Tuesday, January 8, 2019

திருவாரூர் தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகிறதா?! - ஒரு விரிவான பார்வை


திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக அஞ்சுகிறது....

இது தான் அரசியல் புரியாத அரைவேக்காடுகளின் மண்டையில் ஏற்ற வேண்டிய செய்தியாக, கடந்த மூன்று நாட்களாகவும்..., அடுத்து வரும் மூன்று நாட்களுக்கும் பரப்புரை செய்வதற்கான விஷயமாக....
சங்கிகளுக்கும், சங்கிஸ் அடிமைகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட்..!

இந்த அசைன்மெண்ட்டை கொடுத்தது யார்? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?!

இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதிலை இந்த பதிவின் இறுதியில் சொல்கிறேன், நான் கூட சொல்லத்தேவையில்லை, இந்தப் பதிவை கவனமாக வாசித்தால், நீங்களே கூறிவிடுவீர்கள்..!

ஓக்கே.... அதற்கு நாம் இரண்டு செய்திகள் அல்லது பரப்புரைகளுக்கான விளக்கங்களை தந்தாக வேண்டும்.

ஒன்று.... திமுக உண்மையிலேயே திருவாரூர் இடைத்தேர்தலைக் கண்டு அஞ்சுகின்றதா?

இரண்டு... அப்படி அஞ்சவில்லை என்றால், தேர்தலை தள்ளி வைக்கச் சொல்லி, ஏன் தேர்தல் அதிகாரி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும்?!

முதலில் ஒன்றாம் கேள்விக்கு வருவோம்....

திருவாரூர் இடைத்தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகிறதா?!

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதை விட, இதற்கு பதிலாக.... இந்தக் கேள்வியைக் கேட்பவர்களிடம் அல்லது கேட்கச் சொன்னவர்களிடமே நாம் ஒரு கேள்வியை முன் வைப்போம்..!

திருவாரூர் தேர்தலைக் கண்டு திமுக ஏன் அச்சப்பட வேண்டும்? அதற்கான காரணங்களை உங்களால் பட்டியலிட முடியுமா என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டால் அவர்கள் பதறி விடுவார்கள்.

ஆனால் நாமே இங்கு அதற்கான பதிலை கண்டுபிடிப்போம். திமுக அங்கே களம் காண அஞ்சுவதற்கு.....

1. ஏற்கனவே அந்த தொகுதி அதிமுக வசம் இருக்கின்றதா?

பதில் : இல்லை அது திமுக வசம் தான் இருக்கின்றது. அதிலுல் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (68336) அதன் மறைந்த தலைவர் கலைஞரால் வென்றெடுக்கப்பட்ட தொகுதி.

2. சரி... பலம் மிக்க திமுக தலைவரான கலைஞர் நின்றதால் வென்றிருக்கலாம். ஆனால் அது பாரம்பரியமாக திமுகவுக்கு எதிரான (உதாரணத்திற்உ ஆர்.கே.நகர் போன்று) அல்லது அதிமுகவுக்கு கோட்டை போன்ற தொகுதியாகக் கூட இருக்கலாம் அல்லவா?

பதில் : நிச்சயம் இல்லை. சுதந்திர இந்தியாவில் நடந்த ஒரே ஒரு தேர்தலில் கூட அதிமுகவோ அல்லது அதிமுக ஆதரவு பெற்ற கூட்டணிக் கட்சியோ கூட அங்கு வென்றதே இல்லை. இன்னும் சொல்லப் போனால், ராஜீவ் கொலையை திமுக மீது சுமத்தி 1991இல் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் வென்ற போது கூட திருவாரூரில் திமுக கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் தான் வென்றது. அப்பொழுது கூட திருவாரூர் மக்கள் அதிமுக பக்கம் சாயவில்லை.

3. ஓக்கே... அங்கே கம்யூனிஸ்ட்டுகளுக்கு கொஞ்சம் பலம் இருக்கின்றது என்று சொல்கின்றார்கள். அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்கின்றார்களா???

பதில் : கடந்த இரண்டு தேர்தல்களிலேயும் (2011 மற்றும் 2016) கம்யூனிஸ்ட்டுகள் திமுக கூட்டணியில் இல்லாமல், திமுகவுக்கு எதிராக மிகப் பலமாக பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையிலும் திமுக தலைவர் கலைஞர் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் தான் இரண்டு தேர்தல்களிலுமே வென்றுள்ளார். ஆனால் இன்றைக்கு கம்யூனிஸ்ட்டுகள் திமுகவுக்கு அத்தொகுதியில் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து களமிறங்கியும் விட்டார்கள்.

4. ஓக்கே நீங்க சொல்றது எல்லாம் சரி தான், ஆனால் கடந்த தேர்தல் வரை நிலைமை இப்படி இருக்கலாம் ஆனால் இன்றைய நிலையில் அதிமுகவோ அல்லது வேறு கட்சிகளோ கூட அங்கு பலம் பெற்றிருக்கலாம் அல்லது திமுக தனது பலத்தை இழந்திருக்கலாம் தானே?!

பதில் : இது வேடிக்கையான கேள்வி என்பதை விட, குயுனித்தியான கேள்வி என்றே சொல்லலாம். எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பையும் மிகப் பலமாக சம்பாதித்து மிகக் கேவலமாக ஆட்சி செய்து வரும் நிலையில்..., இந்த தொகுதில் இன்னும் கூடுதல் எதிர்ப்பு நிலையாக கஜா புயல் நிவாரணத்தில் எடப்பாடி அரசு காட்டிக் கொண்டிருக்கும் அலட்சியமும் அயோக்கியத் தனமும், அத் தொகுதி மக்களை அதிமுகவுக்கு எதிராக முன்னெப்பொழுதையும் விட மிகப் பலமாக கோபம் கொள்ளச் செய்துள்ளது.

அதே சமயம், திருவாரூர் மக்கள் கனவிலும் எதிர்பார்க்க முடியாத தனி மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி, மத்திய பல்கலைக் கழகம், உள்ளிட்ட... புத்தகம் போடும் அளவிற்கான எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை திமுக அத் தொகுதியில் நிறைவேற்றியிருக்கின்றது.

இன்னும் கூடுதலாக... கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்று கடந்த தேர்தல்களில் திமுகவுக்கு எதிரணியில் இருந்த கட்சிகள் இப்பொழுது திமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து களமிறங்கியும் விட்டனர்.

மேலும் அதிமுக இரண்டாக உடைந்து டிடிவி தலைமையில் இன்னொரு அணியும் அங்கே களம் கண்டு அதிமுகவின் பலத்தை பாதியாக குறைத்துள்ளது.

ஆக திமுக முன்னெப்பொழுதையும் விட பலம் பெற்றுள்ளது.... அதே சமயம் அதிமுக பலவீனப்பட்டுப் போய் நிற்கின்றது..!

5. சரி வேட்பாளர் தேர்வில் திமுக கோட்டை விட்டுவிட்டதோ?

பதில் : தலைவர் கலைஞர் இரண்டு முறை அரை லட்சம் வாக்குகளுக்கு அதிகமாக வெல்ல களம் அமைத்துக் கொடுத்து களப் போராளியாக வலம் வந்த..., கலைஞரால் அதற்காக பாராட்டப்பட்ட மாவட்ட செயலாளர் தான் திமுகவின் வேட்பாளர். அறிவித்த அடுத்தநாளே களத்தில் இறங்கி பலமாக பிரச்சாரமும் செய்ய ஆரம்பித்து விட்டார். மக்கள் அவருக்கே 50, 100 என்று பணம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியதையும் ஊடகங்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தன..!

உண்மை தான்..... நீங்கள் சொல்கின்ற பதில்கள், காரணங்கள் அல்லது விளக்கங்கள் அனைத்துமே நிரூபிக்கப்பட்ட உண்மைகள் தான்..!

ஆனாலும் தேர்தலை தள்ளி வைக்கச் சொல்லி திமுக ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தது?!

சார்... இந்த கேள்விக்கு பதில் சொல்வது எனக்கே கூட சற்று கவலையாகத்தான் இருக்கின்றது. ஆனாலும் வேறு வழியில்லை, சங்கிகளின் அவதூறுகளுக்கு அப்பாவி மக்கள் பலியாகிவிடக் கூடாதே என்பதற்காக இதை வெளிப்படையாக சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலை தான் உள்ளது. சங்கரன்கோவில், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் இடைத்தேர்தல்களில் ஆளும் அதிமுக எப்படி வென்றது என்பது அனைவருக்குமே தெரியும்.

பணம்... பணம்... பணம் மட்டுமே..! ஓட்டுக்கு பணம் என்று மக்களை மயக்கி.... அவர்கள் மயங்குகின்ற அளவிற்கு ஒவ்வொரு தேர்தலிலும் உயர்த்திக் கொடுத்து.....

இது ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லை.... ஒரு சுயேட்சைக்கு கூட.... வாக்களிக்கும் மனநிலைக்கு வாக்காளர்கள் வந்துள்ளதை யாருமே மறுக்க முடியாது..!

தேர்தல் ஆணையம், அதிகாரிகள் எல்லாம் என்ன செய்துகொண்டுள்ளார்கள் என்றே தெரியாத அளவிற்கு...... திருவாரூர் தேர்தலை அறிவித்து.... பிறகு காரணம் கேட்டு திடீரென தள்ளி வைத்ததில் இருந்தே, தெரியவில்லையா? டோக்கன் கொடுத்து பணம் கொடுத்ததும், அம்மக்கள் இன்னமும் டிவிக்களில் பேட்டி கொடுப்பதும் எல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?!

அதேப் போன்று இந்த தேர்தலிலும் நம்ப முடியாத பெரும் பணம் ஆட்சியாளர்களாலோ அல்லது ஆர். கே. நகரில் பால் குடித்த டிடிவி பூனையாலோ இங்கேயும் நிச்சயம் அரங்கேற்றப்படும்..!

என்னய்யா இது.... நீங்க தான் மேலே பட்டியல் போட்டு திமுக அங்கே வெல்வதற்கான காரணங்களை அடுக்கினீர்களே?!

அங்கே பெரிய வாக்கு வங்கி, கூட்டணி பலம், பாரம்பரிய திமுக தொகுதி, அம்மக்கள் நம்பவே முடியாத நலத்திட்டங்கள், சூப்பர் வேட்பாளர்.... லொட்டு லொசுக்குன்னெல்லாம் சொல்லி விட்டு, இப்போ அப்படியான மக்கள் பணத்திற்கு மயங்கி திமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்களா?!

சார்... நீங்க சீரியஸா இந்தக் கேள்வியைக் கேட்டாலும் சரி.. நக்கலாக கேட்டாலும் சரி. உண்மை இது தான்.

நேர்மை, நியாயம், கொள்கை இத்தியாதிகள் அனைத்திற்குமே ஒரு கொதிநிலை அதாவது பாயிலிங் பாய்ண்ட் இருக்கின்றது. தன்னுடைய குடும்ப அத்தியாவசிய தேவைக்கு கூட ரெண்டாயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை அடகு கடையில் நகையை அடகு வைத்து நிறைவேற்றும் நிலையிலுள்ள மக்களுக்கு, 5 ஓட்டு உள்ள குடும்பத்திற்கு ஐம்பதாயிரம் கிடைக்கின்ற போது, கிட்டத்தட்ட தனது ஒட்டுமொத்த கடனே அடைந்து போகும் என்ற நிலை வரும் போது எல்லாமே மாறித்தான் சார் போகும்..!

வங்கிக்கு பணம் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயியின் கடன் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? வெறும் ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை தான் சார் இருக்கும்..!

மேலும் இது இடைத்தேர்தல் தானே? இதில் என்ன ஆட்சியா மாறிவிடப் போகிறது?! பொதுத் தேர்தலில் நாம் விரும்பும் கட்சிக்கு வாக்களித்துக்கொள்ளலாம்... என்ற மனநிலைக்கு மக்கள் இயல்பாகவே தள்ளப்பட்டு விடுகின்றனர்.

இதில் இன்னும் கூடுதலாக அத்தொகுதி மக்கள் கஜா புயலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றார்கள். இதுவரையிலும் அரசால் அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இப்பொழுது மத்திய அரசு பணத்தை ரிலீஸ் செய்து, அதை மாநில அரசு விநியோகிக்கலாம் என்று தேர்தல் ஆணையமும் சொல்லி விட்டது. இதுவும் கூட சந்தேகத்திற்கு உரிய விஷயம் தான்.

இந்த நிவாரண தொகையை வைத்தே பல்வேறு வகையில் ஆளுங்கட்சியினர் மக்களை மடக்க ஏகப்பட்ட வழிகள் இருப்பது அனைவருக்குமே தெரியும்.

இந்த நேரத்தில் நிவாரண தொகையை தேர்தலுக்குப் பிறகு கொடுக்கலாம் என்று திமுகவோ, கம்யூனிஸ்ட்டுகளோ சொல்ல முடியுமா? தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை நிவாரணத்தை மக்களுக்கு உடனே வழங்குங்கள் என்று இரண்டு கட்சிகளுமே பகிரங்கமாக அறிவித்து விட்டன..!

இந்த நிலையில் வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக மிகக் கடுமையாக போராட வேண்டியிருக்கும். வெற்றிபெரும் நிலையில் வாக்கு வித்தியாசம் சற்று குறைவாகத்தான் இருக்கும்..!

ஆனால் இதைத்தான்.... இந்த நிலையைத் தான் பாஜக ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி மட்டுமே பேசப்பட்டு வந்த நிலையில், திமுக தலைவர் தளபதியார் அவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து....

அவர் அப்படி அறிவித்ததற்கு பின்னால் தேசிய ஊடகங்களில் வருகின்ற கருத்துக் கணிப்புக்கள் எல்லாம்... குறிப்பாக பாஜக ஆதரவு ஊடகங்கள் கூட திமுக கூட்டணி இங்கே நாற்பது தொகுதிகளையும் வெல்லும் என்றும், அடுத்த முதல்வராக தளபதியார் வருவதற்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது என்று புள்ளி விவரங்களோடு (43%) அலசுகின்ற நிலையில்...

பாராளுமன்ற தேர்தல் நடப்பதற்கு முன்பே காங்கிரஸுக்கு 40 சீட்டுகள் கன்ஃபர்ம் ஆகியுள்ள நிலையில்.... தேசிய அளவில் காங்கிரஸை நோக்கி முக்கிய பிராந்திய கட்சிகள் நகருகின்ற நிலையில்.... பாஜகவின் கூட்டாளிகள் தங்கள் பங்கீட்டினை உயர்த்தி அடம்பிடித்து வாங்குகின்ற நிலையில்....

திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்து, கடந்த தேர்தலில் வாங்கிய வாக்கு வித்தியாசமான 68 ஆயிரம் வாக்குகளில் ஒரு சில ஆயிரங்கள் குறைந்தாலும்....
அதை திமுகவின் வீழ்ச்சியாக ஊடகங்கள் மூலம் பாஜக முன்னெடுக்கும்..!

இந்த நுண்ணரசியலை புரிந்து கொண்டு தான், திமுக திருவாரூர் மக்களுக்கு உரிய நேரத்தில் கஜா புயர் நிவாரண நிதியாவது கிடைக்கட்டும் என்று திருவாரூர் இடைத்தேர்தலை பாராளுமன்ற தேர்தலோடோ அல்லது மற்ற 19 தொகுதிகளுடன் சேர்த்தோ நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைத்தது..!

திருவாரூர் இடைத்தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகின்றதா? என்ற கேள்வியைக் கேட்டு பரப்புரை செய்யும் அசைன்மெண்ட்டைக் கொடுத்தது யார்? அதனால் அவர்களுக்கு என்ன லாபம்? என்று இந்த பதிவில் ஆரம்பத்தில் கேட்டிருந்தோமே...
அதற்கான விடை இப்பொழுது உங்களுக்கு புரிகின்றதா தோழர்களே...?!

இந்தப் பதிவு இத்துடன் முற்றுப் பெற்றாலும்.... இதைப் படித்து சங்கிகள் இன்னுமொரு வினாவை எழுப்புவார்கள், அதற்கும் பதில் சொல்லி விடுகின்றேன்.

ஏன்யா... நீங்க இவ்ளோ பேசுறீங்களே... ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திருமங்கலம் ஃபார்முலாவை கொண்டு வந்ததே நீங்க தானேய்யா? என்பது தான் அந்தக் கேள்வி!!

திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு முன்பாக 2001 -06 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற...ஆண்டிப்படி, சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிரப்பாக்கம், கும்மிடிப்பூண்டி, காஞ்சீபுரம் மற்றும் சாத்தான்குளம் இடைத்தேர்தல்களில் ஜெயலலிதா - சசிகலா டீம் மிகப் பெரிய பணத்தை இறைத்துத் தான் வென்றது என்பதை திமுகவினர் கதறிக் கதறிச் சொன்னாலும் அதெல்லாம் ஊடகங்கள் காதுகளில் விழவேயில்லை..!

அதேப் போன்று அதன் பிறகு திருமங்கலம் ஃபார்முலாவில் திமுக தலைமைக்கு என்றைக்கு உடன்பாடில்லை என்றாலும், அந்த அதிரடிகளுக்கு பெயர் பெற்றவர்கள் இன்றைக்கு கழகத்தில் இல்லை என்பதும், திமுகழக தலைவர் தளபதியார் இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களுக்கு என்றுமே ஆதரவாளர் கிடையாது என்பதை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மூலமே நேர்மையான பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.!

எம் எல் எக்களை விலை பேசி ஆட்சி மாற்றம் செய்வதையே விரும்பாத தளபதியாரா, மக்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளையும் வெற்றியையும் விலை பேசுவார்?!

இன்றைக்கு கூட அந்த ஃபார்முலாவை பயன்படுத்தி திருவாரூரில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல முடியும். இரண்டு பேரிடமோ, ஐந்து பேரிடமோ கையைக் காட்டி வெற்றியோடு வாருங்கள் என்று அவர் கண்ணசைத்தால் போதும்... ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திருவாரூரில் திமுக வெல்லும்..!

ஆனால் நாளை ஆட்சிக்கு வரும் போது அவர் தான் விரும்பும் நேர்மையான ஆட்சியை, அதாவது யாருக்காகவும், எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத உண்மையான மக்கள்நல ஆட்சியை மக்களுக்குத் தரவேண்டும், மாநில உரிமைகளை அதட்டிப் பேசி மத்திய அரசிடம் வாங்கி தமிழகத்தை வளமாக்கிட வேண்டும் என்று விரும்புகின்றார்.

அதானல் அவர் பொதுத்தேர்தல் வரை காத்திருந்து மக்களிடம் பேசி மக்கள் வாக்குகளைப் பெற்று நல்ல மக்களாட்சியைத் தரவேண்டும் என்று விரும்புகின்றார்.

இதை பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதி இந்த நீண்ட பதிவின் விருப்பம்..!



No comments: