Sunday, June 3, 2012

கலைஞர் - சும்மா அதிருதுல்ல?!


சும்மா அதிருதுல்ல...?!  

என்ற சிவாஜி படத்தின் பிரபலமான ரஜினி வசனம் போலத்தான் இருக்கிறது, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றிய பேச்சை எடுத்தாலே, அவரது எதிராளிகளுக்கும், ஊடகங்களுக்கும்!!

கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கும் மேலான தமிழக அரசியல் களத்தின் ஆளுமை! அரசியல் மட்டுமல்லாது சினிமா, நாடகம், பல்வேறு தளங்களை உள்ளடக்கிய பெரிய பெரிய நூல்கள், நாவல்கள், காப்பியங்கள், புனைவுகள், சமூக சீர்திருத்தக் கட்டுரைகள், லட்சக் கணக்கான தனது தொண்டர்களை இன்னமும் ஒரே குடும்பமாக கட்டிப்போட்டு வைத்திருக்கும் காரணியான கடிதங்கள்,ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்தாளர் முகம், தமிழிசை வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களும், சீரிய செயல்பாடுகளுமான இசைக் கலைஞன் முகம்........

என்று தமிழுக்கான மூன்று பக்கமும் தீட்டப்பட்டு ஒளி வீசச் செய்கின்ற இயல் இசை நாடகம் என்ற மூன்று துறைகளிலுமே சிறப்பான தனி இடத்தைப் பெற்றுள்ளதோடு அதற்கு மணி மகுடம் வைத்தது போல் அரசியல் என்னும் சிம்மாசனத்திலும் இன்று வரையில் தன்னிகரற்ற தலைவனாய் அமர்ந்து கொண்டு.....  தானே தமிழாய் வாழும் அந்தத் தலைவனை பார்தால், அவரைப் பற்றிக் கேட்டால், இல்லை இல்லை அவரைப் பற்றி நினைத்தாலே பிரம்மிப்பாகத்தான் இருக்கின்றது.

உலகில் ஒவ்வொரு துறையிலும் அளப்பறிய சாதனைகள் பல செய்து உச்சத்தை தொட்டவர்கள் பல உண்டு. அவர்களைப் போல அந்தத் துறையில் தாமும் முன்னேறி உச்சத்தைத் தொட வேண்டும் என்று முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆசை அல்லது அடங்காத வெறி இருக்கும். ஆனால் நம் கலைஞரைப் போன்றதொரு உச்சத்தைத் தொட நினைத்து, அவரை அறிய முற்படும் அனைவருமே, அந்த எண்ணத்திலிருந்து பின் வாங்கும் வரலாறு தான் இன்று வரையிலும் தொடர்கிறது.

காரணம் ஒரு துறை இரண்டு துறைகள் என்றால் சரி!  ஆனால் பல்துறை வித்தகனாக அல்லவா இருந்து கொண்டிருக்கிறார்!! அத்துணை துறைகளிலுமே அந்தந்த கால கட்டங்களில், தனக்கெனவொரு சிறப்பான இடத்தை கிரயம் பண்ணி வைத்திருக்கின்றாரே?! வயது தொண்ணூறு ஆனாலும் துள்ளித் திரிகின்றார், தோல்வி வந்தாலும் துவளாமல் மீண்டு எழுகிறார்.....  எப்படி இதையெல்லாம் சமண் செய்துவிட முடியும் என்று மலைத்துப் போய் தான் மருண்டு விடுகின்றனர்.

ஆகையால் இவர் சமன் செய்ய வேண்டிய இலக்கு அல்ல...  இருட்டில் வழி காட்டும் விளக்கு என்பதை உணர்ந்து லட்சோப லட்சம் இளைஞர்கள் இன்றைக்கும் அவரை குன்றிலிட்ட விளக்கென கருதி கை கூப்பி வணங்கி வளர்கின்றனர்.

நான் பலமுறை நினைத்து நினைத்து கோபத்தில் பொங்கியது உண்டு. கலைஞர் என்ற அந்த பெரும் சக்தியால் பட்டம், பதவி, பெயர், புகழ், பணம், மன நிம்மதி, சமூக அந்தஸ்த்து, சம உரிமை, சந்தோஷம், புத்தி கூர்மை.... இப்படியாக இன்னும் நீளும் பட்டியலில் ஏதாவது ஒன்றையோ அல்லது பலவற்றையோ அனுபவித்து அதனால் அவர் மீதான அன்பு மிகுதியால் பாராட்டுவதும், புகழ்வதுமாக இருக்கும் கூட்டம் ஒரு பக்கம் என்றால்....  காரணமேயில்லாமல் அவரை வசைபாடும் ஒரு கூட்டமும் காலட்சேபம் நடத்திக் கொண்டிருக்கிறதே என்று!

மற்றவர் பங்கையும் சேர்த்து, தானே உண்டு கொழுத்த ஒரு கூட்டம், பெருமளவில் பாதிக்கப்பட்டதும் அவரால் நிகழ்த்தப்பட்ட வரலாறு தான். அந்தக் கூட்டமும் அதன் கைக்கூலிப் படைகளுக்கும் கூட வாழ்வாதாரம் அளித்துக் கொண்டிருப்பதே கலைஞர் தானே!  ஆம் அவர் இல்லை என்றால் இந்த அடிமைக் கூட்டத்திற்கெல்லாம் ஆரியக்கூத்தாட அனுமதி மறுக்கப்பட்டுவிடுமே(?!)

அப்பொழுது தான் தெரியும் கலைஞர் யார் என்று அந்த அடிமைகளுக்கு!!!

எத்தனை குற்றச் சாட்டுகள் வைக்கின்றனர் இவர் மேலே?! ஊழல் செய்தார், துரோகம் செய்தார், கடமை மறந்தார்... என்றெல்லாம். ஆனாலும் தமிழகத்தை அதிக காலம் ஆள்வதற்கு அவருக்குத்தானே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது மக்களால்! அதனால் தான் நீ இந்தக் காழ்ப்புணர்வு பேச்சுக்களை எல்லாம் காது கொடுத்துக் கூட கேட்பதில்லை போலிருக்கிறது.

நீ சூரியன் என்பது உனக்குத் தெரியும்....!  
ஆனால் அது என்னைப் போன்றவர்களுக்கு இப்பொழுது தான் புரிகிறது...!!!

இனி உன் மீதான வசை மொழிகள் எல்லாம், நாய் குறைப்பாகத்தான் எம் காதுகளில் விழும்...!!!
!








1 comment:

Anonymous said...

// இவர் சமன் செய்ய வேண்டிய இலக்கு அல்ல... இருட்டில் வழி காட்டும் விளக்கு//
supereb..!! Birthday wishes..)))).