Saturday, October 13, 2012

லாரி டிரைவர்

கணினித் துறை, ஆட்டோ மொபைல் துறை, சிறு தொழில் துறை, போலீஸ் துறை இத்தியாதிகள் என்று அனைத்தையும் பற்றி தினமும் செய்தித் தாள்கள், வார சஞ்சிகைகள் படிக்கும் பழக்கம் உள்ள அனைவருக்குமே ஓரளவிற்கு அத்துப்படி தான்.

இப்படி பொதுவான சில பல துறைகள் தவிர்த்து, நாம் படித்து அறிந்து கொள்ள இயலாததும், நம் கருத்துக்கு எட்டாததுமான பல முக்கிய தொழில் துறைகளும் அது சார்ந்த முதலாளிகளும் தொழிலாளிகளும் நடைமுறையில் இருப்பது பலராலும் ஊகிக்க முடியாதது தான்.

நம் தமிழகத்திலிருந்து தொலை தூர மாநிலங்களுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் பலவித சரக்குகளை பறிமாற்றம் செய்யும் லாரி போக்குவரத்துத் தொழில் ரொம்பவே சுவாரஸ்யமானதும், கொஞ்சம் கரடு முரடானதும்.....  அத்துடன் நாமெல்லாம் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு மிக மிக அத்தியாவசியமானதும் கூட!

கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் அரிசி உற்பத்தியானது விளை நிலங்கள் பட்டாவாகிப் போனதால், படிப்படியாக குறைய ஆரம்பிக்க, தமிழர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களான ஆந்திராவும், கர்நாடகாவும் தான் பெரிதும் அபயமளித்தன.

தமிழகத்தில் வேகமாக வீழ்ந்து வரும் அரிசி உற்பத்தியும், மக்கள் தொகை வளர்ச்சிக்கு நிகரான அதன் தேவை வளர்ச்சியும் ஆந்திரா, கர்நாடகாவையும் தாண்டி வட மாநிலங்களை நோக்கி நம்மைக் கையேந்த வைத்திருக்கின்றன.

அந்த வகையில் நம் தமிழர்களின் முக்கிய உணவான அரிசித் தேவைக்கு படியளக்கும் பங்காளியாக தற்பொழுது உருவெடுத்திருப்பவர்கள் வங்காளிகளே! உண்மை தான், நம் தமிழகத்தின் அரிசி உணவுத் தேவையின் ஒரு குறிப்பிடத்தக்க சதவிகிதத்தை மேற்கு வங்கம் தான் சமீப காலமாக பூர்த்தி செய்து வருகிறது.

அப்படி மேற்கு வங்காளத்திலிருந்து தமிழக டெல்ட்டா மக்களின் பசியைப் போக்க அரிசி ஏற்றிக் கொண்டு வரும் லாரிகளையும், அதன் ஓட்டுனர்களையும் நெருங்கி உற்று நோக்கினால், தமிழகத்தின் அதி அத்தியாவசியமான துறை ஒன்றைப் பற்றிய பல ஆச்சர்யமான அனுபவங்கள் தெரிய வரும்.

20 டன் வரையிலும் லோடு ஏற்றக் கூடிய டாரஸ் வகை பத்து சக்கர லாரிகள் தான் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன. மவராசன் வாஜ்பாய் புண்ணியத்தால் கல்கத்தாவும் சென்னையும் தங்கநாற்கரச் சாலை மூலம் இணைக்கப் பட்டிருப்பது தான் இன்றளவிலும் இந்தத் தொழில் நசிந்து விடாமல் நடந்து கொண்டிருக்க முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை.

தமிழகத்தின் ஒரு லாரி உரிமையாளர் இதேப் போன்று இரண்டு லாரிகள் வைத்திருந்தால் போதும், வருமானம் வருகிறதோ இல்லையோ பிரஷ்ஷர், சுகர், மாரடைப்பு போன்ற வியாதிகள் கேரண்டியுடன் வந்து சேர்ந்து விடும்!

