Monday, October 21, 2013

திராவிட முன்னேற்றக் கழகமும்... குறுநில மன்னர்களும்...!

கடந்த ஐந்தாண்டு கால திமுகழக ஆட்சியை வீழ்த்தி ஆரிய அம்மாவை ஆட்சியில் அமர்த்த அவாளால் வடிவமைக்கப்பட்டு நம்மவர்களிடம் பரப்புரை செய்த விஷமப் பிரச்சாரம் என்பது ஐந்து தலைபிலானதாக இருந்தது. 1. இலங்கைப் பிரச்சினை, 2. ஸ்பெக்ட்ரம், 3. குறுநில மன்னர்கள், 4. அளவுக்கதிகமான இலவசமும் அதனால் ஏற்பட்ட கடும் விலைவாசி உயர்வும், 5. மின்வெட்டு!!

இதில் “குறுநில மன்னர்கள்” தலைப்பில் அவர்கள் செய்த பரப்புரையில் மிக அதிக அளவில் வறுத்தெடுக்கப்பட்டது நமது சேலத்துச் சிங்கம் ஐயா வீரபாண்டியார் அவர்கள் தான்....

இந்த ஃப்ளாஷ்பேக்ல கட் பண்ணி இப்பத்திக்கி சீனுக்கு வாங்க மக்கா...!


                    

கடந்த வாரம் சேலம் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் மாளிகையில் உள்ள வீரபாண்டியார் அரங்கில் நடைபெற்ற கழக மாணவரணியின் மாநிலம் தழுவிய அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் நானும் கலந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் வாய்ப்பும் கிட்டியது.

அங்கே வந்திருந்த அனைவருக்கும் நல்ல புத்தகம் ஒன்றை உள்ளே நுழையும் போதே பரிசாக தந்து கொண்டிருந்தார்கள். கலைஞர் ஆட்சிக் காலங்களில் தமிழ்கத்திற்குச் செய்த சாதனைகளின் பட்டியல்.... இது தான் அந்த நூலின் உள்ளடக்கம். ஒரு கட்சி அதன் தலைவர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய நலத்திட்டங்கள், அந்த நாட்டிற்கான உள்கட்டமைப்பு வசதிகள், நிலைநாட்டிய சமூகநீதி சட்டங்கள், உருவாக்கிய வேலை வாய்ப்புகள், ஏற்படுத்திய தொழிற் புரட்சிகள், நிறைவேற்றிய தொலை நோக்குத் திட்டங்கள், நிறுவிய வரலாற்றுச் சின்னங்கள்... என்ற பட்டியலை புத்தகமாக வெளியிடும் அளவிற்கான எண்ணிக்கை கொண்டது என்பதான வரலாறு இந்த இந்திய அளவில் வேறு எவருக்காவது சாத்தியமா? என்பதை மோடி மஸ்தான்களின் மகுடிக்கு மயங்கிக் கிடக்கும் மிடில் கிளாஸ் மாதவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அது போகட்டும்! அந்த புத்தகத்தில் ஐயா வீரபாண்டியார் சேலம் மாநகருக்கும், ஒட்டுமொத்த சேலம் மாவட்டத்திற்கும் செய்திட்ட நலப்பணிகளை சுறுக்கமாக பட்டியலிட்டிருந்தனர். அந்த சாதனைகளின் எண்ணிக்கையே ஐம்பத்தி ஒன்று என்ற அளவில் இருந்தது. அந்தப் பட்டியலில் பத்து பேருக்கு சைக்கிள் கொடுப்பது, நூறு பேருக்கு தையல் மெஷின் கொடுப்பது, ஆயிரம் பேருக்கு இலவச திருமணம் செய்து வைத்தது போன்ற நற்பணிமன்ற பணிகளை எல்லாம் சேர்த்து ஒப்பேற்றியிருக்கவில்லை.

