Wednesday, May 15, 2013

திமுக ஆட்சியும்... தமிழகமும் - ஒரு சின்ன பார்வை!

காவிரியின் கடைமடையில் கடைசி நகரம் என்றால் அது மாயவரம் தான். அதாவது பூம்புகாரில் காவிரி கடலில் கலக்கும் முன்பாக அது கடந்து செல்லும் கடைசி நகரம் இது. இங்கு காவிரியின் அகலம் சற்றேரக்குறையை 150 அடிகள் வரை தான் இருக்கும்.

இந்த காவிரி மாயவரம் நகரின் நட்ட நடுவில் ஓடி நகரத்தை இரண்டு பிரிவாக பிரிக்கிறது. அதாவது நகரின் முக்கிய கடை வீதியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. மாயவரத்தின் வடப்புறம் சிதம்பரமும், தென் திசையில் கும்பகோணமும் இருக்கிறது.

நகரின் இரண்டு பகுதிகளையும் இணைக்க மொத்தமாக ஐந்து பாலங்கள் உண்டு. நகரின் மேல் கோடியிலும் கீழ் கோடியிலும் இருக்கும் தலா இரண்டு பாலங்களிலும் இரண்டு நபர்கள் மட்டுமே எதிரெதிராக நடந்து செல்லலாம். அல்லது ஒரே ஒரு சைக்கிள் மட்டும் செல்லலாம். ஊரின் நடுவில் இருக்கும் அந்த ஒற்றைப் பாலத்தில் மட்டுமே பேருந்து உட்பட மற்ற வாகனப் போக்குவரத்தெல்லாம் சாத்தியம். அதுவும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது தான்.

மாயவரத்து மக்கள் தங்கள் நகரத்தில் இக்கரைக்கும் அக்கரைக்கும் செல்வது இருக்கட்டும், தமிழகத்தின் வடக்கு தெற்காக அல்லது தென் வடலாக மாயவரம் வழியாக கடந்து போக நினைக்கும் எவரும் இந்த ஒரு பாலத்தின் வழியாகவே கடந்து செல்ல வேண்டும். அதுவும் ஒரு நேரத்தில் ஒரே ஒரு பேருந்தோ அல்லது லாரியோ தான் அந்த குறுகிய பாலத்தின் வழியாக செல்ல முடியும். அதனாலேயே எப்பவும் அந்த பாலத்தின் இரண்டு பக்கமும் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு பெரும் போக்குவரத்து நெரிசல் இருப்பது வாடிக்கை.

இந்தப்பக்கம் இப்படி என்றால் மாயவரத்தின் தென் கோடியில் நகரின் குறுக்கே ரயில்வே மெயின் ட்ராக் போகிறது. தமிழகத்தின் வட தென் பகுதிகளை இணைக்கும் மிக முக்கிய ரயில் சந்திப்பு இது என்பதால் பெரும்பாலான நேரங்களில் இங்கு ரயில்வே கேட் மூடப்பட்டே இருக்கும். அது திறந்திருக்கும் சொற்ப நேரத்திற்காக வாகனக் கூட்டம் வால் போல எப்பவுமே நீண்டிருக்கும்.

ஆக, அந்தக் காலத்தில் மாயவரத்தைக் கடந்து செல்ல வேண்டிய எவர் ஒருவரும், குறைந்த பட்சம் இரண்டு மணி நேரங்களாவது செலவிட்டுத் தான் காவிரி மற்றும் ரயில்வே இரண்டையும் கடந்து செல்ல முடியும்!

ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டுட்டு தொடர்ந்து வாங்க......

முதன் முதலாக திமுக ஆட்சி அமைந்து அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் முதல்வராக இருக்கும் சமயம் அது. மாயவரம் சட்டமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த கிட்டப்பா அவர்கள் இந்த ரயில்வே மேம்பாலம் குறித்தான கோரிக்கையை சட்ட மன்றத்தில் வைக்கிறார். இது போன்ற தமிழகம் முழுமைக்குமான பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டிய நெருக்கடியில் இருந்த முதல்வர் கலைஞரும் இதை ஓராண்டாக தட்டிக் கழித்துக் கொண்டே வர.....

அடுத்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஒன்றில் கிட்டப்பா தனது கோரிக்கையை எழுப்ப எழுந்து நிற்க..., அவரை வழக்கம் போல முதல்வர் கலைஞர் தட்டிக் கழிக்க, இவர் கையோடு கொண்டு சென்றிருந்த கயிற்றைக் காட்டி இப்போ இந்த மேம்பால திட்டத்தை அறிவிக்கா விட்டால் இங்கேயே தூக்குப் போட்டுப்பேன் என்று மிரட்ட...., எல்லோரும் ஒரு நிமிடம் சீரியஸாக பார்த்து விட்டு, பிறகு சிரித்து அவரது அந்த ஈடுபாட்டை பாராட்டும் விதமாக உடனே அந்த திட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாயவரம் ரயில்வே ஜங்ஷன் மேல் மிகப் பெரிய மேம்பாலம் அமைக்கப்பட்டுவிடுகிறது......!

