Friday, December 19, 2014

இதற்காகவா வாக்களித்தார்கள்... மோடிக்கு?!

இன்றைக்கு மத்திய அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கும் மோடி சார்ந்திருக்கும் பாஜக என்ற கட்சிக்கு வாக்களித்த மக்களில் 90 சதவிகிதத்தினர் என்ன காரணத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள் என்பதை ஆய்ந்து உணர வேண்டிய முக்கியமான தருணத்தில் மோடி இருப்பதை அவரது நலன் விரும்பிகள் அவருக்கு எடுத்துச் சொல்வது நலம்! (ஹப்பாஆஆ.... ஒரே மூச்சுல இம்ப்புட்டு பெரிய வாக்கியமா?)

மோடியும், பாஜகவும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் மோடி ஆண்ட குஜராத் மாநிலத்தில் நிகழ்த்தியதாகச் சொல்லப்பட்ட தொழில்துறை, மின்சாரம், விவசாயம், தனிநபர்... மற்றும் இன்னபிற வளர்ச்சிகளை சுட்டிக்காட்டித்தான் மக்களிடம் வாக்குக் கேட்டனர். அங்கு நடந்த மதக்கலவரங்களை அடியோடு மறைத்து/மறுத்து, அதற்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லை என்று சத்தியம் செய்து, தாங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர்கள், எந்த மதச்சார்பாகவும் குஜராத்தில் ஆட்சி செய்யவில்லை என்று கோர்ட் தீர்ப்புகள் வாயிலாகவும், ஊடகப் பிரச்சாரங்களின் மூலமும் தலைகீழாக நின்று மக்களிடம் உறுதியளிதே வாக்குக் கேட்டனர்....
மேலும் இதற்கு முன்பு ஆண்ட ஐக்கியமுற்போகுக் கூட்டணி அரசு இந்துக்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை, சமஸ்கிருதத்தையும், இந்தியையும் மக்களிடம் பரப்பவில்லை, கீதை போன்ற இந்து சமய நூல்களை தேசிய நூலாக அறிவிக்கவில்லை...., அதனால் அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம் என்றெல்லாம் சொல்லி வாக்குக் கேட்கவில்லை....!
மாறாக, முந்தைய ஐ.மு ஆட்சியில் நிர்வாகம் சீர்கெட்டிருக்கின்றது, கருப்புப் பணத்தை இந்தியா கொண்டுவரவில்லை, விலைவாசி உயர்கிறது, ஊழல் மலிந்து விட்டது, தொழில் வளர்ச்சி இல்லை.... இப்படியெல்லாம் சொல்லி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் சரி செய்வோம் என்று வாக்குக் கொடுத்துத் தான் மக்களிடம் வாக்குக் கேட்டனர்...!!!
ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இப்பொழுது, இந்தியை பரப்புவோம், சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குவோம், கீதையை தேசிய நூலாக்குவோம், ராஜபக்‌ஷேவை இந்தியாவின் நண்பனாக அறிவிப்போம், கங்கையை சுத்தப்படுத்துவோம், ரேடியோவைத் திறந்தால், ஹிந்தியில் அரசுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வோம், ரயில் கட்டணங்களை ஏற்றிவிட்டு, காங்கிரஸ் வழியில் செல்கிறோம்......
.... இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால், மக்கள் ஏமாளிகளாக இருந்து விடுவார்கள் என்று நம்பிவிட வேண்டாம் திரு. மோடி அவர்களே. அதானிக்கு நீங்கள் காட்டியிருக்கின்ற சலுகை உங்களுக்கு ஓட்டுப்போட்ட ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கின்றது. நூற்றுக்கு வெறும் 30 பேர் மட்டுமே வாக்களித்து உங்களை அரியணையில் ஏற்றியிருக்கின்றார்கள். அதாவது இந்திய மக்கள் உங்களை வெறும் கயிற்றின் மேல் மட்டுமே நடக்கவிட்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு வாக்களிக்காத அந்த 70 பேரின் நம்பிக்கையை பெருவது இருக்கட்டும், உங்களுக்கு ஆதரவளித்த அந்த 30 பேர் மீண்டும் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமானால், முதலில் இந்த காவி கோஷங்களை ஓரம்கட்டி வைத்து விட்டு, சனாதன மனுதர்ம விவகாரங்களில் இருந்து முற்றும் முழுதாக விலகி நின்று, ஒவ்வொரு பிராந்திய மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்ப்பளித்து, சிறுபான்மையின மக்களை சகோதரத்துவத்துடன் நடத்தும் பண்போடு செயல்படத் துவங்குங்கள்.

இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது டிரையல் மட்டுமே என்பதை புரிந்து செயல்படுங்கள். உங்களை விட மிருக பலத்துடன் அரியணை ஏறிய ராஜீவ் காந்தியையே தூங்கியெறிந்த மக்கள் தான் இந்தியர்கள் என்ற வரலாற்றைப் படித்துப்பாருங்கள். இந்தியா என்பது குஜராத் மட்டுமல்ல. இது ரொம்பப் பெருசு!!!


2 comments:

Unknown said...

சரியான கருத்து! செவியில் ஏறுமா ?

ஜோதிஜி said...

தலைப்பை பார்த்தவுடன் கண்ணை மூடிக் கொண்டு ஓட்டளித்தேன். ஒரு வருடம் முழுக்க காத்திருந்த பிறகு எழுத எண்ணம்.