Thursday, January 17, 2013

பலூன் மாமா!

அவனுக்கு ஊர் எல்லையை மிதித்தவுடனேயே, அதுவரை குறுகுறுவென இருந்த மன மொட்டு வெடித்துச் சிதறிப் பூத்தது போன்ற ஒரு ஆரவார சந்தோஷம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு முதன் முறையாக தன் மனைவி பிள்ளைகளை அழைத்து வருகிறான்!

சொந்த மண்ணில் கால் வைத்ததுமே ஒரு பனிப்படலம் அவனது விழித் திரைகளுக்கு முன்னால் மட்டும் தோன்றி, காட்சிகளை மறைக்கிறது, ஓரிரு விநாடிகளிலேயே அது கரைந்து கண்களின் அடிப்பகுதியில் நீர்த்துளிகளாய் தேங்கி, வழிய ஆரம்பிக்கிறது.

சட்டென தன் கண்களை துடைத்துக் கொண்டவன், தன் மனைவியைப் பார்க்கின்றான். அவன் உணர்வுகளைப் புரிந்து கொண்டவளாய் அவன் தோளில் கை வைத்து மெதுவாக அழுத்துகிறாள்......

நம்ம ராமசாமிக்கு வயது ஒரு முப்பத்தைந்து இருக்கும். மலேஷியாவில் வேலை. அவன் படித்து முடித்த பிறகு இரண்டு வருடம் வேலை தேடி நாயாய் அலைந்து, நான்கைந்து இடத்தில் வேலையில் சேர்ந்தாலும் அது சரிப்பட்டு வராமல் விரக்தியோடு சுற்றிக் கொண்டிருந்த நேரம் அது.

அப்பொழுது தான் அத்தையின் கணவர் சுந்தரமூர்த்தி மாமா, தான் வேலை பார்த்த ஒரு மலேஷிய பலசரக்கு கடையிலிருந்து ஒன்வேயில் வருகிறார். அந்த கடை முதலாளி உன் இடத்தில் நீயே ஒரு நல்ல பையனாக அமர்த்திவிடு என்று சொல்ல....,  நம்ம ராமசாமிக்கு அடித்தது யோகம்!

அங்கே இங்கே அலைந்து ஒன்றரை மாதத்தில் பாஸ்போர்ட் ரெடி பண்ணி, அதிலிருந்து பதினைந்தாவது நாள், அவன் கைக்கு விசா வந்து விட்டது. இரண்டு வருடம் நம்ம ஊரு வேலை வாய்ப்புத் துறை கொடுத்திருந்த அனுபவங்கள், அவனை அங்கே அடக்கமாக வேலை பார்க்க வைத்துக் கொண்டிருந்தது.

அந்த அடக்கமே அவனை படிப்படியாக உயர்த்தி, இன்று 15 கடைகள் கொண்ட ஒரு தொடர் சூப்பர் மார்க்கெட்டில் மேனேஜராக பதவியில் அமர்த்தியிருக்கின்றது. கை நிறைய சம்பளம். பழைய கடையிலிருந்து இந்த புதிய நிறுவனத்திற்கு மாறும் போது ஒன்வேயில் வர வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் தான் இந்த சொர்ணாவை கைப்பிடிக்கும் வைபோகம் நடந்தேறியது.

இது தான் அவனது தந்தைக்கு பூர்வீக கிராமம் என்றாலும், அவனது பதினைந்தாம் வயதில் தந்தைக்கு விவசாய கூலி வேலை சரியாக தொடர்ந்து கிடைக்காத காரணத்தால், 15 கி மீ தள்ளியிருக்கும் அந்த சிறிய நகரத்துக்கு அவனது குடும்பம் குடி பெயர்ந்தது. அங்குள்ள ஒரு மரவாடியில் அவன் தந்தை வேலைக்குச் சேர்ந்தார்.

