Friday, March 14, 2014

தளபதி ஸ்டாலின் தந்தி டீவி பேட்டியும்.... மோடி பற்றிய லேடிக்கான விளக்கமும்..!!

தளபதி ஸ்டாலின் தந்தி டீவிக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு கேள்வி...

மோடி பற்றிய நிலைப்பாடு பற்றிய அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் தளபதி ஸ்டாலின் அவர்கள்.... மோடி சொல்வதாக கூறப்படும் வளர்ச்சி எந்த அளவிற்கு உண்மை என்பதில் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் இரு வேறு கருத்துக்களை எடுத்துரைத்து, திமுக ஆட்சியில் அதை விட அதிக அளவிலான வளர்ச்சியை தமிழகம் சாதித்திருப்பதை கூறியிருந்தார்.....

அந்த ஒரு பதிலை மட்டும் விளம்பரத்திற்கு எடுத்துப்போட்டு விட்டு, அதற்கான பதிலை பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனிடம் அதற்கான விளக்கமாகக் கேட்டுப் பெற்று அதையும் இப்பொழுது பதிவு செய்து தந்தி டீவியில் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்....

அந்தம்மா பேசும் போது, திமுக ஆட்சியில் எந்த மின் உற்பத்தி திட்டங்களுமே இல்லாமல் கடும் மின்வெட்டு ஏற்பட்டதாகவும், ஆனால் மோடி குஜராத்திலிருந்து உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதையும் பெருமையாக சொல்லிக்கொள்கிறார்.

அதற்கான நமது விளக்கம்.....

** 1967க்குப் பிறகு அதாவது திமுக முதன் முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகு இன்றைய தேதி வரை தமிழகத்தில் போடப்பட்டிருக்கின்ற அனைத்து மின் உற்பத்தி திட்டங்களுமே திமுக ஆட்சிக்காலங்களில் மட்டுமே போடப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

** 96 லிருந்து 2001 வரை திமுக செயல்படுத்திய திட்டங்களில் இருந்து கிடைத்த மின்சாரத்தை அடுத்து 2001 லிருந்து 2006 வரை ஆட்சி செய்த ஜெயலலிதா அரசு அனுபவித்து வந்ததே தவிர, அதிகரித்துக் கொண்டிருக்கும் தேவைகளுக்கு ஈடு கொடுக்கத் தேவையான புதிய மின் உற்பத்தித் திட்டங்களை அது செயல்படுத்தவே இல்லை....

** இதன் காரணமாக அடுத்து 2006இல் ஆட்சிக்கு வந்த திமுக எட்டு மின் உற்பத்தி திட்டங்களைப் போட்டு அதன் மூலம் 7300 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அதற்கான நிதி ஆதரங்களைத் திரட்டி, வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில் 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடுகின்றார்.....

** ஆனால் 2011 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்று வரை புதியதாக ஒரு மின் உற்பத்தி திட்டத்தைக் கூட போடவில்லை. மேலும் கால், பாதி, முக்கால் வாசி கடந்த நிலையில் இருக்கின்ற திமுக ஆட்சிக்காலத்தின் அந்த 8 திட்டங்களையும் கூட இன்று வரையிலும் தேவையான நிதியை ஒதுக்கி முடிக்கவும் இல்லாமல், அதிக விலை கொடுத்து வெளியில் இருந்து மின்சாரம் வாங்கித்தான் தேவையை ஓரளவிற்கு சமாளிக்கின்றார்.

** உங்கள் மோடிக்கு தொடர்ந்து அந்த குஜராத் மக்கள் ஆதரவளித்தது போன்று திமுகவுக்கு குறைந்த பட்சம் இந்த முறையாவது தொடர்ந்து ஆட்சி செய்ய தமிழக மக்கள் அனுமதித்திருந்தால் நிச்சயம் அந்த 8 திட்டங்களும் இந்நேரம் முடிக்கப்பட்டு தமிழகம் இன்றைய தேதியில் உண்மையிலேயே மின் மிகை மாநிலமாக மாறியிருக்கும்.

** மேலும் குஜராத்தின் மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி அளவு இயற்கை உற்பத்தி அதாவது பெருக்கெடுத்து ஓடும் நர்மதா நதி அணைக்கட்டுக்களில் இருந்து கிடைக்கின்றது. அந்த மாதிரியான வருடம் முழுவதும் கிடைக்கின்ற நீர் ஆதாரம் தமிழகத்தில் கிடையாது. மோடிக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முக்கியமாக மின்சாரத்துக்கு கட்டப்பட்ட அணையில் இருந்து தான் அதிகம் கிடைக்கின்றது. அந்த அணை கட்டியதற்காக மக்களை இணைத்து மேதபட்கர் நடத்திய போராட்டத்திற்கான கூலியை காங்கிரஸும், அதனால் இப்பொழுது கிடைக்கின்ற மின்சாரத்தின் பலனை மோடியும் அனுபவிப்பது தான் விந்தை.

** மேலும் குஜராத் என்பது தமிழகத்தில் பாதி அளவே இருக்கின்ற ஒரு மாநிலம். அதன் தேவையும் குறைவு. இதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.

** இப்பொழுது தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு, மத்திய தர தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகால ஜெயலலிதா ஆட்சியின் மோசமான மின் விநியோகத்தால் மூடப்பட்டுவிட்டதால், அதில் மிகைப்படும் மின்சாரம் டொமஸ்டிக் அதாவது மக்கள் பயன்பாட்டிற்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மக்களைப் பொறுத்தவரை இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே.

** ஆனால் தமிழகத்தின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு அதாவது கடைசி மாநில அந்தஸ்த்திற்கு அதாவது வெறும் 4.13 ஜிடிபி ரேஷியோவிற்கு தள்ளப்பட்டிருப்பதற்கு இந்த மாதிரி பெருமளவிலான தொழிற்சாலை உற்பத்தி முடக்கம் ஒரு மிக முக்கிய காரணம். அத்தோடு புதிய தொழில் முதலீடுகளும் கடந்த மூன்றாண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வரவேயில்லை.

** இந்த தொழிற் முடக்கமானது மாநிலத்தின் பெரிய வரி வருவாயையும் முடக்கிப் போட்டிருப்பதோடு, பல லட்சக்கணக்கான தொழிலாளிகள் கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் வேலையிழக்கவும் காரணமாக அமைந்திருக்கின்றதையும் நாம் கவனிக்க வேண்டும்.

**  மேலும் சரியான புள்ளிவிவரங்களுடன் அந்த பேட்டியில் தளபதி ஸ்டாலின் அவர்கள் பேசவில்லை என்றும் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் இந்த மாதிரியான தெளிவான புள்ளிவிவரங்களுடன் தளபதி அவர்கள் பல மேடைகளில் பேசிக் கொண்டிருக்கின்றார். குறிப்பாக கடந்த மாதம் திருச்சியில் நடந்த திமுகவின் பத்தாவது மாநில மாநாட்டில் கூட இந்தப் புள்ளி விவரங்களை மிகத் தெளிவாக பட்டியலிட்டிருக்கின்றார்.

** அதே சமயம், இப்பொழுது திமுகவின் குறிக்கோள் என்பது தமிழகத்தில் ஜெயலலிதா அரசின் அவலங்களை மக்கள் மன்றத்தில் வைப்பது ஒன்றே என்ற காரணத்தால் அதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது. மோடி ஆட்சியின் புள்ளி விவரங்கள் என்பதெல்லாம் இப்பொழுது திமுகவிற்கு அவசியம் இல்லை. ஏனெனில், திமுக தங்கள் கட்சியின் சார்பாக யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தவில்லை.

** திமுகவின் இலக்கு என்பது தமிழகத்தில் 30க்கும் அதிகமான இடங்களில் வெற்றிவாகை சூட வேண்டும் என்பதே. அந்த அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களின் ஆதரவோடு மத்தியில் தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கின்ற விடயங்களை நிறைவேற்றுவதாக வாக்களித்து எழுதிக் கொடுக்கின்ற தகுதியான ஒரு நபர் பிரதமாக வருவதற்கு ஆதரவு தந்து, தமிழகத்திற்கான நலன்களை பெற்றுத்தருவது ஒன்றே திமுகவின் இன்றைய செயல் திட்டம்.

** இந்த நிலையில் மோடியின் ஆட்சி நல்லதா? கெட்டதா என்ற புள்ளிவிவரங்களை ஆராய்வது எல்லாம் திமுகவுக்கு தேவையற்ற ஒன்று, ஏனெனில் இங்கு பாஜக தனித்து நின்று ஒரு தொகுதியில் கூட டெபாஸிட் கூட வாங்க முடியாத நிலையில் இருந்து, இப்பொழுது அமைத்துக்கொண்டிருக்கும் கூட்டணியின் மூலம், அனைத்து தொகுதிகளிலும் டெபாஸிட்பெற மட்டுமே முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில் பாஜகவைப் பற்றியோ அல்லது அதன் பிரதமர் வேட்பாளர்பற்றியோ எந்த விமர்சனத்திற்கும் தன் சக்தியை விரையமாக்க திமுக விரும்பவில்லை என்பதையே தளபதி தெளிவாக உணர்த்தியிருக்கின்றார்.

** ஆகையால் திருமதி வானதி ஸ்ரீநிவாசன் அவர்களே, நீங்கள் இங்கு யாரையாவது எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்றால், உங்கள் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு போட்டியாக களத்தில் தன்னைத்தானே முன்னிருத்திக் கொண்டிருக்கின்ற ஜெயலலிதாவுக்கு எதிராக விவாதம் செய்தால், உங்கள் மோடியை காப்பாற்றலாம். அதை விடுத்து தேவையில்லாமல் திமுக பற்றிப்பேசி காலத்தை விரயம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்!


5 comments:

vijayan said...

1967-இல் தி.மு.க ஆட்சியை பிடித்தவுடன் செய்த நல்லகாரியம் சமயநல்லுர் பவர் பிளான்டை தனியருக்கு தாரைவார்த்ததுதான்.பழய செய்திதாள்களை படிங்க தோழரே.

கொக்கரக்கோ..!!! said...

@விஜயன்,

அதை ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதற்கான காரணத்தினைக் கூற இயலுமா? இன்றைக்கும் நீர் மின் உற்பத்தி திட்டங்கள் தவிர அனைத்துமே தனியார் பங்களிப்புடன் கூடியதாகத்தான் இருக்கின்றது. உடன்குடி மின் திட்டத்தை முழுமையாக தமிழக அரசே முதலீடு செய்து நடத்தும் என்று ஆட்சிக்கு வந்து இரண்டே மாதத்தில் ஜெயலலிதா சொன்னாரே... இன்று வரை அந்த திட்டத்திற்கு ஒரு சிறு முயற்சியாவது எடுக்கப்பட்டதா?

குறும்பன் said...

//தகுதியான ஒரு நபர் பிரதமாக வருவதற்கு ஆதரவு தந்து, தமிழகத்திற்கான நலன்களை பெற்றுத்தருவது ஒன்றே திமுகவின் இன்றைய செயல் திட்டம்.//
ஓகோ UPA-2ல லாபம் தரும் துறைகளை (தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு) வாங்கினது போல் அல்லாமல் இம்முறை தமிழகத்திற்கான நலன்களை பெற்றுத்தரப்போறாங்களா.

அருள்மொழி கனகு said...

காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தபோது திமுக செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு காண்பித்து உள்ளோம்,இந்த லிங்கில் போய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் குறும்பன் https://www.facebook.com/achievementsofdmk

அருள்மொழி கனகு said...

https://www.facebook.com/achievementsofdmk

இந்த பக்கத்தில் சென்று திமுகவின் சாதனைகளை பார்த்து கொள்ளுங்கள் குறும்பன்