ஒரு லாரி மாதத்திற்கு நான்கு சிங்கிள்கள் அடித்தாலே பெரிய விஷயம். (ஒரு சிங்கிள் = ஒரு அப் அல்லது ஒரு டவுன்).ஏதேதோ கணக்குப் போட்டு ஒரு சிங்கிளுக்கு 57 ஆயிரம் ரூபாய் வாடகை என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இதில் டீசல், டிரைவர் படி, செக் போஸ்ட் மாமூல் போக ஏழாயிரம் ரூபாய் நிகர லாபமாக கிடைக்கும்.

நாலு சிங்கிள் ஓடினால் ஒரு லாரிக்கு 28 ஆயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கும். இதில் தான் லாரிக்கான வங்கி மாதத்தவணை உட்பட, வண்டி பழுது பார்க்கும் செலவுகள் வரை அனைத்தினையும் முடித்துக் கொண்டு தங்கள் லாபத்தையும் பார்க்க வேண்டும்.

இது எப்படி சாத்தியம்?

வங்கிக் கடனில் தான் லாரி ஓடுகிறது என்றால், நிச்சயமாக இதை விற்பவருக்கும், வாங்குபவருக்குமான சேவைத் தொழிலாக மட்டுமே நடத்த முடியும்! ஆகையால் கடன் இல்லாமல் சொந்த முதலைப் போட்டு லாரி வாங்கி ஓட்டினால் தான் லாபம் என்ற வஸ்த்துவை மாதா மாதம் கண்களில் பார்க்க முடியும்.

இதுல வருடத்திற்கு ஒரு முறை வரும் இன்ஷ்யூரன்ஸ், எஃப் சி எடுக்கும் செலவெல்லாம் தனி. ஒரு சில மாதங்களில் எக்ஸ்ட்ரா சிங்கிள் ஓட்டி சரிக்கட்டிக்க வேண்டியது தான் இதையெல்லாம்.

இந்தத் துறையில் லாரிகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களின் முக்கியத்துவம் அளப்பறியது. ஒரு வண்டிக்கு இரண்டு டிரைவர்கள். கிளீனர் வைத்துக் கொள்வதெல்லாம் பழைய ஸ்டைல். அதற்கான ஆட்களும் இப்பொழுது வருவதில்லை. 2500 கிமீ ஒரு சிங்கிளுக்கு ஓட்ட இரண்டு அனுபவமுள்ள ஓட்டுநர்கள் இருந்தால் தான் சரிப்பட்டு வரும்.

ஒரு அப் & டவுன் அதாவது இரண்டு சிங்கிள் போய் வந்தால் அவர்களுடைய சாப்பாடு உட்பட அனைத்து செலவுகளும் போக ஆளுக்கு எட்டாயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கும். அதற்கு கிட்டத்தட்ட பன்னிரெண்டிலிருந்து பதினைந்து நாட்கள் வரையிலும் ஆகும்.

ரோட்டோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டால் கட்டுப்படியாகாது என்று இவர்களே சமைத்துக் கொள்கிறார்கள். வண்டியிலேயே மண்ணென்ணை ஸ்டவ், சமையல் சாமான்கள், மற்ற உப்பு,  எண்ணெய், மசாலாப் பொடிகள், அரிசி அனைத்தையும் கொண்டு சென்று விடுகின்றார்கள்.

ஓட்டுனர் அறையிலேயே ஒரு ரேக் அடித்து அனைத்தையும் சேகரித்து வைத்து விடுகின்றனர். வழியில் இருக்கின்ற கடைகளில் ஆட்டிறைச்சி, குடல் அல்லது கோழி இறைச்சியை வாங்கியவுடன், வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு டிரைவர் காற்கறி நறுக்க ஆரம்பித்து விடுகிறார். அடுத்து வரும் நல்ல நிழலான ரோட்டோரத்தில் லாரியை நிறுத்தி விட்டு, ஸ்டவ்வில் குக்கர் வைத்து சாதம் சமைத்து, காய்கறி, இறைச்சியெல்லாம் போட்டு ஒரே குழம்பாக வைத்து விடுகின்றார்கள்.