கிராமத்து ஓட்டு வீட்டை விற்று, அந்த தொகையை போக்கியமாக கொடுத்து மரவாடிக்குப் பக்கத்திலேயே ஒரு சிறிய வீட்டில் அவனது குடும்பம் குடியேறியது. நம்ம ராமசாமி தான் மூத்த வாரிசு. அவனுக்குக் கீழே இரண்டு பெண் குழந்தைகள். அவன் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் வரை வாய்க்கும் கைக்குமே பற்றாத நிலையில் தான் அவனது குடும்ப பொருளாதாரம் இருந்து வந்தது.

அவன் தாய் மாமா, ஃபீஸ் கட்டியதால், அந்த ஊர் அரசு கல்லூரியில் அவனால் எந்த செலவும் இன்றி பி.ஏ படிக்க முடிந்தது. ஆனால் அவன் தந்தைக்கு, அவன் உடனே வேலைக்குச் சென்றால், தன் பாரம் கொஞ்சம் குறைந்து பெண் பிள்ளைகள் திருமணத்திற்கு எதாவது சேர்த்து காலா காலத்தில் கட்டிக் கொடுத்து விடலாமே என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தது. ஆனாலும் தன் ஒரே மகன் டிகிரி படித்தால் கொஞ்ச காலத்திற்கு கஷ்டம் தொடர்ந்தாலும், நம் அடுத்த தலைமுறையின் வாழ்க்கைத் தரம் ஒரு படி மேலே ஏறிவிடுமே என்று எண்ணி தன்னுடைய துன்பச் சுமையே இன்னும் சில வருடங்களுக்கு சுமக்கத் தயாராகி விட்டார்.

ஏதோ கனவுகள் போன்று பழைய சம்பவங்கள் எல்லாம் மனக் கண் முன்பாக ரீல் போல ஓடிக் கொண்டிருக்க...  ஹை..... என்ற ஆரவாரமான தனது இளைய மகன் அஸ்வினின் குதூகலக் குரல் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. ராமசாமியின் கையை உதறிக் கொண்டு அந்த ஐந்து வயது பாலகன் ஒரே பாய்ச்சலாக ஓட, அந்த திசையைப் பார்த்த போது தான் இவனுக்கும் அந்த குதூகலம் தொற்றிக் கொண்டது.

வண்ண வண்ண பலூன்கள் விதவிதமான வடிவங்களில் நூல்களில் கட்டி கைக்கு எட்டாத தூரத்தில் பறக்க வைக்கப் பட்டிருந்தன. நடுவின் அதற்கான உபகரணங்களுடன் ஒருவன் அமர்ந்து கேட்கும் வடிவத்தில் பலூன்களை செய்து தந்து கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் இளஞ்சிறார்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

ஆடு, மாடு, மயில், முயல், வாத்து, லவ் சிம்பள், குட்டிப் பெண், சுட்டிப் பையன் என்று பல்வேறு விதமாக அவன் பலூன் செய்யும் லாவகம் நம்ம ராமசாமிக்கு பெரும் வியப்பாய் இருந்தது. கூட்டத்தோடு முட்டிக் கொண்டிருந்த அஸ்வினைத் தூக்கிக் கொண்டு, பத்து ரூபாயை எடுத்து நீட்டியவாறு மயில் பலூன் ஒன்று செய்து குடு தம்பி என்று இரண்டு மூன்று முறை கத்தியும் அவன் நிமிர்ந்த பாடில்லை.

கடுப்பாகி இவன் திரும்ப எத்தனிக்க, மேலே பறந்து கொண்டிருந்த ஒரு மயில் பலூனின் நூலை கட் பண்ணி, இந்தாங்க சார் என்று கொடுத்தான். பணத்தைக் கொடுத்து அந்த பலூனை வாங்கும் போது தான் அந்தப் பையனை குறிப்பாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனவன், தம்பி நீ மாரிமுத்து பையனா? என்று கேட்கவும், அந்த பலூன் விற்கும் தம்பி அன்னாந்து இவனைப் பார்த்து, கண்களில் ஒரு மகிழ்ச்சியான புன்னகையுடன், ஆமாம் சார்......  நீங்க....? என்று ஒற்றை வார்த்தையில் கேள்வி ஒன்றைப் போட்டான்.

