Tuesday, September 3, 2013

நாகை சேது ஆர்ப்பாட்டம்..!!

இன்னிக்கு ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனமுமே நாகையில் தான் குவிந்து கிடந்தது. காலை ஏழு மணிக்கு நானும் அபிஅப்பாவும் மயிலாடுதுறை அண்ணா பகுத்தறிவு மன்றம் வந்த போது....   நாங்கள் காரை விட்டு இறங்கவும், அண்ணன் பொன்முடி அவர்களின் வாகனத்தை ஒரு நிமிடம் மன்றத்தின் வாசலில் நிறுத்தவும் ஒரு சேர நடந்தது.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நகரம் குண்டாமணி அண்ணன், ஓடி வர, இவர் கார் கண்ணாடியை இறக்கி, கிளம்பியாச்சான்னு கேட்க....   ஓரிரு நிமிட உரையாடலோடு அவர் வாகனம் திருவாரூர் நோக்கி, சாமி தரிசனத்திற்கு செல்லும் வேகத்தோடு சீறிப் பாய்ந்தது.

பிறகு நகரம் எங்களைப் பார்த்து, நாம கடேசியாத்தான் போறோம், இன்னிக்கி மேடைல எல்லாம் ஏறப் போவதில்லை, நமக்கு மாவட்டம் நிறைய வேலை கொடுத்திருக்கு. 18 வண்டியும் அனுப்பிட்டு, கடேசியா நான் மட்டும் உன் வண்டில வரேன்னு சொன்னதை தட்டமுடியவில்லை.

அடுத்த ஒரு மணி நேரம் அத்தனை பரபரப்பு, ஆட்கள் எண்ணிக்கை கூடக்கூட, வண்டி எண்ணிக்கை 22 ஐ கடந்து போய்க்கொண்டிருந்தது. 9 மணிக்கு நாங்கள் கிளம்பும் போது, தொப்பரையாக நகரம் ஏறி என் காரில் அமர்ந்தார்.

அடுத்த ஒன்னேகால் மணி நேரத்தில் அதி விரைவில் எங்கள் வாகனம் நாகை எல்லையை மற்ற அனைத்து வாகனங்களையும் கடந்து முன்னே சென்றடைந்தது.

ஆர்ப்பாட்டம் நடைபெரும் அவுரித்திடலுக்கும் ஒரு கிலோ மீட்டர் முன்னமே வாகனங்கள் நிறுத்தப்பட, இறங்கி நடக்க ஆரம்பித்தோம், சாரை சாரையாக மக்கள் வெள்ளம், வந்து குவிந்துகொண்டே இருந்தது. அங்கே மாவட்டம் கொடுத்திருந்த வேலைகளை நகரத்துடன் இணைந்து கன கச்சிதமாக முடித்த போது.....

தலைவரின் கான்வாய் சீறிப்பாய்ந்து வந்தது!!!!

ச்சே.....   என்னா கூட்டம்யா அது?!  என்னா உணர்வுகள் அங்கே!!! அப்போ தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. மூன்று மாவட்ட தொண்டர்கள் மட்டும் அங்கே குவிந்திருக்கின்றனர் அவனவன் சொந்த காசைப் போட்டு வேலை வெட்டியை விட்டு வந்திருக்கான். அதுவும் பட்டப்பகலில், பொட்டை வெயிலில், வாரத்தின் முதல் நாள்.......

வந்திருந்தவர்களில் 70 சதவிகிதம் பேருக்கும் கலைஞர் முகத்தைக் கூட முழுமையாக பார்க்க முடியவில்லை. அவ்ளோ கூட்டம். கிட்டத்தட்ட, ஒரு லட்சத்துக்கும் அதிகமாகத்தான் இருக்கும். போலீஸ் கெடுபிடி அதிகம் என்பதால், எல்லோரும் அலைக்கழிக்கப்பட்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதெல்லாத்தையும் பார்த்த பிறகு தான் ஒரு விஷயம் பிடிபட்டது. இனி இந்த இணைய பத்தாம்பசலிகள், அந்த மாபெரும் மனிதனைப் பற்றி நேர்மைக்கு மாறாக வைக்கும் விமர்சனத்தை எல்லாம் நாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று!

சூரியனைப் பார்த்துத் தான்.........
ஃபோட்டோ உபயம் அபி அப்பா. நாங்கள் ஒரு குறுக்குச் சந்தில் எங்கள் கடமையை நிறைவேற்ற சென்று கொண்டிருந்த போது என்னையும் நகரத்தையும் சேர்த்து எடுத்த புகைப்படம் தான் இது!

No comments: