Sunday, January 13, 2019

ஊடக அறம் தமிழகத்தில் செத்துப் போய் விட்டதா?!

ஒரு ஜனநாயக நாட்டில்...

ஜனநாயகம் என்பது ஒரு அற்புதமான கட்டிடம். பலமான மேற்கூரை, நேர்த்தியான சுற்றுச்சுவர் கொண்ட அழகான கலைக்கூடம்.

இந்த கட்டிடத்திற்குள் அந்நாட்டு மக்கள் முழு பாதுகாப்புடன், சுயமரியாதையுடன், சம உரிமையுடன், கருத்து சுதந்திரத்துடன், மானம் மரியாதையோடு வாழலாம்.

அக்கட்டிடத்தை தாங்கி நின்று அதைப் பாதுகாக்கும்... அதாவது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்கு தூண்களாக...
சட்டமன்றம், நிர்வாக கட்டமைப்பு, நீதிமன்றம் மற்றும் ஊடகங்கள் தான் திகழ்கின்றன.

அம்மக்களுக்கு தேவையான அனைத்தினையும் செய்து தர வேண்டியது சட்டமன்றம்.... அதாவது ஆட்சியாளர்கள்.... அதாவது அரசியல் கட்சிகள் / அரசியல்வாதிகள்.

அவர்கள் உருவாக்கும் திட்டங்களை போடும் சட்டங்களை முறைப்படி நிறைவேற்றி கடைகோடி மக்கள் வரையிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு, நிர்வாக கட்டமைப்பிற்கு... அதாவது அதிகாரிகளுக்கு உண்டு.

ஜனநாயக நாட்டில் வாழுகின்ற அம்மக்களை பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக, மானம் மரியாதையோடு வாழ வைக்க, இந்த இரு தூண்கள் தான். அதாவது மக்கள் நலனுக்கான திட்டங்களும் சட்டங்களும் போடுவது ஒரு தூண். அவற்றை நிறைவேற்றிக் கொடுப்பது இன்னொரு தூண்..!

இந்த கட்டிடத்தைத் தாங்க இரு தூண்கள் போதுமே? இதற்கு மேலும் ஏன் இன்னும் இரண்டு தூண்கள் தேவையில்லாமல்? என்று சிலர் எண்ணக் கூடும்..!

இந்த இரண்டு தூண்களிலும் செயல்படுபவர்கள் மனிதர்கள் தானே? சபலம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இயல்பாகவே அனைத்து மனிதர்களிடமும் உண்டு. கைகளில் அதிகாரம் கூடும் பொழுது நிச்சயம் தடுமாற்றம் வரும். அப்படி தடுமாற்றம் வந்தால் அவர்களை சீர்படுத்தி சரி செய்யத்தான் மூன்றாம் தூணான நீதிமன்றம்..!

தவறு செய்தால் நிச்சயம் தண்டணை உண்டு. நம்மை மூன்றாம் கண் ஒன்று கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது. அது இந்த நீதிமன்றத்தின் மூலம் தண்டித்துவிடும் என்று பெரும்பான்மையான குற்றங்கள் இந்த பயத்தினாலேயே அரசு மற்றும் நிர்வாக துறைகளால் நடைபெறமலேயே இருந்துவிடும்.

அதையும் மீறி நடைபெறும்... அதாவது யாருக்கும் தெரியாமல் நடைபெறும் தவறுகளை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்து, மக்களிடம் தெரியப்படுத்தி அடுத்தமுறை இந்த தவறான ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரமுடியாமல் தடுக்கச் செய்தவது தான் நான்காம் தூணான ஊடகங்களின் பணி..!

இந்தப் பணிக்கு ஊடகங்கள் எப்பொழுதுமே தங்களது நிரந்தர கூட்டாளியாக வைத்துக்கொள்வது எதிர்க்கட்சிகளைத் தான்..!

இந்த இடத்தில் தான் எதிர்க்கட்சிகளின் பணி ஜனநாயகத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனால் தான் ஜனநாயகச் சட்டம் எதிர்க்கட்சித் தலைவருக்கு கேபினட் அமைச்சருக்கு இணையான அனைத்து உரிமைகளையும் வசதிகளையும் அளிக்கின்றது..!

ஆகவே தான் ஊடகவியலாளர்கள் சட்டமன்றத்தில் வாதாடுவது, நீதிமன்றத்திற்கு ஆட்சியாளர்களின் தவறுகளை வழக்குகளாக பதிவு செய்து நடத்துவது உள்ளிட்ட தங்களால் இயலாத பல்வேறு செயல்களுக்கு எதிர்க்கட்சிகளோடு இணைந்து செயல்படுவார்கள்..!

இதில் எதிர்க்கட்சிகளுக்கு நிச்சயம் ஒரு சுயநலம் உண்டு. அது என்னவென்றால், ஆட்சியாளர்களின் தவறுகள் அனைத்தையும் வாட்ச் டாக்... அதாவது காவல் நாய்கள் போன்று கண்காணித்துக் கொண்டே இருந்து, அதை வெளிக்கொணர்ந்து, அதற்காக சட்டமன்றத்தில் வாதாடி, ஊடகங்கள் மூலம் மக்கள் மன்றத்தில் கொண்டு போய்ச் சேர்த்து, நீதிமன்றத்தில் வழக்குகளாக பதிவு செய்து, இந்த ஆட்சியை அகற்றி தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற அந்த சுயலம் தான் அது..!

இதில் தவறில்லை. ஜனநாயகம் இந்த சுயநலத்தை தான் ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளிலிருந்து மக்களை பாதுகாக்க இந்த ஒரு வசதியாக செய்து கொடுத்துள்ளது..!

ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடப்பது என்ன?!

ஒரு முன்னால் முதல்வர் மரணத்தில் மர்மம் இருப்பதாக மிகப்பலமான சந்தேகங்கள் வந்துள்ள நிலையில், அதற்காக ஒரு கமிஷனே போடப்பட்டு அதன் விசாரணையும் நடந்துகொண்டிருக்கின்ற நிலையில்...

அந்த முன்னால் முதல்வர் கொல்லப்பட்டிருப்பார் என்ற நம்பப்படுகின்ற நிலையில், அவரது ஆயிரக்கணக்கன கோடி ரூபாய் மதிப்பிலான மர்ம மலை பங்களா ஒன்று கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் வந்து, அது சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட...

அதில் தொடர்புடையவர்களாக கருதப்படும் அந்த முன்னால் முதல்வரின் கார் டிரைவர், பங்களா காவலாளி உள்ளிட்ட ஐந்து நபர்கள் மர்மமான முறையில் திடீரென்று அடுத்தடுத்து இறந்து போக அல்லது கொல்லப்பட....

அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில்.... அதுவும் கூட அரசின் அக்கறையின்மையால், கிட்டத்தட்ட நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்க...

இப்பொழுது இந்தியாவில் பல்வேறு மிகப்பெரிய ஊழல்களை வெளிக்கொணர்ந்து தண்டனை பெற்றுத் தந்த ஒரு இணையதள பத்திரிக்கையின் முன்னால் ஆசிரியர்...

இந்த சம்பவங்களை புலன் விசாரணை செய்து, இந்த கொலைகளுக்கும் தமிழக முதல்வருக்கும் தொடர்பிருப்பதாக இந்திய தலைநகர் டெல்லியில் பேட்டி கொடுக்க....

இன்றைக்கு தமிழக ஊடகங்கள் அலறி தீர்த்திருக்க வேண்டாமா?! ஈட்டி முனைகளாக, வேல் முனைகளாக, கத்தி முனைகளாக தங்கள் மைக்குகளை ஆட்சியாளர்கள் முகத்துக்கு நேரே நீட்டி கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து... மக்கள் மன்றத்தில் உண்மைகளை போட்டு உடைத்திருக்க வேண்டாமா?!

இந்த குற்றச்சாட்டினை ஆதாரத்தோடு வெளியிட்டதும் ஒரு பத்திரிக்கயாளர் தானே?! அதிலும் இதேப் போன்று பல்வேறு புலன் விசாரணைகளிலும் வெற்றிகண்டவர் தானே?!

மேலும் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்தின் பணியே ஆட்சியாளர்கள் செய்கின்ற ஒவ்வொரு சிறு தவறுக்கும் எதிராக களமாடுவது தானே?!

அப்படியிருக்க, அந்த நான்காம் தூண் தமிழகத்தில் செல்லரித்துப் போய், அதாவது ஆட்சியாளர்கள் போடும் பிச்சைகளுக்கும் இன்னபிற வசதிகளுக்கும் வாய் பிளந்து மல்லாந்து கிடப்பது மிகக் கேவலம்..!

அப்படி மயங்கி மல்லாக்கபடுத்திருக்கும் அந்த கேடுகெட்ட நான்காம் தூண் அப்படியே கிடந்தால் கூட... அதாவது இந்த மாதிரி கேடுகெட்ட செயல் நடந்ததே தெரியாதது போல மானத்தை விட்டு மௌனமாக நின்றால் கூட, சரி பிச்சையெடுத்த அயோக்கியன் இபடித்தான் இருப்பான் என்று கூட மக்கள் கடந்து சென்றிருப்பார்கள்.....

ஆனால் இன்றைக்கு ஒரு ஊடகம் ஆட்சியாளருக்கு அதாவது முதல்வருக்கு எதிராக யார் சதி செய்கின்றார்கள் என்று விவாதம் வைப்பதெல்லாம் வேற லெவல் கேடுகெட்டத்தனம்..!


3 comments:

Anonymous said...

I need to to thank you for this fantastic read!! Idefinitely enjoyed every bit of it.I have got you book-marked to look at new things you post…

Anonymous said...

Thank you for this specific info I was basically researching all
Yahoo to be able to find it!

Anonymous said...

Good article! We will be linkinjg to this particulatly great content on our site.Keep upp the great writing.