Monday, September 10, 2012

லக்பிமாவாவது இந்தியாவை திருத்துமா?!



கொஞ்சம் வெறுப்பு வரத்தான் செய்கிறது அந்த கார்டூனைப் பார்த்தால். “லக்பிமா” என்னும் சிங்களப் பத்திரிகையில் தான் அது வந்திருக்கின்றது. அந்த பத்திரிகையின் முதலாளி ராஜபக்‌ஷே அரசில் ஒரு மந்திரி என்றும் சொல்கிறார்கள்.

நமது தமிழக முதல்வரையும், இந்திய பிரதமரையும் ஒரு சேர, உடற்மொழி ரீதியாக மிக அசிங்கமாக சித்தரித்து கேலிச் சித்திரம் வரைந்து வெளியிட்டிருக்கின்றார்கள்.
விளையாடுவதற்காகவும், புனித யாத்திரைக்காவும் தமிழகம் வந்த சிங்களவர்கள் சிலரை திருப்பி அனுப்பிய தமிழக அரசின் செயலுக்கு எதிர்வினையாகத் தான் இந்த கேலிச்சித்திரத்தை அவர்கள் வெளியிட்டிருக்கக் கூடும்.

தமிழக அரசின் அந்தச் செயலுக்கான ஒரு எதிர் வினையை நாம் நிச்சயமாக எதிர்கொள்ளத் தான் வேண்டும். ஆனால் ஒரு நாட்டின் எதிர்வினை என்பது குறிப்பிட்ட வரைமுறைக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை விட நிச்சயமாக ஒரு நெறிமுறைக்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதை உண்மையான நடுநிலையாளர்கள் யாரும் மறுக்க முடியாது.

சரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவ்வப்பொழுது தமிழுணர்வாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதும், அதன் ஒரு எல்லையாக சிங்களர்களை துரத்தியடித்ததும் சிங்கள அரசை கோபப்பட வைத்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்த அதே சமயத்தில்......

40 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்ட தமிழகம் மற்றும் புதுவை மக்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை அரசின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான விதி மீறலுடன் கூடிய போர் என்ற பயங்கரவாதத்தை (லட்சக் கணக்கான சிவிலியன்கள் கொள்ளப்படுவதை போர் என்று ஏற்றுக் கொள்ள இயலாது. அது பயங்கரவாதம் தான்) அமைதியாக வேடிக்கைப் பார்த்ததுமின்றி, ஆதரவும் நல்கிய மன்மோகன் சிங் அரசு செய்த, துரோகத்துக்கு துணை போன செயலை மறந்து விட்டு அவரையும் அசிங்கப்படுத்தி கேலிச் சித்திரம் வரைந்திருப்பதின் காரணம் தான் என்ன?

உலக அளவில் இதை உற்று நோக்கினால், ஒரு பெரிய நாட்டின் சக்தி வாய்ந்த அதிகாரம் மிக்கவர் மற்றும் ஆட்சித் தலைவரை அதே நாட்டின் ஒரு மாகாண பெண் ஆட்சியாளரோடு உடற்மொழி ரீதியாக மிக கேவலமாக, அருகாமை நாட்டின் முழு அரசு ஆதரவு பெற்ற பத்திரிகையில் கேலிச் சித்திரம் வெளியிட்டிருப்பது எதைக் காட்டுகிறது?

அந்த நாட்டை தனது எதிரி நாடாக பிரகடனப் படுத்துகிறது என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும். 

இவ் விடயத்தைக் கொண்டு, அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா தமிழ் ஈழ விஷயத்தில் அதிகம் ஸ்கோர் செய்து விடுவார் என்றெல்லாம் எண்ணி, என்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை முதலில் ஒரு தமிழ் நாட்டுத் தமிழனாகவும், அடுத்தபடியாக ஒரு இந்தியனாகவும் தான் அணுக வேண்டும் என்பது என் நிலைப்பாடு.  நம் தமிழக முதல்வர் அதுவும் ஒரு பெண்ணை பின்னால் இருந்து தாக்குவது போல் கோழைத் தனமாக நான்காம் தர மஞ்சள் பத்திரிகையின் எண்ண ஓட்டத்தோடு கேலிச் சித்திரம் வரைந்த லக்பிமா சிங்கள தினசரியை வன்மையாக என்னுடைய இந்த கட்டுரையின் மூலம் கண்டிக்கிறேன்.

அதேப் போன்று நமது பாரதப் பிரதமரை இழிவுபடுத்தி நாகரீகமற்ற முறையில் தனது ஆதரவு பத்திரிகையின் மூலம் கேலிச் சித்திரம் வரைந்து தன்னை இந்தியாவின் எதிரி என்று பிரகடனப்படுத்திக் கொண்ட இலங்கை அரசுக்கு என் வந்தனங்கள்!

ஏனெனில் இத்தனை நாட்களாக நாமெல்லாம் கூவினாலும் காதில் விழாதவாறு செயல்பட்டு வந்த இந்திய தலைமைக்கு, இப்பொழுதாவது மண்டையில் உரைக்காதா என்ற எதிர்பார்ப்பு தான் அந்த “வந்தனத்திற்கான” காரணம்!

5 comments:

சேலம் தேவா said...

"அன்னை" சோனியாவின் நிலைப்பாடே பிரதமரின் பாடு.

kkk said...

Vaiko along with MDMK workers are planning to go in 17 buses to Madyapradesh.Now let AIADMK join with them in another 17000 buses to Madyapradesh.
But ultimately Jaya is lucky

ஜோதிஜி said...

சோனியாவை போடாமல் இருந்ததில் உள்ள உள்குத்து புரியுதா நண்பா?

அருள் said...

இலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? கண்டனத்தை உடனே பதிவு செய்க

http://arulgreen.blogspot.com/2012/09/blog-post_8847.html

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வன்மையான கண்டனங்கள் .