மாயவரம் போக்குவரத்து நெரிசலில் பாதி பங்கு ஒரே நாளில் காணாமல் போய்விடுவதோடு, பொது மக்களுக்கும் வணிக ரீதியாக மிகப் பெரிய பலன் கிடைக்கிறது.....

கலைஞர் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்து அடுத்து பதினோரு ஆண்டுகள் எம் ஜி ஆர் ஆட்சி. அப்படியே போகிறது.

மீண்டும் கலைஞர் ஆட்சி. கோ. சி. மணி அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சர். செங்குட்டுவன் அவர்கள் மாயவரம் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்றத் தலைவர் ஆகிய இரண்டு பொறுப்புக்களிலும் இருக்கிறார். மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக திமுகவின் வெங்கட்ராமன் இருந்த நேரம் அது.

இந்த அற்புதமான கூட்டணியின் பார்வை காவிரியின் பாலங்கள் மேல் பாய்கிறது. நடுவில் இருக்கும் போக்குவரத்துக்கு பயன்படும் ஒரே பாலத்தில் கை வைத்தால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்திற்கு வாய்ப்பில்லாமல் போகும். அதனால் மேற்கு திசையில் இருக்கும் ஒரு நடைபாலத்தை தேர்ந்தெடுத்து அதில் அற்புதமான அகண்ட பாலம் ஒன்று கட்டப்படுகிறது. அந்தப் பாலத்தை தென் வடலாக இணைக்கும் சாலையும் அகலப்படுத்தப்பட்டு மாயவரத்திற்கு மிக மிக மிக பயனுள்ளதான நகரை ஒட்டியே அல்லது நகருக்குள்ளேயேயான ஒரு புறவழிச்சாலை பெரிய அகண்ட பாலத்துடன் கிடைக்கப்பெற்று மிகப் பெரும் பலனை மக்களுக்கு தந்தது.

அடுத்த பதினெட்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரும் வாகனப் புரட்சி மற்றும் தொழில் துறை வளர்ச்சியினால் மீண்டும் ஒரு நெருக்கடி. அப்பொழுது தான் அப்பொழுதைய உள்ளாட்சித் துறை அமைச்சரும் துணை முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்கள் அந்த ஆங்கிலேயர் காலத்து நகரின் மைய பாலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை.

போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் இரண்டு பக்கமும் வால் போல நீண்டு நிற்கிறது. இவரது வாகனம் மட்டும் நகரின் மையத்தில் இருக்கும் அந்த குறுகிய பாலத்தின் மீது செல்கிறது. தன் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி காவிரியை நோட்டமிடவாறே, இரண்டு பக்கமும் நிற்கின்ற வாகனங்களையும் பார்த்து அதிகாரிகளிடம் விவரம் கேட்கிறார். திமுகவின் நகர செயலாளர் முன்னே வந்து நிலைமையை விளக்குகிறார்.

அடுத்த வாரமே அந்த பாலத்திற்கு டெண்டர் விடப்படுகிறது, அதிலிருந்து ஏழே மாதங்களில் அங்கே இரண்டு லாரிகள் ஒரே நேரத்தில் கடப்பதும் இரண்டு பக்கமும் பாதசாரிகள் செல்வது போன்றதுமான பெரிய பாலம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.......!

ஒரு நல்ல ஆட்சியாளரின் திறனை எதைக் கொண்டு அளப்பது? பொது மக்களுக்கு அன்றாட செயல்பாடுகளில் பெரும் இடையூறுகளையும் பாதிப்புகளையும் உருவாக்கும் விடயங்களைக் கண்டறிந்து அதைக் களைந்து மக்களின் நிம்மதியான வாழ்வுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் வணிக வளர்ச்சிக்குமான உட்கட்டமைப்பு வசதிகளையும், உள்ளாட்சி நிர்வாகத்தையும் எவர் ஒருவர் திறம்பட செய்ய முனைப்பு காட்டுகிறாரோ அவரே சிறந்த ஆட்சியாளர். அதனால் தான் அசோகர் மரம் நட்டது இன்றளவிலும் பாடப்புத்தகத்தில் வந்து கொண்டிருக்கிறது!

தமிழகத்தில் மாயவரம் தவிர்த்து 233 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இவை அனைத்திலுமே இதேப் போன்ற எண்ணற்ற பிரச்சினைகள் இருந்திருக்கும். அந்த மாதிரியான 90 சதவிகித பிரச்சினைகளுக்கு கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் திமுகவைச் சேர்ந்த நகர் மன்ற தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாநில அமைச்சர்களால் மட்டுமே  தீர்வுகள் காணப்பட்டிருக்கிறது!

அதாவது சிறந்த ஆட்சி நிர்வாகம் திமுகவால் மட்டுமே கடந்த 45 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்றிருக்கிறது.

ஆகவே

இதுவரை *கலைஞர் ஆட்சியே நல்லாட்சி*

இனிமேல் *ஸ்டாலின் ஆட்சியே சூப்பர் ஆட்சி*

No comments: