Thursday, August 13, 2015

மோடியும் லேடியும் ஒன்னு.. அறியாதார் வாயிலே மண்ணு...

வருமானவரித்துறை வழக்கு, சொத்துக்குவிப்பு உயர்நீதிமன்ற தீர்ப்பு... இவற்றுக்கு முன்னால் மத்திய அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ள அருண்ஜெட்லி வந்து பார்த்ததையும்...
சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்ற பொழுது, பிரதமரே நேரில் வந்து பார்ப்பது பற்றியும்....
இந்த ஜுஜுபி மேட்டர்க்கு எல்லாம் தாம் இந்த சந்திப்புகள் நடந்ததாக யாராவது நினைத்தால்... அவர்களுக்கு எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் என்னால் உறுதிகூற முடியும்...
லேடியும், மோடியும் ஒன்னு... இதை அறியாதவர்கள் வாயில் பன்னு..!! என்பது தான் அது!!
வேற என்ன தான் மேட்டர் என்கின்றீர்களா?!
பாஜக எத்தனை மோடி மஸ்தான் வேலையைப் போட்டாலும், தமிழகத்தில் 4 சதவிகித வாக்குகளுக்கு மேல் அது எந்தக் காலத்திலும் வாங்க முடியாது என்பது அவர்களுக்கே தெளிவாகப் புரிந்து தான் போயிருக்கிறது.
இங்கே கொஞ்சமாவது, ஃபிலிம் காட்ட வேண்டுமென்றால் கூட..., அதிமுக அல்லது திமுகவோடு கூட்டணி அமைப்பது மட்டுமே ஒரே வழி..! இதில் பாஜகவின் லகான் அதி தீவிர இந்துத்துவா முகம் கொண்ட மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி வசம் இருக்கும் வரை பாஜகவால் திமுகவை நெருங்கவே முடியாது என்பது தான் யதார்த்தம்.
அடுத்து இருக்கும் ஒரே ஆப்ஷன், அதிமுக தான். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால், பாஜக ஆட்சியைப் பிடிப்போமா இல்லையா என்று எந்த உத்திரவாதமும் இல்லாத நிலையில்..., ஜெயலலிதாவும் பிரதமர் கனவோடு தேசிய அளவில் மூன்றாம் அணி.. அது இது என்று ஜம்பம் காட்டிய நிலையில், அதிமுகவோடு கூட்டணி பற்றி பேசும் தைரியும் பாஜகவுக்கு நிச்சயமாக இருந்திருக்கவில்லை.
ஆனாலும் திமுகவும், திகவும் எப்படி இரட்டைக் குழல் துப்பாக்கியோ... அதே மாதிரி தான் அதிமுகவும், ஆர் எஸ் எஸ்ஸின் பிள்ளையான பாஜகவும் என்பது ஊரறிந்த விஷயம் தான். அதனால் தான் அவர்களுக்கிடையேயான மனோ ரீதியிலான ஒத்த கருத்தில், ஒருவேளை பாஜகவுக்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு பலம் கிடைக்காவிட்டால், ஜெயலலிதா ஆதரவில் ஆட்சி அமைக்கும் திட்டமும், ஒருவேளை எதிர்க்கட்சிகளின் பலம் அதிகமாக இருந்து பாஜக பெரிய அள்வில் சோபிக்கவில்லை என்றால், மூன்றாவது அணி என்ற ஃபார்முலாவில் மற்ற கட்சிகளின் கூட்டணியோடு, ஜெயலலிதாவை பிரதமராக்கிவிட்டு, அது கவிழாமல் இருக்க பாஜக வெளியிலிருந்து முட்டுக்கட்டை கொடுக்கும் அடுத்த ஆப்ஷனையும் ஆர் எஸ் எஸ் வகுத்திருக்கும்..!
ஆர் எஸ் எஸ்ஸைப் பொறுத்தவரை, ஒத்த கருத்துடைய தம் பிள்ளைகளில் ஒன்றான மோடி வந்தால் என்ன? ஜெயலலிதா வந்தால் என்ன? இரண்டும் ஒன்று தானே?! இருவருடைய ஆட்சியும் ஆர் எஸ் எஸ்ஸின் கொள்கைப்படித்தானே இருக்கும்?!
