Saturday, June 9, 2012

அவள் பெயர் சங்கீதா ...

எங்கள் நிறுவனம் படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்த நேரம் அது. வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க, நகரத்தை ஒட்டிய அந்த அழகான கிராமத்தின் மையத்திலிருந்த ஓடாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பழைய அரிசி ஆலை ஷெட்டை வாடகைக்கு எடுத்து இயங்க ஆரம்பித்தோம்.

அதுவரையிலும் வெளியில் வாடகைக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்த நாங்கள், சொந்தமாக பெரிய பெரிய மிஷினெல்லாம் போட்டு ஜரூராக வேலை ஆரம்பித்தது. அதிகமான உற்பத்திக்கு ஈடு கொடுக்க வேலைக்கு நிறைய ஆட்களையும் எடுத்துக் கொண்டிருந்தோம். மிஷின் மற்றும் வாகன டிரைவர்கள் தவிர மற்ற அனைவரும் பெண் பணியாளர்களாகவே எங்களுக்கு தேவைப்பட்டது.

கிட்டத்தட்ட நாற்பதுக்கும் அதிகமான பெண்களை அந்த கிராமத்திலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் வேலைக்கென தேர்ந்தெடுத்தோம். எந்த விளம்பரமும் செய்யாமலேயே, காற்றுவாக்கில் செய்தி பரவி, தினம் தினம் நான்கைந்து பெண்கள் வேலை கேட்டு வருவார்கள். அவர்களை நேர்காணல் நடத்தி, எங்கள் அறிவுக்கு எட்டிய வரையிலும் தகுதியானவர்கள் என்று நம்புபவர்களை மட்டும் பணியில் சேர்த்துக்கொள்வோம்.

ஒரு பத்து பேரை இப்படி வேலைக்கு அமர்த்தினால் நான்கு பேர் மட்டுமே சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தொடர்ந்து வேலைக்கு வருவார்கள். மீதிப் பேர் இரண்டு நாளிலிருந்து இருபது நாட்களுக்குள் ஏதாவது காரணத்தைச் சொல்லி கழண்டு விடுவார்கள்.

இன்னும் இருபது நபர்களுக்கு மேல் ஆட்கள் தேவைப்பட்ட நிலையில் தான் ஒரு நாள் காலை பத்து மணி இருக்கும், பக்கத்து ஊரிலிருந்து ஐந்து பெண்கள் வேலை கேட்டு வந்திருப்பதாக காவலாளி சொல்லவும், உள்ளே வரச்சொன்னேன். எல்லாருமே திருமணமாகாதவர்கள். அதில் மூவருக்கு பதினாறு வயதுக்கு மேல் இருக்கும். ஆனால் இரண்டு பேருக்கு பத்து வயது ஆகியிருக்குமா என்பதே சந்தேகமாய் இருந்தது!

அந்த மூவரை மட்டும் சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டுவிட்டு, வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் நடைமுறைக்காக மேலாளரிடம் அனுப்பி விட்டேன். அந்த இரண்டு குட்டிப் பெண்களிடமும்...  "அம்மாடி, நீங்க ரொம்ப சின்னப் பசங்களா இருக்கீங்க, உங்கள வேலைல சேர்த்தா அதிகாரிங்க வந்து எங்க மேல கேஸ் போட்றுவாங்க, அதனால நீங்க வீட்டுக்கு போயி அப்பா அம்மாட்ட சொல்லி படிக்கிற வழிய பாருங்க"ன்னு சொன்னேன்.

உடனே அதில் ஒரு குட்டிப் பெண், "சார், வீட்ல படிக்கல்லாம் வக்க மாட்டாங்க சார், எனக்கும் அதெல்லாம் பிடிக்காது சார்,

ஏம்மா பிடிக்காது?

இல்ல சார்... தெரில...  ஸ் கோலுக்கு போறதுன்னாலே புடிக்காது சார்..... அழுவ அழுவயா வரும் சார்......!!

