Tuesday, January 8, 2013

திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் நீர்த்து போனதா?

கடைசியில் அது நடந்தே விட்டது என்பது போல் தான் தோன்றுகிறது....!

தனது பதின்ம வயதுகளில் தொடங்கி கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கும் மேலாக தன் வாழ்வை தான் சார்ந்த இயக்கத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்ட ஒருவருக்கு அக் கட்சியின் தலைவரால் அடுத்த தலைமை பொறுப்பு இவர் வசம் தான் வரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தான் சமீபத்திய தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.

கட்சித் தலைமையின் இந்த அறிவிப்பானது அக் கட்சியின் பெரும்பாலான தொண்டர்களையும் தாண்டி, பொது மக்களில் குறிப்பிடத் தக்க சதவிகிதத்தினருக்கு மத்தியிலும் ஒரு வித இன்ப அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது தான் இதில் முக்கியமாக கவனிக்கப்படும் விஷயமாக இருக்கின்றது.

ஆம், திமுகவின் பொருளாளரும் அதன் தொண்டர்களின் தளபதியுமாகிய ஸ்டாலினை அவரது தந்தையும், கட்சியின் தலைவருமான கலைஞர் அவர்களால், “திமுகவின் அடுத்த தலைமைப் பதவிக்கு ஸ்டாலின் பெயர் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. க. அன்பழகன் அவர்களால் ஏற்கனவே முன் மொழியப்பட்டு விட்டதால், இப்பொழுது அதை நான் வழிமொழிவதாக அறிவிக்கிறேன்” என்று பத்திரிகையாளர்கள் முன்பாக அறிவித்திருப்பது தான் சமீபத்திய தமிழக அரசியலில் உச்சக்கட்ட தீயை பற்ற வைத்திருக்கின்றது.

எப்பவுமே திமுக அல்லது கலைஞர் எதைச் செய்தாலும் அல்லது பேசினாலும் எதிர்மறையாக விமர்சிக்கும் சிலர் இந்த அறிவிப்பு வந்தவுடன் உடனடி எதிர்வினையாக, திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் செத்து விட்டது, திமுக என்ன சங்கரமடமா என்று கேட்டவர் இப்பொழுது தானே வாரிசு அரசியலை ஊக்கப் படுத்தலாமா? என்றெல்லாம் தங்களுக்கு கிடைத்த தளங்களில் எல்லாம் வழக்கம் போல் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த எதிர்வினைக்காரர்களின் கேள்விகளையும் நாம் கொஞ்சம் விரிவாக விவாதிக்க வேண்டித்தான் இருக்கின்றது. ஏனெனில் அது தான் ஸ்டாலின் அவர்களின் திமுக தலைமைப் பதவி என்ற விருட்சத்திற்கான நல்ல உரமாக அமையும். இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் கடந்து போனால், அந்தக் கேள்விகள் எப்பொழுதுமே விருட்சத்தின் வேர்களை அரித்துக் கொண்டே இருக்கும்!

சரி விஷயத்திற்கு வருவோம்! இவர்கள் எல்லாம் சொல்வது போல திமுகவில் உட்கட்சி ஜனநாயம் செத்து விட்டதா?

ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்ற ஒரு சூழ்நிலை அடுத்தடுத்த பொதுக்குழு கூட்டங்களில் ஏற்பட்டால், அதை (அந்த தீர்மானத்தை) நான் வழி மொழிவேன் என்ற கலைஞரின் கருத்து எப்படி அந்தக் கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாக மாறும்?

மிகத் தெளிவாக இருக்கின்றது அவரது வார்த்தைகள். திமுகவில் அடுத்த தலைமைப் பதவியை ஒருவர் ஏற்க வேண்டுமானால், அது அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற வேண்டும். இதைத் தானே கலைஞர் தனது வார்த்தைகளில் பிரதிபலித்திருக்கின்றார்.

