Tuesday, June 5, 2012

சமச்சீர் கல்வியும்.... நாலாம் தலைமுறையும்...

மயிலாடுதுறையிலிருந்து சிறிது வட மேற்காக ஆறு கிலோ மீட்டர் சென்றால் நீடூர் என்ற கிராமம் வரும். இஸ்லாமிய மக்களும், இந்துக்களும் கிட்டத்தட்ட சம அளவில் வசிக்கின்ற அழகிய கிராமம். அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கமலி என்ற பெண் நேற்று வெளியான 10 ஆம் வகுப்பு தேர்வில் 500 க்கு 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக வந்திருக்கின்றாள்.

மேலோட்டமாக பார்க்கும் பொழுது இது ஒரு சாதாரண நடைமுறை நிகழ்வு போலத் தோன்றினாலும், அந்தப் பெண் மற்றும் அவள் பெற்றோர்களிடம் பேசிய போது....

ஒரு அரசின் தலைமை எடுக்கக் கூடிய ஆகச் சிறந்ததொரு தொலைநோக்கு திட்டத்திற்கான முடிவினால், எப்படி ஒரு சமுதாயம் சீரடைந்து உயர்நிலையை அடையும் என்பதற்கான சாத்தியக்கூற்றை  தெள்ளத் தெளிவாக உணர முடிகின்றது.

அந்தப் பெண்ணின் தந்தை ஒரு தினக்கூலித் தொழிலாளி. பெயிண்டிங் வேலை முதல் சமையல் வேலை வரை, அன்றைய தேதியில் எங்கு ஆள் தேவைப்படுகின்றதோ, அங்கு சென்று சம்பாதிக்கும் நிலையிலிருப்பவர். தாயாரோ ஒரு கம்பெனியில் மாதம் ரூபாய் மூவாயிரம் சம்பளத்தில் வேலை செய்பவர். அந்தப் பெண்ணுக்கு இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தந்தைவழிப் பாட்டி. ஆகமொத்தம் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் அது.

அவள் படித்ததோ அதே ஊரில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில். அங்கு நடத்தப்படும் பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கூட வீட்டில் கேட்டுத் தெளிவு பெற தாய், தந்தைக்கு கல்வி அறிவு போதாது. டியூஷன் வைத்துக் கொள்ளலாம் என்றால் அதற்கும் வீட்டில் வசதி கிடையாது. அதற்காக கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும் பள்ளிப் படிப்பையே நிறுத்திவிடும் அபாயம் இருக்கின்றது!

சரி, இதெல்லாம் போகட்டும் என்றாலும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து உட்கார்ந்து நிதானமாக ஒரு முறைக்கு இரண்டு முறை படித்து, தானே தெளிவு பெற்றுக் கொள்ளும் அளவிற்கான நேரமும் கூட கிடையாது. காரணம், அம்மா பணி முடிந்து வீட்டிற்கு வந்து சேரவே 8 மணிக்கு மேல் ஆகிவிடும். ஆகையால் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் இந்தப் பெண் தான்,  தன் தங்கைகளையும் பார்த்துக் கொண்டு, அனைவருக்குமான இரவு உணவையும் தயார் செய்து வைக்க வேண்டும்!

பிறகு அம்மா, அப்பா எல்லோரும் வந்தவுடன், குளித்து முடித்து சாப்பிட்ட பிறகு தான் படிப்பதற்கான நேரமே கிடைக்கும். .....

இந்தச் சூழ்நிலையில் பத்தாம் வகுப்பில் படித்து தேர்வெழுதி, 437 மதிப்பெண்களுடன் அந்தப் பள்ளியின் முதல் மாணவியாக வந்திருக்கின்றாள். ஆனால் இந்த நிகழ்வை கேட்கும் அல்லது படித்துப் பார்க்கும் நமக்குத்தான் இது ஒரு ஆச்சர்யமான விடயமாக இருக்கின்றது. ஆனால் அந்தப் பெண்ணுக்கோ அல்லது அந்தப் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளுக்கோ இது ஒரு இயல்பானதொரு நடைமுறையாகத்தான் இருக்கின்றது.

அனேகமாக தமிழகம் முழுவதும், கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற, அடித்தட்டு குடும்பத்தைச் சார்ந்த  அனைத்து மாணவ, மாணவிகளின் நிலையும் இது மாதிரியாகத்தான் இருக்கும்.

இவ்வளவு வேலைகளையும் செய்து கொண்டே, படிப்பதற்கு பள்ளி ஆசிரியர்களின் துணை தவிர வேறு எதுவும் இல்லாமல் எப்படி உன்னால் இந்த அளவிற்கு மதிப்பெண்களைப் பெற முடிந்தது? என்று கேட்டால்.....  சட்டென பதில் வருகிறது.