அதான் ஏன்னு கேக்கறேன்.....

ம்ம்ம்.... இல்ல சார்.  வேலை குடுங்க சார்.  எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு!  நடவுக்கு போனா அந்த சேறும் தண்ணியும் புடிக்கல சார். கம்பெனி வேலன்னா, எங்க தெரு அக்கால்லாம் நிறைய பேர் வர்றாங்க....  அவங்கள எல்லாம் பார்த்தா ஆசையா இருக்கு சார்...!!

இதுக்கு மேல என்ன சொல்லி இவளுக்கு புரிய வைப்பதுன்னு புரியாம, எப்படியாவது தட்டிக் கழிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில்...

உனக்கு சொன்னா புரியாது, போயிட்டு ஒரு வாரம் கழிச்சி வந்து பாரு என்று சொல்லி அனுப்பி விட்டேன். அந்தப் பெண் மட்டும் ரொம்ப சோகமாகவும், மெதுவாகவும், கம்பெனியை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றது...

சற்று நேரத்திற்கெல்லாம் நான் இதை மறந்து மற்ற வேலைகளில் மூழ்கி விட, மதியம் சாப்பாட்டை முடித்து சற்று காலார நடக்கலாம் என்று எழுந்து வெளியே வந்த போது.....

சற்று தூரத்தில் மெயின் கேட்டுக்கு வெளியே தலையை மட்டும் நீட்டி செக்யூரிட்டி யாரிடமோ சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அவரை கூப்பிட்டு யாரப்பா? என்ன சண்டை? என்றேன்.

காலைல வந்த அந்தப் பொண்ணு தான் சார். இப்ப திரும்பவும் வந்து உங்கள பார்க்கணும்னு அடம்பிடிக்குது சார்.

சரி வரச் சொல்லு....

பாவாடை, சட்டையை எல்லாம் நன்கு இழுத்து விட்டுக் கொண்டு, தலையை வகிடெடுத்து வாரி, ஒழுங்காக பின்னிப் போட்டுக் கொண்டு, முகத்தை மலர்ச்சியாய் இருப்பது போல வைத்துக் கொண்டு என் முன்னே வந்து நின்றது !!

அதான் காலைலயே சொல்லிட்டேனே? திரும்பவும் வந்து நின்னா என்ன அர்த்தம்? எங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டி இல்லன்னு நினைச்சியா? என்று உண்மையிலேயே சற்று கோபம் மேலிட்ட எரிச்சலுடன் கேட்டேன்.

என் கோவத்தைப் பற்றியெல்லாம் லட்சியம் பண்ணாதவளாய், வூட்டுக்கு போயி எங்கம்மாட்ட கேட்டேன் சார்..., எனக்கு போன மாசந்தான் 16 வயசு ஆச்சுன்னு சொன்னுச்சி சார். சோறு தண்ணி சரியா திண்ணாததால உடம்பு எளச்சி, சின்ன புள்ளயாட்டமா இருக்கேன்னு சொன்னிச்சி சார்.....!

என்னையறியாமல் சிரிப்பு வந்து விட்டது. அடக்கக்கூட முடியவில்லை. சிரித்துக் கொண்டே, அப்படியா? சரி அப்பன்னா போயி உங்க வீட்டு ரேஷன் கார்டை எடுத்துட்டு, உங்க அப்பாவை அழைச்சிட்டு வா. என்று அனுப்பி வைத்தேன்.

நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் கணக்கு நிர்வாகத்தை என் மனைவி தான் நிர்வகித்து வருகிறார். நாங்கள் இருவருமே கிளம்பி தொழிற்சாலைக்கு வந்துவிடுவது தான் நடைமுறையாக இருந்து வருகிறது.