ஆகவே தான் தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் வெற்றியை மிக இலகுவானதாக அமைத்துக் கொடுக்கும் பொறுப்பும் ஆர் எஸ் எஸுக்கு வந்து விட்டது. ஏற்கனவே இரண்டரை வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கு நிச்சயம் எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பது இருக்கும். அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள், ஒருமுகப்படுத்தப்பட்டு சிதறாமல் திமுகவுக்கு வந்தால், நிச்சயம் அதிமுக மண்ணைக் கவ்வும்...!
இந்த நிலையில் தான் அதிமுகவை வெற்றிபெற வைக்கும் ஃபார்முலாவை கையிலெடுத்தது பாஜக. அது வகுத்த திட்டப்படி அதிதீவிரமாக செயல்பட்டு, தான் குறைந்த இடங்களை வைத்துக் கொண்டு, திமுக தவிர தமிழகத்தின் அனைத்து சில்லறை எதிர்க்கட்சிகளையும், தமிழருவி மணியன், சோ, தா. பாண்டியன் போன்ற பல்வேறு புரோக்கர்களைக் கொண்டு, அக் கட்சிகள் கொடுத்த அவமானங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு, மெகா கூட்டணி என்ற ஒரு பிம்பத்தை மக்கள் முன்னே வைத்தது.
குழம்பிப் போன உண்மையான நடுநிலையாளர்கள் இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க, ஜெயலலிதா பிரதமரானால் தமிழகத்திற்கு நல்லது தானே என்ற நப்பாசையில் பல அப்பாவி நடுநிலைவாதிகள் அதிமுகவுக்கு வாக்களிக்க.... அதிமுக அமோக வெற்றி பெற்றது..!!
மற்ற மாநிலங்களில் பாஜக மோடி அலையில் வெற்றியைக் குவிக்க, அறுதிப் பெரும்பான்மையோடு பாஜகவே ஆட்சி அமைத்து விட்டது.
இப்பொழுது தான் பாஜகவின் தமிழக கால்கோள் நிகழ்வுக்கான இரண்டாம் கட்ட திட்டம் அரங்கேற ஆரம்பமாகியிருக்கின்றது. மத்திய ஆட்சி அதிகாரத்தில் தற்பொழுது பாஜக இருப்பதால், அதன் மூலம் ஜெயலலிதாவுக்கு கிடைக்கக் கூடிய பல்வேறு உதவிகளும்... அந்த உதவிகள் கிடைக்காவிட்டால் ஜெயலலிதாவின் எதிர்காலம் என்ன என்பதும்... தமிழகம் முழுவதும் தற்பொழுது அதிமுகவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியிருப்பதும்....
...ஆக இவை அனைத்தும் ஜெயலலிதா முன்னால் காட்சியாக விரிக்கப்பட, அதிமுக கூட்டணியில் பாஜக ஒரு கணிசமான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்று வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் சூழலும் உருவாகியிருப்பதைத் தான் நேற்றைய ஜெயலலிதா இல்லத்திற்கான மோடி விஜயம் எனக்கு உணர்த்திக் காட்டுகிறது.
ஆகவே வரும் 2016 சட்டமன்ற தேர்தலுக்கான தமிழகத்தின் ஒரு பக்க கூட்டணி கிட்டத்தட்ட தயார்...!!
இன்னொரு பக்கமான, திமுகவின் கூட்டணி வியூகம் பற்றி அடுத்த கட்டுரையில் கொஞ்சம் அலசுவோம்...!!

1 comment:

விசு said...

என்னமோ நடக்குது .. .மர்மமா இருக்குது... ஒண்ணுமே புரியல.. உலகதில்ல...