சமச்சீர் கல்வி தான் சார் காரணம்...! 

புத்தகத்தைப் படித்தாலே எல்லாம் புரியும் படி அழகா இருந்திச்சி சார். ராத்திரி 9 மணிக்கு உட்கார்ந்தேன்னா, பத்தரை அல்லது சில சமயம் 11 மணி வரை தான் படிப்பேன். கணக்குலயும், இங்கிலீஷிலயும் தான் மார்க் குறைஞ்சிடிச்சி. அதுக்கு மட்டும் கொஞ்சம் நல்லா சொல்லிக் கொடுத்திருந்தா, 450க்கு மேல வாங்கிருப்பேன்.

ஆனாலும் பரவாயில்ல சார். 400 மார்க்கெல்லாம் எங்க ஸ்கூலால வாங்கவே முடியாதுங்கற நிலை மாறிட்டு சார். பத்து பேருக்கு மேல 400+ வாங்கியிருக்கோம். இப்ப +2ல 90% க்கு மேல எடுத்துடுவோம்னு நம்பிக்கை வந்திடிச்சி சார். ஏன்னா இப்பத்தான் எல்லோரும் எங்கள கவனிக்கிறாங்க. +1, +2 ல டியூஷன் வக்கிறதுக்கு நான் பணம் தர்றேன்னு பல பேர் வந்து சொல்றாங்க.

எங்கள பார்த்து பல பேருக்கு நம்பிக்கை வந்திடுச்சி சார்.  அடுத்த வருஷம் வேணா பாருங்க எங்க ஸ்கூல்ல 20 பேருக்கு மேல 400+ மார்க்கு வாங்குவாங்க! எல்லாத்துக்கும் காரணம் சமச்சீர் கல்வி தான் சார். எளிமையாவும், எங்களுக்கெல்லாம் புரியிற மாதிரியும் இருந்திச்சி சார். எங்களையும் இப்பத்தான் தான் எல்லாரும் பார்க்க ஆரம்பிக்கிறாங்க. !!!!

ஒரு புதிய பரிமாணத்திற்கான அடித்தளம் கட்டமைக்கப்பட்டு விட்டது போன்ற உணர்வுடன் என் மனம் நேற்றிலிருந்து நிரம்பியிருக்கின்றது.

இன்று காலை இந்த இணையத்தில் வந்து பார்த்தால், சமச்சீர் கல்வி மிகவும் இலகுவாக இருக்கிறது. நானூற்றி முப்பதிலிருந்து ஐம்பது வரை வாங்க வேண்டிய பிள்ளைகள் எல்லாம் நானூற்றி எழுபது, என்பது என்று வாங்கிக் குவித்து விட்டார்கள். தேர்ச்சி சதவிகிதமும் அதிகரித்து விட்டது.

இதெல்லாம் எங்கு கொண்டு போய் விடுமோ தெரியவில்லையே? நம் கல்வித்தரம் இப்படியே குறைந்து போய் விட்டால், உலகத்தரத்தோடு நாம் எப்படி போட்டிப் போட முடியும்? என்றெல்லாம் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட அறிவு ஜீவிகளுக்கெல்லாம் அந்தக் கிராமத்து குழந்தைகளின் சார்பாக சொல்லிக் கொள்ள விரும்புவது இதைத்தான்:

இதுவரையிலும் உலகத்தரத்தோடு படித்து, எதை புதிதாக கண்டுபிடித்து விட்டீர்கள் நீங்கள்? எவனாவது மேலை நாட்டறிஞன் கண்டுபிடித்ததை உபயோகித்து செயல்பட வைக்கும் ஆப்பரேட்டர் வேலை தானே இதுவரையிலும் செய்து கொண்டிருக்கின்றீர்கள்?! மேலை நாட்டவன் கண்டு பிடித்த காரை ஓட்டிக் கொண்டிருக்கும் படிக்காத கிராமத்தானைப் போலத்தான் எவனோ கண்டு பிடித்த கம்ப்யூட்டரை நீங்கள் ஓட்டிக் கொண்டிருக்கின்றீர்கள்.

ஒரு பாமரனான எனக்கு இந்த இரண்டு செயல்களுக்கும் பெரிதான வித்தியாசம் தெரியவில்லை!

இதெல்லாம் போகட்டும். நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்து தொலையட்டும். மாநில வழி சமச்சீர் கல்வி தரம் குறைந்தது என்றால், நீங்கள் மத்திய வழி பாடத்திட்டத்திற்கு ஓடிவிட வேண்டியது தானே?

இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று காந்தியடிகள் சொன்னது உண்மையானால், அந்த கிராமமும், கிராமத்து மாணவனும் மேன்மையடைய வேண்டியது தானே நியாயமானதாக இருக்கும்?! அப்படியானால், இதுவரை ஒற்றை எண்ணிக்கையாக இருந்த 400+ மதிப்பெண் வாங்கிய எங்கள் கிராமத்து கண்மனி, இன்று பத்தாக பரிமளித்திருக்கின்றான். நாளை இது நூறாகும், அடுத்த நாள் ஆயிரமாகும், அதுவே லட்சமாக விஸ்வரூபம் எடுக்கும்.....

நாலாம் தலைமுறையைப் பார்....  என் கிராமத்து இளைஞனும் ஐஐடி, ஐஐஎம் இல் ஒளிவீசிக் கொண்டிருப்பான். மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியாக வலம் வருவான்.........

ஆனால் என்னவொரு சோகம் என்றால்... அப்பொழுது அவனும் இதையே தான் சொல்லிக் கொண்டிருப்பான்  

"நம்ம ஸ்டேட் போர்டு ஸிலபஸ் ரொம்ப புவர்..ப்பா"    ................!!!!!!

14 comments:

Anonymous said...

ARUMAIYANA THAKAVAL....! VAZHTHUKKAL

Anonymous said...

//நம்ம ஸ்டேட் போர்டு ஸிலபஸ் ரொம்ப புவர்..ப்பா" ................!!!!//
WELL SAID..ITHU THAN TAMILNADU.

புதுகை.அப்துல்லா said...

well said.

Unknown said...

Good One. எடுத்த மார்க்கை விட ”படித்தது ஈஸியா புரிஞ்சது” என்று அந்தப் பெண் சொல்வதில் தான் இந்தப் பாடத்திட்டத்தின் வெற்றி இருக்கிறது.

vizzy said...

தெளிவான கட்டுரை.இதைவிட சிறப்பாக சமசீர் கல்வியின் பெருமையை யாரும் எழுத முடியாது.நாளை இந்த குழந்தைகளின் எண்ணிக்கை லட்சத்தை தொடும் என்பது சத்யமான வார்த்தை.இவ்வளவு அறிவுபூர்வமாக சிந்திக்கும் நீங்கள் ஊழல்மன்னர்களை நியாய படுத்துவதுதான் வேதனையான விஷயம்.

vizzy said...

தெளிவான கட்டுரை.இதைவிட சிறப்பாக சமசீர் கல்வியின் பெருமையை யாரும் எழுத முடியாது.நாளை இந்த குழந்தைகளின் எண்ணிக்கை லட்சத்தை தொடும் என்பது சத்யமான வார்த்தை.இவ்வளவு அறிவுபூர்வமாக சிந்திக்கும் நீங்கள் ஊழல்மன்னர்களை நியாய படுத்துவதுதான் வேதனையான விஷயம்.

அபி அப்பா said...

அந்த கமலி என்னும் பெண்ணுக்கு என் வாழ்த்துக்கள். சமச்சீர் கல்வி சக்சஸ் ஆனதுக்கு கலைஞருக்கும், தங்கம் தென்னரசு அவர்களுக்கும் சமச்சீர் குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள். அருமையான கட்டுரை!

கொக்கரக்கோ..!!! said...

வருகை தந்து கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி !!!

இரா.கதிர்வேல் said...

அருமை, மிகவும் அருமை.
பாடத்திட்ட மிகவும் எளிமையாக இருக்கிறது, உலகத்தரத்திற்கு இணையாக எப்படி போட்டி போடுவது எனக் கவலைப்படுபவர்கள் அவர்களின் குழந்தைகளை மத்திய பாடத்திட்டத்தில் படிக்க வைக்கட்டும் என்ற கருத்தை நானும் மனதாற ஏற்கிறேன்.

பாடத்திட்டம் எளிமையானது என்பதை தனியார் பள்ளிகள் சொல்வதுதான் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.
9-ம் வகுப்புக்கு 10-வது பாடத்திட்டத்தை படிக்க சொல்வதும்,, 11-ம் வகுப்புக்கு 12-வது பாடத்தை படிக்கசொல்வதும் தானெ இவர்கள் செய்த வேலை.. இவர்களுக்கு சமச்சீர் கல்வியினை விமர்சிக்க தகுதியில்லை.

Prakash said...

Good one Sowmy

The Tamil Language said...

முன்னேறட்டும் இந்தியா

தெய்வசுகந்தி said...

Good!

srikumarandigitalstudio desaigandhi said...

நல்ல பதிவு...தொடருங்கள்..

Anonymous said...

[url=http://levitranowdirect.com/#ioawf]buy levitra[/url] - cheap levitra online , http://levitranowdirect.com/#sattk cheap generic levitra