இன்னும் ரத்தினச் சுறுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஐயா வீரபாண்டியார் போராடிப் பெற்று தம் மாவட்டத்திற்கு செய்திட்ட அந்த ஐம்பத்தியொன்று நலத்திட்டங்களை கழித்துவிட்டுப் பார்த்தால் சேலம் என்பது ஆந்திரா, ஒடிசா அல்லது பீகாரில் இருக்கின்ற ஒரு கிராமத்தைப் போன்றதாகத்தான் இன்றைய இளம் தலைமுறையினருக்கும் புலனாகியிருக்கும்.

எத்தனையெத்தனை புதிய அரசுப் பள்ளிகள், எத்தனை பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன, அற்புதமான அரசு நூலகம், மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை, உருக்காலை இரண்டாம் நிலை, உள்ளாட்சியிலிருந்து மாநில நெடுஞ்சாலையாகவும், மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாகவும் மாற்றப்பட்டு மாவட்டம் முழுவதும் தரம்மிக்க சாலைகளால் இணைத்திருக்கின்றார், அதன் விளைவாக எத்தனையெத்தனை மேம்பாலங்கள், விவசாயத்துறையில் இருந்ததால் அது சம்பந்தப்பட்ட உயரிய ஆராய்ச்சிக் கூடங்கள், எத்தனையெத்தனை குடியிருப்புகள்......

இப்படியாக மாவட்டத்திற்கும், மக்களுக்கும் தொலைநோக்கிலும் சமகால வாழ்வாதாரத்திற்கும், அடிப்படை மற்றும் கிராமப்புர கல்விச் சேவையிலும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியிருக்கின்றார்.

இவ்வளவையும் ஒரு மாவட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றால் கட்சி மற்றும் ஆட்சித் தலைமையிடம், உரிமையோடு போராடிப் பெறக்கூடிய அளவிலான சக்திமிக்க இந்த மாதிரியான குறுநில மன்னார்களாலேயே சாத்தியப்படும்! சாமான்யர்களால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு இவ்வளவு பெரிய திட்டங்களை குறுகிய கால அளவில் சாத்தியமாக்கியிருக்கவே முடியாது.

வீரபாண்டியார் என்று மட்டுமல்ல, திமுகவின் குறுநில மன்னர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேருமே தன் தலைமையிடம் போராடி பிரம்மாண்டமான எண்ணற்ற நலத்திட்டங்களை தத்தமது பகுதிகளுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார்கள்.

அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழகமானது உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட வேலைவாய்ப்பு வரை இன்றைய தேதியில் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருகின்றது.

மோடியின் குஜராத் அப்படியிருக்கும் இப்படியிருக்கும் என்று புலகாங்கிதம் அடைந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம், இருபது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தையும் இன்றைய தமிழகத்தையும் படம் பிடித்துப் பார்த்தால், இவ்வளவு குறுகிய காலத்தில் எவ்வளவு பெரிய வளர்ச்சியை தமிழகம் அடைந்திருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடியும். அதுவும் இந்த வளர்ச்சிப் பணிகள் அனைத்துமே திமுக ஆட்சிக்காலங்களில் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் மந்திரித்துவிடப்பட்டிருப்பவர்கள் எல்லாம் கவனிக்க வேண்டும்.

திமுகவின் குறுநில மன்னர்களைப் பற்றி ஆயிரம் குறைகள் கூறி கூத்தடித்த ஊடகங்கள் மோடியின் மதவாத அராஜகங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதே இல்லை. அதே சமயம், குஜராத் வளர்ச்சியைப் பற்றிப் பீற்றிக் கொண்டிருப்பவர்கள், தமிழகத்தின் கடந்த இருபது ஆண்டுகால வளர்ச்சியையும் அதற்காகப் போராடிய இந்த குறுநில மன்னர்களையும், அவற்றுக்கெல்லாம் அனுமதியளித்த சக்கரவர்த்தி கலைஞரையும் பற்றி கண்டுகொள்வதே இல்லை!!