பொதுக்குழுவில் தலைமைப் பதவிக்கான போட்டியில் வேறு யாரும் போட்டியிடக் கூடாது என்று எங்காவது சொல்லியிருக்கின்றாரா? உண்மையிலேயே தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கின்ற ஒருவர் கலைஞர் மகனாக இல்லாது இருந்தாலும், தலைவர் பதவிக்கான தேர்வில் நின்று தொண்டர்கள் அவரை தேர்ந்தெடுத்து விட்டால் அவர் தான் கட்சியின் அடுத்த தலைவராக வர முடியும்.

நிச்சயமாக அப்படி ஒரு ஆள் இன்றைய தேதியில் திமுகவில் இல்லை என்பது தான் நிதர்சனம்.  நாற்பது வருடங்களுக்கும் மேலாக கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஒரு அடிமட்டத் தொண்டனாக தனது கட்சிப் பணியை துவக்கி, முதன் முதலாக கட்சிக்கு இளைஞர் அணி என்ற அமைப்பை உருவாக்கி, அதை ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இன்றளவும் வைத்திருக்கின்ற அந்த ஆளுமை தான் இந்த அளவிற்கு ஸ்டாலின் அவர்களை உயர்த்தியிருக்கிறது.

கட்சித் தலைவரின் மகன், அதுவும் சிறந்த செயல்வீரன் என்ற காரணத்தினால் தானே கல்யாணமான இரண்டே மாதங்களில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் மிகக் கொடூரமான அடக்குமுறைகளையெல்லாம் எதிர் கொண்டு வெளி வர வேண்டியிருந்தது?!

கட்சித் தலைவரின் மகன் என்ற காரணத்திற்காக, முதன் முதலில் அவர்  தேர்தல் களத்திற்கு வந்த போது எளிதில் வெல்லக் கூடிய பாதுகாப்பான தொகுதியிலா களம் இறக்கப்பட்டார்? இல்லையே...  அதிமுக அமைச்சரவையில் எம் ஜி ஆரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மிஸ்டர் க்ளீன் என்று சொல்லப்பட்ட மூத்த அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமிக்கு எதிராகவல்லவா களமிறக்கப்பட்டார்.

அப்பொழுது சென்னை திமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்டாலும், தனிப்பட்ட செல்வாக்கினால் ஆயிரம்விளக்கு தொகுதி மட்டும் கேஏகே வின் கோட்டையாகவே இருந்தது. அதில் நின்றால் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும், பலர் அதைத் தடுத்தும், கலைஞர் அந்தக் கோரமான கடலில் அல்லவா ஸ்டாலினை தூக்கிப் போட்டார்?!

அந்தத் தேர்தலில் தோற்றாலும், அதே தொகுதியில் தொடர்ந்து களப்பணியாற்றி அடுத்தடுத்த தேர்தல்களில் அதே தொகுதியில் வென்று சாதனைப் படைத்தாரே. அப்படி முதல் முறையாக வென்று சட்டமன்ற உறுப்பினராக ஆனதும், அவரை கலைஞர் தனது அமைச்சரவையில் சேர்த்துக்
கொண்டாரா? இல்லையே, முதல் முறை வெறும் சட்டமன்ற உறுப்பினராகத் தானே அமர்ந்து சட்டசபை பாடம் பயின்றார்!

இந்த இடத்தில் வைக்கோவைப் பற்றியும் நாம் பேச வேண்டியிருக்கிறது. விமர்சகர்களில் சிலர் சொல்லும் குற்றச்சாட்டு.....  “இன்றைய தேதியில் ஸ்டாலின் அளவிற்கு தொண்டர்பலம் கொண்டவர்கள் திமுகவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்படி தொண்டர் பலம் கொண்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து கட்டம் கட்டி, இவருக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது கலைஞரின் ராஜதந்திரம்” என்பது தான் அது.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது? இவர் முதன் முறையாக எம் எல் ஏ வாக வென்ற போது வைக்கோ மூன்றாவது முறையாக, தேர்தலையோ மக்கள் மன்றத்தையோ சந்திக்காமல், கலைஞரால் எம்பி ஆக்கப்பட்டிருந்தார். அதாவது வைக்கோ நோகாமல் நோன்பு கும்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஸ்டாலின் மக்களோடும், கட்சியின் அடிமட்ட மற்றும் இளைஞரணி தொண்டர்களோடும் இரண்டரக் கலந்து போராடி சட்டமன்ற உறுப்பினர் என்ற முதல் வெற்றியைப் பெற்றிருந்தார்!

மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டதாலும், எப்பவுமே தலைவர் கலைஞரின் பக்கத்திலேயே நின்று கொண்டு மீடியா வெளிச்சத்தில் இருந்ததாலுமே தனக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டம் இருப்பதாக நம்ப ஆரம்பித்த வைக்கோ, தனக்கென ஒரு கூட்டம் அமைத்துக் கொள்ளுதல், கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுதல், அதன் காரணமாக கட்சிக்கு பற்பல சமயங்களில் சங்கடங்களை ஏற்படுத்துதல் என்ற நிலைக்கு கட்சியை கொண்டு சென்று, ராஜீவ் கொலைக்கு திமுக தான் காரணம் என்ற எதிர்கட்சியினரின் வாதத்தை மக்கள்  நம்பும் சூழ்நிலைக்கு தமது செயல்பாடுகளால் நிறுவியிருந்தார் என்பது தான் நிதர்சனம்.

இதன் காரணமாக தேர்தலில் தோல்வியுற்று ராஜீவ் கொலை சம்பந்தமான வழக்குகளையும், கட்சி அங்கீகாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளையும் கட்சி சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் சப்பைக் காரணங்களைச் சொல்லி கட்சியிலிருந்து வெளியேறி, திமுகவையே கைப்பற்றும் செயலில் ஈடுபட்டு அதில் தோல்வியும் கண்டார்.

இந்த மாதிரியான ஒரு மிக இக்கட்டான நேரத்தில், தனது இளைஞர் அணியின் மூலமாக கட்சிக்குள் இள ரத்தத்தைப் பாய்ச்சி, திமுகவை ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக மிகவும் வலிமையோடு, மீண்டும் எழுச்சிபெற வைத்து தமிழகம் முழுவதும் கலைஞருக்கு இணையாக சுற்றுப்பயணம் செய்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் திமுகவை ஆட்சிக் கட்டிலில் மீண்டும் அமர்த்தும் அந்த பெரும் பணியை ஆற்றி முடித்தவர் தளபதி ஸ்டாலின்.

அந்த இக்கட்டான கால கட்டத்தில், நீண்டகால தடைக்குப் பிறகு உயிரூட்டப்பட்ட சென்னை மாநராட்சிக்கு நடந்த தேர்தலில்  மேயர் பதவிக்கான தேர்தலில் நின்று, வெற்றி பெற்று சென்னைக்கு ஒரு புதிய பரிமாணத்தையே பெற்றுத் தந்தார். கலைஞர் முயற்சியால் கட்டப்பட்ட சென்னை ஜெமினி பாலத்திற்குப் பின்பு, சென்னையில் கட்டப்பட்டுள்ள கிட்டத்தட்ட அனைத்து மேம்பாலங்களுமே ஸ்டாலினாலும் அவர் வழித்தோன்றல்களாலும் கட்டப்பட்டவையே ஆகும்.

ஸ்டாலினின் பெருமுயற்சிகளால் இந்தப் பாலங்கள் கட்டப்பட்டிருக்காவிட்டால் சென்னை இன்றைக்கு முட்டுச் சந்துகளில் முட்டிக் கொண்டு தான் நின்றிருந்திருக்கும்!

இதற்குப் பிறகு தான் கலைஞர் அமைச்சரவையிலேயே அவருக்கும் இடம் தரப்பட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சராக தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் அவர் கால்கள் படாத இடமே இல்லை என்று சொல்லுகின்ற அளவிற்கு சுற்றிச் சுழன்று ஆயிரக்கணக்கான பாலங்கள், சிமெண்ட் சாலை வசதிகள், கிராமப்புரங்களில் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் என்று தமிழக கிராமப் புரங்கள் முழுவதும் தனது செயல்பாடுகளை தீவிரப்படுத்தினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்க அவர் அளித்த பல்வேறு வாய்ப்புகளும், சுழல்நிதியும் இன்றளவும் மக்களால் பேசப்படுகின்றன. அந்த நேரங்களில் தங்கள் கைகளில் இருந்த பணப்புழக்கத்தை, வரண்டு போயுள்ள இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து பேசும் பெண்கள் பட்டாளம் இன்றைக்கு கிராமங்கள் தோறும் ஏராளம்!

கடந்த முறை திமுகவின் தோல்விக்கு பல்வேறு காரணங்களை அறிவு ஜீவிகள் அலசிக் கூறினாலும் ஊடகங்களின் பிரச்சாரமும், அதிமுக அமைத்த வலுவான கூட்டனியும் தான் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இந்தத் தோல்வியிலிருந்து தலைவர் கலைஞரே வெளிவந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தும் முன்னதாக, சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து தொண்டர்களை தட்டியெழுப்பியவர் தளபதி ஸ்டாலின் தான் என்பதை அனைவரும் கண்கூடாக கண்டிருப்பர்.

இதை ஒரு தோல்வியாகக் கருதாமல் கட்சியைப் பலப்படுத்தும் ஒரு அவகாசமாக எடுத்துக் கொண்டு களம் இறங்கினார் ஸ்டாலின். மேயர் ஆனது தொடங்கி அடுத்தடுத்து அமைச்சர் பதவி, துணை முதல்வர் பொறுப்பு என்று செயல்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் திமுக தலைமையால் தமிழக ஆட்சிப் பொறுப்பு, மத்தியிலும் ஆளுங்கட்சியை நிர்ணயிக்கும் முக்கிய பொறுப்பு, தேர்தல்கள், கூட்டணிகள் என்று வேலைப் பளு அதிகமிருந்த காரணத்தாலோ என்னவோ கட்சியில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு என்பதே கிட்டத்தட்ட இல்லாத சூழ்நிலை இருந்ததை உற்றுக் கவனித்த ஸ்டாலின், அந்த இளைய தலைமுறையினரின் உழைப்பும் வாக்குகளும் கட்சிக்கு கிடைக்காமல் போனது தான் இந்த தோல்விக்கு அதி முக்கிய காரணம் என்பதை புரிந்து கொண்டார்.

இனி தன்னுடைய கடமை என்ன என்பது அவருக்கு தானாகவே புரிந்து போயிற்று. ஆட்சிப்பணிக்கான பொறுப்புகள் இல்லாத இந்த அவகாசத்தை அருமையாக பயன்படுத்திக் கொண்ட ஸ்டாலின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்டவாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தி இளைஞர் அணியின் புதிய சட்ட திட்டங்களையும் வயது வரம்புகளையும், இன்னபிறவையும் அறிவித்து அதற்கான நேர்காணலுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுப் பேசினார்.

அவரது பேச்சு கட்சியில் இல்லாத பல இளைஞர்களையும் கவரவே மாவட்டம் தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் நேர்காணலுக்காக விண்ணப்பிக்க, அவர் மீண்டும் முன்னரே தேதிகளை அறிவித்து விட்டு மாவட்டம் தோறும் நேர்காணல் நடத்தி, தமிழகம் முழுமைக்கும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நகர, ஒன்றிய, கிளைக்கழக மற்றும் மாவட்ட, பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவித்து அவர்களுக்கு கட்சியின் கொள்கைகள், கட்டுப்பாடுகள் மற்றும் திராவிட இயக்க வரலாறு பற்றிய பயிற்சிப்பட்டரைகளை விரிவாக தொடர்ந்து நடத்தி வருகின்றார்.

ஆட்சி கைநழுவிப்போன இந்த 20 மாதங்களில். புத்துணர்வுடன் கூடிய எழுச்சி பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் ஸ்டாலின் மூலமாக கட்சிக்கு கிடைத்திருக்கின்றார்கள். அவர்கள் கைகளில் தான் கட்சியின் எதிர்காலம் இருக்கின்றது என்பது எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்து விட்டது. தலைவர் கலைஞர் அவர்களும் அவர்களை அங்கீகரித்து வாழ்த்தியிருக்கின்றார்.

