கும் இடம் தரப்பட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சராக தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் அவர் கால்கள் படாத இடமே இல்லை என்று சொல்லுகின்ற அளவிற்கு சுற்றிச் சுழன்று ஆயிரக்கணக்கான பாலங்கள், சிமெண்ட் சாலை வசதிகள், கிராமப்புரங்களில் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் என்று தமிழக கிராமப் புரங்கள் முழுவதும் தனது செயல்பாடுகளை தீவிரப்படுத்தினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்க அவர் அளித்த பல்வேறு வாய்ப்புகளும், சுழல்நிதியும் இன்றளவும் மக்களால் பேசப்படுகின்றன. அந்த நேரங்களில் தங்கள் கைகளில் இருந்த பணப்புழக்கத்தை, வரண்டு போயுள்ள இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து பேசும் பெண்கள் பட்டாளம் இன்றைக்கு கிராமங்கள் தோறும் ஏராளம்!

கடந்த முறை திமுகவின் தோல்விக்கு பல்வேறு காரணங்களை அறிவு ஜீவிகள் அலசிக் கூறினாலும் ஊடகங்களின் பிரச்சாரமும், அதிமுக அமைத்த வலுவான கூட்டனியும் தான் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இந்தத் தோல்வியிலிருந்து தலைவர் கலைஞரே வெளிவந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தும் முன்னதாக, சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து தொண்டர்களை தட்டியெழுப்பியவர் தளபதி ஸ்டாலின் தான் என்பதை அனைவரும் கண்கூடாக கண்டிருப்பர்.

இதை ஒரு தோல்வியாகக் கருதாமல் கட்சியைப் பலப்படுத்தும் ஒரு அவகாசமாக எடுத்துக் கொண்டு களம் இறங்கினார் ஸ்டாலின். மேயர் ஆனது தொடங்கி அடுத்தடுத்து அமைச்சர் பதவி, துணை முதல்வர் பொறுப்பு என்று செயல்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் திமுக தலைமையால் தமிழக ஆட்சிப் பொறுப்பு, மத்தியிலும் ஆளுங்கட்சியை நிர்ணயிக்கும் முக்கிய பொறுப்பு, தேர்தல்கள், கூட்டணிகள் என்று வேலைப் பளு அதிகமிருந்த காரணத்தாலோ என்னவோ கட்சியில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு என்பதே கிட்டத்தட்ட இல்லாத சூழ்நிலை இருந்ததை உற்றுக் கவனித்த ஸ்டாலின், அந்த இளைய தலைமுறையினரின் உழைப்பும் வாக்குகளும் கட்சிக்கு கிடைக்காமல் போனது தான் இந்த தோல்விக்கு அதி முக்கிய காரணம் என்பதை புரிந்து கொண்டார்.

இனி தன்னுடைய கடமை என்ன என்பது அவருக்கு தானாகவே புரிந்து போயிற்று. ஆட்சிப்பணிக்கான பொறுப்புகள் இல்லாத இந்த அவகாசத்தை அருமையாக பயன்படுத்திக் கொண்ட ஸ்டாலின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்டவாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தி இளைஞர் அணியின் புதிய சட்ட திட்டங்களையும் வயது வரம்புகளையும், இன்னபிறவையும் அறிவித்து அதற்கான நேர்காணலுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுப் பேசினார்.

அவரது பேச்சு கட்சியில் இல்லாத பல இளைஞர்களையும் கவரவே மாவட்டம் தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் நேர்காணலுக்காக விண்ணப்பிக்க, அவர் மீண்டும் முன்னரே தேதிகளை அறிவித்து விட்டு மாவட்டம் தோறும் நேர்காணல் நடத்தி, தமிழகம் முழுமைக்கும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நகர, ஒன்றிய, கிளைக்கழக மற்றும் மாவட்ட, பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவித்து அவர்களுக்கு கட்சியின் கொள்கைகள், கட்டுப்பாடுகள் மற்றும் திராவிட இயக்க வரலாறு பற்றிய பயிற்சிப்பட்டரைகளை விரிவாக தொடர்ந்து நடத்தி வருகின்றார்.

ஆட்சி கைநழுவிப்போன இந்த 20 மாதங்களில். புத்துணர்வுடன் கூடிய எழுச்சி பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் ஸ்டாலின் மூலமாக கட்சிக்கு கிடைத்திருக்கின்றார்கள். அவர்கள் கைகளில் தான் கட்சியின் எதிர்காலம் இருக்கின்றது என்பது எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்து விட்டது. தலைவர் கலைஞர் அவர்களும் அவர்களை அங்கீகரித்து வாழ்த்தியிருக்கின்றார்.

இப்பொழுது ஆரம்ப விஷயத்திற்கு வந்துவிடுவோம்! ஒரு கட்சியில் அடிமட்டத் தொண்டனாக காலடி எடுத்து வைத்து, கட்சிக் கொள்கைக்காக  கடுமையான சிறைவாசத்தை அனுபவித்து, பதினைந்து வருடங்கள் பதவியின்றியே உழைத்த பிறகு, ஜெயிக்க முடியாத இடத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, எம் எல் ஏ, மேயர், அமைச்சர், துணை முதல்வர் என்று படிப்படியாக உயர்ந்து.......

அதோடு மட்டுமல்லாமல், கட்சியின் தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் மறு வார்த்தை பேசாமல் கட்டுப்பட்டு, தன் கடமைகளை பிரதிபலன் எதிர்பாராமல் செவ்வனே செய்து, இக்கட்டான காலகட்டங்களில் கட்சியின் அஸ்திவாரத்தையே தாங்கிப் பிடித்து, இன்றைக்கும் கட்சியை இள ரத்தத்துடன் உற்சாகமாக பயணிக்க வைத்துக் கொண்டிருந்து.....