அதுவரை சொந்த ஊரை பல வருடங்களுக்குப் பிறகு மிதித்து விட்ட, அதுவும் கௌரவமான நிலையில் வண்டி வாகனம், மனைவி, பிள்ளைகள் என்று வந்திருந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தவன், இப்பொழுது பேயரைந்தவன் போல் காணப்பட்டான்.

நான்.... நான் வந்து...!

...ம் உங்க அப்பாவை எனக்கு நல்லா தெரியும். இந்த திருவிழவுக்கு வருடா வருடம் வந்து பலூன் கடை போடுவாரே......  அப்போ அவருடன் எனக்கு நல்ல பரிச்சயமுண்டு....

ஆனா நான் உங்கள பார்த்ததில்லையே சார்....., எப்புடி என்னைய கண்டுபுடிச்சீங்க? என்று பலூன் காரன் கேட்கவும்.....

இல்லப்பா, அப்ப உங்கப்பா வரும் போது குடும்பத்தோட தான் பத்து நாளும் இங்க வந்து தங்கியிருப்பாரு. திருவிழாவுக்கு ஒரு வாரம் முன்னதாகவே வந்துடுவாங்க. அப்ப இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட உன்னையும் உங்க அம்மா இடுப்புல தூக்கிக்கிட்டே வருவாங்க.....

நீண்ட நாளைக்கப்பறம், அதே திருவிழா, அதே பலூன் கடை ஆனால் அதில் வித்தியாசமான முயற்சியுடன், இளம்பிள்ளை வாதத்தால்  நடக்க முடியாமல் உட்கார்ந்து வியாபாரம் செய்யும் உன்னை பார்த்தோடுன, முடிவு பண்ணிட்டேன், நீ மாரிமுத்து மகனாய்த் தான் இருக்க வேண்டும் என்று!

இந்த அளவுக்கு என்னையும், எங்க குடும்பத்தையும் கூர்ந்து கவனிச்சி இத்தனை வருடத்திற்குப் பிறகும் என்னை தெரியுதுன்னா, எங்க அப்பாவோட உங்களுக்கு ரொம்ப பரிச்சயமா சார்?

ம்..ம்.. நல்ல பழக்கம் தான். வருடத்திற்கு பதினைந்து இருபது நாட்கள் குடும்பத்தோடு இந்த ஊரில் வந்து தங்குபவரை எங்களுக்குத் தெரியாமல் இருக்குமா? ... சரி உங்க அப்பா அம்மால்லாம் இப்ப உன் கூட வர்றதில்லையா?

அப்பா இல்ல சார்....!

இல்லன்னா??...    உசுரோட இல்ல சார்....

பகீர் என்றது ராமசாமிக்கு. இன்றைக்கு இருந்தாலும் ஐம்பது வயசுக்குள்ள தானே இருக்கும்? என்ற யோசனையுடனே மெதுவாக தலையை உயர்த்தி அந்தப் பையனைப் பார்த்தான்.

என்ன ஆச்சு? எப்படி இறந்தார்?

இருவது வருஷம் ஆச்சு சார்! நான் ரொம்ப சின்னப் புள்ள. நூறு, இருநூறுன்னு நாலஞ்சு பேருகிட்ட கடன் வாங்கி ஆயிரம் ரூவாக்கி சரக்கு எடுத்து வந்து இங்க திருவிழாவுக்கு கடைய போட்ருக்காங்க......

இங்கன வந்து அத ஏழெட்டுப் பேருக்கு பிரிச்சிக் கொடுத்து எல்லா இடத்துலயும் நிக்க வச்சி, வியாபாரம் கனஜோரா ஆரம்பிச்சிருக்கு.......  8 மணிக்கு கரண்ட்டு சிப்ட்டு மாத்தும் போது, எல்லா எடத்துலயும் பறந்துக்கிட்டிருந்த பலூன் எல்லாம் பொட்டு பொட்டுன்னு வெடிச்சிடிச்சி....