இப்பொழுது ஆரம்ப விஷயத்திற்கு வந்துவிடுவோம்! ஒரு கட்சியில் அடிமட்டத் தொண்டனாக காலடி எடுத்து வைத்து, கட்சிக் கொள்கைக்காக  கடுமையான சிறைவாசத்தை அனுபவித்து, பதினைந்து வருடங்கள் பதவியின்றியே உழைத்த பிறகு, ஜெயிக்க முடியாத இடத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, எம் எல் ஏ, மேயர், அமைச்சர், துணை முதல்வர் என்று படிப்படியாக உயர்ந்து.......

அதோடு மட்டுமல்லாமல், கட்சியின் தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் மறு வார்த்தை பேசாமல் கட்டுப்பட்டு, தன் கடமைகளை பிரதிபலன் எதிர்பாராமல் செவ்வனே செய்து, இக்கட்டான காலகட்டங்களில் கட்சியின் அஸ்திவாரத்தையே தாங்கிப் பிடித்து, இன்றைக்கும் கட்சியை இள ரத்தத்துடன் உற்சாகமாக பயணிக்க வைத்துக் கொண்டிருந்து.....

இது மட்டுமல்லாமல், இத்தனை ஆண்டுகள் அரசு அமைச்சக பொறுப்புகளில் இருந்தாலும் கரை படாத கைகளுக்குச் சொந்தக்காரராகவும், தான் மட்டுமன்றி தன் மனைவி, பிள்ளைகள், தன் மனைவி வழி சொந்தங்கள் என்று யாரையுமே ஊழல் என்று குற்றம் சுமத்த முடியாத அளவிற்கு வழிநடத்தி நேர்மையானவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், மிகத் திறமையான நிர்வாகத் திறன் கொண்டவராகவும், அரசு ஒப்பந்தம் தானே என்று அலட்சியம் காட்டாமல் நேராக சென்று கண்கானிப்பு செய்து, திட்ட நேரம் மற்றும் தொகையை விட குறைவான நேரம் மற்றும் தொகையில் ஒப்பந்தங்களை நிறைவேற்றி மக்களுக்கு அர்ப்பணிக்கும் அந்த அளப்பறிய ஆற்றல் பெற்ற செயல் வீரனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும்......

இந்த மனிதரின் கைகளில் திமுக என்ற கட்சியை கொடுப்பதற்கு கட்சித் தலைவர் முன்வந்தால் அது எப்படி உட்கட்சி ஜனநாயக மீறலாக எடுத்துக்கொள்ளப்படும்?

ஒருவேளை அந்த தலைவர் ஸ்டாலினுடைய தந்தை என்பதால் தான் இந்தப் பேச்சு எழுகிறது என்றால், அவர் ஸ்டாலினுக்கு மேல் உள்ள இரண்டு மூத்தவர்களுக்கு அல்லவா பட்டத்தைக் கட்டுவதாக அறிவித்திருக்க வேண்டும்?! அப்படி நடக்கவில்லையே?! வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகத் தானே ஸ்டாலினுக்கு முடி சூட்ட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

அது என்ன காரணம்?

ஸ்டாலினால் கட்சிக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்பட்டதில்லை, ஸ்டாலினால் கட்சிக்கு எந்த அவமானமும் ஏற்பட்டதில்லை, ஸ்டாலினால் திமுக ஆட்சிக்கும் எந்த கெட்ட பெயரோ, அவமானமோ ஏற்பட்டதில்லை.....