இது மட்டுமல்லாமல், இத்தனை ஆண்டுகள் அரசு அமைச்சக பொறுப்புகளில் இருந்தாலும் கரை படாத கைகளுக்குச் சொந்தக்காரராகவும், தான் மட்டுமன்றி தன் மனைவி, பிள்ளைகள், தன் மனைவி வழி சொந்தங்கள் என்று யாரையுமே ஊழல் என்று குற்றம் சுமத்த முடியாத அளவிற்கு வழிநடத்தி நேர்மையானவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், மிகத் திறமையான நிர்வாகத் திறன் கொண்டவராகவும், அரசு ஒப்பந்தம் தானே என்று அலட்சியம் காட்டாமல் நேராக சென்று கண்கானிப்பு செய்து, திட்ட நேரம் மற்றும் தொகையை விட குறைவான நேரம் மற்றும் தொகையில் ஒப்பந்தங்களை நிறைவேற்றி மக்களுக்கு அர்ப்பணிக்கும் அந்த அளப்பறிய ஆற்றல் பெற்ற செயல் வீரனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும்......

இந்த மனிதரின் கைகளில் திமுக என்ற கட்சியை கொடுப்பதற்கு கட்சித் தலைவர் முன்வந்தால் அது எப்படி உட்கட்சி ஜனநாயக மீறலாக எடுத்துக்கொள்ளப்படும்?

ஒருவேளை அந்த தலைவர் ஸ்டாலினுடைய தந்தை என்பதால் தான் இந்தப் பேச்சு எழுகிறது என்றால், அவர் ஸ்டாலினுக்கு மேல் உள்ள இரண்டு மூத்தவர்களுக்கு அல்லவா பட்டத்தைக் கட்டுவதாக அறிவித்திருக்க வேண்டும்?! அப்படி நடக்கவில்லையே?! வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகத் தானே ஸ்டாலினுக்கு முடி சூட்ட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

அது என்ன காரணம்?

ஸ்டாலினால் கட்சிக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்பட்டதில்லை, ஸ்டாலினால் கட்சிக்கு எந்த அவமானமும் ஏற்பட்டதில்லை, ஸ்டாலினால் திமுக ஆட்சிக்கும் எந்த கெட்ட பெயரோ, அவமானமோ ஏற்பட்டதில்லை.....

ஸ்டாலின் கட்சியின் மிக முக்கிய துணை அமைப்பான இளைஞர் அணியை கட்டமைத்து அதை மிகத் தெளிவாக கட்சியின் தாங்கு தூணாக நிர்வகித்து வருகிறார். கட்சிக்காக பட்டி தொட்டியெங்கும் சென்று பிரச்சாரம் செய்கிறார். கலைஞருக்கு அடுத்து பெரும் கூட்டத்தைக் கூட்டி பிரச்சாரம் செய்யும் சக்தியாக அவர் ஒருவர் மட்டுமே இப்பொழுது கட்சியில் இருக்கின்றார். மிக இக்கட்டான கால கட்டங்களில் கட்சியை விட்டு ஓடி விடாமல், கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து சங்கடப்படுத்தாமல், கட்சியை தாங்கிப் பிடித்து உழைத்து மீட்டெடுத்திருக்கின்றார்.

இவை அனைத்தையுமே எந்த ஆடம்பரமும் இல்லாமல் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டே செய்து வந்திருக்கிறார் என்பது தான் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

இப்படிப்பட்ட ஒருவர் ஏன் திமுகவின் அடுத்த தலைவராக வரக்கூடாது? மிகத் தகுதி வாய்ந்த ஒருவர் தற்பொழுதைய தலைவரின் மகன் என்ற காரணத்தினால் அடுத்த தலைமைப் பதவிக்கு வர தகுதியற்றவராக ஆகிவிடுவாரா?

ஒரு வேளை அப்படி நடந்தால் அப்பொழுது சொல்லலாம், “திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் செத்து விட்டது” என்று!

அடுத்து இது என்ன மடமா? வாரிசு அரசியல் நடத்துவதற்கு, என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒரு பதில் தான், நிச்சயமாக திமுக என்பது அதன் தலைவரால் அடுத்த தலைமைக்கான வாரிசை நியமிக்கும் பழக்கம் உள்ள மடம் கிடையாது, தலைமை பதவிக்கு மூன்று வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும், அப்பொழுது ஸ்டாலினை எதிர்த்து தகுதியுள்ள எந்தவொரு திமுக தொண்டனும் நிற்கலாம், அவர் பெரும்பான்மையான உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரே திமுகவின் அடுத்த தலைவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தான் நடைமுறை.

ஆனால் இது போன்ற குதர்க்க வாதங்களை விமர்சனம் என்ற பெயரில் முன்வைப்பவர்கள் யார் என்று பார்த்தால், எப்பொழுதுமே திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பவர்களோ அல்லது அதிமுக ஆதரவு நிலை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்து நடுநிலை முகமூடியோடு திமுகவை மட்டுமே திட்டிக் கொண்டிருப்பவர்களும் தான் என்பது புரியவரும்.

ஆனால் பொது வெளியில் திமுகவையும், கலைஞரையும் கடுமையாக விமர்சிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்டாலின் தலைமையை ஆவலுடன் வரவேற்கத்தான் செய்கின்றார்கள்.

அதனால் நான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக எழுதிய வாருங்கள் ஸ்டாலின் பதவியேற்க என்ற இந்தப் பதிவையே இந்தப் பதிவின் முத்தாய்ப்பாக வைத்து முடிக்கின்றேன்!!!