Monday, January 28, 2013

மோட்டுவலையப் பார்த்து யோசிச்சது...!!

அப்பப்ப நடக்குற சமுக மற்றும் நமது சொந்த பிரச்சினைகள் அல்லது நிகழ்வுகளை ஒட்டி, என் மனம் ஏற்றுக் கொண்ட கருத்துக்களை எல்லோரையும் போல் சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம்.....

அவற்றிலிருந்து ஒரு சிலவைகளின் தொகுப்பு தான் மேற்படி தலப்பில் சமீபமாக நான் பதிவு செய்யும் வரிசையில் இந்தப் பதிவும். மற்ற தளங்களில் பதிவிடப்படாத சில விஷயங்களும் கூட இதில் வரிசை கட்டும்!
***********************************************


சன் டீவியில் நேற்றிலிருந்து (27-01-13) சன் சிங்கர்என்ற ஒரு நிகழ்ச்சியை ஒ(லி)ளி பரப்புகின்றார்கள்......   பாதியிலிருந்து தான் பார்க்க ஆரம்பித்தேன்... ஏனோ மனசுல பச்சக்குன்னு உட்காரல!

ஆனா இன்னிக்கு தேதில உச்ச பாடகர்களான கார்த்திக், ரஞ்சித் எல்லாம் வந்திருந்து பாடியது பிடிச்சிருந்திச்சி. அவங்கள்லாம் பத்து ஆண்டுக்கு முந்தி சன் டீவில வந்த சப்தஸ்வரங்களின் தயாரிப்புகள் தான் என்று சொல்லி காட்டப்பட்ட அந்த க்ளிப்பிங்ஸைப் பார்த்த போது ரொம்ப வியப்பாக இருந்தது!

அப்போ அது ரொம்ப ஃபேமஸ். ஒட்டு மொத்த தமிழகமும் அந்தக்கால ஒளியும் ஒலியும்முக்கு பிறகு டீவி முன் திரண்டிருந்தது என்றால் அது சப்தஸ்வரங்களுக்காகத் தான் இருக்கும். இப்பொழுது விஜய் டீவியை சொல்வது போல, அப்பொழுதும் பாடகர்களை தேர்வு செய்வதில் ரமணன் பார்ஷியாலிடியோட தலையிடுவதா பேச்சு இருந்தது.....

ஆனாலும் ராமாயணம், மஹாபாரதத்தை விட அந்த ஷோவை அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு பார்த்ததை மறுக்க முடியாது....

ஆனந்த கீதன், ரெகோ, ஜேம்ஸ் வசந்த், ரபி பெர்னார்ட், பெப்சி உமா, என்று ரியாலிடி ஷோக்களில் வெளுத்து வாங்கிய வல்லுனர்கள் பலர் சன் டீவியை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட வரிசையில் ரமணனும் சேர்ந்தது தான் துரதிருஷ்டம்.....

ஆனால் சினிமாக்களும், சீரியல்களும் மட்டும் போதும் என்று அடுத்தடுத்து வந்த நிர்வாகிகள் எடுத்த முடிவு தான் சன் டீவிக்கு போட்டியாக விஜய் மற்றும் இன்னபிற சேனல்களும் நிலைத்து நிற்பதற்கும் வளர்ந்து வருவதற்கும் காரணமாய் அமைந்து விட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை.....

இன்றைக்கு அழுது வடிந்த சன் சிங்கரைப் பார்த்தவுடன் இதையெல்லாம் எழுதனும்ன்னு தோனியது....  அதான்!!!!

****************************************************** 

ச்சே இந்த அம்மா தான் கமலுக்கு எதிரா படத்தை தடைசெஞ்சிட்டாங்கன்னா, இந்த கலைஞரும் கமலுக்கு எதிரா இருக்குறத நெனச்சா தான் கடுப்பு கடுப்பா வருது...!!!

பின்ன என்னா சார்????

கமலை கடுமையா விமர்சிச்சி, விஸ்வரூபத்துக்கு எதிரா காட்டமான அறிக்கை ஒன்னு விட்ருந்தாருன்னாஆஆ.....

இந்நேரம் இந்தம்மா ராவோட ராவா படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி தந்திருக்க மாட்டாங்களா இல்லியா??????

போங்க கலைஞரே நீங்களும் இந்தம்மாவோட சேர்ந்து கமலை கவுத்திட்டீங்க!!!!!
********************************************

வீர சைவ பேரியக்க... நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்!!!

வைணவரான கமல்ஹாசன் தனது தசாவதாரம் படத்தில் வீர சைவராகிய குலோத்துக்க சோழ மன்னனை ஒரு மோசமான வில்லனாக நேரிடையாகவே தாக்கி சித்தரிப்பதை வன்மையாக கண்டித்து, அந்தப் படத்தை இனி எந்தத் திரையரங்கிலோ அல்லது சேட்டிலைட் சேனலிலோ திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோருகிறது இந்த எங்களுடைய பேரவை......!

அது மட்டுமின்றி, ஏற்கனவே அந்தப் படத்தை திரையிட்ட வகையில் யார் யார் எவ்வளவு லாபம் பார்த்தார்களோ அவ்வளவையும் வட்டியும் முதலுமாக எங்கள் வீர சைவ பேரியக்கத்தின் அக்கவுண்ட்டில் டெபாசிட் செய்யவும் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்....

மேலும் விபூதியை பட்டையாக இட்டுக் கொள்ளும் வழக்கமுடைய எங்கள் வீர சைவர்கள், அந்தப்படம் வெளிவந்த பிறகு, அப்படி பட்டையோடு வெளியில் செல்லவே அச்சப்பட்டும், வெட்கப்பட்டும் பட்டையடித்து வீட்டிலேயே மட்டையாகிக் கிடப்பதால், வீர சைவ குடும்பங்கள் அனைத்திற்கும் தலா ஐம்பதாயிரம் நஷ்ட ஈடு தருமாறும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்....

ஆனால் அந்தப் படத்தில் சைவர்களை இழிவாக சித்தரிக்கவில்லை என்று எங்களையெல்லாம் நம்ப வைக்கும் படி கமல்ஹாசன் விளக்கமளித்தால் அவருக்கு சிவனுக்கு நைவேத்யம் செய்த வெண்பொங்கல் விநியோகித்து பிரச்சினையை சுமுகமாக முடித்துக் கொள்வோம் எனவும் பல்டியடிக்கிறோம்.....    )))))))))

*********************************************

அது நேத்து நடந்திடுச்சி......

நான் அபுதாபில போய் இறங்குன கொஞ்ச நாள் கழிச்சு தான் மொதொ தடவையா அது நடந்துச்சி. அப்பறமா கல்யாணத்துக்காக ஊருக்கு வர்றப்ப தான், இதெல்லாம் ஊர்க்காரங்க பார்த்தா தப்பா நினைச்சி, ஊர் பரிகாசத்துக்கு ஆளாயிடுவோம்ன்னு பயந்து அதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு, போன மாதிரியே திரும்ப வந்துட்டேன்.

ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் மனைவியிடம் அதை மெதுவாகச் சொல்லி விட்டேன். காதலிச்ச பெண் தான் மனைவியா வந்ததாலோ என்னவோ அதை பெருசா எடுத்துக்கல. ஒரே ஒரு கண்டிஷன் தான், என்னோட இருக்கும் போது அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் என்பது தான் அது. அதுவே அந்த விஷயத்தைப் பற்றிய தைரியத்தை மனசுக்கு தந்துடிச்சி....

அதனால திரும்பவும் இந்தியாவுல வந்து செட்டில் ஆகுனும்ன்னு முடிவெடுத்தவுடனேயே, மீண்டும் அதை விட்டுட்டேன். என்ன தான் பொண்டாட்டிக்கு தெரிஞ்சிருந்தாலும், ஊர் உலகத்தின் வாய்க்குப் பயந்து அதைத் தவிர்த்து விட்டுத் தான் இந்தியாவுக்கு வந்தேன்....

அது ஆச்சு பதினாறு வருஷம். அப்பப்ப அந்த எண்ணம் மனசுக்குள்ள வந்து சபலம் தட்டினாலும் குடும்பம், கம்பெனி, சுற்றம் என்றெல்லாம் நினைத்து அந்த எண்ணம் எழுந்தவுடனேயே தூக்கியெறிந்து விடுவேன்.

ஆனா என் பையனுக்கு அவன் அஞ்சாவது படிக்கும் போதே இந்த விஷயம் என் மனைவியின் மூலமா தெரிஞ்சிடிச்சி. அதிலிருந்து அவனுக்கும் என் மனைவிக்கும் படிப்பு சம்பந்தமா சண்டை வரும் போதெல்லாம், அவங்க அம்மாவை டீஸ் பண்ணனும்கறதுக்காவே அவன் என்னிடம் வந்து, அப்பா நீங்க அந்த விஷயத்தை ஆரம்பிச்சிடுங்கப்பா என்று நச்சரித்து அவளை எரிச்சலூட்டுவான்...

இது இப்படியே போய்க் கொண்டிருக்க, அவன் பத்தாம் வகுப்பும் வந்துவிட, வழக்கம் போல படிப்பு சம்பந்தமாக அவனுக்கும் மனைவிக்கும் வாய்க்கா தகறாறு ஆரம்பமாயிற்று. பஞ்சாயத்துக்குப் போன என்னிடம், நான் 425க்கு மேல அரையாண்டுத் தேர்வில் எடுத்துட்டா, எனக்காக அந்த விஷயத்தை நீங்க பண்ணனும்ன்னு அவன் சொல்ல, நான் நல்ல பிள்ளையாக மனைவியைப் பார்த்தேன்.

அவளும் ஒரு முடிவுக்கு வந்தவளாய், எப்படியாவது தன் பிள்ளை நல்ல மார்க் வாங்கணுமேன்னு டீலுக்கு ஒத்துக்கிட்டா! மார்க் எல்லாம் வந்து விட கூட்டிப் பார்த்தா 428! எல்லோருமே வாயடைத்துப் போனோம்....

நேற்று காலை என்று, அதற்கான மூகூர்த்தம் குறிக்கப்பட்டது, மனைவியும் மகனும் பதற்றத்துடன் அருகே நிற்க, கண்ணாடிக்கு முன் நின்று கொண்டு மீசையில் ஷேவிங் ஃபோமை தடவ ஆரம்பித்தேன்.......!!

***************************************************

டீசலுக்கு இரட்டை விலை சோஷலிஸ சிந்தனைக்கு எதிரானது -  கலைஞர்

இதே மாதிரி நிறைய விஷயங்கள்ல லொள்ளு பண்ணிட்டிருக்குற மத்திய அரசுலேர்ந்து உங்க மந்திரிங்களை எல்லாம் வெளில வரச் சொல்லிட்டு களத்தில் இறங்குங்க.....

இல்லன்னா அதிமுகவோட சேர்ந்து நாங்களும் மத்திய அரசுக்கு எதிரா போராடப்போறோம்ன்னு அறிக்கை விடற கேவலமான நிலை வந்துடும்ங்கறதாவுது புரியுதா கலைஞர் அவர்களே?

***************************************************** 

செல்ஃபோன் கட்டணம் இனி நிமிடத்திற்கு 2 ரூபாய்...  செய்தி((((

ஸ்பெக்ட்ரம் ஊழல்ன்னு வாழ்கிழிய பேசுனவங்க எல்லாம் இப்ப மானியம் த்ருவாங்க......., 
அதை நம்புனவங்க எல்லாம் போய் க்யூ கட்டி நில்லுங்க மக்கா.....!!
பத்தொம்பதாயிரம் கோடிக்கே 30 காசுங்கறது ரெண்டு ரூபாயா ஆச்சுன்னா????......

ஒரு லட்சத்தி எழுபத்தஞ்சாயிரம் கோடிக்கு ஏலம் போயிருந்திச்சின்னா?????????

பத்து ரூவாய தாண்டிடுமே??????

அடங்கொன்னியா.......   இதுக்காகவாய்யா இவ்ளோ போராட்டம் பண்ணுனீங்க.......?????

2 comments:

DiaryAtoZ.com said...

நல்ல பொழுதுபோக்கு பதிவு. நன்றி!

bandhu said...


//ஸ்பெக்ட்ரம் ஊழல்ன்னு வாழ்கிழிய பேசுனவங்க எல்லாம் இப்ப மானியம் த்ருவாங்க.......,
அதை நம்புனவங்க எல்லாம் போய் க்யூ கட்டி நில்லுங்க மக்கா.....!!//
மற்றவை நன்றாக இருந்தன. இது மட்டும் முழு பூசணிக்காயை ஒரே ஒரு சோற்றுப்பருக்கையில் மறைக்கும் உத்தி!