ஸ்டாலின் கட்சியின் மிக முக்கிய துணை அமைப்பான இளைஞர் அணியை கட்டமைத்து அதை மிகத் தெளிவாக கட்சியின் தாங்கு தூணாக நிர்வகித்து வருகிறார். கட்சிக்காக பட்டி தொட்டியெங்கும் சென்று பிரச்சாரம் செய்கிறார். கலைஞருக்கு அடுத்து பெரும் கூட்டத்தைக் கூட்டி பிரச்சாரம் செய்யும் சக்தியாக அவர் ஒருவர் மட்டுமே இப்பொழுது கட்சியில் இருக்கின்றார். மிக இக்கட்டான கால கட்டங்களில் கட்சியை விட்டு ஓடி விடாமல், கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து சங்கடப்படுத்தாமல், கட்சியை தாங்கிப் பிடித்து உழைத்து மீட்டெடுத்திருக்கின்றார்.

இவை அனைத்தையுமே எந்த ஆடம்பரமும் இல்லாமல் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டே செய்து வந்திருக்கிறார் என்பது தான் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

இப்படிப்பட்ட ஒருவர் ஏன் திமுகவின் அடுத்த தலைவராக வரக்கூடாது? மிகத் தகுதி வாய்ந்த ஒருவர் தற்பொழுதைய தலைவரின் மகன் என்ற காரணத்தினால் அடுத்த தலைமைப் பதவிக்கு வர தகுதியற்றவராக ஆகிவிடுவாரா?

ஒரு வேளை அப்படி நடந்தால் அப்பொழுது சொல்லலாம், “திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் செத்து விட்டது” என்று!

அடுத்து இது என்ன மடமா? வாரிசு அரசியல் நடத்துவதற்கு, என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒரு பதில் தான், நிச்சயமாக திமுக என்பது அதன் தலைவரால் அடுத்த தலைமைக்கான வாரிசை நியமிக்கும் பழக்கம் உள்ள மடம் கிடையாது, தலைமை பதவிக்கு மூன்று வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும், அப்பொழுது ஸ்டாலினை எதிர்த்து தகுதியுள்ள எந்தவொரு திமுக தொண்டனும் நிற்கலாம், அவர் பெரும்பான்மையான உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரே திமுகவின் அடுத்த தலைவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தான் நடைமுறை.

ஆனால் இது போன்ற குதர்க்க வாதங்களை விமர்சனம் என்ற பெயரில் முன்வைப்பவர்கள் யார் என்று பார்த்தால், எப்பொழுதுமே திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பவர்களோ அல்லது அதிமுக ஆதரவு நிலை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்து நடுநிலை முகமூடியோடு திமுகவை மட்டுமே திட்டிக் கொண்டிருப்பவர்களும் தான் என்பது புரியவரும்.

ஆனால் பொது வெளியில் திமுகவையும், கலைஞரையும் கடுமையாக விமர்சிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்டாலின் தலைமையை ஆவலுடன் வரவேற்கத்தான் செய்கின்றார்கள்.

அதனால் நான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக எழுதிய வாருங்கள் ஸ்டாலின் பதவியேற்க என்ற இந்தப் பதிவையே இந்தப் பதிவின் முத்தாய்ப்பாக வைத்து முடிக்கின்றேன்!!!


4 comments:

vijayan said...

எப்படியோ போன குடும்ப தகராறில் தினகரன் ஊழியர் மூணு பேரை கொழுத்தின மாதிரி இப்போ நடக்காமல் கிரிடம் இடம் மாறினால் போதும்.ஔரங்கசீப்பின் ஞாபகம் ஏனோ வந்து தொலைகிறது.

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்ல விரிவான, அருமையான அலசல். நானும் இதைப்போல் ஒரு பதிவை நேற்று போட்டிருந்தேன்.
பார்க்க...
http://www.rahimgazzali.com/2013/01/azakiri-vs-stalin.html

கொக்கரக்கோ..!!! said...

வாங்க ரஹீம் கஸாலி. உங்கள் பதிவை படித்தேன். நன்றாக இருக்கிறது.

கொக்கரக்கோ..!!! said...

வாருங்கள் விஜயன். நீங்கள் சொல்வது போல் அழகிரி மூன்று பேரை கொளுத்தியிருந்தால் தூக்கி உள்ளே போட வேண்டியது தான். தப்பேயில்லை.