ஊடகங்களைப் பற்றிப் புலம்புவதால் இனி நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. கலைஞர் கொண்டு வந்த நமக்கு நாமே திட்டம் போன்று நாமே நம் சாதனைகளை மக்களிடம் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களின் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்களின் வாயிலாகவும், இணையதளங்களின் வாயிலாகவும் பட்டியலிட்டு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

இளம் தலைமுறையினருக்கு கடந்தகால மற்றும் நிகழ்கால தமிழகத்தை ஒப்பிட்டுக்காட்டி அந்த வளர்ச்சிக்குக் காரணமான திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் குறுநில மன்னர்களையும், அதன் சக்கரவர்த்தியையும் பற்றி புரிய வைக்க வேண்டும். அதுவே நமது கடமை. இதைச் செவ்வனே செய்து வந்தாலே எதிர்காலம் நம் கைகளில்!!!

வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்...!

வளர்க அதன் குறுநில மன்னர்களும், சக்கரவர்த்தியும்....!!




14 comments:

Anonymous said...

நீங்க சொல்வதை வைத்து பார்த்தால் வீரபாடியார் சேலத்திற்க்கு நல்லது மட்டும் தான் செய்திருக்கிறாரா؟ அவரும் அவர் குடும்பமும் அப்பாவி மக்களை மிரட்டி கொள்ளை அடித்ததை எல்லாம் புத்தகமாக வெளியிட்டால் ஓரு சின்ன நூலகமே வைக்கலாம். இப்பதான் சேலத்திற்க்கு விடிவுகாலமே பிறந்திறக்கிறது.

கொக்கரக்கோ..!!! said...

ஐயா அனானி,

நீங்க சொல்ற கருத்து அப்படியே மோடிய ஆதரிக்கிறவங்களுக்கும் பொருந்தும். அவரது மதவாத அராஜகங்களை பட்டியலிட்டால் பெரிய நூலகமே வைக்கலாம். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவர் செய்ததா சொல்ற சாதனைகளை பெருசா பேசிக்கிட்டு ஆதரிக்கிறீங்கள்ல? அது மாதிரி தான் இதுவும்!

Unknown said...

நாட்டின் குடியரசுத் தலைவரையும் பிரதமரையும் நாட்டு மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் உருப்படியான (ஓரளவு) தலைவர்கள் கிடைப்பார்கள்.

கொக்கரக்கோ..!!! said...

@எழுத்தாளர் புதின்,

பற்பல மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட பல்வேறு தனித்தனி பிராந்தியங்களை உள்ளடக்கிய இந்தியாவுக்கு நேரடியாக பிரதமரை தேர்ந்தெடுக்கும் வழிமுறை முழுமையான பலன்களைக் கொடுகாது.

Anonymous said...

irundhatalum idhu too much. Idhu onnum avaroda sondha ideation illa. Avaru nenichirundha antha panathaiyum surutti abesh panni irukkalam. adhukkaga venumna oru sabash podalam.

கொக்கரக்கோ..!!! said...

அனானி ஐயா எந்த அரசியல் தலைவருமே தன் சொந்த காசை செலவு செய்து திட்டங்களை செயல்படுத்த முடியாது. எம்.ஜி.ஆர், மோடி உட்பட இந்த விதி அனைவருக்குமே பொருந்தும்.

Anonymous said...

தமிழ்நாட்டின் சாலை வசதிகளைப் பற்றி அஸீம் பிரேம்ஜி அவர்கள் பாராட்டிப் பேசியதை காதாரக் கேட்டிருக்கிறேன்.

இன்னொன்று, சில குறுநில மன்னர்கள்தான் இவ்வாறு தலைமையிடம் வாதாடி, போராடி தங்கள் பகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்.

கோவை நகருக்கு வரவேண்டிய IIM நேரு அவர்கள் முயற்சியால் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. கோவையில் உலகத்தர பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அல்வா பல காலம் கிண்டப்பட்டு கோவை மக்களே நம்பிக்கை இழந்துவிட்டனர்.

திமுகவோ, அதிமுகவோ கோவைக் குறுநில மன்னர்கள் ஒன்றுக்கும் கையாலாகாதவர்கள். அவர்களின் ஒரே குறிக்கோள் ஊரைச் சுற்றி நிலவங்கியை உருவாக்குவதுதான்.

Anonymous said...


One full generation of party
men have been suppressed by Veerapandiar and his coterie. Only now real party men are able to enjoy the freedom and do party work. They feel liberated now.Why else he could not win in this election?

கொக்கரக்கோ..!!! said...

////கோவை நகருக்கு வரவேண்டிய IIM நேரு அவர்கள் முயற்சியால் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. கோவையில் உலகத்தர பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அல்வா பல காலம் கிண்டப்பட்டு கோவை மக்களே நம்பிக்கை இழந்துவிட்டனர்////

அனானி ஐயா, இப்பவாவது புரியுதா? குறுநில மன்னர்களின் அவசியம் என்ன என்று?!

vijayan said...

சேலம் அங்கம்மா காலனி வாசிகளை கேட்டால் வீரபாண்டியாரின் பெருமைகளை பெரிய எழுத்து பாரதமாக படிப்பார்கள்.நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு குறுநிலமன்னரின் எந்த பட்டமஹிஷியின் புத்திர ரத்தனங்களில் யாரை வாரிசாக கொள்வது என்ற குழப்பம் வேறு தொந்தரவு தருகிறது.

கொக்கரக்கோ..!!! said...

@விஜயன்,

உங்களின் இதே கருத்தை, அங்கம்மாள் காலனி மக்களுக்கு மாற்றாக குஜராத் இஸ்லாமிய சமூகத்தினர் பெரிய எழுத்து பாரதமாக ஒப்பித்துக்கொண்டிருக்கின்றார்களே, அதெயெல்லாம் கவனிக்காதது போல மோடியின் சாதனைகளை மட்டும் சொல்லி ஓட்டுக்கேட்கின்றீர்களே?! அது மட்டும் நியாயமா?

அதே அனானி said...

//அனானி ஐயா, இப்பவாவது புரியுதா? குறுநில மன்னர்களின் அவசியம் என்ன என்று?! //

எங்கூரில் உள்ளவர்களைப் போன்ற குறுநில மன்னர்கள் இருப்பதற்கு இல்லாததே மேல் ஐயா.

CT தண்டபானி, மு.ராமநாதன் போன்ற கழக முன்னோடிகளைத் தாண்டி வந்த பொங்கலூரார், வீரகோபால் போன்றோரால் எந்தப் பயனும் இல்லை.

Anonymous said...

dear kokkarakko,

why are you talking about Modi, if anani says about Veerapandi , answer that

i am a neutral person who neither advocate for modi nor for any corrupt politicians

கொக்கரக்கோ..!!! said...

அனானி ஐயா,

உங்கள் வாதம் நியாயம் தான். இங்கு இணையத்தில் அனைத்து நடுநிலையாளர்களும், திமுகவைப் பற்றி பேசும் போது அதன் குறுநில மன்னர்களின் தவறுகளையும், மோடி பற்றி பேசும் போது அவரது சாதனைகளையுமே பற்றி பிரஸ்தாபிக்கின்றார்கள். அந்த காரணத்திற்காகத் தான் இந்தப் பதிவே திமுக குறுநில மன்னர்களின் சாதனைகளை பட்டியலிட்டு எழுதியதினேன்.

அதை மட்டும் எழுதினால், மோடி ஆதரவாளர்கள் வீரபாண்டியாரின் இன்னொரு முகத்தை எடுத்துப் பேசி வாதாட வருவார்கள், இப்பொழுது இங்கே பேசிய விஜயன் கூட அந்த வகையைச் சேர்ந்தவர் தான்.

ஆகவே தான், இரண்டு தரப்பையும் கம்பேர் பண்ணி எழுத வேண்டியிருக்கிறது. அது போகட்டும். நீங்கள் ஒரு நடுநிலையாளர் என்று சொல்கின்றீர்கள், மோடி பற்றிய உங்கள் கருத்து என்ன?