கரண்ட்டு வந்தோடுனதான் தெரிஞ்சிது, விளையாட்டுப் பசங்க, ஜாலிக்காக கரண்டு நிக்கற நேரத்துல கல்லு உப்ப விட்டெறிஞ்சி பலூனை எல்லாம் வெடிச்சிருக்காங்கன்னு......!!!

மிச்ச சொச்சம் இருந்த கொஞ்சூண்டு பலூனையெல்லாம் மறுநாள் வித்துட்டு, ஊருக்கு திரும்பிருக்காங்க. கடன் காரங்க, அசலும் வரல, வட்டியும் தரலன்னோடுன கேவலமா பேசினத பொறுக்க முடியாம ராவோட ராவா தூக்குல தொங்கிட்டாரு....!!!

கால் வைத்திருந்த தரை நழுவிக்கொண்டே செல்வது போல இருந்தது ராமசாமிக்கு. சுழன்று கொண்டிருக்கும் தேர்ச்சக்கரத்தின் முன்னே தடை விழுந்து நகரமுடியாமல் குலுங்கி நிற்பதைப் போல, நெஞ்சுக்குள் ஒரு கட்டை விழுந்து, இதயம் துடிப்பது ஒரு கணம் நின்றுவிட்டுத் தொடர்ந்தது....

அதீத மௌனத்துடன் கார் ஓடிக் கொண்டிருந்தது. பிள்ளைகள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். சின்னவன் தான் ரொம்பவும் அழுது விட்டு அப்படியே தூங்கி விட்டான். பத்து நாள் திருவிழாவும் ஊரில் தங்கி கொண்டாடும் ஆர்வத்துடன் வந்திருந்தவர்கள், முதல் நாளிலேயே திரும்பினால் வருத்தம் வரத்தானே செய்யும்?!

அவன் மனைவிக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவனாக பேசட்டும் என்று காத்திருந்தாள். அந்த நகரத்தில் இருக்கும் வீட்டிற்கு கூட வந்திருக்கலாம். ஆனால் விடிவதற்குள் அந்த ஊரை விட்டு வெகு தூரம் ஓடி விட்டிருக்க வேண்டும் போல் அவன் மனசு துடித்துக் கொண்டிருந்தது.

இருக்காதா பின்னே? குற்ற உணர்ச்சி மனசை பிடிங்கித் தின்கிறது!

அன்றைக்கு பந்தயம் கட்டி விளையாண்ட எட்டுப் பேரில் இவன் தான் ஒரு பலூன் கூட மிச்சம் வைக்காமல் கல் உப்பை எறிந்து வெடித்து வெற்றி பெற்றிருந்தான்!! மத்த பசங்களால எல்லா பலூன்களையும் முழுமையாக வெடிக்க முடியவில்லை. அதனால் அன்றைக்கு ராமசாமி வெற்றி பெற்று பந்தயப் பணம் எட்டு ரூபாயையும் தனதாக்கிக் கொண்டான்!!

  

8 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை...

முடிவும் அருமை...
வாழ்த்துக்கள் அண்ணா...

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை...

முடிவும் அருமை...
வாழ்த்துக்கள் அண்ணா...

கொக்கரக்கோ..!!! said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சே. குமார் ))

sathishsangkavi.blogspot.com said...

முடிவு சூப்பர் அண்ணே...

அந்த திருவிழாவும்... பலூனம் என் கண் முன்னே இப்போது...

sathishsangkavi.blogspot.com said...

சூப்பர் அண்ணே...

அந்த திருவிழாவும், பலூனும் தற்போது என் கண் முன்னே...

Anonymous said...

//நான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்...!! விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..!!!//

நன்றி தோழரே

கொக்கரக்கோ..!!! said...

வாங்க சங்கவி. ரொம்ப நாளாச்சு. வருகைக்கு நன்றி ))

சேலம் தேவா said...

திடுக்கிடும் முடிவுண்ணே...இது மாதிரியே பல கதைகள் எழுதி ஏன் நீங்கள் ஒரு புத்தகம் போடக் கூடாது..?!