நரிக்குறவர்கள் வேலைக்குச் செல்லும் போது குடும்பமாகத்தான் செல்வார்கள். அப்படியே தங்கள் குழந்தையையும் ஒரு தூளி போல துணியில் கட்டி அதில் குழந்தையை வைத்து, பின் பக்கமோ அல்லது பக்கவாட்டிலோ தொங்க விட்டுக் கொண்டு தங்கள் வியாபாரத்தைக் கவனிப்பார்கள்.

அது போலத்தான் நாங்களும்! மூன்று வயது நிறைவுறாத எங்கள் பிள்ளையையும் தூக்கிக் கொண்டே கம்பெனிக்குச் சென்றுவிடுவோம். அன்றும் அப்படித்தான். நாங்கள் மூவரும் கம்பெனிக்குள் நுழையும் போது, தொழிற்சாலை வாசலுக்கு எதிராக இருக்கும் பணியாளர் ஓய்வு அறை என்ற  கீற்றுக் கொட்டகை வாசலில் 35 லிருந்து 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இலக்கில்லாமல் மேலே பார்த்துக் கொண்டு சோர்வுடன் அமர்ந்திருந்தார்.

நாங்கள் வருவதை உணர்ந்த அந்தப் பெண்மனி சட்டென்று எழுந்து நிற்கவும், அந்தக் குட்டிப் பெண் கொட்டகைக்குள்ளிருந்து ஓடி வந்து அந்தப் பெண்மனியின் முதுகுக்குப் பின்னால் தன்னை பாதி மறைத்தவாறு நின்று கொண்டாள்.

நான் வழக்கம் போல் உள்ளே நுழைந்தவுடன் வேறு எதிலும் கவனத்தைத் திருப்பாமல், நேராக உள்ளே சென்று கம்பெனியை ஒரு சுற்று சுற்றி வந்து, ஒரு சிலரிடம் நலன் விசாரித்து விட்டு பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தேன். என் மனைவியும் அந்தப் பெண்மனியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இவுங்க தான் அந்தப் பொண்ணோட அம்மா.... என்று மனைவி சொல்லவும்...

சார், அவளுக்கு ஸ்கோலுக்கு போறது புடிக்கலன்னாலும் பரவால்ல போயித்தான் ஆவனும்னு, அடிச்சி உதச்சி அனுப்பி வக்கிற அளவுக்கு எங்கிட்ட வசதி கிடையாது சார். அந்த மனுஷன் நல்லாதான் சம்பாதிக்கிறான். ஆனா அல்லாத்தையும் குடிச்சி தொலச்சிடறானே!!

அதுவும் பத்தாதுன்னு நான் நாத்து நடவுன்னு போயி சம்பாதிக்கறதையும் பிச்சி புடிங்கி பாதிய புடுங்கிடுறான்.  இவ நிம்மதியா வூட்டல குந்திக்கிட்டு, மான மருவாதியா ஸ்கோலுக்கு போவல்லாம் முடியாதுங்க....

எங்கினியாவுது வேல பாத்துதான் ஆவணும். வர்றதுல அந்தாளு புடுங்கினது போக மீதிய மறச்சி கிறச்சி கொண்டுட்டு வந்து தான் எங்க பொழப்ப ஓட்டியாவனும். நீங்க  இல்லன்னுட்டாலும் வேற எங்கியாச்சும் அவ வேலைக்கி போயித்தான் ஆவணும்!

எங்கூரு புள்ளங்க ஆறு பேரு இங்க வேல செய்யிறதால, இவளும் வந்து போவ வசதியா இருக்கும். அவளுக்கும் இங்க இருக்கற பசங்க, மிஷினு மாவு அறக்கிறது, பாக்கெட்டு ஒட்டுறது எல்லாத்தையும் பார்த்து ரொம்ப ஆசையா இருக்குது. அதான் என்னய வந்து சொல்லி சேர்த்துவுடச் சொல்லி, ரெண்டு நாளா தொனத்தி எடுத்துட்டா.