வழியில் தயிர் பாக்கெட் வாங்கிக் கொண்டால், விருந்து சாப்பாடு தான். அதையே இரண்டு வேளைகளுக்கும் வைத்துக் கொள்கிறார்கள். மழை பெய்தால் கூட, லாரியின் பக்க கதவை கழட்டி விட்டு அடிக்கட்டையை குறுக்கே வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் படி வைத்து அதன் மேல் ஸ்டவ் வைத்து சமைத்து விடுவார்களாம்!

இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து வண்டியிலேயே இருந்து, ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சேர்த்துக் கொண்டு இறங்கி, வெளி நாடு சென்று வருவது போல வீட்டுக்கு வந்து ஓரிரு மாதங்கள் தங்கி பிறகு வண்டியேறும் ரகத்தினர் தான் அதிகம் இருக்கின்றார்கள்.

இவர்களுக்குள்ள முக்கிய பிரச்சினையாக வழிப்பறியைத் தான் அதிகம் சொல்கின்றார்கள். பல வழிப்பறிகளில் வெட்டுக் குத்து காயம், கை, கால் இழப்பு என்பதோடு போய் விடும். சில சம்பவங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுவதுண்டு. இது பொதுவாக எல்லா மாநில ஓட்டுனர்களுக்குமே உள்ள பிரச்சினையாகத் தான் இருக்கின்றது.

உயிரிழப்பு ஏற்படுகின்ற போது உடலை தமிழகம் கொண்டு வருவதில் நிறை செலவு பிடிக்கும் நடைமுறைகள் இருக்கின்றன. அதனால் அந்த லாரி உரிமையாளர் சம்பந்தப்பட்ட ஓட்டுனரின் குடும்பத்தில் பேசி ஒரு லட்சம் வரை பணம் கொடுத்து அங்கேயே அடக்கம் செய்து விடுவதும் நடக்கிறது. 

பெரும்பாலான வியாபாரிகள் சரக்கு டெலிவரி செய்யும் இடத்திலிருந்து ரொக்கமாக வாங்கிவரச் சொல்வது தான் பிரச்சினைக்கு முக்கிய காரணமே! சரக்கு வாங்குபவரை வங்கியில் பணத்தைக் கட்டச் சொல்லலாமே என்று கேட்டால், பேங்க் காரன் டியூ பணத்தை கழித்து விடுவான் அதனால் தான் ரொக்கமாக எடுத்துவரச் சொல்கிறார்கள் என்று அவர்கள் சொல்லும் போது, இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் அடி நாதமான பிரச்சினை பளீர் என மூளையில் தைத்து மனதை கொஞ்சம் பிழியத்தான் செய்கிறது.

இது கூடப் பரவாயில்லை, இதையும் மீறி இந்த வேலையை விரும்பித்தான் செய்கிறோம் என்று ஓட்டுனர்கள் சொல்லும் போது அவர்கள் மேல் ஒரு வித மரியாதை தான் ஏற்படுகிறது.

ஆனால் அவர்கள் சொல்லும் இன்னொரு விஷயம், இந்தத் தொழில் மெல்ல நசிந்து வருவதையும், இன்னும் பத்து வருடங்களுக்குள் இதற்கான மாற்று வழியை பற்றிக் கொள்ள வேண்டியிருப்பதன் அத்தியாவசியத்தையும் நமக்கு உணர வைக்கின்றது.

புதிதாக் இந்த வேளைக்கு இளைஞர்கள் வருவது வெகுவாக குறைந்து போய் விட்டது என்பது தான் அந்த விஷயம். காரணம் கேட்டால், யாரும் பெண் கொடுக்க முன்வர மறுக்கிறார்கள் என்பதாகத் தான் இருக்கிறது. 

சார், எனக்கு பல இடத்துல பொண்ணு பார்த்து எல்லாமே தட்டி போயிடிச்சி சார். நானும் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமா மறுத்துட்டேன் சார். ஆனா எங்க அப்பன் ஆத்தா தான் புடிவாதமா இந்த ராணிய புடிச்சி என் தலையில கட்டி வச்சிட்டாங்க. அதுக்கே அந்த வியாதி இருக்கா? இந்த வியாதி இருக்கான்ன்னு ஆயிரத்தெட்டு டெஸ்ட்டு எடுத்து தான் ஒத்துக்கிட்டாங்க சார்.....

அந்தக் காலத்துலேர்ந்து, இந்த சினிமாக் காரனும், கதை எழுதறவனும் எங்களப் பத்தி ஒரு மாதிரியா காட்டிக் காட்டியே, கெடுத்து வச்சிட்டனுங்க சார். நூத்துக்கு பத்து இருவது பேரு தான் அப்பிடி இப்பிடி இருப்பாங்க, பாக்கி எல்லாருமே இது மாதிரி வாய வயித்த கட்டி வூட்டுக்கு தான் சான் கொண்டு போயி கொட்டுறான். அதப் பத்தி ஒருத்தனுமே படம் எடுத்து காட்ட மாட்டேங்குறான் சார்......

என்று ஒரு ஓட்டுனர் தனது மனக் குமுறலைக் கொட்டுகின்ற போது ஏற்படுகின்ற அந்த வலி, திரைப் பட இயக்குனர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இந்த சமூக கட்டமைப்பில் இருக்கின்ற பங்களிப்பும், அதை அவர்கள் எவ்வளவு பொறுப்பில்லாமல் சிதைத்துப் போடுகிறார்கள் என்ற கோபமும் தான் தலைக்கேறுகிறது.

எந்தத் துறையில் தான் அந்த 20 சதவிகித விதிவிலக்குகள் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று நம் மனது தானாவே கேட்டுக்கொள்வதையும் நம்மால் தடுக்க இயலவில்லை!

இந்தத் துறையைப் பொறுத்த வரை லாரி உரிமையாளர்களுக்கும்-ஓட்டுனர்களுக்கும், அதாவது முதலாளிக்கும், தொழிலாளிக்கும் ஒரே அளவிலான லாபமும், நட்டமும்; இன்பமும், துன்பமும் இருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. வண்டி தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தால் தான் இருவருக்குமே பிழைப்பு. அதையும் தாண்டி, பொருளாதார ரீதியிலாக மட்டுமல்லாமல் உயிர் வரையிலும் பந்தயம் வைக்க வேண்டியிருக்கிறது.

இந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியுடன் நடை பெற்றுக் கொண்டிருந்தால் தான், அரிசிச் சோற்றுக்காக வட மாநிலங்களை அன்னாந்து பார்க்க வேண்டிய சூழலில் சிக்கியிருக்கின்ற நாம், வரும் காலங்களில் அரிசிச் சோற்றை தினமும் உண்ண முடியும், இல்லாவிட்டால், பழைய காலம் மாதிரி தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே பணியாரம் போல இட்லி, தோசையை உண்ணுகின்ற நிலைமைக்கு வந்து விட வேண்டியது தான்!

காலச்சக்கரம் நம்மை மீண்டும் அங்கு கொண்டு சென்று விடும் என்றே தோன்றுகிறது!!



5 comments:

Mohan Jayabal said...

nalla pathivu...

சேலம் தேவா said...

தூர்தர்ஷன்ல இதுமாதிரி ஒருத்தரு பல துறை மனிதர்களை பத்தி பல நேர்காணல்களை நடத்துவாரு...அது மாதிரி இருந்துச்சுண்ணே உங்க இந்த பதிவு.

ப.கந்தசாமி said...

மிகவும் அனுதாபத்திற்குரிய தொழில்.

மாதேவி said...

பலஆச்சரியமான தகவல்களுடன் அவர்கள் தொழில் பற்றி பகிர்ந்துள்ளீர்கள்.சிரமமான தொழில்தான்.

நல்ல பகிர்வு.

வெண்பூ said...

அருமையான‌ ப‌திவு செள‌ம்ய‌ன்... ப‌ண‌ப்ப‌யிருக்கு பெய‌ர்போன‌ வ‌ங்காள‌த்துகிட்ட‌ நெல்லுக்கு பேர் போன‌ நாம‌ கையேந்தி நிக்குற‌து.... :(((((((((((((