பார்த்து செய்யுங்க சார்........

என் மனம் ஆயிரம் கேள்விகளால் நிரம்பி, மண்டையில் அதற்கான விடை தேடும் லட்சம் செல்கள்,  பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தன!

சொத்தே இல்லாதவன் உயில் எழுதும் கதையாகத்தான் இருக்கிறது, நம்ம நாட்டு சட்ட திட்டங்கள் எல்லாம்.

மதுவை ஒழித்து விட்டு, அல்லது அரபு நாடுகளில் இருப்பது போல், அவரவர் வசதிக்கேற்ப கோட்டா சிஸ்டம் வைத்து விட்டு,  பத்தாம் வகுப்பு வரை அடிப்படைக் கல்வியை அனைத்து தரப்பினருக்கும் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்து, அதையும் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்ட அரசுப் பள்ளிகளே அளிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் எப்படியிருக்கும்?!

இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தை மீறுபவர்களுக்கு தூக்கு தண்டனையே கொடுக்கலாமே.....?!

என்று மனம் எங்கெங்கோ சென்று பினாத்தலாக சுற்றிக் கொண்டிருக்க.......  என் மனைவி தோளைப் பிடித்து உலுக்கிய பிறகு தான் சுய நினைவுக்கே வந்தேன்.

என்ன...? அந்த அம்மா பேசிட்டிருக்கு, நீங்க பாட்டுக்கு வேற என்னத்தையோ சிந்தனை பண்ணிட்டிருக்கீங்க? என்று கேட்டதும் தான் சம காலத்திற்கு வந்தேன். குழம்பிப் போன மனநிலையில் இருந்தவனாய் எங்கே அந்தப் பெண் என்றேன்.

நம்ம பையன் அவள்ட்ட நல்லா ஒட்டிக்கிட்டாங்க, நீங்க பேசிட்டிருந்தப்ப, அவனுக்கு நான் சாப்பாடு ஊட்டறேன்னு வாங்கிட்டு அய்யனார் கோவில் பக்கம் போயிருக்கா என்று சொல்லவும், எனக்கு மனைவியின் மேல் லேசான கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல், சரி அந்தப் பொண்ண வரச்சொல்லு என்று சொல்லி விட்டு, என் அலுவலக அறைக்குச் சென்று விட்டேன்.

ஐந்து நிமிடத்திற்கெல்லாம், என் மனைவி உள்ளே நுழைய அந்தப் பெண்ணும் அவளுக்குப் பின்னால் அவள் தாயாரும் அறை வாசலிலேயே நின்று கொண்டார்கள். அவர்களை உள்ளே வரச் சொல்லி சாடை காட்டவும், தயக்கமாக இருவரும் உள்ளே நுழைந்து, ஆவலாய் என் முகத்தைப் பார்த்தார்கள்.

ஏம்மா, நான் உன்னய ஸ்கூல்ல சேர்த்து விட்டு, ஃபீஸ் எல்லாம் கட்டுறேன். நீ படிக்கிறியா?  என்று கேட்கவும்......

அந்தப் பெண், தன் இடது பக்க மேல் உதட்டை வெளிப்புறமாக மடித்து மேலே தூக்கி, இரண்டு பக்க கன்ன மேட்டையும் கீழிறக்கி....  இடது காலை கால் வட்டமாக பின்னுக்கிழுத்து, வலது தோள்பட்டையை லேசாக முன்பக்கம் கீழிறக்கினால் போல் கொண்டு வந்து, இடுப்பை திருகினாற் போல் நெளித்து......

வேண்டாஆஆம்..... சார் என்று ஒரு மாதிரியாகச் சொல்லவும்.....,

என் மனைவி உட்பட அனைவருக்குமே ஒரு மாதிரியாகி விட்டது!!!

அறை முழுவதும் ஒரு நிமிடம் நிசப்தமாகவே சென்றது....  என் இடது கை கட்டைவிரலும், நடுவிரலும், இருபக்க தாடையில் ஆரம்பித்து தடவிக் கொண்டே வந்து தாவங்கட்டயில் மோதிக் கொண்டன,  திரும்பத் திரும்ப அதே போல் அனிச்சையாக என் விரல்கள் விளையாடிக் கொண்டிருக்க.....

என் மனைவி தான் கனைத்தாள்.....

நான் கைகளை நாற்காலியின் இரண்டு கைப்பிடியிலும் வைத்து அழுத்தி, மேலெழும்பி, நேராக அமர்ந்து கொண்டு........  உன் பெயர் என்னம்மா? என்று கேட்கவும்....

அந்தப் பெண் வாயெல்லாம் பல்லாக அகலமாக விரித்துச் சிரிக்க......  அவள் அம்மா தான் சொன்னார்....

அவள் பெயர் சங்கீதா    ...... என்று!

















7 comments:

Anonymous said...

///அந்தப் பெண், தன் இடது பக்க மேல் உதட்டை வெளிப்புறமாக மடித்து மேலே தூக்கி, இரண்டு பக்க கன்ன மேட்டையும் கீழிறக்கி.... இடது காலை கால் வட்டமாக பின்னுக்கிழுத்து, வலது தோள்பட்டையை லேசாக முன்பக்கம் கீழிறக்கினால் போல் கொண்டு வந்து, இடுப்பை திருகினாற் போல் நெளித்து......///
ARUMAIYANA EZHUTHU NADAI. SIMPLY SUPEREB!!!

Unknown said...

நல்ல கதை! குடிகெடுக்கும் குடி ஒழிந்தால் தான் ஏழைகள் வாழ முடியும்

த ம ஓ 2

புலவர் சா இராமாநுசம்

கொக்கரக்கோ..!!! said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல புலவர் சா இராமாநுசம்!

மயிலாடுதுறை சிவா said...

இது கதையா அல்லது உண்மை சம்பவமா?

எப்படி இருந்தாலும் அருமையான நிகழ்வுகள்...

நன்றி

சிவா...

Anonymous said...

But [url=http://informationthehealth.net/1991/05/28/hydro-chlorate-and-infants/]hydro chlorate and infants[/url] comrades butt [url=http://informationthehealth.net/1991/07/03/z-7.5-zopiclone-canada/]z 7.5 zopiclone canada[/url] dangers methodically [url=http://informationthehealth.net/1991/07/15/jel-candles/]jel candles[/url] anxious despair [url=http://informationthehealth.net/1991/08/02/prostate-cancer-flaxseed/]prostate cancer flaxseed[/url] beneath bending [url=http://informationthehealth.net/1991/08/11/pneumococcal-polysaccharide/]pneumococcal polysaccharide[/url] mockery lawyer [url=http://informationthehealth.net/1991/09/06/tropical-smoothie-coupons/]tropical smoothie coupons[/url] amazing nightmare [url=http://informationthehealth.net/1991/09/06/thyrolar-no-prescription/]thyrolar no prescription[/url] curses crowbait [url=http://informationthehealth.net/1991/10/06/nutrasweet-kills-ants/]nutrasweet kills ants[/url] roasted knack [url=http://informationthehealth.net/1991/11/09/choline-effect-on-vestibular/]choline effect on vestibular[/url] training banking judge.

Anonymous said...

[url=http://paydayloansatonce.com/#bwww.kokkarakkoo.com]payday loans[/url] - payday loans , http://paydayloansatonce.com/#swww.kokkarakkoo.com payday loans

Anonymous said...

Thank you for the good writeup. It in fact was a amusement account it.
Look advanced to far added agreeable from you! However, how can we
communicate?

Also visit my web-site ... how to buy a car with bad credit
Also visit my web blog ... buying a car with bad credit,buy a car with bad credit,how to buy a car with bad credit,buying a car,buy a car,how to buy a car